ஒரு முற்றுப்புள்ளியைத் தேடும் காற்புள்ளி...!
காலம் முற்றுப்புள்ளி வைத்து உறவுகளை பிரித்தாலும் அன்பு நினைவெனும் காற்புள்ளிகளால் மனதில் அவற்றை வாழ்வித்துக்கொன்டுதான் இருக்கின்றது என்றும்.....!

அப்படியானதொரு தருணத்தில் என் கையை தன் கைக்குள் சேமித்துக்கொன்டு அந்த மணல் மேட்டு ஒற்றையடிப் பாதையில் அவர் நடந்து கொண்டிருந்தார், அவரின் பருத்த 70 வயது வயோதிக உருவம் இப்படியும் அப்படியுமாக என்னுடன் அசைந்தாடி நடக்க, அருகில் இருக்கும் அங்காடி வீதி நோக்கி நகர்கிறது எங்கள் பயணம். ஒருநாள் இருநாள் அல்ல ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் பிடித்த தின்பண்டங்கள் வாங்கவே இந்த நடைப்பயணம். என் அருமைப் பாட்டியார், எப்பொழுதும் காலையில் நடைப்பயணம் செல்கையில் இதற்காக என்னையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம். தன்னிடமிருந்து நான் பிரியாதிருக்க பிரியத்துடன் என்னை மெல்ல அணைத்தபடி நடப்பது அவர் பழக்கம்.
என்னை மெல்லத் தொட்டுப் பற்றியிருக்கும் அவர் கையின் இளஞ்சூட்டைப் போலவே மெல்லிய கதகதப்பைப் பரப்பியபடி கிழக்கு வானில் பொற்கதிர்கள் ஒளி வீச எழுந்து வந்து எங்களோடு நடப்பான் இளஞ்சூரியன்.
அவருடன் எனக்குடனான உறவு ஒரு பத்து வருடம் நீடித்திருக்குமா என்பதும் சரியாகத் தெரியவில்லை ! ஆனால் என் இளம் பிராயத்தின் மொத்தத்தையும் அவரே குத்தகை எடுத்துக்கொன்டது போல் ஒரு பிரமை, நினைவை விட்டு நீங்காது இன்றும் மனதுள் நிழலாடும் அவர் நினைவுகள்...! அன்பால் நெஞ்சம் நிறைத்த உறவுகள் எத்தனை தூரத்தில் இருந்தாலும், மறைந்தாலும் மனதிற்கு அருகாமையிலேயே இருப்பதான பாவனை. இதுதானோ வாழ்க்கை !!!
அவ்வப்போது அம்மாவைச் சீண்டிப் பார்ப்பதுண்டு, ஏம்மா ! பாட்டிதானே(அப்பத்தா) என்னை சின்ன பிள்ளையில் வளர்த்தாங்க ? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் முகம் சிவந்து, அம்மாவின் கோபம் எல்லை மீறும், யாரிடமும் தன் தாய்மை தோற்றுவிடக்கூடாது எனும் துடிப்பு, யார் சொன்னது ? அப்போ நான் எங்கே போயிட்டேனாம் ? அதெல்லாம் கிடையாது ! உன்னை நான்தான் வளர்த்தேன் என்பார் ! பின்னர் மெதுவாக, ஏதோ ஒரு சில மாதங்கள் அவர் உன்னை தன்னுடன் வைத்து வளர்த்தார், என்பார் பட்டும் படாமல். ஆகா ! உண்மை வெளிவருகிறது....!
அவரை எண்ணி பிரமிப்பதற்கு பல காரணங்கள் உண்டு..! முக்கியமாக இயற்கையை வணங்கும் அவரின் உயர்ந்த குணம், இயற்கையென்றால் இறையென்பதை உணர்த்தியதில் பெரும் பங்கு அவருடையது...!
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வெளியே கிழக்கு நோக்கி நின்று தனது இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி உதித்துவரும் கதிரவனை அவர் வணங்கி வரவேற்பார், "எல்லோரையும் நல்லா வச்சிருப்பா" என சூரிய பகவானை அவர் சத்தமாக வணங்குவது பார்க்கவும் கேட்கவும் அத்தனை அழகாக இருக்கும். "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" எனும் ஒற்றைவரிப் பிரார்த்தனையைத்தான் அவர் அத்தனை நேரம் சூரியனைப் பார்த்து தனது பாணியில் சொல்லிக்கொண்டிருப்பார்.
ஏன் பாட்டி வெளியே கும்பிடுறீங்க ? என்றால் இதுதான் சூரியபகவான், நமது கடவுள்! சோறு தருது ! உயிர் தருது ! இதக் கும்பிடனும்மா ! என தனது கண்கள் சிரிக்க புன்முறுவலுடன் பதில் அளிப்பார்..! அவர்போல் ஆச்சாரம் இல்லை இருப்பினும் அவரின் வழித்தோன்றல் அல்லவா ? என்றும் இயற்கையை மனதால் வணங்கிப் பிரார்த்திப்பது உண்டு, பல பொற்றருணங்களில் அதன் ஆற்றலை உணர்ந்து அதிசயித்ததும் உண்டு, சூரியபகவான், ஆகாசவாணி, பூமாதேவி, வாயுபகவான், வருணபகவான், அக்கினி பகவான் என இந்து மதம் இயற்கையை இறைப்பெயர் சூட்டி போற்றுகிறது ! இயற்கையுடன் இசைந்து வாழும் மனித வாழ்க்கை மகத்தானது என சாஸ்திரங்களும் போதிப்பதை, அன்று பாட்டி போதித்து மனதில் பதித்தார் ...!
பாட்டியின் தோற்றம் கம்பீரமானது, உயரமானவர், இரட்டை நாடி சரீரம், முழங்காலைத் தொடும் நீளமான கூந்தல், கஞ்சித்தண்ணீர், சீயக்காய் வில்லைகள் சேர்த்து சொந்தமாய் சாம்பு தயாரித்து உபயோகிப்பார், சோப்பெல்லாம் அவருக்கு ரொம்ப தூரம், உண்பதற்கு மிகவும் சுவையான "வோக்ஷேல்" சாக்லெட்டின் நிறம் அவருடையது, அதிகம் கருப்போ, வெளுப்போ இல்லாமல், பாலும், கொக்கோவும் சம அளவு கலந்ததைப்போல் ஒரு நிறம் . அவரின் முகத்தோற்றம் அப்பாவை ஒத்திருக்கும், அப்பாவுக்கு பெண்வேடமிட்டால், அதுதான் பாட்டி ! , இருவருக்கும் அப்படி ஒரு முகஒற்றுமை ..!
பாட்டியின் ஆளுமை மிகவும் ஆழமானது, குடும்பத்தினர் அனைவரையும்
தனது அன்பெனும் பிடியில் அடக்கி வைத்திருந்தார். தனது அந்திமக் காலத்தில் உடல் தளர்ந்து, நினைவு தப்புவதற்கு முன்புவரை அவர்தான் குடும்பத்தின் மகாராணி! அவர் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது ! குடும்பத்தின் முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் அனைத்தும் அவரை மையப்படுத்தியே நிகழும். அவர் முடிவுகளே குடும்பத்தை ஆளும்.
எல்லாவற்றையும் விட என்னை பிரமிக்கச் செய்தது எல்லோரையும் ஓட ஓட விரட்டும் அப்பா, அவருக்கு மட்டுமே பணிவது. அதைப்பார்க்க மிகவும் ஆனந்தமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். சிவாநந்தம் ! சிவாநந்தம் ! என அவர் கூப்பிட்ட குரலுக்கு பணிவோடு அவர் முன் நிற்கும் அப்பா, அவரிடம் தாழ்ந்த குரலில் அமைதியாக பேசுவதையும், அவர் கூறுவதை தலையாட்டி ஏற்றுக்கொள்வதையும் பார்க்க வேடிக்கையாகவும், அதிசயமாகவும் இருக்கும். வேறு யார் முன்னும் அப்பா இப்படி இறங்கிப் பேசிப் பார்த்ததேயில்லை..! எப்போதும் தடாலடிதான். வீட்டிலுள்லோர் அனைவரும் பயப்படும் அப்பாவையே அடக்கும் பாட்டி என் கண்களுக்கு "சூப்பர் ஊமன்" ஆகவே தெரிந்தார்.
பாட்டி மக்களைப் பெற்ற மாதரசி..! பதினாறு குழந்தைகள் அவருக்கு..!!! அவர் வாழும் காலத்திலேயே வறுமையிலும், நோயிலும் 10 மக்களை பறிகொடுத்தவர். இறுதியாக அவரின் எழுபதாம் வயதில் அவரின் 50 வயது தலைமகளை(மூத்த பெண்) புற்றுநோய் பலிகொள்ள ரொம்பவே வாடி ஒடிந்து போனவர். இன்று அவர் குடும்பத்தில் மூத்தவராக இருக்கும் அப்பா அவரின் எட்டாவது குழந்தை..!
பாட்டியுடன் கழிந்த பொழுதுகள் சுகமானவை, சுவாரசியமானவையும் கூட...! அடியும் நுனியும் கிள்ளி வெற்றிலைபோடக்கொடுப்பார். அவரைப்போல் வாய் சிவக்காது ஆனால் உறைப்போடு வாய் மட்டும் எரிச்சலாய் இருக்கும். அவர் இரவு நேரங்களில் ஒற்றை பிள்ளை சாப்(முத்திரை) சுருட்டை புகைப்பது வழக்கம். அப்பா அறியாமல் அதையும் வாங்கிப் புகையை இழுத்ததுண்டு..!(ரகசியம்!) கசப்பான புகை, நெடிய நாற்றத்தோடு...! மூக்கிலிருந்து தொண்டை, நாக்கெல்லாம் கசப்பு, எரிச்சல் என என்னென்னவோ செய்யும்..! ஆனால் அந்த சுருட்டின் புகையும், தீ கங்கும் பார்க்க பார்க்க அழகாகவே தோன்றும்
சிரித்துக்கொன்டே பாடுவதும் கதைகள் பேசுவதும் அவர் சிறப்பு.
நாடோடிப் பாடல்களை பாட்டி நன்றாகப் பாடுவார். தாலாட்டுப் பாடல்களிலும் , ஒப்பாரிப் பாடல்களிலும் மகா கெட்டி...! கைகளை மடக்கிக் கக்கத்தில் இடுக்கி பறவை சிறகடிப்பதைப்போல கைகளை அடித்துக்கொன்டு
"ஓ ரப்பர் பாலே,
நாஞ் சொல்லுவதேக் கேளு..!
குப்புறப் படுத்துக்காதே ரப்பரு பாலே,
நாங் கப்ப ஏறி வந்துட்டேன் ஏங் கெப்புரு நாலே "
என பாடிச் சிரிப்பார்..! எப்போதாவது அப்பா கண்ணில் பட்டுவிட்டால், இதயெல்லாம் பிள்ளைக்கு கத்துக்கொடுக்காதம்மா என்பார், ஆனால் அவர் எங்களைக் கடந்து சென்ற பின் "சர்தான் போ" என அலட்சியம் காட்டி மீண்டும் தொடர்வார் பாட்டி.
நாட்டு வைத்தியத்திலும் பாட்டி கைதேர்ந்தவர். சுளுக்கெடுப்பதிலும், பிரசவம் பார்ப்பதிலும் கெட்டிக்காரர். அவர் வைத்தியத்தில் பலனடந்தவர்கள் விருந்தாகவும், துணிமணிகளாகவும் அவருக்கு பரிசளிப்பது வழக்கம். அவருக்கு மருளும் வரும். வீரன் சாமி வந்தது என்று ஆணுடை தரித்து, இடையில் வேட்டி சுற்றி சுருட்டை புகைத்தவாரே ஆணின் கரகரப்பான குரலில் அருள்வாக்கு சொல்வார்! திருநீறு இடுவார், பரிகாரங்களும் சொல்வார்.
நான் ஆரம்பப்பள்ளியில் பயின்று கொன்டிருந்த சமயம் அது, எதுவும் புரியவில்லை! பாட்டி போகப் போகிறார் என எல்லோரும் பேசியது மிக மிக பயமாகவும், வருத்தமாகவும் இருந்தது, ஓடிச் சென்று ஒரு ஒற்றை வரி நோட்டை எடுத்து "ஸ்ரீ ராமஜெயம்" எழுத ஆரம்பித்தேன்.பாட்டியை இறைவன் காப்பாற்றித் தருவார் எனும் நம்பிக்கையோடு. விடயம் அறிந்தவுடன் பாட்டியின் மகள்களுள் ஒருவர். என்னை அழைத்து கடுமையாக திட்டினார்..! அவர் அம்மா பிழைத்துவிடக்கூடாதாம்! துன்பமின்றி தன் தாய் (பாட்டி) போய் சேர வேண்டும் எனும் காரூண்யம் அவர் செய்கையில் தெரியவில்லை, நமக்கேன் வீண் சிரமம் எனும் விட்டேர்த்தியான போக்குதான் புலப்பட்டது. நான் ஸ்ரீராமஜெயம் எழுதி அவர் தாய் பிழைத்துவிடுவாரோ எனப்பயந்த அவரின் செய்கை அன்று ஆத்திரத்தை வரவழைத்தாலும் இன்று நினைக்கையில் வருத்தம் தோய்ந்த சிரிப்புத்தான் வருகிறது. நல்ல பிள்ளை ! இவரைப் பெற்று வளர்த்ததற்கு பதில் பாட்டி நாலு மாடுகளை வாங்கி வளர்த்திருக்கலாம். இறுதி நாளில் ஊற்ற பாலாவது கிடைத்திருக்கும்..!
என்னென்னவோ செய்தனர், பூஜை பரிகாரம் என்று, எல்லாம் வரவேற்க அல்ல! வழியனுப்ப மட்டும்தான். பாட்டியும் எவ்வளவுதான் பொறுப்பார். ஒரு மழை நாள் மாலையில் அவர் மண் விட்டு மறைந்தார்.
பாட்டியைப் பிரிந்த வேதனையில் அழுதழுது காய்ச்சல் வந்துவிட்டது, அதிகம் அன்பாய் பேசாத அப்பா அப்போது ஆறுதலாய் ஒன்று சொன்னார் "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தே" என்று. அப்பா உண்மைதான் சொன்னார், மனம்தான் ஏற்க மறுக்கிறது..!