.

.
.

Friday, January 3, 2020

அந்த அமாவாசை இரவில் - இறுதிப்பாகம்

வேலு நடந்து சென்றுகொண்டிருந்த அந்த ஒற்றையடிப் பாதையில் அவனறியாமல் இரு உருவங்கள் அவனை கண்கானித்துக்கொண்டிருந்தன. வெளி சாலை விட்டு வெகு தூரம் உள்ளே சென்றுவிட்ட அவனை பின் தொடர்ந்து வந்த அந்த இரு உருவங்களும், திடீரென அவன் மேல் பாய்ந்து ஒரு பெரிய சாக்கு மூட்டையில் அவனைப் புகுத்தி  இறுக்கிக் கட்டி  அவன் தலையில் ஓங்கித் தாக்கி அவனை எங்கோ இழுத்துச் சென்றன. விழுந்த அடியில் பொறி கலங்கிப்போனான் வேலு. விழிப்பிற்கும் மயக்கத்திற்கும் இடைப்பட்ட அந்த நொடியில் தான்  பேராபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அவன் மனம் நடுங்கிக் கலங்கியது.

அவனை இழுத்துச் சென்றவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவனைக்கொண்டு வந்து சாக்கு மூட்டையிலிருந்து கீழே போட்டனர். தரையில் மயங்கிச் சரிந்தான் வேலு. அவன் மயக்கத்தில் பாதிதான் உண்மை என்பதை அந்தப் பாதகர்கள் அறிந்திருக்கவில்லை.  சீனமொழியில் சிலர் பேசுவது சன்னமாய் அவன் காதில் விழுந்தது. அவர்கள் பேச்சிலிருந்து அன்று அந்தப் பூசையில் அவனைப் பலி கொடுத்து நாலு நம்பர் கேட்கப் போகின்றனர் என்பதை அறிந்து திகைத்தான். பயமும் துயரமும் மனதைக்  கவ்வ ஐந்தடக்கிக் கொண்டு முழுமையாய் மயக்கம் வந்ததைப்போல் நடித்துக்கொண்டு எதிர்ப்பைக் காட்டாமல் சன்னமாய் மூச்சுவிட்டுக்கொண்டு கிடந்தான்.

அவன் உயிரோடிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திகொண்ட அவர்கள் மொத்தம் மூவர். மூவருமே வெளியூர் என்பதை அறிமுகமற்ற அவர்களின் அந்நியமான தோற்றம் காட்டிக்கொடுத்தது.

அங்கே ஒரு பூசைக்கான ஏற்பாடுகள் தயாராய் இருந்தன. அவற்றில் நடுநாயகமாய் நன்கு சானை பிடிக்கப்பட்டிருந்த பெரிய கத்தி வீற்றிருக்க ஓரடி உயரத்தில் மூன்று சிவப்பு மெழுகுவர்த்திகள் சன்னமான ஒளியைச் சிதறிக்கொண்டிருந்தன. அங்கிருந்து கொஞ்சம் தள்ளி சிறிய கூண்டில் ஒரு சேவல் அடைக்கப்பட்டிருந்தது.

 அடப்பாவிகளா !! சேவலை பலிகொடுத்து நாலு நம்பர் கேட்க வந்தவன்களிடம் வலிய வந்து தலைகொடுத்து நாம் பலியாகப் போகிறோமே என ஆதங்கப்பட்டது வேலுவின் மனது. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என அரைக்கண்களாலேயே அனைத்தையும் கவனித்துக்கொண்டு ஒன்றும் முடியாதது போல் கீழே கிடந்தான் வேலு.

அவன் கைகால்கள் கட்டப்பட்டிருக்கவில்லை ஆனால் மூவரில் ஒருவன் கையில் கட்டையுடன் அவன் அருகிலேயே நின்றிருந்தான். தப்பிக்க முயற்சித்து எழுந்தால் மண்டையில்  ஒரே போடு போடுவதாய் ஏற்பாடு.

வேலு ஆவலுடன் பங்கெடுக்க விரும்பிய அந்த பூசை அவனையே பலிகொள்ளும் ஏற்பாட்டுடன் ஆரம்பித்தது. கருமை நிற ஆடை அணிந்திருந்த சீனன் ஒருவன் மருள் வந்து ஆட ஆரம்பிக்க மேலும் இருவரின் கவனமும் அவன்மேல் பதிய...

இதுதானடா சரியான சந்தர்ப்பம் என யாருமறியா வண்ணம் கை நிறைய மண்ணை அள்ளி மிகச்சரியாய் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்திகளின் மேல் வீசினான் வேலு. அங்கிருந்த கொஞ்சம் வெளிச்சமும் அணைந்து கும்மிருட்டு கவ்வியது. அந்தச் சீனன்கள் சுதாரிப்பதற்குள் அங்கிருந்து எழுந்து புயல் வேகத்தில் ஓட ஆரம்பித்தான் வேலு. பூசை தடைபட்ட வெறியில் சீனன்கள் குய்யோ முய்யோவென கருவிக்கொண்டு அவனை விரட்ட ஆரம்பிக்க...

எங்கே போகவேண்டும், எப்படிப் போகவேண்டும் எனும் இலக்கின்றி, எங்காவது போவோம், தப்பித்தால் போதுமெனும் வேட்கையுடன் எதிரே குறுக்கிட்ட செடிகொடிகளையும் மரங்களையும் முட்டி மோதி ஆயாசத்துடன் ஓடினான் வேலு.

அப்போதுதான் அவனை நாம் கண்டோம். அவன் வரலாற்றையும் தெரிந்துகொண்டோம். இனி மேலும் என்ன நடந்தது என்பதும் தெரிய வேண்டுமல்லவா ? வாருங்கள் தொடர்வோம்...

ஓடிவந்த வேலுவை நோக்கி வெளிச்சம் வந்ததே. அது வேலுவின் நண்பன் வாசு!! வேலுவை நள்ளிரவில் நடுக்காட்டில் விட்டுச் சென்ற வாசு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடப்போகிறது எனும் பயத்தில் நண்பர்கள் சிலரை திரட்டிக்கொண்டு அவனை தேடி காட்டிற்குள் வந்தான். மிகச்சரியாய் அந்நேரத்தில் வேலு அவர்கள் முன்னே மூர்ச்சையடைய, அவர்கள் அவனைக் காப்பாற்றி மூர்ச்சை தெளிவித்தனர்.

காவல்துறையினர் செய்தியறிந்து அவ்விடம் விரைய, அந்தச் சீனன்கள் மூவரும் போட்டது போட்டபடி அவ்விடம் விட்டு தப்பிவிட்டிருந்தனர்.

இப்பொழுது வேலு செம்பனைத் தோட்ட வேலையை விட்டு விட்டு அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்கிறார். முக்கியமாய் அமாவாசை அன்று மட்டும் பொழுதிலேயே வீடு திரும்பிவிடும் வேலு இருட்டினதுக்கப்புறம் பூட்டின வீட்டைவிட்டு வெளியவே வர்ரதில்லங்க. மிக முக்கியமாய் நாலு நம்பர் பக்கமே தலைவச்சும் படுக்கிறதில்லை. கையில் மிச்சப்படும் பணத்தை முறையாய் செலவு செய்து அதில் மிச்சம் பிடித்து சேமிக்கவும் கற்றுக்கொண்டார்.

மரண பயத்தை பார்த்தவன் மனைவியையும் மாமியாரையும் பார்த்தா பயப்படுவான்? சாராயம் கேட்டு அலும்புபண்ணே கழுத்தைத் திருகி காட்டிலே போட்டிருவேன் என மிரட்டியதில் மாமியார்க்காரி துண்டைக் காணோம் துணியைக்  காணோம் என மகன் வீட்டுக்கு மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஓடிப்போனாள், அதன் பின் அவன் மனைவி பல்லைப் பிடுங்கின பாம்பைப்போல் தத்தளிக்க, சிற்சில சமயங்களில் அவள் சீறல்களையும் ஒரு நாள் ஓங்கிக்கொடுத்த ஓர் அறையில் முடிவுக்கு கொண்டு வர, அவள் அவனுடைய மனங்கோணாத மனைவியாய் மாறிப்போனாள்.

அம்புட்டுதாங்க!! இப்போ வேலு சம்சாரத்தோடும் புள்ள குட்டிங்களோடும் சந்தோக்ஷமா இருக்காருங்க. கதை முடிஞ்சி போச்சி.
















No comments: