தேன் சாகரத்தில் சிறு தேனீயின் அநுபவம் : பொன்னியின் செல்வன்

சுயநலம் மலிந்த இப்புவியில், தான், தனக்கு என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் தியாகமே உருவாய் சில அற்புத மாந்தர்களும் அவதரிப்பதுண்டு, அவ்வகையில் தமக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தை மற்றொரு அரசவாரிசுக்கு விட்டுத்தந்து தியாகச் சிகரமாய் உயர்ந்த ஓர் இளவரசன் கதையே "பொன்னியின் செல்வன்".
1950 - 1955 வரை ஐந்தாண்டுகள் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டு வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற வரலாற்றுப்புதினமே பொன்னியின் செல்வன். சோழப்பேரரசில் சுமார் ஆறு மாத காலத்தில் நிகழ்ந்த வரலாற்று மற்றும் கல்கியின் அபார கற்பனை கலந்த சம்பவங்களை இப்புதினம் முன்வைக்கிறது.
ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு புதுவெள்ளம் (57 அத்தியாயங்கள்), சுழல்காற்று (53 அத்தியாயங்கள்), கொலைவாள் (46 அத்தியாயங்கள் ), மணிமகுடம் (46 அத்தியாயங்கள் ), தியாகச் சிகரம் (91 அத்தியாயங்கள்) என மொத்தம் 293 அத்தியாயங்களாக பொன்னியின் செல்வன் புதினம் வாசகர்களுக்கு அற்புதமாக படைத்தளிக்கப்பட்டிருக்கின்றது.
ஓர் ஊரில் ஒரு ராஜா.......!
கி.பி 1000 ஆண்டு வாக்கில் சோழ நாட்டை பராந்தக சுந்தர சோழர் எனும் அரசர் ஆண்டு வருகிறார். அவர் கடும் நோயால் பாதிக்கப்பட்டு வாடுகிறார். அவர் கூடிய விரைவில் மரணமடைந்து விடுவார் எனும் எண்ணம் எல்லோர் மனதிலும் குடிகொன்டு விடுகிறது, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கம் சிலருக்கு உதிக்கிறது. சதித்திட்டங்கள் வெடிக்கின்றன. மன்னரையும், அரச வாரிசுகளையும் வேருடன் அழிக்கும் திட்டங்கள் சதிகாரர்களால் அரங்கேற்றம் பெறுகிறது, அவற்றில் பெரும்பங்கு அரச விசுவாசிகளாக வரும் முக்கிய கதாமாந்தர்களால் முறியடிக்கப்படுகிறது. இப்போராட்டங்களை வீரம், அழகு, விவேகம், காதல் எனும் வண்ணங்களைக்கொன்டு பொன்னியின் செல்வன் எனும் அற்புத ஓவியத்தை நமக்கென படைத்திருக்கிறார் கல்கி.
அரசரின் மூன்றாவது புதல்வர் அருள்மொழி எனும் பொன்னியின் செல்வர், இப்புதினத்திற்கு பெயர் தந்தவர். குழந்தைப்பருவத்தில் பொன்னி நதியில் வீழந்து காப்பாற்றப்பட்டவர். அதனால் பொன்னியின் செல்வர் என சிறப்பித்து அழைக்கப்படுபவர். அன்பு, அழகு, அறிவு, ஆற்றல், வீரம், விவேகம் ஆகிய அனைத்து சிறப்பியல்புகளும் ஒருங்கே அமையப்பெற்றவர். யானைகளின் பாக்ஷை அறிந்து அவற்றை வழி நடத்தும் திறமையும் கைவரப்பெற்றவர். குடிமக்கள் அனைவராலும் மிகவும் விரும்பிப் போற்றப்படும் இளவரசர். பின்னாளில் மகோன்னதம் மிக்க மன்னராக "இராஜராஜசோழன்" என பெரும்புகழ் பெற்றவர். இப்புதினம் எழுதப்பட்ட தருணத்தில் அவர் இலங்கைக்கு போர் புரிய சென்றிருக்கிறார். குந்தவையின் நெருங்கிய தோழியாக வரும் வானதி தேவி இவர் மனதில் இடம் பிடித்துக்கொள்கிறார்.
இக்கதையின் நாயகன் வல்லவரையன் வந்தியத்தேவன். இவன் தொன்மைமிக்க வாணர் குல வழித்தோனறலாவான். தமது நாடு சோழப்பேரரசுக்கு கட்டுப்பட்டுவிட்ட நிலையில் வல்லவரையன் ஆதித்த கரிகாலரிடம் ஒற்றராக பணிபுரிகிறான். வந்தியத்தேவனுக்கு வீரம், அழகு, அன்பு ஆகியவை நிறைந்திருப்பினும் எந்தவொரு காரியத்திலும் ஆழம் அறியாமல் காலைவிடும் இயல்பும் அவசரபுத்தியும் கூடவே அமைந்துள்ளன. இதனால் வந்தியத்தேவன் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறான். கந்தமாரனைக் கொல்ல முயன்றான் எனவும், பொன்னியின் செல்வரைக் கொன்றான் எனவும், ஆதித்த கரிகாலரைக் கொன்றான் எனவும் பல சமயங்களில் பல அபவாதங்களில் சிக்கிக்கொள்கிறான், இருந்தாலும் தமது வீரத்தாலும் விடா முயற்சியாலும், அரச விசுவாசிகளின் ஆதரவாலும், குந்தவையின் அன்பாலும் எல்லாப் பழிகளையும் களைவதில் வெற்றிகொள்கிறான் இறுதியில் வந்தியத்தேவன் வாழ்க்கையிலும், காதலிலும் வெற்றி வாகை சூடுகிறான். தமது வீரத்தால் பல சாகசங்கள் நிகழ்த்தும் வந்தியத்தேவனுக்கு ஆதரவாக அரச விசுவாசி மந்திரி அநிருத்தரின் ஒற்றன் ஆழ்வார்க்கடியான், பூங்குழழி மற்றும் சேந்தன் அமுதன் ஆகியோர் பேருதவிகள் புரிகின்றனர்.
நந்தினி முதலில் ஆதித்த கரிகாலனை விரும்பி தமது ஆசை நிறைவேறாத பட்சத்தில் பாண்டிய மன்னனை மணந்து கொள்ள விழைகிறாள். எனினும் ஆதித்த கரிகாலனால் பாண்டிய மன்னன் வீழ்த்தப்பட்டு மரணத்தைத் தழுவியதால் சோழவம்சத்தை கருவறுக்கப் புறப்படுகிறாள். இவளுக்கு மறைந்த பாண்டிய மன்னனின் விசுவாசிகள் "ஆபத்துதவிகள்" எனும் பெயரில் பணியாற்றுகின்றனர். இவள் காண்போரை மயக்கும் பேரழகி, இவள் மோகவலையில் சிக்கி இவள் சொன்னபடியெல்லாம் தலையாட்டுகிறார் பெருவீரரான பழுவேட்டரையர்.இவர் மட்டுமன்றி கந்தமாறன், பார்த்திபேந்திரன் போன்ற மாவீரர்களும் இவளுக்கு கட்டுப்பட்டுவிடுகின்றனர்.
அரசாட்சியைக் கைப்பற்ற உள் நாட்டில் நிகழும் சதிகள், கூடவே பாண்டிய நாட்டின் வெளி நாட்டு சதிகள். இதனால் சோழ அரசும், அரச வாரிசுகளும்
எதிர்கொன்ட எண்ணற்ற பிரச்சனைகள் இப்புதினத்தில் பகிரப்பட்டுள்ளன.
வந்தியத்தேவன் தாம் அறிந்துகொன்ட சதித்திட்டத்தை அரசரிடமும், இளவரசி குந்தவையிடமும் தெரிவிக்க முயல்கிறான். அரசர் அவன் கூற்றை சட்டை செய்யவில்லை. மேலும் அவன் தன் தோழன் கடம்பூர் இளவரசன் கந்தமாறனை கொல்ல முயற்சி செய்தான் எனும் வீண்பழியும் அவன்மேல் சுமத்தப்படுகிறது. எனினும் மதிநுட்பம் வாய்ந்த குந்தவை தமது சகோதரர்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தை உணர்ந்து, அவர்களை காப்பாற்ற பாடுபடுகிறாள். இளவரசி குந்தவை வந்தியத்தேவன் மீது கொன்ட நம்பிக்கையால் பொன்னியின் செல்வனைக் காப்பாற்ற இலங்கைக்கு வந்தியத்தேவனையே அனுப்புகிறாள்.
பொன்னியின் செல்வரால் புகழப்பட்ட இக்காரிகை வந்தியத்தேவனுடன் இணைந்து பல சாகசங்கள் புரிந்து நமது மனங்களில் நீங்கா இடம்பிடிக்கிறார். இவரின் மாமன் சேந்தன் அமுதனும், அத்தை ஊமை ராணி எனும் மந்தாகினி தேவியும் சோழ அரசைக் காப்பாற்ற பெரிதும் உதவுகின்றனர். இதில் பல முறை பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய ஊமை ராணி இறுதியில் தமது உயிரைக்கொடுத்து மன்னர் பராந்தக சுந்தர சோழரை பாண்டிய ஆபத்துதவிகளின் கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்கிறார்.
இலங்கையில் பொன்னியின் செல்வரின் நெருங்கிய நண்பராகிவிடுகிறான் வந்தியத்தேவன். இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் மீண்டும் இளவரசர் அருள்மொழி பிரச்சனையில் சிக்கிக்கொன்ட வந்தியத்தேவனை காப்பாற்ற கடலில் மூழ்கி சுரம் கண்டு புத்த பிட்சுக்களின் பாதுகாப்பில் யாருமறியாமல் விடப்படுகிறார். அவரைக் கொன்றார் எனும் பழியும் வந்தியத்தேவனை வந்தடைகிறது.
அதிலும் மீண்டு, ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவழைத்து தீர்த்துக்கட்டும் சதிவலை பின்னப்படுவதை அறிந்து அதிலிருந்து ஆதித்தனைக் தடுத்துக் காப்பாற்ற வந்தியத்தேவனை ஏவுகிறாள் குந்தவை. எவ்வளவோ முயன்றும் வந்தியத்தேவனால் ஆதித்தனைக் காப்பாற்ற இயலாமல் போய், ஆதித்தன் கொலை செய்யப்பட்டு விடுகிறான். அந்தப் பழியும் வந்தியத்தேவன் தலையில் வீழ்கிறது. ஈடிணையற்ற பேரிழப்பான ஆதித்த கரிகாலன் மறைவை "விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆசையால் ஆதித்தன் மறைந்தான்" என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பதிவு செய்துள்ளன. இயற்கையின் குறியீடாக தூமகேதுவின் தோற்றமும் மறைவும் ஆதித்தனின் மறைவுக்கு கட்டியங்கூறுவதாய் அமைகிறது. இதற்குக் காரணமானவர்கள் பின்னாளில் பொன்னியின் செல்வரால் அடையாளங்கண்டு தண்டிக்கப்பட்டனர் என வரலாறு பகர்கிறது.
இதற்கிடையில் கரிகாலன் மரணம் தொட்டு, பழுவேட்டரையர் மனந்திருந்தி அப்பழியைத்தாமே ஏற்று உயிர் துறக்கிறார். அவரின் மனைவியாக வந்த நந்தினி தாம் மேற்கொன்ட சபதம் ஜெயித்த மகிழ்சியில் பழுவேட்டரையரை விட்டுப் பிரிந்து போய் விடுகிறாள். இவள் ஊமை ராணிக்கும் பாண்டிய மன்னனுக்கும் பிறந்தவள் என்பதை பின்னாளில் தெரிந்து கொள்கிறாள். மேலும் வாரிசு போராட்டத்தில் ஈடுபட்ட மதுராந்தகரும் உண்மையில் இவளின் சகோதரனே. இந்த உண்மையை அறிந்து பாண்டிய ஆபத்துவிகளுடன் போய் இணைந்து விடுகிறான்.
இறைவனின் திருத்தொன்டில் ஆழ்ந்திருக்கும் உண்மையான மதுராந்தகர் பின்னர் வெளிப்படுகிறார். ஆனால் அவர் அரசு ஏற்க மறுக்கிறார்.
இப்புதினத்தின் முத்தாய்ப்பாக பொன்னியின் செல்வர் நோயிலிருந்து மீண்டு நாடு திரும்புகிறார். தாமே அரச பொறுப்பை ஏற்பதாகக்கூறி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளச் செய்கிறார். எனினும் இறுதியில் யாராலும் இயலாத மாபெரும் தியாகத்தைச் செய்து நம் மனதை முழுதாய் ஆட்கொன்டு விடுகிறார். ஆம் அவர் தமது அரச பதவியை உண்மையான மதுராந்தகருக்குத் தாரை வார்த்து அவரை அரசராக்கிவிடுகிறார்.அத்துடன் இப்புதினம் நிறைவை நாடுகிறது.
பின்னர் 15 ஆண்டுகள் கழித்து அதே பொன்னியின் செல்வர் "முதலாம் இராஜராஜன்" எனும் பெயருடன் அரசு கட்டிலில் அமர்ந்து செயற்கரிய சாதனைகள் செய்து வரலாற்றில் தடம் பதித்தவை, கல்வெட்டுகளில் இடம் பெற்றவை, இன்று உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்தது யாவும் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய உன்னதங்கள்....!
நமது கதாநாயகன் வந்தியத்தேவன் பின்னாளில் குந்தவை தேவியை மணந்து மிகவும் மரியாதைகுரியவராகத் திகழ்கிறார்.
இப்புதினத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை உலா வரும் ஒரு கதாபாத்திரமே மதுராந்தகர். அவர் யார் என்பதை நாம் இங்கே தெரிவிக்கவில்லை. நமது நோக்கம் படித்ததை பகிர்வது மட்டுமல்ல, இப்புதினத்தை இன்னும் படிக்காதவர்களை படிக்கத் தூண்டுவதும் ஆதலால், முழுதும் சொல்லிவிட்டால் சுவாரசியம் இல்லாமல் போய்விடும். புதிதாக படிப்பவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாக அமையட்டுமே எனும் பரந்த நோக்கில் அவர் பெயர் இங்கே மறைக்கப்பட்டு விட்டது. :)
பொன்னியின் செல்வன் எனும் இந்த மாபெரும் புதினத்தை நமக்கு ஆக்கித்தந்த எழுத்துலக மேதை கல்கி அவர்களைப் பற்றி சில விடயங்கள் பகிராவிட்டால் இப்பதிவு நிறைவை நாடாது.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலம் எனும் ஊரில் 9 செப்டம்பர் 1899 ஆம் ஆண்டு திரு ராமசாமி அய்யருக்கும், திருமதி தையல் நாயகி அம்மையாருக்கும் பிறந்த ரா.கிருக்ஷ்ணமூர்த்தி எனும் கல்கி அவர்கள் "நவசக்தி", "விமோசனம்", "ஆனந்த விகடன்" ஆகிய பத்திரிக்கைகளில் தமது எழுத்துப்பயணத்தைத் துவங்கி மிகச் சிறந்த எழுத்தாளராக பீடுநடை போட்டவர்.
இவர் "கல்கி" எனும் சொந்தப் பத்திரிக்கை ஆரம்பித்து தமிழின் முதல் சரித்திர நாவலான "பார்த்திபன் கனவு" புதினத்தை எழுதினார். தொடர்ந்து அவருக்கு ஈடிணையற்ற புகழை ஈட்டித்தந்த "சிவகாமியின் சபதம்", அவருக்கு சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுத் தந்த சமூக நாவலான "அலை ஓசை" தொடர்ந்து "பொன்னியின் செல்வன்" என ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் தமது பேனாவின் துணைகொன்டு இலக்கிய உலகின் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் ஆவார்.
தமது எழுத்தாற்றலால் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த பேனா மன்னர் கல்கி அவர்கள் 1954 டிசம்பர் 5ம் திகதி தமது 55ம் பிராயத்தில் தாம் எழுதிக்கொன்டிருந்த "அமரதாரா" எனும் தொடர் கதையை முடிக்காமலேயே இறைவனடி எய்தினார்.(அவரது புதல்வி ஆனந்தி கல்கியின் குறிப்புகளின் துணைகொன்டு அத்தொடர்கதையை முடித்தார்)

கல்கியைப் பெருமைப்படுத்தும் வகையில் "கல்கி நூற்றாண்டு விழா" 9.9.1999 வரை ஓராண்டு காலம் கொண்டாடப்பட்டது. கல்கியின் உருவம் தாங்கிய தபால் தலை வெளியிடப்பட்டது. கல்கி வசித்த அடையாறு காந்தி நகர் தெருவுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இன்று இவருடைய படைப்புகள் அனைவரும் படித்து இன்புறும் வகையில் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டன. காலத்தில் அழியாத காவியம் பல தந்த மாபெரும் எழுத்து மன்னர் கல்கி அவர்களை வணங்கி விடைபெறுவோம்.