.

.
.

Wednesday, June 21, 2017

பறவைகள் பலவிதம்


அர்ஜுன், நடுத்தர வயது ஆடவன், நல்ல உயரம், வாட்ட சாட்டமான தேகம். சிரித்த முகம். நகைச்சுவை குண‌ம் நிறைந்தவன். ஒரு பட்டதாரிப்பெண்ணை காதலித்து மணந்தவன். அவளை வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக்கொண்டான். அவர்களுக்கு இரண்டு ஆணும் இரண்டு பெண்ணுமாய் நான்கு குழந்தைகள்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொன்டிருந்தது. தொழிற்சாலை மேலாளராய் பணியாற்றும் அர்ஜுனுக்கு இரு உயிர் நண்பர்கள். ஒன்றாய் வேலை பார்ப்பவர்கள், அனைவரும் ஜாலி கைகள். வாரக்கடைசியானால் ஒன்று கூடி ஏதாவதொரு சீனன் "சீ புட்" கடையில் ஒன்றாய் அமர்ந்து மதுவும், உண‌வுகளுமாய் வாரக் கடைசியை கொண்டாடி மகிழ்வார்கள். அவரவர் அறிந்த தகவல்களை பறிமாறிக்கொள்வதிலிருந்து, குடும்ப விடயங்களை பகிர்ந்துகொள்வது, அவசரத்திற்கு ஒருவர் மற்றவரிடமிருந்து ஐம்பதோ, நூறோ கைமாற்றாய் கடன் வாங்குவது என அமைந்திருந்தது அவர்களின் நட்பு.

அர்ஜுனுக்கு தன் நண்பர்கள் என்றால் உயிர். தன் குடும்பத்தைவிட, உடன் பிற‌ந்தவர்களை விட அந்த நண்பர்கள் அவனுக்கு நெருக்கமாய் திகழ்ந்தனர்.

எல்லாம் நல்லபடியே போய்க்கொன்டிருந்தது. ஒரு நாள் முன்னிரவு வேலை விட்டு வீடு திரும்பிய அர்ஜுன் குளித்துவிட்டு அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொன்டிருந்தான்.

ஆஸ்ட்ரோவில் ஒரு நடிகர் தாய்மையைப் போற்றும் பாடலுக்கு அபிநயித்துக்கொன்டிருந்தார். நிகழ்ச்சியில் இலயித்துப்போன அர்ஜுனை உலுக்கினாள் அவன் மனைவி யமுனா.

 என்னங்க! என்ன இது ? பரபரப்புடன் அவள் சுட்டிக்காட்டிய தன் விலாவை நோக்கிய அர்ஜுன் சிவந்த நிறம்கொன்ட தனது உடலில் பருப்பு அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெண்மையாய் நீர்கோர்த்த முத்துக்கள் திட்டுக்கள் இட்டிருப்பதைக் கண்டான்.

உங்களுக்கு பெரியம்மை வந்திருச்சுங்க, பதறினாள் யமுனா.

 அதை அலட்சியப்படுத்திய அர்ஜுன்  அட இவ ஒருத்தி ! எப்பப் பார்த்தாலும் நொய்நொய்ன்னிட்டு ! இது ஏதோ சாதாரண நீர்க்கட்டி தாம் பிள்ள ! இது ஒன்னும் அம்மையில்ல, நீ வீணா உளராத, கடுப்புடன் அவன் எடுத்தெரிந்து பேச, யமுனா மெள்னமாகிவிட்டாள். அர்ஜுனின் உழைப்பை நம்பியே அவர்கள் குடும்ப‌ வாழ்க்கை நகர்ந்தது. அவன் நலமும் ஆரோக்கியமும் அந்தக் குடும்பத்திற்கு மிக முக்கியம். சொல்லமுடியாத பயமும் பதற்றமும் யமுனாவின் மனதில் குடையத் துவங்கியது.

தொடர்ந்த ஓரிரு நாட்களை வழக்கம் போலவே கழித்தான் அர்ஜுன். தன் உடலில் மேலும் அதிகமான நீர்க்கட்டிகளும், லேசான காய்ச்சலுடன் தலைவலி எடுப்பதையும் சட்டை செய்யாமல் நாசி கண்டார் க‌டையில் வாங்கிய பெனடோல் இரண்டை விழுங்கிவிட்டு சாதாரணமாய் இருந்தான்.

அதற்கடுத்த சில நாட்களில் யமுனா பயந்தபடியே அர்ஜுனுக்கு உடல் முழுதும் பெரியம்மை போட்டுவிட்டது.

தனது கம்பெனியின் பேனல் கிளினிக்கிற்கு விரைந்த அர்ஜுனை, தொட்டும் பார்க்காமல் சில வலி நிவாரண மாத்திரைகளை வாரிக்கொடுத்து, இரண்டு வார வேலை விடுப்பு கொடுத்து அனுப்பினார் அங்கிருந்த‌ இந்திய மருத்துவர். அம்மைநோய் பயம் படித்துப் பட்டம் வாங்கிய மருத்துவரைக்கூட விட்டுவைக்கவில்லையே ! தனது அலட்சிய சுபாவத்தின் மீது முதல் முறையாய் கோபம் வந்தது அர்ஜுனுக்கு.

இரண்டு வாரம் விடுப்பு முடிந்தது. அர்ஜுன் உடலிலும் முகத்திலும் தோன்றிய அம்மைப்புண்கள் ஆறின, தீய்ந்த கருந்திட்டுக்களாய் முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே அம்மைத்தழும்புகள் அடையாள‌மிட்டிருந்தன‌. உடல் நலம் தேறிவிட்டது என நினைத்த சமயத்தில் தொடந்தாற்போல் அர்ஜுனின் கைகளும் கால்களும் நிரந்தரமாய் மர‌த்துப்போய்விட்டன. சாதாரணமாய் நமக்கு ஒரு சில நிமிடங்கள் கால்கள் மர‌த்துப் போனாலே அத்தனை சிரமமாய் இருக்கும். அர்ஜுனுக்கோ உடல் முழுதும் மர‌த்துப்போய் மிகவும் அசெளகரியமாக இருந்தது.

மருத்துவர் அது சாதாராண பிரச்சனை எனக் கூறி மேலும் சில நரம்புக்கான சத்து மருந்துக்களும் வேலை விடுப்பு நீட்டிப்பும் கொடுத்து அனுப்பினார்

நோயின் தீவிரத்துடன் அடங்காத பசி உண‌ர்ச்சியும் அர்ஜுனுக்கு ஏற்பட்டது.

எந்நேரமும் பசி பசி என வருந்தினான், மனைவி நிறைய உணவு கொடுத்தும்

பசி அடங்கவில்லை, நாளுக்கு நாள் உடல் மர‌ப்பும், தீராத பசியும், கூடவே சொல்ல முடியாத வேதனை நிறைந்த உடல் நோவும் அர்ஜுனை வாட்டி வருத்தியது.

அர்ஜுனின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி மனநிலை குழம்பியது.  வாய் ஒருபுறம் கோணிக்கொன்டது, வாய் குளர ஆரம்பித்தது. முகம் பொழிவிழந்து வீங்கி, கண்கள் சிவந்து நோயாளியாய் காட்சியளித்தான்.

யாரோ தனக்கு பில்லி சூனியம் வைத்துத்துவிட்டனர் எனப் புலம்ப ஆரம்பித்தான். இரவில் தூக்கம் தொலைத்தான். ஒரு மாதம் கழிந்த பின்னர்  ஓரிரவு நோவின் உச்சக்கட்ட வேதனையில் செய்வதறியாது மனைவி மக்களை காரில் அள்ளிப்போட்டுக் கொன்டு அருகாமையிலிருந்த முனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றான்.

உலகை இருள் சூழ்ந்திருக்க, இரவுப் பறவைகளின் சன்னமான ஒளிகள் அங்குமிங்கும் ஒலித்து மறைய, மணியோ பன்னிரன்டைத் தான்டியிருந்தது, ஆலயம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. காரை ஆலயத்தின் முன்னே நிறுத்தி ஆலயத்தின் வாசலில் பரிதாபமாய் நின்று ஐயாவிடம் தனது வேண்டுதலை கலங்கியபடியே முன்வைத்தான்.


அவன் நிலையைக் கண்டு யமுனாவும் மனம் நொந்து அவன் நலம் வேண்டி ஐயாவிடம் தீவிரமாய் வேண்டிக்கொன்டாள். அவள் மனதின் வேதனை யாவும் கண்ணீராய் பொங்கி வழிந்தது.

பளிச்சிடும் எஃகு கதவுகளுக்குப் பின்னே அஜானுபாகுவான தோற்றத்துடன் சடாமுடி தரித்து, பெரிய கண்களில் கருணை கசிய, முறுக்கிய மீசைக்குள்ளிருந்து மெலிதாய் இதழ் பிரிந்து புன்னகைக்க‌ ஐயா வாசலுக்கு வெளியே நின்று கலங்கும் அர்ஜுனையும் யமுனாவையும் கவனித்துக்கொன்டிருந்தார்.

அந்த இரவு விடியும் வரை உறக்கமின்றி நீண்டது அர்ஜுன் யமுனாவுக்கு.

அர்ஜுன் உற‌வுகள் யாரிடமும் தன் பிரச்சனையைத் தெரிவிக்கக் கூடாது என யமுனாவைத் தடுத்திருந்தான், ஆனால் நிலைமை மிகவும் மோசமாவதை உணர்ந்த யமுனா அதற்குமேல் அமைதி காப்பது சரிவராது என தன் மாமியாரிடத்தில் உதவி கேட்க முடிவு செய்தாள். மறுநாள் விடிந்தும் விடியாமலும் பக்கத்து பட்டிணத்தில் இருக்கும் தனது மாமியாரை தொலைபேசியில் தொடர்புகொன்டு கணவனின் உடல் நிலையைத் தெரிவித்து அழுதாள்.

மாமியார் இளைய மகனை அழைத்துக்கொன்டு விரைந்து வந்தார். நோயில் வாடி வதங்கிப்போன தன் மகனைக் கண்டு கலங்கினார். உடன் வந்த மச்சினன் சுரேஸ் உடனே தனது அண்ணனை அழைத்துச் சென்று ஊரிலேயே பெரிய தனியார் மருத்துவமனையில் முன் பண‌ம் செலுத்தி சேர்ப்பித்தான்.

அர்ஜுனுக்கு "guillen barre syndrome “ எனும் நரம்புச் சிதைவு நோய் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய அந்த நோய் துரதிர்க்ஷ்டவசமாய் அர்ஜுனை பீடித்திருந்தது. அதற்கான மருத்துவம் மலேசிய ரிங்கிட் ஐம்பதாயிரத்தைத் தாண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதைத்தான் ஆரம்ப காலங்களில் நமது முன்னோர், அம்மை கண்ட பின்னர் ஏற்படும் "மறுமுள் பாய்தல்" என்று குறிப்பிட்டார்கள் போலும்.

சிகிச்சைக்குப் பணம் போதவில்லை. என்ன செய்வது, மருத்துவ அட்டை (மெடிக்கல் கார்டு) ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை அவசியம் ? யமுனா குடும்ப நலனை கருத்தில் வைத்து மருத்துவ அட்டை எடுக்கும்படி வலியுறுத்தினாலும் தொடரும் செலவுகளால் அதற்கு அர்ஜுன் முக்கியத்துவம் தரவில்லை. மருத்துவ அட்டை இல்லாத அர்ஜுன் பணத்திற்கு தத்தளித்தான்.

யமுனா உற‌வுகளிடம் கையேந்தினாள். யாரால் 50 ஆயிரம் ரொக்கமாய் தர முடியும்? அவள் வேதனையில் வாடினாள். பத்தாயிரம் வெள்ளிக்குமேல் அவளால் திரட்ட முடியவில்லை, வீட்டை விற்க நினைத்தாள், ஆனால் நேரம் மிகவும் குறைவாய் இருந்ததால் அவள் வழியின்றி வாடினாள்.

தூக்க மருந்து செலுத்தப்பட்டு அர்ஜுன் உறங்கிய பின்னர், மருத்துவமனையின் கண்ணாடிக் கதவுகளூடே இருள் சூழ்ந்த வெளியில் குவிந்திருக்கும் இருளையும், ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் நட்சத்திரங்ககளையும் வெறித்தபடி, கண‌வனையும், குழந்தைகளையும் எண்ணியபடியே எதிர்காலத்தை நினைத்து வாடிக் கலங்கினாள் யமுனா. அவளின் உறக்கத்தை வேதனைகள் விழுங்க, அவளின் பொழுதுகள் பெரும் பாரமாய் கழிந்தன.

தனக்கும் மேலான சக்தியிடம் அவள் தொழுது நின்றாள். ஏதாவது ஓர் அதிசயம் நிகழ கசிந்து கண்ணீர் மல்கினாள். அந்த அபலையின் வேண்டுதல் பிரபஞ்சத்திற்கு கேட்டது போலும்..

யமுனாவின் வேண்டுதல் நிறைவேறியது. அர்ஜுனின் நிலையறிந்து  மருத்துவ செலவுக்கான மொத்த தொகையையும் அவன் வேலைசெய்யும் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்காம் நாள் பணம் செலுத்தப்பட்டது. யமுனாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது. உடனடியாய் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் யமுனா.

“நீங்க மருத்துவ அட்டை வச்சிருந்தா எவ்வளவோ வசதியாயிருந்திருக்குமேங்க” என அர்ஜுனிடம் புலம்ப நினைத்த யமுனா அவனே நொந்துபோயிருக்க‌ தனது வேதனையை தொண்டைக்குழியிலேயே அடக்கிக்கொன்டாள்.

அர்ஜுனுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. கோழி முட்டை வடிவத்திலான கண்ணாடிக்குடுவைகளிலிருந்து ஒரு பாட்டில் 500 வெள்ளி என கணக்கிடப்பட்டு 75 மருந்து பாட்டில்கள் அர்ஜுன் உடலில் செலுத்தப்பட்டன.

மருந்து செலுத்தப்பட்ட ஓரிரு நாட்களில் அர்ஜுனின் உடல்நிலை தேற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தான். யமுனா மகிழ்ச்சியுடன் புன்னகைக்க ஆரம்பித்தாள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணவனின் கைகளைப்பற்றிக்கொண்டு மகிழ்ச்சியாய் பேச ஆரம்பித்தாள். அர்ஜுனும் கொஞ்சம் கொஞ்சமாய் தேறிக்கொன்டு வந்தான். உடலை அசைக்கவே முடியாத நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சகஜ நிலைக்கு உடல் நிலைக்கு திரும்பியது.

மருத்துவமனையில் அர்ஜுன் சேர்க்கப்பட்ட விடயம் அவன் நிறுவன‌த்தில் மிகவும் பரபரப்பான செய்தியாய் பேசப்பட்டது. அர்ஜுனுக்கு அறவே பிடிக்காத அவனது மலாய்க்கார அதிகாரி முதல் ஆளாய் பழங்களும் பிஸ்கெட்டுகளும் வாங்கிக் கொன்டு அவனை மருத்துவமனையில் வந்து கண்டார். உண்மையான கரிசனம் அந்த மனிதனின் பேச்சிலும் செய்கையிலும் கண்ட அர்ஜுன் வேலைக்கு அப்பாற்பட்டு சைனி எனும் தனது அதிகாரி மிகவும் நல்லவர் என்பதை அன்று கண்டு வியந்தான்.

சில மணி நேரம் செலவிட்டு ஆறுதல் கூறியபின் அந்த அதிகாரி புறப்பட்டு சென்றார். நெகிழ்ந்து போனான் அர்ஜுன். மேலும் பலர் அவனை வந்து கண்டனர், நலம் விசாரித்தனர், ஆனால் ஒவ்வொரு வாரக்கடைசியிலும் தன்னுடன் கூடிக் கும்மாளமிட்ட தனது ஜாலி நண்பரில் ஒருவர் கூட எட்டிப்பார்க்காததும் , ந‌லம் விசாரிக்காததும் அவனுக்கு மிகவும் வேதனையளித்தது.

அட அம்மை தீய நோய்தான், ஆனால் நலம் விசாரிப்பதால் கூட ஒட்டிக்கொள்ளுமா என்ன? ஏன் இவர்களுக்கு இந்த பாராமுகம்? நொந்து போனான் அர்ஜுன். தொலைபேசி வழியாகவோ கூட அவர்கள் தொடர்புகொன்டு நலம் விசாரிக்கவில்லை என்பது மிகவும் வேதனையாய் இருந்தது அர்ஜுனுக்கு, எத்தனை முறை மனைவியிடம் பகைத்துக்கொன்டு அவர்களோடு கும்மாளம் போட்டிருப்பான்? எவ்வளவு பணம் அவர்களோடு செலவழித்திருப்பான்? தனது நட்புகளின் செய்கையை யமுனா விமர்சித்தால் என்ன செய்வது, அவமானமாக இருந்த‌து அர்ஜுனுக்கு. நடப்பதை உணர்ந்திருந்தும் யமுனா எதுவும் கேட்கவில்லை.

அடக்கடவுளே, எத்தனை முறை இந்த நண்பர்களுக்காக மனைவியிடம் சண்டையிட்டு பணம் பிடுங்கிக்கொன்டு போய் கொடுத்திருப்பேன். அட வந்து பார்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரே நிறுவனத்தில்தானே வேலை செய்கிறோம், நமக்கு நெருக்கம் என்று நினைத்திராத பலர் வந்து பார்த்துவிட்டுச் சென்ற‌னரே, இவர்களில் ஒருவருக்குக் கூட தன் நலம் விசாரிக்கத் தோணலியே? மனம் குமைந்தது அர்ஜுனுக்கு. நண்ப‌ர்கள் என்றால் மகிழ்ச்சியிலும் துயரத்திலும் உடனிருப்பவர்கள் தானே ?

விரைந்த நாட்களில் படிப்படியாய் உடல்நிலை தேறி நல்லபடி குணமடைந்தான்அர்ஜுன். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வேலைக்கு கிளம்பினான்.

நிறுவன‌த்தில் அனைவரும் அர்ஜுனை மகிழ்வுடன் நலம் விசாரித்தனர். அவனது நெருங்கிய சகாக்கள் இருவரும் எதுவுமே நடவாதது போல் மேலோட்டமாய் நலம் விசாரித்தனர். அர்ஜுன் தனது கடுப்பை அடக்கிக்கொன்டான். சகஜமாய் பட்டும் படாமல் பேசி தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

அந்த வாரக் கடைசி வந்தது. வழக்கம்போல் கூடிக் கும்மாளமிட அவனையும் அழைத்தனர் அவன் நண்பர்கள். அர்ஜுன், இல்லை எனக்கு வேற வேல இருக்கு, வரமுடியாது என மறுத்துவிட்டு, அந்த வார இறுதியை தனது குடும்பத்தினருடன் தனது தாயை சென்று கண்டுவரக் கிளம்பினான். மனைவியும், பிள்ளைகளும் மிகவும் மகிழ்ந்துபோயினர். இனிமேல் எப்போதும் வாரக் கடைசிகள் தனது குடும்பத்தினர்க்கே என மனதில் நினைத்தபடியே, குடும்பத்துடன் தாய் வீடு நோக்கி காரைச் செலுத்திக்கொன்டிருந்தான் அர்ஜுன்.





மலேசிய நண்பன் இதழில் வெளியான படைப்பு

ஆக்கம்


சிவ.ஈஸ்வரி,

பினாங்கு











No comments: