.

.
.

Sunday, January 7, 2018

அந்த அமாவாசை இரவில்...!! (100 கதைகளில் ஒரு கதை :)

சமூகத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் !! _/\_ (அழுத்திச் சொல்வதில் அலாதி ஆனந்தம் , உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் தோரனை :) , இவ்வருடம் 2018, அனைவருக்கும் ஆனந்தம் நிறைந்து சுகமும் செளபாக்கியமும் சித்திக்க வேண்டும்.

புத்தாண்டுக்கு எல்லோருக்கும் ஒரு நற்செய்தி, அதாவது இப்படியே வாரம் ஒரு பதிவெழுதி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திட வேண்டும் என்பதுதான் :(

நல்லது , கீழ்க்கண்ட சிறுகதை நிறைய உண்மையும் கொஞ்சூண்டு கற்பனையும் கொண்ட ஒரு பதிவு, இதற்கு பரிசும் அங்கீகாரமும் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் பல, பதிவுக்குள் செல்வோம்...

அந்த இருள் சூழ்ந்த காட்டில் வியர்க்க விருவிருக்க ஓடிக்கொண்டிருந்தான் வேலு. அவன் அணிந்திருந்த ஜப்பான் சிலிப்பரில் ஒன்று எங்கோ விழுந்து தொலைந்திருக்க, அதைக் கண்டுபிடிக்கும் அவகாசமும் இன்றி சோர்ந்துபோய்விட்ட உடலின் எஞ்சிய பலம் அனைத்தும் திரட்டி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கண்மண் தெரியாமல் அந்தக்காட்டின் நடுவிலிருந்து அதன் விளிம்பு நோக்கி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான். இது அவனுக்கு வாழ்வா சாவா போராட்டம் !! அவன் ஓட்டம் தொடர்கிறது.

ஆங்காங்கே கூரிய கற்களும் முட்களும் அவன் பாதங்களை தைத்து சதைக்குள் புதைந்து வதைப்பதையும் பொருட்படுத்தாமல் அவன் அந்தக் காட்டின் விளிம்பை நாடி ஓடிக்கொண்டேயிருந்தான்.


அதோ எட்டிய தூரத்தில் அவன் கண்களுக்கு மங்கலாய் ஏதோ ஒளிபோல் தெரிகிறதே...!! அந்த ஒளி அவனை நோக்கி வருவதைப்போல் தோன்றுகிறதே, அவனை நெருங்குகிறதே..!! ஐயோ இது அவனை மீட்க வரும் ஒளியா அல்லது செத்துப் பிழைத்தவனை மீண்டும் ஆபத்திலாழ்த்த வரும் ஒளியா ?

கால்கள் தளர்ந்து, உடல் வியர்வையில் நனைந்திருக்க அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க வலுவின்றி தன் சுயம் தொலைத்து பொத்தென்று கீழே வீழ்ந்தான் வேலு !! மங்கிய ஒளியில் இரண்டு ஆடவர்கள் அவனருகில் வந்து சேர்ந்தனர்...

வேலுவுக்கு என்ன நடந்தது ? அப்படித் தலைதெறிக்க ஓட வேண்டிய அவசியமென்ன ? ஏன் ? எதற்கு ? எதனால் ? என்ன நடந்தது ? அறிந்துகொள்ள ஆர்வம் என்னைப்போலவே தங்களுக்கும் பிறக்கிறதல்லவா ? வாருங்கள் கொசுவத்திச் சுருள் உத்தியை உபயோகித்து இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்த அவனுடைய நேற்றைய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்....

வேலுவின் தந்தை கன்னியப்பனுக்கு 13 பிள்ளைகள், 7 பொண்களும் 6 ஆண்களும், அதில் வேலு கடைசிப் பையன். அவன் கட்டையாய் கரிய நிறத்தில், கழுத்தின்றி தலையும் உடலும் ஒட்டிப் பிறந்த பிறவிபோல் பெருத்த உருவத்துடன் கருப்பாய் பயங்கரமாய் வளர்ந்திருந்தான். பெயருக்குக் கொஞ்சம் படிப்பு வாசனையும் அவனுக்கு இருந்தது. கேள்வி ஞானம் அதிகம். சீன நண்பர்கள் வழி ஹொக்கியன் மொழி புரிந்துகொள்ளவும் பேசவும் தெரியும்.

அவனது உடன்பிறப்புகள் யாவரும் திருமணம் முடித்து அக்கம் பக்கத்தில் குடிபெயர்ந்தனர்.

வேலு முதிர்ந்த தாய் தந்தையை தன் குடியிருப்புக்கு அருகாமையிலிருந்த சீனரின் செம்பனைத் தோட்டத்தில் குலை வெட்டும் தொழில் செய்து காப்பாற்றினான். அவனுக்கு கடும் உழைப்பாளி எனும் நல்ல பெயர்.

வேலு ஆளுதான் அம்சமாய் இல்லையே தவிர அவன் மனமும் குணமும் பத்தரை மாற்றுத் தங்கம். இல்லை என்று சொல்லாத ஈகை குணம். யாரேனும் பசியென்று வந்துவிட்டால் தனக்கில்லையென்றாலும் பரவாயில்லை என்று வாரிக் கொடுத்துவிடும் வள்ளல் ரகம்.

குணசாலியான வேலுவுக்கு அண்டை அயலாரில் பலரும் பெண் கொடுக்க முன்வந்தாலும் . அவன் தன் மாமன்மகள் சுசிலாவை மணக்க முடிவு செய்தான். அங்கே ஆரம்பித்தது அவனின் கக்ஷ்டகாலம்....!!


சுசிலா தாமரைப் பூவுக்கு பொட்டு வைத்தாற்போல் பார்க்க கும்மென்று சிவப்பாய் கண்களுக்கு இலட்சணமாய் களையான முகத்தோடு இருந்தாலும் தந்தையில்லாத அந்தப் பெண் சின்ன வயசிலேயே "போலியோ" காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு கால் சூம்பிப்போனவள். காலை தாங்கித் தாங்கித்தான் நடப்பாள். அவளுக்கு வாய் சரியில்லை , சரியான வம்புக்காரி என வேலு  குடும்பம் அவளை பெண்ணெடுக்கத் தயங்கியது. வேலுவோ மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவியென விடாப்பிடியாய் சுசிலாவையே மணந்துகொண்டான். அது அவன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என அவன் நொந்துகொள்ளும் வண்ணம் நடந்துகொண்டாள் சுசிலா. வேலுவை கொஞ்சமும் மரியாதை இன்றி எடுத்தெறிந்து பேசினாள். 

வேலுவின் உறவினர்கள் அவன் வீட்டிற்கு வரவே தயங்கினர். சுசிலா அண்ணன் வீட்டில் அண்ணியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த தன் தாயை அழைத்து வந்து தன்னோடு வைத்துக்கொண்டாள். வேலுவின் பாடு மேலும் திண்டாட்டமாகியது. அத்தைகாரியும் லேசுபட்டவளில்லை !! 

அனுதினமும் அவளுக்கு பட்டைசாராயம் வேண்டும், வேலு வாங்கிவந்து தரவேண்டும். வாங்கிக்கொடுக்காவிட்டால் " கட்டையிலே போக எனத் துவங்கி 
வாய் கூசும் வார்த்தைகளால் அவனை வறுத்தெடுத்தாள். சாபங்களை வஞ்சனையின்றி வாரி இறைத்தாள். பாவம் அஜானுபாகுவான வேலு அமைதியாய் அனைத்தையும் பொறுத்துக்கொண்டான். அவன் சுபாவம் அப்படி ! 



வறுமையும் குடும்பப்பூசல்களும் சூழ்ந்த நிலையிலும் அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.  அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு பணம் பிரதானமாய் அமைந்தது.

வேலு கொண்டுவரும் சொற்ப வருமானம்,வீட்டில் உள்ள அனைவருக்கும் வடித்துக்கொட்ட சுசிலாவுக்குப் போதவில்லை. பணம் பணம் என அவனை பிடுங்கியெடுத்தாள். பகுதி நேர வேலைக்கு விரட்டினாள். அவனிடத்தில் அன்பாய் பேசவோ பழகவோ விருப்பமில்லாதவள் போல் நடந்துகொண்டாள். அழகிய அவள் முகத்தில் நாகத்தின் நாக்கினைப் படைத்துவிட்டான் போலும் பிரம்மன். தினமும் வார்த்தைகளால் அவன் இதயத்தில் நஞ்சைப் பாய்ச்சினாள் அந்த மகராசி.

அந்த சூழலில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது....




தொடரும்...





No comments: