.

.
.

Tuesday, September 24, 2013

ஒரு காரும் சில ரகசியங்களும்...! (நிறைவு)

ஜனனி வேலை முடிந்து வீடு திரும்ப பொது பேருந்துக்காக காத்திருந்த வேளையில்,  அவளுக்கு சற்று அருகாமையில் ஒரு கார்  வந்து நின்றது. அந்தக் காரில் சிரித்த முகத்துடன் மூன்று பதின்ம வயதுப் பெண்கள் அமர்ந்திருந்தனர். ஜனனி கவனித்துக் கொன்டிருக்கும்போதே அதில் ஒரு பெண் காரின் கதவைத் திறந்து கொன்டு அவளை நோக்கி வந்தாள்.

பதின்ம வயதுக்கேயுறிய துள்ளல் நடை, குறும்புப்பார்வையோடு காட்சியளித்தாள் அப்பெண், மிகவும் மெலிந்த தேகம், அவள் தன் தலைமுடியை அள்ளி உச்சியில் குதிரை வால் இட்டிருந்தாள்,  அவளின் சிறிய முகம் நிறைய பருக்கள். கைவளையல் அகலத்தில் காதில் வளையம். அழுத்தமான உதட்டுச் சாயம், நக‌ப்பூச்சுகளோடு, உடலைக்கவ்விப் பிடித்திருக்கும் இறுக்கமான கருமை நிற பனியன், ஜீன்சு காற்சட்டை என
நவநாகரீக யுவதியாகக் காட்சியளித்தாள் அப்பெண்.

அவள் ஜனனியின் அருகாமையில் வந்து, "அக்கா, இங்கே தாமான் பாய்டூரி எங்கே இருக்குன்னு தெரியுங்களா? எனக் கேட்டாள், அது ஜனனி வாழும் குடியிருப்பும் கூட...!

உடனே ஜனனி, "இப்படியே நேரா போனா கொஞ்ச தூரத்திலே ஒரு ட்ராஃபீக்(சாலை சமிக்ஞை விளக்கு) வரும், அங்கே இடது பக்கம் திரும்பி நேரா போனீங்கன்னா, ஒரு மாரியம்மன் ஆலயம் அதற்கடுத்து கொஞ்ச தூரத்தில் தாமான் பாய்டூரி போர்டு இருக்கும் பாருங்க, அது தான் தாமான் பாய்டூரியின் நுழைவாயில் என வழியைக் குறிப்பிட்டுச் சொன்னாள்.

அதற்கு அந்தப் பெண் "ரொம்ப நன்றிங்கக்கா, நீங்க எங்கேக்கா இருக்கீங்க ? என நட்போடு கேட்டாள், ஜனனி வெகு சகஜமாக தானும் அதே தாமானில் தான் குடியிருப்பதாகக் அவளிடம் கூறினாள். அதற்கு அவள் "சரிங்கக்கா நான் வரேன் எனக் கூறிவிட்டு காரிடம் சென்றவள், வாகனமோட்டும் இன்னொரு பெண்ணிடம் ஏதோ பேசிவிட்டு மீண்டும் ஜனனியிடம் வந்தாள்.

"அக்கா, நாங்க தாமான் பாய்டூரிக்குத்தான் போறோம், நீங்களும் கூட வந்தா இன்னும் வழி கண்டுபிடிக்க ஈசியா(சுல‌பமா) இருக்கும், அப்டியே உங்க வீட்டாண்ட உங்களை எறக்கி விட்ருவோம், என கேட்டுக்கொன்டாள் அப்பெண். "ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியோவ் " எனும் சினிமா வசனம் போல் தனக்கு வந்த ஆபத்தும் அப்போது கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியாது போய்விட ஜனனியும், அவளுக்கு சரியென தலையாட்டி சம்மதம் தெரிவித்தாள். மனதுள் "ஆமாம் இந்த பஸ்ஸூக்கு காத்திருந்து ரொம்ப லேட்டாயிருமே, பெசாம இந்த சின்னப் பொண்ணுங்களோட காரில போயி வீட்டிலேயே இறங்கிக்கலாம் என ஆனந்தமடைந்தாள்.


அவளை அழைத்து வந்த பெண்  காரின் முன்னிருக்கையில் அவளை அமரச்செய்துவிட்டு, வாகனமோட்டும் பெண்ணை நோக்கி அர்த்தபுக்ஷ்டியான பார்வை ஒன்றை வீசிவிட்டு பின்னாலிருந்த‌ இன்னொரு பெண்ண‌ருகில் அமர்ந்து கொன்டாள். கார் புற‌ப்பட்டது.

சற்று தாட்டிகமாகவும், மாநிறமாகவும் காணப்பட்ட வாகனமோட்டும் பெண் அவளை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு காரை செலுத்த ஆரம்பித்தாள், காரின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது.... 

காரில் உள்ளூர்ப் பாடல் ஒன்று சத்தமாக ஒளியேறிக் கொன்டிருந்தது.
அது ஒரு நகைச்சுவைப்பாடல், பிரபலமான உள்ளூர்ப் பாடகர் ஒருவரின் படைப்பு. தனக்கு மண‌முடிக்க பெண் கிடைக்காத கொடுமையை இனிய பாட‌லாக வடிவமைத்துப் பாடியிருந்தார், இடையிடையே பாடலில் மலாய் வர்ர்த்தைகள் வேறு..!

பாடலில் மெய்மறந்திருந்தாள் ஜனனி, அச்சமயம் அவள் சற்றும் எதிர்பாரா விதமாய், அவள் பின்னால் அமர்ந்திருந்த பெண் (அவளை அழைத்து வந்தவள்) பின்னாலிருந்து ஒரு முரட்டுத்துணியை அவள் முகத்தில் போர்த்தி அதை இறுக்கி முறுக்கத் தொடங்கினாள். இதை சற்றும் எதிர்பாராத ஜனனி நிலை தடுமாறிப் போனாள்..!

துணி அவள் முகத்தை இறுக்க அவளுக்கு பொறி கலங்கிப் போனது, நொடியில் நிதானித்துக் கொன்டவள் கால்களை உதைத்துக்கொன்டு போராட ஆரம்பித்தாள். தனது கைகளை ஒருத்தி பற்ற முயல்வதை உணர்ந்தவள் வெகு வேகமாய் தனது பலமனைத்தும் திரட்டி திமிறினாள். அவள் ஓங்கி வீசிய அவள் கரம் பக்கத்தில் அமர்ந்து வேகமாக காரை ஓட்டிக் கொன்டிருந்த பெண்ணின் முகத்தில் பதிந்து அவள் முகத்தை பிராண்டி பதம் பார்க்க ஆரம்பித்தது.

காந்தியடிகள் கூறியது போல ஒரு பெண்ணுக்கு அவள் நகமும், பற்களும் சிற‌ந்த ஆயுதங்கள் என்பது அங்கே மெய்யானது, நன்கு பராமரிக்கப்பட்டு நீள‌மாய் வளர்ககப்பட்டிருந்த ஜனனியின் நகங்கள் அந்தக் காரோட்டிப் பெண்ணின் முகத்தை நன்கு பதம் பார்த்தது. அவள் நெற்றி, முகம், கன்னம், மூக்கு, உதடு என ஆழமாய் பிராண்டியதில் அவள் முகத்தில் தோல் கிழிந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது, இதைச் சற்றும் எதிபாராத அப்பெண் நிதானமிழந்து காரை தட்டுத்தடுமாறி  செலுத்தலானாள்.

அதே சமயத்தில் காரின் தடுமாற்றத்தால் ஜனனியின் முகத்தில் துணி போர்த்தி முறுக்கியிருந்த பெண்ணின் பிடியும் தளர, அதுவே சமயமென தன் முகத்தைக் கவ்வியிருந்த துணியை முழு பலங்கொன்டு பறித்து வீசினாள் ஜனனி.

காரை நிறுத்தினாள் மாட்டிக்கொன்டு விடும் பயத்தில் கார் எங்கும் நிற்காமல் தட்டுத் தடுமாறி ஓடிக் கொன்டேயிருந்தது. பின்னாலிருந்த இரு பெண்களும் ஜனனியை மாறி மாறித்தாக்கினர். அவ‌ளை மயங்கச் செய்து அவள் அணிந்திருக்கும் நகைக‌ளை பறித்து செல்வது அவர்களின் நோக்கமாயிருந்தது. ஆனால் தன் அண்ணனிடம் ஓயாது போரிட்டு அடிதடியிலும் இறங்கி ஆணுக்கு நிகராக மல்லுகட்டும் ஜனனியிடம் அவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை ! முக்ஷ்டியை முறுக்கி மாங்கு மாங்கு என்று எண்ண‌ற்ற குத்துகளை அப்பெண்களுக்கு வஞ்சனையின்றி வாரி வழங்கினாள் ஜனனி..!

அதே சமயத்தில் அந்தக் காரிலிருந்து வெளியேற‌ இன்னொரு கையால் காரின் கதவை திறந்து விட்டாள் ஜனனி. அவளிடமிருந்து தப்பிப்பதற்காக அவளை காரிலிருந்து பிடித்து வெளியே தள்ளினார்கள் அந்தப் பெண்கள். காரிலிருந்து வெளியே விழுந்த ஜனனியின் காற்சட்டையோ அந்தக் காரின் கதவிடுக்கில் மாட்டிக்கொன்டது, நிற்காமல் ஓடிக்கொன்டிருந்த அந்தக் கார்

ஜனனியை சாலையில் இழுத்துச் சென்றது. சற்று தூரம் அவளை இழுத்துச் சென்ற அந்தக் காரிலிருந்து அவள் காற்சட்டை கிழிந்து சாலையில் விழுந்தாள் ஜனனி ! அவளைத்தள்ளிவிட்டதோடு நெருப்பாய் பறந்து சாலையில் மறைந்துபோயினர் அந்தக் காரும் அது சுமந்திருந்த அந்தப் பெண்களும்.

நல்ல வேளை , ஜனனியின் வீரம் அன்று அவளை அப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது. அவ்வேளை சாலையிலும் அவ்வளவாக வாகனம் இல்லாததால் அவள் பிழைத்தாள். இல்லையேல் அவள் பாடு பெரும்பாடாகிப் போயிருக்கும்.

ஜனனி, தட்டுத் தடுமாறி எழுந்து சாலை ஓரத்தில் நின்று தனது ஆடைகளை சரி செய்தாள் . அவள் கைகளும் உடலின் பல பாகங்களும் சாலையில்
உராய்ந்த்தில் தோல் உரிந்து, இரத்தம் கசிந்து  எரிச்சல் ஏற்படத் துவங்கியது.

இவற்றையெல்லாம் கண்ணுற்று,அவளை நோக்கி வந்த ஒரு சீன ஆடவர், 
சற்று தூரத்தில் விழுந்திருந்த அவள் கைப்பையை எடுத்து அவளிடம் நீட்டினார். என்ன நடந்த்து ? பாலாய்க்கு (காவல் துறைக்கு ) அல்லது கிளினிக்குக்கு  அழைத்துச் செல்லவா எனப் பரிவுடன் கேட்டார். ஆனால் ஜனனிக்கோ சற்று முன் கற்ற அந்தப்பாடமே வாழ் நாள்வரை போதும் எனும் எண்ண‌த்தோடு, அவருக்கு ஒரு ந‌ன்றியை சமர்ப்பித்து விடைகொடுத்து அனுப்பினாள்.

அருகாமையிலிருந்த பேருந்து நிறுத்துமிடத்தை நோக்கி மெல்ல மெல்ல நடந்து சென்றாள் ஜனனி. அவள் கண்களில் வலி கலந்து வழிந்த கண்ணீரோடு அத்தனை நாளும் அவளைப் பேயாய் பிடித்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த  நகைமோகமும் சொல்லாமல் கொள்ளாமல் கரைந்தோடிக்கொன்டிருந்தது !   

  

Friday, September 13, 2013

ஒரு காரும் சில ரகசியங்களும்...



ஜனனி, நகைச்சுவை குண‌ம் நிறைந்த வாயாடிப் பெண், நெடு நெடு உயரம், அதற்கேற்ற உடல்வாகு. உருண்டையான முகம், மலர்ந்த விழிகளும், மருதானியாய் சிவந்த கன்ன‌ங்களுமாய், குட்டியாய் மூக்கு, குவிந்த அதரங்களோடு, தோள்பட்டை வரை கிராப்பு கூந்தல் நெளிய, அவளொரு அழகிய தேவதை...!






அவள் வீட்டில் அவள்தான் செல்லப்பெண். ஓரளவு வசதியான குடும்பம்.அவளுடன் பிற‌ந்தது ஒரே ஓர் அண்ணன் மட்டுமே, அவன் பெயர் கோபி . அடடா..! பாசமலர்கள் என எண்ணிவிடாதீர்கள், இருவரும் எந்நேரமும் ஒருவருக்கொருவர் வம்பு பிடித்துக்கொன்டு திரியும் துவேக்ஷமலர்கள் !

இத்தனைக்கும் இருவருக்கும் வயது இருபதுக்கு மேல். அப்பா உண‌வுக்கடை முதலாளி, அம்மா இல்லத்தரசி, கோபி நல்லபடி படிப்பை முடித்து வேலைக்குப் போய்க்கொன்டிருந்தான், ஜனனியும் SPM முடித்து ஒரு தொழிற்சாலையில் குமாஸ்தாவாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஜனனிக்கு பொன்னாபரண‌ங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவள் வருமானம் அவள் வீட்டிற்கு தேவைப்படவில்லை. ஆத‌லால், ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சம்பளத்தில் விதவிதமான தங்க நகைகளை வாங்கி மாட்டிக்கொள்வாள்.

அவள் காதின் ஓரங்களில் வரிசையாய் ஒரு பத்து பண்ணிரன்டு குட்டி வளையங்கள் அணிவகுக்க நடு நாயகமாய் வளையத்தோடு ஜொலித்திருக்கும். கழுத்திலே சின்னதாய் இதய சின்னம் பொறித்த சங்கிலி, அப்புறம் கொஞ்சம் பெரிய V வடிவ பட்டை நெக்லஸ், நீள‌மாய் ஒரு வெந்தய சங்கிலி கூடவே ஒரு கையில் ஒற்றைப்பட்டை கைச்சங்கிலியும் மறுகையில் வரிக்காப்புகள் நான்கும் அணிந்து, கைவிரல்கள் அனைத்திலும் வித‌விதமான மோதிரங்கள், சில விரல்களில் அவை இரண்டாகவும் இருந்தன, இப்படியாக எப்போதும் நகைகடை விளம்பர மாடல்போல பளபளவென ஜொலிப்பாள் ஜனனி.

தன்னையும் தான் அணிந்திருக்கும் நகைகளையும் பிறர் பிரமிப்புடன் பார்ப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அது தன் மரியாதையை உய‌ர்த்துவதாய் ஒரு நினைப்பு. சிலர் அவள் காதுபடவே, "அம்மனுக்குத்தான் நகைகளை அள்ளிப்பூட்டி அலங்காரமாய் ஊர்வலம் விடுவார்கள், இதுகளும் நகைகளை வாரி இறைத்துக்கொன்டு இப்படி அலையுதுகளே" என பொறாமையுடன் புற‌ம்பேசுவதை கேட்கையில் அவளுக்கு புள‌ங்காகிதமாக இருக்கும். பின்னே அம்மனைப்போல அப்டின்னு சொல்லிட்டாய்ங்களே, இருக்காதா மகிழ்ச்சி !!!

அவள் அம்மாவுக்கும், கோபிக்கும் இவள் இவ்வாறு நகைக்கடையாக நடமாடுவது அறவே பிடிக்கவில்லை. எல்லாம் பாதுகாப்பு பயம்தான்...! கோபி "நகைக்கடை" என்றே அவளை எப்போதும் எள்ள‌ல் செய்து வம்பிழுப்பான்.

அவள் தாயோ " நீ வெளியில் நடமாடும் பெண், இப்போது வெளியில் அத்தனை பாதுகாப்பு இல்லை, இத்தனை நகைபோட்டுக்கொன்டு திரியாதே !, ஆபத்து, பெண்னாய் இலட்சண‌மாய் காதில் ஒரு சிறிய தோடு, கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி, கைகளில் ஒரு சின்ன கைச்சங்கிலி, இன்னொரு கையில் ஒரு சிறிய கைகடிகாரம், ஒவ்வொரு கையிலும் ஒரு விரலில் மட்டும் ஒரு சிறிய மோதிரம் அணிந்தால் பார்ப்பதற்கு எத்தனை அழகாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் ? இப்படி நகைகளை வாரிக்கொட்டிக் கொன்டா அலைவது ?  என நல்ல முறையில் அன்பாகவும் , சில சமயங்களில் கடுமையாகவும் அறிவுரை கூறுவார்.  ஆனால் அதையெல்லாம் ஜனனி கேட்டாள்தானே ? அம்மாவின் புலம்பல்களை செவிடன் காதில் ஊதிய சங்கு போல அப்படியே புற‌க்கணித்து விட்டு சென்றுவிடுவாள். அவள் தந்தையின் செல்லப் பிள்ளை என்பதால் அவள் தந்தை அவளுக்கு சாதகமாகப் பேசி, அவள் தாயை வாயடைப்பார்.    

என்னதான் ஜனனிக்கும் அவள் அண்ணனுக்கும் ஆயிரம் வம்பு சண்டைகள் இருந்தாலும், அவன் தன் தங்கையை கண்ணை இமைபோல பாதுகாத்து வந்தான். அவள் வெளியே எங்கேயும் தனியே சென்றுவர அனுமதிக்க மாட்டான்,  திட்டிக்கொன்டேயாவது அவள் வேலைக்குச் செல்லும் போது அழைத்துச் சென்று, அவள் வேலைமுடிந்து வீடு திரும்பும் போது அவளுக்காக‌ பேருந்து நிலையத்தில் தனது பெரிய RXZ மோட்டாருடன் காத்திருந்து வீட்டிற்கு அழைத்து வருவான். அவள் தனியாக  வெளியில் செல்ல நேரிட்டால் பாதுகாப்பாக அவளை அழைத்து சென்று விட்டு அழைத்து வருவான்.  அவன் ஒரு பொறுப்பான அண்ணன். அவளும் தனது சம்பளப் பணத்தில் கணக்குப் பாராது அவள் அண்ணனுக்கு செலவழிப்பாள், எல்லாம் கொஞ்ச நேரம்தான், அப்புறம் மீள‌வும் போர்தான், இப்படியாக காலம் சென்றுகொன்டிருந்தது...

கோபி சிற‌ப்பாக பணியாற்றியதால் அவன் வேலை செய்த நிறுவன‌ம் அவனுக்கு பதவி உயர்வளித்து ஒரு மாத பயிற்சிக்காக அவனை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது, அண்ணன், புற‌ப்பட்ட பின்தான் அவன் அருமையை உண‌ர்ந்தாள் ஜனனி, தந்தையால் அவளுக்கு உதவ முடியவில்லை, தனியாக வேலைக்குப் போய் சொந்தமாக வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அவளுக்கு.    

அண்னனின் மோட்டாரில் ராணிபோல பேருந்து நிலையத்துக்கு வரும் அவள் இப்பொழுதெல்லாம் தனது வீட்டிலிருந்து பொது பேருந்து எடுத்து தொழிற்சாலை பேருந்து பயணிக்கும் பிரதான சாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்து வேலைக்குச் செல்வாள், மீள‌வும் வீடு திரும்புகையிலும் அதே கதைதான். அவள் அண்னன் ஜப்பானுக்கு புறப்படும் முன்பே " ஏய் ந‌கைகடை மரியாதையா நகையெல்லாம் களட்டி வச்சிட்டு வேலைக்கி போ, இல்லே வீட்டுக்கு வந்தவுடன உனக்கு பேயறைச்சதான்" என பெரியண்னன் தோரனையில் மிரட்டி விட்டு சென்றான், "சரி சரி பார்க்கலாம் "என்றாளே தவிர நகைகளை களைய அவளுக்கு மனமே வரவில்லை ! இப்படியாக இவள் நகைவண்டியாக நகர்வ‌லம் வருவதை உன்னிப்பாக சில கண்கள் அவதானித்து வந்தன
.    
அன்றும் அதுபோலவே வேலைமுடிந்து அயர்வுடன் தொழிற்சாலை பேருந்திலிருந்து இறங்கி பொது பேருந்துக்காக காத்திருந்தாள்,அப்போது.....

தொடரும்....

Friday, September 6, 2013

மாயமனிதனும் மாபெரும் இலக்கியவாதியும்


ஒருநாள் ஒருபொழுது திடீரென யார் கண்ணுக்கும் புலப்படாமல் , மாயமாய் மறைந்து காற்றாய் உலவும் நிலை நமக்கு நேரிட்டுவிடுகிற‌து, அப்போது மன‌ நிலையும் உடல் நிலையும் எப்படி இருக்கும் ? என்னென்ன காரியங்கள் செய்யத் துடிக்கும் இந்த மனது ?

அன்பான‌வர்களை அவர்கள் அறியாமலேயே பின் தொடர்ந்து வேவு பார்க்கச் செய்யுமா ? வேண்டாதவர்களை அவர்கள் அறியமாட்டார்கள் எனும் தைரியத்தில் துன்பம் இழைத்து பழி வாங்கத் தூண்டுமா ? விளிம்பு நிலை மாந்தர்களுக்கு நன்மைகள் புரிந்து அவர்களை மகிழச் செய்து இரசிக்குமா ? அல்லது இதுதான் சமயமென்று மேலும் அசம்பாவிதங்களை தோற்றுவித்து ஏற்கனவே அரசியல்வாதிகளாலும், அடாவடிப் பேர்வழிகளாலும் நொந்து போன மக்களை மேலும் நோகடித்து பிறர் துன்பத்தில் குளிர் காய விழையுமா?   

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆங்கிலத் திரைப்படம் (Hollow Man )  Kevin Bacon, Elisabeth Shue ஆகியோரின் நாயக நடிப்பில் வெளிவந்த அறிவியல் புனைவிலான திகில் திரைப்படம்.

விஞ்ஞானி செப‌ஸ்டியன் கேய்ன் (Kevin Bacon ) உயிரினங்களை உருவம் களைந்து மாயமாய் மறையச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். மிருகங்களைக் கொன்டு அவர் செய்த பரிசோதனை முழு வெற்றியைத் தருகிறது. தமது ஆய்வில் மிருகங்களை மறைத்து மீளவும் மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றியடைந்த களிப்பில், அடுத்த‌க் கட்டமாக மனிதரை மாயமாய் மறைவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் தமது விஞ்ஞானிகள் குழுவினரின் உதவியோடு தம்மையே பரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்கிறார். அவர் உடலில் அவர் கண்டுபிடித்த ஆய்வு மருந்து செலுத்தப்படுகிற‌து. கடுமையான வலியையும் வேதனையையும் அடைந்து, தமது உடலின் தோல், நரம்புகள், சதை  இறுதியில் எலும்புக்கூடு என ஒன்றன் பின் ஒன்றாய் உடல் முழுமையாய் மறைந்து மாய மனிதனாக ஆகிவிடுகிறார் . அதன் பின்னரே திரைக்கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது, உடல் மறைந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பானது அவர் மறையத்தான் உதவியதே தவிர, மிருகத்தின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக அதன் உடலை மீண்டும் உருப்பெற செய்ததைப்போல அவரை மீட்டுத்தர உதவவில்லை, தோல்வியில் கையைப்பிசைகிற‌து விஞ்ஞானிகள் கூட்டம்.

தனது உடலை இழந்து மாயமனிதனாக மாறிய நிலை ஆரம்பத்தில் மகிழ்ச்சியளித்தாலும், ஒரு கட்டத்தில் அது விஞ்ஞானி செபஸ்டியனுக்கு சலிப்பையும், வெறுப்பையும் தருகிறது. வெறுப்பு குரோதமாக வடிவெடுக்க‌ தனது உருவம் திரும்ப மீளாது எனும் முடிவுக்கு வந்து அதீத கோபம் கொள்கிறார். விளைவு, தனது மன விகாரங்களுக்கு உயிரூட்ட ஆரம்பிக்கிறார். பல வில்லங்கங்களை புரிகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் உலகிற்குத் தெரியாமல் தனது தோல்வியுற்ற கண்டுபிடிப்பை மறைக்கவும், தன்னை தற்காத்துக்கொள்ளவும் ஒரு பயங்கர முடிவை எடுக்கிறார் . அதன் தொடர்பில் தனது விஞ்ஞானக் குழுவினரையே ஒவ்வொருவராக கொடூரமாகப் பலிகொள்கிறார். இறுதியில் கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கொப்ப  தமது விஞ்ஞானிகளில்  ஒருவரான‌ கதாநாயகியைக் கொல்ல முயற்சிக்கையில், தனது எண்ணம் ஈடேறாமல் அவர் கையாலேயே கொடூரமாக அழிக்கப்படுகிறார்.

இது தமது உடல் அருவமானதை சாதகமாக்கிக்கொன்டு தீமைகள் புரிந்த ஒரு மனிதனின் கதை.

வாழும் காலத்திலேயே ஒரு மனிதனுக்கு மறைந்து உறையும் நிலை  நேர்கையில்,  அவன் வாழ்க்கை, அவனை பிண்ணிப் பிணைந்திருக்கும் அவனது உற‌வுகள், பகைகள் ஆகியவற்றை அவன் கைக்கொள்ளும் விதம், உண்டு, உறங்கி உயிர் வாழும் சராசரி மானுடப் பிற‌வியாக இன்றி, சமூகத்தின் பால் அக்கரை கொன்ட ஒரு  சீர்திருத்தவாதிக்கு இந்நிலை வாய்த்தால் அவனுடைய செயல்பாடுகள் ? இக்கேள்விகளுக்கு பதிலாக அமைகிறது மேற்குறிப்பிட்ட கதைக்கு நேர்மாறாக அமைந்த ஒரு மாயமனிதனின் புதினம். 

கதைச்சுருக்கம் - அநியாயத்தைக் கண்டால் பொங்கியெழுந்து நீதிக்குப் போராடும் நடுத்தர வர்க்கத்து நாயகன்(மெய்யப்பன்). மணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான அவர் அவ்வூரின் பெரிய மனிதர் போர்வையில் ஒளிந்து கொன்டு பலவித அநியாயங்களை நிகழ்த்தும்  பணம், பதவி, அந்தஸ்து படைத்த வில்லனின் (கேசவராயன் ) சூழ்ச்சியால் கொலையாளியாக சித்தரிக்கப்பட்டு சிறை செல்கிறார், சந்தர்ப்பமும், சாட்சிகளும் அவருக்கு எதிராக பிண்ணப்பட, சதி வலையில் சிக்கிக்கொன்ட அவர் செய்யாத குற்றத்திற்காக ஆறாண்டுகள் சிறைவாசம் அநுபவித்து விட்டு வீடு திரும்புகிறார்.

மனவி மக்களைக் காண பேராவலுடன் வீடு திரும்பும் அவரை அவர் மனைவி ஊராரின் பழிச்சொல்லுக்குப் பயந்து வீட்டிலேயே ஒதுக்கியும் ஒளித்தும் வைத்து வேதனைப்படுத்துகிறார். மனமுடைந்த நாயகன் வீட்டை விட்டு வெளியேறி தமது ஆப்த நண்பனின் உதவியோடு வடதேசம் நோக்கிப்புற‌ப்படுகிறார், இடையில் நண்பரிடமிருந்து பிரிந்து வட நாட்டில் வேலை தேடிக்கொன்டு அங்கேயே வாழ்ந்தும் வருகிறார், வீட்டைப் புறக்கணித்து பிரிந்தாலும் மனைவி மக்களுக்கென தமது ஊதியத்தின் ஒரு பகுதியை அனுப்பி வைக்கிறார்.

அச்சமயத்தில் விஞ்ஞானத்திலும், மெய்ஞ்ஞானத்திலும் உயர் அறிவு பெற்ற ஞானி (மெய்கண்டார்)  நட்பு அவருக்கு வாய்க்கிறது. அவருடன் நெருங்கிப் பழகும் நாயகன் அவர் உருவங்களை மறைய வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்து பிரமிக்கிறார், ஞானியிடம் தன்னை சோதனையில் ஆட்படுத்திக்கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் . ஆரம்பத்தில்  தயங்கினாலும் பின்னர் நாயகனை தனது ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்கிறார் ஞானி.

அவர் முயற்சி வெற்றியடைந்து நாயகன் உருவம் மறைந்து மாய மனிதனாகி விடுகிறார். அருவமாகிப்போன அவர் தன் ஊர் நோக்கி விரைகிறார். அங்கே மாய வடிவில் தன் குடும்பத்தினரிடையே உலவுகிறார், பொதுவில் நடைபெறும் சில தீமைகளை தடுத்து வெற்றி கொள்கிறார், தமது நண்பர்களின் வாழ்வுக்கு உதவுகிறார்.த‌ன்னை வஞ்சித்த வில்லனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவெடுக்கிறார், அப்போது அவரை மாய வடிவெடுக்க உதவிய ஞானியார் வழியாக அவ்வில்லனின் பிண்ணனியை அறிந்து தனது  பலிவாங்கும் முயற்சியில் தயங்குகிறார்,

இறுதியில் முடிவு என்ன‌ ? நாயகனின் உருவம் மீண்டதா ? அவர் நினைத்தபடி அவர் குடும்பத்தில் அன்பும் நலமும் சூழ்ந்ததா ? தம்மை வஞ்சித்த வில்லனை அவர் நினைத்தபடி பழிவாங்கினாரா ? என்பதையெல்லாம் நான் சொல்ல மாட்டேன், வாய்ப்புக் கிடைத்தால் டாக்டர்.மு.வ. அவர்களின் "மண்குடிசை" நாவலைப் படித்து முடிவைத் அறிந்து கொள்ளுங்கள்.   

அன்றும் இன்றும்  தமிழ் இலக்கிய நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் மு.வ அவர்களின் கைவண்னத்தில் மலர்ந்த நாவல் இது. மறைந்து பல்லாண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் இலக்கியவாதிகளின் எழுத்திலும் பேச்சிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் டாக்டர் மு.வ என்றால் அது மிகையல்ல‌.


   
நிறைய தனிமனித‌/சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கிறது இந்நாவல்.இந்நாவலில் மூன்று தம்பதியரின் குடும்ப வாழ்வு வாசகர்களுக்கு படிப்பிணையாக சொல்லப்பட்டுள்ளது, அதில் கதாநாயகன் மெய்யப்பன் ஊருக்குப் பயந்து அவரை புறக்கணிக்கும் மனைவி ரேவதி (பிணைப்பிழந்த இல்லற‌ வாழ்வு), மெய்யப்பனின் நண்பன் பாண்டியன், ஆடம்பரத்துக்காக‌ அவரைப் பிரிந்து வாழும் அவர் மனைவி அஞ்சலி (பிரிவில் ஊசலாடும் மண‌வாழ்வு ) இவை இரண்டும் கடந்த மேன்மையான இல்லற வாழ்க்கை நடத்தும் குமரவேலு, அவர் அன்பு மனைவி மங்கை நல்லாள் (என்ன ஒரு அழகான பெயர் !, பேராசிரியர் மு.வ அவர்களின் அபிமானிகள் பலர் தங்கள் வீட்டு மழலைகளுக்கும் மு.வ வின் கதாபாத்திரங்களின் அற்புதமான தமிழ்ப் பெயர்களை வைத்திருந்தனர் என்பதை அறிந்ததுண்டு, இப்பெயரை காணும்போது அது ஏனென்று புரிகிறது, பெயரிலேயே பெண்மையின் மேன்மை அனைத்தும் சொல்கிற‌து இந்த இனிய பெயர்  ! ).   

இந்நாவல் குடும்ப வாழ்வியலில் அன்பின் அவசியம், கணவன் மனைவி மற்றும் குழந்தைகளிடையே மலரவேண்டிய பிணைப்பின் முக்கியத்துவம், நட்பின் மேன்மை, நல்ல நண்பர்களின் உறுதுணை வாழ்வில் ஏற்படுத்தும் நன்மைகள் எத்துணை மகத்தானது என்பதையும் உண‌ர்த்துகிற‌து.

கண்கவரும் புள்ளிகோலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாங்குற‌ அமைந்த புள்ளிகளைப்போல் கதைக்கு உயிரோட்டமாய் பல தத்துவங்கள் நாவல் முழுதும் ஆங்காங்கே அழகாய் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. படிப்போருக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் நாவல் இது.