.

.
.
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

Wednesday, November 30, 2016

படித்த‌தில் பிடித்தது - அலை ஓசை

நிகழ்கால வாசிப்பில்....!

அலை ஓசை,  பேனா மன்னர் கல்கி அவர்களின் எழுத்தாக்கத்தில் உருப்பெற்று உயரிய இலக்கிய விருதா சாகித்திய அகாடமி விருது (1956) பெற்ற அரசியல் + சமூக நாவல்.

இப்புதினம் பூகம்பம் (34 பகுதிகள்), புயல் (28 பகுதிகள் ), எரிமலை (26 பகுதிகள் ) மற்றும் பிரளயம் 43 பகுதிகளாகப் படைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றங்களை மனித வாழ்வோடு ஒப்புவமை செய்து சுதந்திர போராட்ட கால பின்புலத்தில் இப்புதினத்தைத் தீட்டியிருக்கிறார் கதாசிரியர்.


நீண்ட நெடிய இப்புதினம் சீதா, சூரியா, இராகவன், தாமினி ஆகிய நால்வரை முதன்மைக் கதாமாந்தர்களாகக்கொன்டு, பின்னிப் பிணையும் இவர்கள் நால்வரின் வாழ்க்கைச் சிக்கல்களுடன், இயற்கைப் பேரிடரான பீஹார் பூகம்பம், அரசியல் பேரிடரான பஞ்சாப் கலவரம், மகாத்மா காந்தியின் வாழ்க்கை முடிவு ஆகியவற்றை முக்கிய சம்பவங்களாகக் கொன்டு மலர்ந்திருக்கிற‌து. ஆச்சரியங்களும், திடுக்கிடும் சம்பவங்களும், அதிக திருப்புமுனைகளும் சூழ்ந்த சிறந்த புதினமே "அலை ஓசை".

இப்புதினத்தின் முதன்மைக் கதாமாந்தர்களைக் கொஞ்சம் கவனிப்போம்...

சீதா, அழகும், கலகலப்பும் நிறைந்த படித்த பெண். பேச்சுத்திறமை வாய்த்தவள். காந்தீயக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவள். தவறான நபரை மணந்ததினால் வாழ்வில் ப‌ல்வேறு சோதனைகளை சந்தித்த‌ துர்பாக்கியசாலி.

சூரியா எனும் சூரியநாராயண‌ன், சீதாவின் மாமன் மகன், விவேகமும், மதி நுட்பமும் நிறைந்த வாலிபன். அரசியல் ஈடுபாடுகொன்டு காங்கிரசில் இணைந்து செயல்படுபவன். சீதா இராகவனை மண‌க்க முக்கிய காரணியானவன். தனது அத்தை ராஜம்மாளுக்கு கொடுத்த வாக்கின்படி பின்னாட்களில் சீதாவுக்கு பெரும் துணையாய் விளங்கியவன். தன் இலட்சியத்தோடு ஒத்துப்போன தாமினியிடம் மனதைப் பறிகொடுத்தவன். 

இராகவன் நன்கு படித்த, தோற்றச் சிறப்பு மிக்க நவநாகரீக வாலிபன். நல்ல உத்தியோகத்திலிருப்பவன். மேல்தட்டு வாழ்க்கை வாழ்பவன். எனினும் நல்ல குணநலன்கள் வாய்த்திராத சந்தேகப் பேர்வழி. தாமினியை காதலித்து அது நிறைவேறாத பட்சத்தில் அவளைப் போன்ற உருவ ஒற்றுமை படைத்த சீதாவை மண‌முடித்தவன்.   

தாமினி நன்கு படித்த அழகான நவ‌நாகரீக மங்கை. இவள் பிறப்பும், வளர்ப்பும், வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்தது. இராகவனுடன் தன் காதல் ஈடேறாததை பெரிதுபடுத்தாது மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொன்டு தன் வாழ்வை பயனான வாழ்வாக மாற்றிக்கொன்ட மிகச் சிறந்த பெண்மணி. அன்பும், தியாகமும், சேவை மனப்பான்மையும் நிறைந்தவள். இப்புதினத்தில் நம் மனதைத் தொட்ட மிகச் சிறந்த கதாபாத்திரம்.

இந்த புதினத்தைப் படித்து முடித்த பின்னரும் நம் மனதில் நின்று நினைவை நிறைப்பவள் இந்தத் தாமினியே. அழகு, அறிவு ம‌ட்டுமின்றி அன்பும், தியாகமும் ஒரு பெண்ணை எத்தனை உயர்ந்த பெண்ணாய் உலகம் உணரச் செய்யும் என்பதற்கு உதாரணமானவள் தாமினி. இந்த உலகில் இன்னமும் அன்பும், மகிழ்ச்சியும் நிலைகொள்வதற்கு தாமினி போன்ற அற்புத ஜீவன்களே காரணம்.       

இனி அலை ஓசையெனும் மிகப்பெரிய புதினத்தின் மிகச்சிறிய கண்ணோட்டம் காண்போம் வாருங்கள்....

இராகவன், தாமினியை காதலித்து மண‌முடிக்க எண்ணுகிறான், இருப்பினும் அவன் தாயாரின் குறிக்கீட்டால் அவர்களின் திருமணம் தடைபட தாமினி அவனைவிட்டு பிரிந்து சென்று பீஹார் பூகம்பத்தில் சிக்கிய மக்களுக்குத் தொண்டு புரியும் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். தன் எதிர்பார்ப்பு நிறைவேறாது மனவேதனையில் வாடும் இராகவன் பெற்றோரின் வற்புதலுக்கிணங்க லலிதா எனும் பெண்ணை மணமுடிக்க ராஜம்பேட்டைக் கிராமத்திற்கு வருகிறான்.

அவன் பெண்பார்க்க வந்த இடத்தில் மணப்பெண் லலிதாவின் அத்தை மகளாகிய சீதா எனும் அழகிய பெண்ணின் தோற்றம் தன் காதலி தாமினியின் தோற்றத்தை ஒத்திருப்பதைக் கண்டு பிரமித்து அவளையே திருமண‌ம் புரிய முயல்கிறான். சீதாவின் துறு துறுவெனும் செயல்பாடுகளும், கலகலப்பான பேச்சும், அழகிய தோற்றமும் இராகவனின் பெற்றோரையும் கவர லலிதாவை விட்டுவிட்டு சீதாவையே பெண் கேட்கின்றனர்.

பல்வேறு மனஸ்தாபங்களுக்கிடையில் சீதாவின் மாமனும் லலிதாவின் அண்ணனுமாகிய சூரியாவின் ஒத்துழைப்பினால் சீதா இராகவன் திருமணம் நடந்தேறிவிடுகிறது. இத்திருமணத்தை சீதாவின் தந்தை துரைசாமி அய்யர் தடுத்து நிறுத்த முயல்கிறார். எனினும் அவர் எண்ணம் ஈடேறாமல் செய்துவிடுகிறான் சூரியா. இதுவே சீதாவின் வாழ்வில் நிகழும் மிகப்பெரிய விபரீதமாய் பின்னாட்களில் அவள் வாழ்வை சிதைத்துச் சூரையாடுகிறது.

இராகவன் அதிகம் படித்தவன் என்றாலும் குண‌நலன்களில் சிற‌ந்தவனல்ல. திருமணமான பின் சிலகாலம் மனைவியுடன் மனமொன்றி வாழ்ந்து ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானாலும், மீண்டும் தாமினியின் பின்னே தறிகெட்டு ஓடுகிறது அவன் மனம், போதாதற்கு சீதாவையும், சூரியாவையும் இணைத்து சந்தேகித்து சீதாவை சொல்லாலும் செயல்களாலும் துன்புறுத்துகிறான். இதனால் சீதாவின் வாழ்வு அலையில் சிக்கிய ஓடம்போல் அல்லாடுகிறது. அந்நாட்களில் மகாத்மா காந்தியின் புகழ் நாட்டில் வெகுவாய் பரவ காந்தியின் தீவிர பக்தையாய் மாறிவிடுகிறாள் சீதா.
அலை ஓசை க்கான பட முடிவு

தன் கண‌வனின் துர்நடத்தையாலும், ச‌ந்தேக குணத்தாலும் வேதனையடைந்து சீதா தற்கொலையை நாடுகிறாள், இருப்பினும் அதிர்ஸ்டவசமாக சூர்யாவினால் காப்பாற்றப்படுகிறாள்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான‌ சூரியாவும் தாமினியும் போலீசாரால் வலைவீசி தேடப்படுகின்றனர், இந்நிலையில் தாமினியிடம் மறுபடியும் இராகவனுக்கு சந்திப்பு ஏற்பட்டதால் இராகவனின் போக்கு மிகவும் மாறிவிடுகிறது. தாமினியோ தனது இலட்சியங்களோடு ஒத்துப் போகும் சூரியாவை மண‌முடிக்கப் போகிறாள் எனும் செய்தியறிந்து குரோதத்துடன் சீதாவை மேன்மேலும் துன்புறுத்துகிறான்,  இதனால் மனமுடைந்த சீதா வாழ்வே வெறுத்து ஒரு கட்டத்தில் தன் மகள் வசந்தியை தன் மாமியாரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு இல்லற வாழ்விலிருந்து விலகிப்போக முயற்சிக்கிறாள். 

மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் இணைந்து சேவையாற்றப் புற‌ப்படுகிறாள் சீதா. ஆனால் தாமினி என நினைத்து தவறுதலாய் சிலரால் கடத்தப்பட்டு மீளும் சீதா மீண்டும் கணவனை நாடாமல் கல்கத்தாவில் வசிக்கும் லலிதாவின் தோழியாகிய சித்ரா அமர்நாத் தம்பதிகளிடம் சேர்ந்து பின்னர் தேவப்பட்டணத்தில் வாழும் லலிதா பட்டாபிராமன் தம்பதியரிடம் அடைக்கலமாகிறாள். அவர்கள் ஊரில் நடைபெறும் நகரசபைத் தேர்தலில் பட்டாபிராமனுக்கு சேர்மேன் பதவி கிடைக்க பொதுச்சேவையில் களமிறங்கிப் பாடுபடுகிறாள். இதனால் அவள் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.

பட்டாபிராமன் தேர்தலில் வெற்றியடைகிறான். தனது வெற்றிக்கு பாடுபட்ட சீதாவின் அழகில் மயங்கி அவளிடத்தில் மனதைப் பறிகொடுக்கிறான். அவனின் தவறான நோக்கத்தை அறிந்து வேதனையடைகிறாள் சீதா. எனினும் இவ்விவரம் அறிந்து அதுவரை அவளுக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரியாகவும், தோழியாகவும் விளங்கிய லலிதா மிகவும் கோபமுற்று சீதாவை வீட்டைவிட்டே துரத்திவிடுகிறாள்.

லலிதா, சூரியா உடன்பிறப்புக்களுக்கு சுண்டு(சியாம சுந்தர்) என்றொரு இளைய சகோதரனும் உண்டு, லலிதாவின் வீட்டிலிருந்து வெளியேறும் சீதாவை பின்தொடர்ந்து வந்து அவளின் அழகைப் பலவாறாக‌ப் புகழ்ந்து அவளை சினிமாவில் நடிக்கும்படி ஆசைகாட்டுகிறான் சுண்டு. எனினும் வேதனைகள் தந்த அனுபவப் பாடங்களில் கொஞ்சம் விவரம் புரிந்துகொன்ட சீதா அவன் ஆசையை நிராகரித்து தன் வாழ்க்கை பயண‌த்தைத் தனியே தொடர கல்கத்தாவிற்கு இரயிலேறுகிறாள்.

கல்கத்தாவில் சீதா அமர்நாத் சித்ரா தயவால் மீண்டும் தன் கண‌வனையும், குழந்தையையும் சந்திக்கிறாள் . கடும் காய்ச்சலால் பாதிப்புற்று உயிருக்குப் போராடும் இராகவன் சீதாவின் பணிவிடைகளால் உயிர் பிழைத்துவிடுகிறான். பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிற‌து.  இராகவன் மனம் திருந்தி சீதாவையும், குழந்தையையும் அழைத்துக்கொன்டு தொழில் மாற்றலாகி பஞ்சாப்பிற்கு செல்கிறான்.

சில காலம் கழித்து தொழில் விடயமாக அவன் டில்லி சென்றிருந்த‌ சமயத்தில் பஞ்சாப்பில் கலவரம் வெடிக்கின்றது, அண்ணன் தம்பிகளாய் பழகிய இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்க்கின்றனர். இரத்த வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தன் குழந்தை வசந்தியுடன் அந்தக் கலவரத்தில் சிக்கிக்கொள்கிறாள் சீதா. அச்சமயம் ஒரு முஸ்லீம் சாகீபு அவளைக் காப்பாற்றுகிறார். அவள் குழந்தை வசந்தியை தாமினி தீவிரமான போராட்டத்திற்குப்பின் காப்பாற்றுகிறாள். அந்த முயற்சியில் அவளின் ஒரு கை துண்டாகிவிடுகிறது. ஒரு கண் சிதைந்து, முகத்தில் நீண்ட வெட்டுக்காயம் ஏற்பட்டு தாமினி குரூபியாகிவிடுகிறாள்.

டில்லியில் இருக்கும் இராகவன் தன் மனைவி சீதாவையும்,  குழந்தை வசந்தியையும் தேடி பஞ்சாப்புக்கு வருகிறான், தன் மனைவியை முஸ்லீம் சாகிபு ஒருவன் காப்பாற்றிக்கொன்டு சென்றுவிட்டான் என்பதை அறிந்து கடும் சினம் கொள்கிறான். தன் அரசாங்கப் பதவியைப் பிரயோகித்து தான் தங்கியிருந்த வீட்டு இராணுவ அதிகாரியின் ஒற்றர்கள் மூலம் ஒரு பெண் இரு ஆண்களுடன் படகிலேறி தப்பிச் செல்லும் செய்தியைக் கேள்விப்பட்டு உண்மையை தீர விசாரிக்காது துப்பாக்கியுடன் அவர்களைத் தேடிவந்து சுடுகிறான், துப்பாக்கிச் சூட்டில் படகில் துளை விழ அதிலிருந்து இரு ஆண்களும் ஒரு பெண்ணும் நீரில் விழுவதைக் கண்டு குடும்ப கெளரவத்தைக் காக்கும் தன் நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு அகல்கிறான்.

உண்மையில் அந்த சாகிபு சீதாவின் தந்தையாகிய துரைசாமி அய்யர், தன் மகளைக் காப்பாற்ற மாறுவேடத்தில் வந்தவர், அவர்களுடன் பயணித்த மற்றொரு ஆண் சூரியா. சூரியா சீதாவைக் காப்பாற்றிக் கரைசேர்க்கிறான். அவள் தந்தையும் பிழைத்துக்கொள்கிறார். ஆனால் பின்னாட்களில் சீதா இறந்துவிட்டாள் என்றே சூரியா இராகவனிடம் தெரிவித்துவிடுகிறான். சீதாவை அவள் கண‌வனிடமிருந்து மணவிலக்கு பெறச் செய்து தானே அவளை மண‌முடித்து மகிழ்ச்சியாய் வாழவைக்க வேண்டும் எனும் புரட்சிகரமான சிந்தனையைக் கையிலெடுக்கிறான் சூரியா. இதற்காகத் தன் மனங்கவர்ந்த தாமினியையும் துறக்கத் தயாராகிறான்.

நீரில் விழுந்த அதிர்ச்சியில் சீதாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துவிடுகிறது.,  காது கேளாது, வாய் பேச முடியாது அடிக்கடி தளர்ச்சியுற்று மயங்கி அதீத பலவீனத்தில் ஆழ்ந்துவிடுகிறாள். அவள் செவிகளில் அலை சை போன்ற பேரிரைச்சல் இடைவிடாது ஒலிக்கிறது, ஆரம்ப காலத்தில் இந்நிலை நோயுற்று மறைந்த அவள் தாய் ராஜம்மாளுக்கும் ஏற்பட்டிருந்திருக்கிறது.

தன் தந்தையின் அரவணைப்பிலும் சூரியாவின் பாதுகாப்பிலும் இருக்கும் சீதா தனது இறுதி ஆசையாக மகாத்மா காந்தியை நேரில் சென்று காண‌ வேண்டும் என விரும்புகிறாள். அச்சமயம் காந்தி சுடப்பட்ட செய்தி நாட்டை உலுக்குகிறது. அவள் அதிக நாள் உயிரோடிருக்கமாட்டாள் எனும் நிதர்சனத்தைப் புரிந்துகொன்ட சூரியா அவள் இறுதி ஆசையை நிறைவேற்ற உண்மையை தெரிவிக்காமலேயே அவளை மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்திற்கு அழைத்துச்செல்கிறான்.

காந்தியை தெய்வமாய் போற்றி வழிபட்டு வந்த சீதா, அவருக்கு நேர்ந்த முடிவறிந்து மிகவும் வேதனையடைகிறாள். தன்னிலை மறந்து கால்போன போக்கில் சூரியாவைப் பிரிந்து நடந்துவிடுகிறாள். அவள் செல்லும் வழியில் அவள் காதில் தீராது ஒலித்துக்கொண்டிருந்த அலைஓசை சப்தம் நின்றுபோய் குணமாகிவிடுகிறது. அவள் காதுகளுக்கு கேட்கும் சக்தியும், வாய் திறந்து பேசும் வலிமையும் மீண்டும் கிடைத்துவிடுகிறது. சீதா மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறாள்.

போகிறபோக்கில் ஏதேச்சையாக இராகவன் வாழ்ந்து வரும் தனது புகுந்த வீட்டையே வந்தடைகிறாள் சீதா. மீண்டும் கணவனுடன் இணைந்து மகிழ்ந்து வாழ்வோம் எனும் பிரயாசையுடன் வீட்டை நெருங்க, தாமினியும், இராகவனும் சந்திப்பதைக் கண்டு அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கிறாள். தனது குழந்தை வசந்தி தாமினியால் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மன நிம்மதி அடைகிறாள். இராகவன் பர்தா அணிந்து தன்னை மறைத்துக்கொண்டிருக்கும் தாமினியிடம் அவள் உணமை நிலையறியாது தன்னை மண‌ந்துகொள்ளும்படி மன்றாடுகிறான்.

இராகவனின் செய்கையால் மீண்டும் மனமுடைந்த சீதா அங்கிருந்து புறப்பட்டு கால் போன போக்கில் நடந்து ஓரிடத்தில் மூர்ச்சையடைந்து வீழ்கிறாள். அவளைக் காப்பாற்றும் அவர்களின் குடும்ப நண்பர் பாமா எனும் பெண்மணி இராகவனுக்கு தகவல் அனுப்புகிறாள். இராகவனும், தாமினியும், சூரியா, குழந்தையுடன் சீதாவை வந்தடைகின்றனர். சீதா தாமினியிடம் இராகவனையும் குழந்தையையும் ஒப்படைத்து உயிர் நீத்துவிடுகிறாள்.

இறுதியில், இராகவன் தாமினியையே மணந்துகொள்கிறான். சூரியா இராகவன் மணக்கவிருப்பதாக இருந்த பாமாவை கரம்பிடிக்கிறான். புதினம் நிறைவை நாடுகிறது.

இப்புதினத்தில் இவையன்றி நம்மை வியப்பில் ஆழ்த்தும் வேறு பல சம்பவங்களும் உண்டு...

* சுதேசி மன்னர் ரஜினிபூர் மகாராஜாவிற்கும் தாமினியின் பிறப்பிற்கும் உள்ள சம்பந்தம்.
* தாமினியை வளர்த்த அவள் பெரியம்மா ரஸியா பேகத்திற்கும் துரைசாமி அய்யருக்கும் உள்ள தொடர்பு.
* சீதா, தாமினி இருவரின் உருவ ஒற்றுமையின் மர்மம்.
* ரஸியா பேகம் மனந‌லம் குன்றிய கொலைக்காரியாக  மாறியதற்கான பிண்ணனி.

அலை ஓசை க்கான பட முடிவுஇணையத்தில் இப்புதினம் நுட்பமான மனத் தருணங்களை சென்றடையும் மொழி வீச்சு எனப் புகழப்பட்டும், உயர்ந்த இலக்கியம் அல்ல என இகழப்பட்டும் இரு வித கருத்துக்களுடன் வலம் வருவதைக் காணமுடிகிறது. மேலும் காந்தியடிகளின் புகழ் பேசும் இப்புதினத்தில் அவரின் பிழைகள் எனவும் சில விடயங்கள் கதாபாத்திரங்களால் அலசி ஆராயப்படுவதை வாசகர்கள் காணலாம். 

இவை யாவற்றையும் இங்கே விள‌க்கிக்கொன்டிருந்தால் இதுவே ஒரு குறு நாவல்போல் ஆகிவிடும் என்ற காரண‌த்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் புதினத்தைப் படித்து முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பித்து விடைபெறுவோம்.

Sunday, July 19, 2015

பொன்னியின் செல்வரும் பொல்லாத சதிகளும்...!

தேன் சாகரத்தில் சிறு தேனீயின் அநுபவம் : பொன்னியின் செல்வன்
Preview


சுயநலம் மலிந்த இப்புவியில், தான், தனக்கு என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் தியாகமே உருவாய் சில அற்புத மாந்தர்களும் அவதரிப்பதுண்டு, அவ்வகையில் தமக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தை மற்றொரு அரசவாரிசுக்கு விட்டுத்தந்து தியாகச் சிகரமாய் உயர்ந்த ஓர் இளவரசன் கதையே "பொன்னியின் செல்வன்".

1950 - 1955 வரை ஐந்தாண்டுகள் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டு வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற வரலாற்றுப்புதினமே பொன்னியின் செல்வன். சோழப்பேரரசில் சுமார் ஆறு மாத காலத்தில் நிகழ்ந்த வரலாற்று மற்றும் கல்கியின் அபார கற்பனை கலந்த சம்பவங்களை இப்புதினம் முன்வைக்கிறது.

ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு புதுவெள்ளம் (57 அத்தியாயங்கள்), சுழல்காற்று  (53 அத்தியாயங்கள்), கொலைவாள் (46 அத்தியாயங்கள் ), மணிமகுடம் (46 அத்தியாயங்கள் ), தியாகச் சிகரம் (91 அத்தியாயங்கள்)  என மொத்தம் 293 அத்தியாயங்களாக பொன்னியின் செல்வன் புதினம் வாசகர்களுக்கு அற்புதமாக படைத்தளிக்கப்பட்டிருக்கின்ற‌து.

ஓர் ஊரில் ஒரு ராஜா.......!

கி.பி 1000 ஆண்டு வாக்கில் சோழ நாட்டை பராந்தக சுந்தர சோழர் எனும் அரசர் ஆண்டு வருகிறார். அவர் கடும் நோயால் பாதிக்கப்பட்டு வாடுகிறார். அவர் கூடிய விரைவில் மரணமடைந்து விடுவார் எனும் எண்ணம் எல்லோர் மனதிலும் குடிகொன்டு விடுகிறது, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கம் சிலருக்கு உதிக்கிறது. சதித்திட்டங்கள் வெடிக்கின்றன. மன்னரையும், அரச வாரிசுகளையும் வேருடன் அழிக்கும் திட்டங்கள் சதிகாரர்களால் அரங்கேற்றம் பெறுகிறது, அவற்றில் பெரும்பங்கு அரச விசுவாசிகளாக வரும் முக்கிய கதாமாந்தர்களால் முறியடிக்கப்படுகிறது. இப்போராட்டங்களை வீரம், அழகு, விவேகம், காதல் எனும்  வண்ண‌ங்களைக்கொன்டு பொன்னியின் செல்வன் எனும் அற்புத ஓவியத்தை நமக்கென படைத்திருக்கிறார் கல்கி.

அரசர் சுந்தர சோழருக்கு மூன்று வாரிசுகள். மூத்தவர் ஆதித்த கரிகாலர். பட்டத்து இள‌வரசர். மிகவும் இளம் வயதிலேயே போர்க்களம் புகுந்து வீரசாகசங்கள் புரிந்து பாண்டிய மன்னனை போரில் வீழ்த்தி அவன் சிரசைக் கொய்தவர். வடதிசை மாதண்டநாயகராக பொறுப்பேற்று, காஞ்சியில் வீற்றிருந்தவர். மாவீரரான இவர் அழகிய தோற்றம் கொன்டவர்.  பேரழகி நந்தினியின் மீது அன்பு பூண்டு அது நிறைவேறாத பட்சத்தில் திருமணத்தையே வெறுத்து ஒதுக்கி வந்தவர். இவர் தமது தந்தை மீது ஆழ்ந்த அன்பு கொன்டு அவருக்காக காஞ்சியில் பொன் மாளிகை எழுப்பியவர். தமது உடன்பிறப்புகள் மீது நிறைந்த அன்பு பூண்டவர் என்பதை அவர் கதாபாத்திரம் நமக்கு உண‌ர்த்துகிறது.

இரண்டாவது மகள் பேரழகும், பேறறிவும் வாய்க்க‌ப் பெற்ற குந்தவை தேவியார். பொன்னியின் செல்வர் மீது மிகுந்த அன்பு கொன்டவர். அவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொன்டவர். இவர் தனது மனங்கவர்ந்த மணாள‌னாக நமது கதாநாயகன் வந்தியத்தேவனை மனதில் வரித்துக்கொள்கிறார்.

அரசரின் மூன்றாவது புதல்வர் அருள்மொழி எனும் பொன்னியின் செல்வர், இப்புதினத்திற்கு பெயர் தந்தவர். குழந்தைப்பருவத்தில் பொன்னி நதியில் வீழந்து காப்பாற்றப்பட்டவர். அதனால் பொன்னியின் செல்வர் என சிறப்பித்து அழைக்கப்படுபவர். அன்பு, அழகு, அறிவு, ஆற்றல், வீரம், விவேகம்  ஆகிய அனைத்து சிறப்பியல்புகளும் ஒருங்கே அமையப்பெற்றவர். யானைகளின் பாக்ஷை அறிந்து அவற்றை வழி நடத்தும் திறமையும் கைவரப்பெற்ற‌வர். குடிமக்கள் அனைவராலும் மிகவும் விரும்பிப் போற்றப்படும் இள‌வரசர். பின்னாளில் மகோன்னதம் மிக்க மன்னராக "இராஜராஜசோழன்" என பெரும்புகழ் பெற்றவர். இப்புதினம் எழுதப்பட்ட தருண‌த்தில் அவர் இலங்கைக்கு போர் புரிய சென்றிருக்கிறார். குந்தவையின் நெருங்கிய தோழியாக வரும் வானதி தேவி இவர் மனதில் இடம் பிடித்துக்கொள்கிறார்.



இக்கதையின் நாயகன் வல்லவரையன் வந்தியத்தேவன். இவன்  தொன்மைமிக்க வாணர் குல வழித்தோனறலாவான். தமது நாடு சோழப்பேரரசுக்கு கட்டுப்பட்டுவிட்ட நிலையில் வல்லவரையன் ஆதித்த கரிகாலரிடம் ஒற்றராக பணிபுரிகிறான். வந்தியத்தேவனுக்கு வீரம், அழகு, அன்பு ஆகியவை நிறைந்திருப்பினும் எந்தவொரு காரியத்திலும் ஆழம் அறியாமல் காலைவிடும் இயல்பும் அவசரபுத்தியும் கூடவே அமைந்துள்ள‌ன. இதனால் வந்தியத்தேவன் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறான். கந்தமாரனைக் கொல்ல முயன்றான் எனவும், பொன்னியின் செல்வரைக் கொன்றான் எனவும், ஆதித்த கரிகாலரைக் கொன்றான் எனவும் பல சமயங்களில் பல அபவாதங்களில் சிக்கிக்கொள்கிறான், இருந்தாலும் தமது வீரத்தாலும் விடா முயற்சியாலும், அரச விசுவாசிகளின் ஆதரவாலும், குந்தவையின் அன்பாலும் எல்லாப் பழிகளையும் களைவதில் வெற்றிகொள்கிறான் இறுதியில் வந்தியத்தேவன்  வாழ்க்கையிலும், காதலிலும் வெற்றி வாகை சூடுகிறான். தமது வீரத்தால் பல சாகசங்கள் நிகழ்த்தும் வந்தியத்தேவனுக்கு ஆதரவாக அரச விசுவாசி மந்திரி அநிருத்தரின் ஒற்றன் ஆழ்வார்க்கடியான், பூங்குழழி மற்றும் சேந்தன் அமுதன் ஆகியோர் பேருதவிகள் புரிகின்றனர்.

ஆரம்பத்தில் வந்தியத்தேவன் மூலம் ஆதித்த கரிகாலர் தமது தந்தைக்கும் தங்கைக்கும் ஓலை அனுப்புகிறார். சோழநாட்டின் தலைநகராகிய பழையாரை நகரை நோக்கி வந்தியத்தேவனின் பயணம் துவங்குகிறது   வழியில் வந்தியத்தேவன் தமது நண்பனான கடம்பூர் இளவர‌சன் கந்தமாறன் அரண்மனையில் இரவு தங்குகிறான். அங்கே ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாகக் கொன்டாடப்ப‌ட்டு, பல சிற்றரசர்களும் கடம்பூருக்கு வருகை மேற்கொன்டுள்ளனர். அன்றிரவு அங்கே மன்னரின் மறைவுக்குப் பின்னர் ஆதித்த கரிகாலரை ஆட்சியில் அமர்த்தாமல், அவருக்கு சிற்றப்பனாகிய மதுராந்தகத்தேவருக்கு மகுடம் சூட்ட சதியாலோசனை நடைபெறுகிறது. அதை முன்னின்று நடத்துபவர் சிற்றரசர்களின் தலைவரும் சோழ ராஜ்யத்தில் தனாதிகாரி எனும் மிகப்பெரிய பொறுப்பையும் வகிக்கும் மாவீரர் பழுவேட்டரையர் ஆவார். இவர் மதுராந்தகருக்கு பெரிய மாமனாரும் ஆவார். இவரின் விசுவாசம் குன்றுவதற்குக் காரணம் இவர் தமது முதிய பிராயத்தில் மணமுடித்துக்கொன்ட நந்தினி எனும் மாயமோகினியே.

நந்தினி முதலில் ஆதித்த கரிகாலனை விரும்பி தமது ஆசை நிறைவேறாத பட்சத்தில் பாண்டிய மன்னனை மணந்து கொள்ள விழைகிறாள். எனினும் ஆதித்த கரிகாலனால் பாண்டிய மன்னன் வீழ்த்தப்பட்டு மரணத்தைத் தழுவியதால் சோழவம்சத்தை கருவறுக்கப் புற‌ப்படுகிறாள். இவளுக்கு மறைந்த பாண்டிய மன்னனின் விசுவாசிகள் "ஆபத்துதவிகள்" எனும் பெயரில் பணியாற்றுகின்றனர். இவள் காண்போரை மயக்கும் பேரழகி, இவள் மோகவலையில் சிக்கி இவள் சொன்னபடியெல்லாம் தலையாட்டுகிறார் பெருவீரரான பழுவேட்டரையர்.இவர் மட்டுமன்றி கந்தமாறன், பார்த்திபேந்திரன் போன்ற மாவீரர்களும் இவளுக்கு கட்டுப்பட்டுவிடுகின்றனர்.

அரசாட்சியைக் கைப்பற்ற உள் நாட்டில் நிகழும் சதிகள், கூடவே பாண்டிய நாட்டின் வெளி நாட்டு சதிகள். இதனால் சோழ அரசும், அரச வாரிசுகளும்
எதிர்கொன்ட‌ எண்ணற்ற பிரச்சனைகள் இப்புதினத்தில் பகிரப்பட்டுள்ளன‌.

வந்தியத்தேவன் தாம் அறிந்துகொன்ட சதித்திட்டத்தை அரசரிடமும், இள‌வரசி குந்தவையிடமும் தெரிவிக்க‌ முயல்கிறான். அரசர் அவன் கூற்றை சட்டை செய்யவில்லை. மேலும் அவன் த‌ன் தோழன் கடம்பூர் இள‌வரசன் கந்தமாறனை கொல்ல முயற்சி செய்தான் எனும் வீண்பழியும் அவன்மேல் சுமத்தப்படுகிறது. எனினும் மதிநுட்பம் வாய்ந்த குந்தவை தமது சகோதரர்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தை உண‌ர்ந்து, அவர்களை காப்பாற்ற பாடுபடுகிறாள். இள‌வரசி குந்தவை வந்தியத்தேவன் மீது கொன்ட நம்பிக்கையால் பொன்னியின் செல்வனைக் காப்பாற்ற இலங்கைக்கு வந்தியத்தேவனையே அனுப்புகிறாள்.

இலங்கை செல்லும் முயற்சியில் வந்தியத்தேவனுக்கு பூங்குழழி எனும் அற்புதமான படகோட்டிப் பெண் தோழியாகிறாள், "சமுத்திரக்குமாரி" என
பொன்னியின் செல்வரால் புகழப்பட்ட இக்காரிகை வந்தியத்தேவனுடன் இணைந்து பல சாகசங்கள் புரிந்து நமது மனங்களில் நீங்கா இடம்பிடிக்கிறார். இவரின் மாமன் சேந்தன் அமுதனும், அத்தை ஊமை ராணி எனும் மந்தாகினி தேவியும் சோழ அரசைக் காப்பாற்ற பெரிதும் உதவுகின்ற‌னர். இதில் பல முறை பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய ஊமை ராணி இறுதியில் தமது உயிரைக்கொடுத்து மன்னர் பராந்தக சுந்தர சோழரை பாண்டிய ஆபத்துதவிகளின் கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்கிறார்.

இலங்கையில் பொன்னியின் செல்வரின் நெருங்கிய நண்பராகிவிடுகிறான் வந்தியத்தேவன். இல‌ங்கையிலிருந்து திரும்பும் வழியில் மீண்டும் இள‌வரசர் அருள்மொழி பிரச்சனையில் சிக்கிக்கொன்ட வந்தியத்தேவனை காப்பாற்ற கடலில் மூழ்கி சுரம் கண்டு புத்த பிட்சுக்களின் பாதுகாப்பில் யாருமறியாமல் விடப்படுகிறார். அவரைக் கொன்றார் எனும் பழியும் வந்தியத்தேவனை வந்தடைகிறது.

அதிலும் மீண்டு, ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவழைத்து தீர்த்துக்கட்டும் சதிவலை பின்னப்படுவதை அறிந்து அதிலிருந்து ஆதித்தனைக் தடுத்துக் காப்பாற்ற வந்தியத்தேவனை ஏவுகிறாள் குந்தவை. எவ்வளவோ முயன்றும் வந்தியத்தேவனால் ஆதித்தனைக் காப்பாற்ற இயலாமல் போய், ஆதித்தன் கொலை செய்யப்பட்டு விடுகிறான். அந்தப் பழியும் வந்தியத்தேவன் தலையில் வீழ்கிறது. ஈடிணையற்ற பேரிழப்பான ஆதித்த கரிகாலன் மறைவை "விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆசையால் ஆதித்தன் மறைந்தான்"  என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பதிவு செய்துள்ளன. இயற்கையின் குறியீடாக தூமகேதுவின் தோற்றமும் மறைவும் ஆதித்தனின் மறைவுக்கு கட்டியங்கூறுவதாய் அமைகிறது. இதற்குக் காரணமானவர்கள் பின்னாளில் பொன்னியின் செல்வரால் அடையாள‌ங்கண்டு தண்டிக்கப்பட்டனர் என வரலாறு பகர்கிற‌து.

இதற்கிடையில் கரிகாலன் மரணம் தொட்டு, பழுவேட்டரையர் மனந்திருந்தி அப்பழியைத்தாமே ஏற்று உயிர் துறக்கிறார். அவரின் மனைவியாக வந்த நந்தினி தாம் மேற்கொன்ட சபதம் ஜெயித்த மகிழ்சியில் பழுவேட்டரையரை விட்டுப் பிரிந்து போய் விடுகிறாள். இவள் ஊமை ராணிக்கும் பாண்டிய மன்னனுக்கும் பிறந்தவள் என்பதை பின்னாளில் தெரிந்து கொள்கிறாள். மேலும் வாரிசு போராட்டத்தில் ஈடுபட்ட மதுராந்தகரும் உண்மையில் இவளின் சகோதரனே. இந்த உண்மையை அறிந்து பாண்டிய ஆபத்துவிகளுடன் போய் இணைந்து விடுகிறான்.

இறைவனின் திருத்தொன்டில் ஆழ்ந்திருக்கும் உண்மையான மதுராந்தகர் பின்னர் வெளிப்படுகிறார். ஆனால் அவர் அரசு ஏற்க மறுக்கிறார்.

இப்புதினத்தின் முத்தாய்ப்பாக பொன்னியின் செல்வர் நோயிலிருந்து மீண்டு நாடு திரும்புகிறார். தாமே அரச பொறுப்பை ஏற்பதாகக்கூறி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளச் செய்கிறார். எனினும் இறுதியில் யாராலும் இயலாத மாபெரும் தியாகத்தைச் செய்து நம் மனதை முழுதாய் ஆட்கொன்டு விடுகிறார். ஆம் அவர் தமது அரச பதவியை உண்மையான மதுராந்தகருக்குத் தாரை வார்த்து அவரை அரசராக்கிவிடுகிறார்.அத்துடன் இப்புதினம் நிறைவை நாடுகிறது.

பின்னர் 15 ஆண்டுகள் கழித்து அதே பொன்னியின் செல்வர் "முதலாம் இராஜராஜன்" எனும் பெயருடன் அரசு கட்டிலில் அமர்ந்து செயற்கரிய சாதனைகள் செய்து வரலாற்றில் தடம் பதித்தவை, கல்வெட்டுகளில் இடம் பெற்றவை, இன்று உலகப் பாரம்பரியச் சின்ன‌மாக அங்கீகரிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்தது யாவும் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய உன்ன‌தங்கள்....!

நமது கதாநாயகன் வந்தியத்தேவன் பின்னாளில் குந்தவை தேவியை மணந்து மிகவும் மரியாதைகுரியவராகத் திகழ்கிறார்.

இப்புதினத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை உலா வரும் ஒரு கதாபாத்திரமே மதுராந்தகர். அவர் யார் என்பதை நாம் இங்கே தெரிவிக்கவில்லை. நமது நோக்கம் படித்ததை பகிர்வது மட்டுமல்ல, இப்புதினத்தை இன்னும்  படிக்காதவர்களை படிக்கத் தூண்டுவதும் ஆதலால், முழுதும் சொல்லிவிட்டால் சுவாரசியம் இல்லாமல் போய்விடும். புதிதாக படிப்பவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாக அமையட்டுமே எனும் பரந்த நோக்கில் அவர் பெயர் இங்கே மறைக்கப்பட்டு விட்டது. :)


 
பொன்னியின் செல்வன் எனும் இந்த மாபெரும் புதினத்தை நமக்கு ஆக்கித்தந்த எழுத்துலக மேதை கல்கி அவர்களைப் பற்றி சில விடயங்கள் பகிராவிட்டால் இப்பதிவு நிறைவை நாடாது.

த‌ஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலம் எனும் ஊரில் 9 செப்டம்பர் 1899 ஆம் ஆண்டு திரு ராமசாமி அய்யருக்கும், திருமதி தையல் நாயகி அம்மையாருக்கும் பிறந்த ரா.கிருக்ஷ்ணமூர்த்தி எனும் கல்கி அவர்கள்  "நவசக்தி", "விமோசனம்", "ஆனந்த விகடன்" ஆகிய பத்திரிக்கைகளில் தமது எழுத்துப்பயணத்தைத் துவங்கி மிகச் சிறந்த எழுத்தாளராக பீடுநடை போட்டவர்.

இவர் "கல்கி" எனும் சொந்தப் பத்திரிக்கை ஆரம்பித்து தமிழின் முதல் சரித்திர நாவலான "பார்த்திபன் கனவு" புதினத்தை எழுதினார். தொடர்ந்து அவருக்கு ஈடிணையற்ற புகழை ஈட்டித்தந்த "சிவகாமியின் சபதம்", அவருக்கு சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுத் தந்த சமூக நாவலான "அலை ஓசை" தொடர்ந்து "பொன்னியின் செல்வன்" என ஏற‌க்குறைய 30 ஆண்டுகாலம் தமது பேனாவின் துணைகொன்டு இலக்கிய உலகின் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் ஆவார்.

த‌மது எழுத்தாற்றலால் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த பேனா மன்னர் கல்கி அவர்கள் 1954 டிசம்பர் 5ம் திகதி தமது 55ம் பிராயத்தில் தாம் எழுதிக்கொன்டிருந்த "அமரதாரா" எனும் தொடர் கதையை முடிக்காமலேயே இறைவனடி எய்தினார்.(அவரது புதல்வி ஆனந்தி கல்கியின் குறிப்புகளின் துணைகொன்டு அத்தொடர்கதையை முடித்தார்)

கல்கியைப் பெருமைப்படுத்தும் வகையில் "கல்கி நூற்றாண்டு விழா" 9.9.1999 வரை ஓராண்டு காலம் கொண்டாடப்பட்டது. கல்கியின் உருவம் தாங்கிய தபால் தலை வெளியிடப்பட்டது. கல்கி வசித்த அடையாறு காந்தி நகர் தெருவுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இன்று இவருடைய படைப்புகள் அனைவரும் படித்து இன்புறும் வகையில் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டன‌. காலத்தில் அழியாத காவியம் பல‌ தந்த மாபெரும் எழுத்து மன்னர் கல்கி அவர்களை வண‌ங்கி விடைபெறுவோம்.























Tuesday, April 29, 2014


சிவகாமியின் சபதம் -தேன் சாகரத்தில் சிறு தேனீயின் அநுபவம் 



கல்கி எனும் எழுத்துலகமேதை அடியேனுக்கு அறிமுகம் ஆக முக்கிய‌காரணியாய் விள‌ங்கிய அந்த நல்லுள்ளத்திற்கு நன்றி பல. இந்த பதிவு அந்த நட்புக்கு சமர்ப்பணம்...!

தமிழ்கூறு நல்லுலகு க(கொ)ண்ட அற்புத எழுத்துச்செல்வர்களில் குறிப்பிடத்தக்கவர் கல்கி எனும் பரிணாமம் கொன்ட இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் சாகித்திய அகாதமியின் விருது பெற்ற எழுத்தாள‌ருமாவார். சிற‌ந்த வரலாற்றுப்புதினங்களின் படைப்பாளியான‌ இவரின் வாழ்க்கை வரலாற்றை https://en.wikipedia.org/wiki/Kalki_Krishnamurthy வழி நாம் அறியலாம்.

"சிவகாமியின் சபதம்"  பேனா மன்னர் கல்கியின் கைவண்ணத்தில் மலர்ந்து 12 வருடங்கள் கல்கி வார இதழில் தொடர்கதையாக வலம் வந்து எண்ணற்ற வாசகர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற புகழ்பெற்ற காவியமாகும்.
 
தமிழ் வாசகர்களின் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்ற இப்புதினம் "பேனா மன்னரின்" எழுத்து ஆளுமைக்கும், அவரின் ஒப்புவமையற்ற கதை சொல்லும் பேராற்றலுக்கும் தக்க சான்றாக விள‌ங்குகிறது என்றால் அது மிகையல்ல !


பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிட்சுவின் காதல், சிதைந்த கனவு என இக்கதையில் நான்கு பிரிவுகள் உள்ளன. முக்கியக் கதாமாந்தர்களாக பேரழகியும், பரதத்தில் கைதேர்ந்த ஆடலரசியுமாகிய சிவகாமியும் அவள் மனங்கவர்ந்த காதலனாக காஞ்சி இள‌வரசன் முதலாம் நரசிம்ம பல்லவனும் விளங்குகின்றனர். இருப்பினும் கலையும், வீரமும் நமது பெருமைக்குரிய பாரம்பரியம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென பறைசாற்றும் இவ்வ‌ரலாற்றுப் புதினத்தில் இன்னார் மட்டுமே முக்கிய கதாமாந்தர் என அறுதியிட்டுக் கூற இயலா வண்ணம் பரஞ்சோதியாரின் வரலாறு மற்றும் மகேந்திர பல்லவன் வரலாறு, நாகநந்தி வரலாறு என பல்வேறு கோணங்களாக‌ கதை வடிக்கப்பட்டு வெகு நேர்த்தியாக‌ ஒன்றுசேர்த்துப் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது.


சிவகாமி, நரசிம்ம பல்லவனை முதன்மை கதாமாந்தர்களாகவும் மேலும் இவர்களைச்சுற்றி பல துணைக் கதாபாத்திரங்கள், சிவகாமியின் தந்தை தலைமைச் சிற்பி ஆயனார், நரசிம்ம பல்லவனின் தந்தையார் காஞ்சி மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், நரசிம்ம பல்லவனின் ஆப்த நண்பன் பரஞ்சோதி (பின்னாளில் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டு 64 நாயன்மார்களில் ஒருவராக புகழ்பெற்றவர்) மேலும் வில்லத்தனம் புரியும் கள்ள மனமும் வஞ்சக குணமும் படைத்த புத்தபிட்சு நாகநந்தி மற்றும் அவர் ச‌கோதரனும் சாளுக்கிய மன்னனுமாகிய புலிகேசி ஆகியோர் இக்கதையில் பெரும்பங்கு வ‌கிக்கின்றனர்.

பரஞ்சோதி யாத்திரை - விளையாட்டுத்தனம் நிறைந்த வாலிபன் பரஞ்சோதி கல்வி கற்று கல்விமான் எனும் அந்தஸ்தை அடைந்து தன் மாமன் மகளை மணக்க வேண்டி திருநாவுக்கரச பெருமானை நாடி சீட‌ராக இணைந்திட‌ காஞ்சி மாநகருக்கு வருகிறார், காஞ்சிவாசம் அவர் வாழ்வில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. விதிவசத்தால் அவர் புத்தபிட்சு நாகந‌ந்தியால் தனைத் தீண்டவந்த நாகத்திடமிருந்து காப்பாற்றப்பட்டு அவர் சிநேகத்தை பெறுகிறார். தொடர்ந்து சிவாகாமியை மத யானையிடமிருந்து காப்பாற்றி, அரண்மனைக் கைதியாகி, சிறைதப்பி, மீண்டும் காஞ்சி மன்னருக்கே தளபதியாகி, இளவரசன் நரசிம்மனின் உயிர்த்தோழனாகி, இறுதியில் போரின் மூர்க்கங்கள் தந்த தாக்கத்தில் சிவனடியாராகிவிடுகிறார்.
இன்று (29/4/2014) சிறுத்தொன்டநாயனார் அவர்களின் குரு பூசை தினமுமாகும்.

முதலாம் பகுதியில் பரஞ்சோதியைப் பற்றி விஸ்தரிக்கும் கதாசிரியர் கூடவே கலையும், வீர‌மும் காதல் கொள்ளும் அழகை சிவகாமி , இள‌வரசன் நரசிம்ம பல்லவன் வழியும்,  காஞ்சி மன்னனின் பராக்கிரமம், ஆளுமை, சாணக்கியம், கலையுள்ளம் ஆகியவற்றையும் அழகுறப் படைத்துச் செல்கிறார்.

காஞ்சி முற்றுகை - கலைகளின் பிறப்பிடமாக சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து கலையம்சத்தோடு காண்போர் கவனத்தை ஈர்க்கிறது காஞ்சி மாநகர்.காஞ்சி மாநகரின் ம‌கோன்னதம் உண‌ர்ந்து அதை அடைய தன் சகோதரன் நாகநந்தியின் உதவியுடன் போருக்குப் புறப்படுகிறான் சாளுக்கிய மன்னன் புலிகேசி, ஆனால் சாணக்கியத்தில் சிறந்த மகேந்திரபல்லவ மன்னனை வெல்ல அவனால் முடியாது போய்விடுகிறது. பின்னர் காஞ்சி மன்னரிடம் சமாதானத் தூது விடுக்கிறான். "யானைக்கும் அடி சறுக்கும்" அல்லவா ? கள்ளத்தனம் நிறைந்த மன்னன் புலிகேசியின் நட்பை ஏற்கக்கூடாது என இளவரசன் நரசிம்மனும் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியும், யாவரின் கருத்தையும் புற‌ந்தள்ளி புலிகேசியுடன் நட்பு பாராட்டி தனக்கும் நாட்டுக்கும் தீமை விளைவித்துக்கொள்கிறார் மன்னர் மகேந்திரபல்லவன். சாளுக்கிய ம‌ன்னனின் சாயம் வெளுக்கிறது, போர் மூள்கிறது. காஞ்சியின் வளங்கள் அழிக்கப்பட்டு, ஊர்கள் சூரையாடப்படுகின்றன. காஞ்சி மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்படுகின்றனர். அவர்களோடு நம் கதாநாயகி சிவகாமியும் அவர்களிடம் அகப்பட்டுக்கொள்கிறார்.

பிட்சுவின் காதல் ‍ - சிறைபிடிக்கப்பட்ட ஆடலரசி சிவகாமி
சாளுக்கிய மன்னனின் சூழ்ச்சியால் தெருத்தெருவாக அந்நாட்டின் நாற்சந்திகளில் ஆடவைக்கப்படுகிறாள். எனினும் சாளுக்கிய மன்னனின் சகோதரனும் ஏற்கனவே சிவகாமிக்கு அறிமுகமானவருமாகிய புத்தபிட்சு
நாகநந்தி அவளை அந்த அவலத்திலிருந்து மீட்டு அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து தன் ச‌கோதரனால் மேலும் இடர் ஏற்படா வண்ணம் பாதுகாக்கிறார். கூடவே தன் வரலாறைத் தெரிவித்து  இள‌வயது முதலே தமது இதயத்தில் பதிந்த அழகோவியம் சிவ‌காமியின் வடிவத்தைப் போன்றதுவேயாகும் எனவே தானும் அவளைக் காதலிப்பதாகக் கூறி அவள் காதலை யாசிக்கிறார். அவர் காதலை மறுத்து தான் நரசிம்மனுக்கு மட்டுமே உரியவள் என்பதில் உறுதியாய் நின்று  நாகநந்தியை நண்பராக மட்டுமே ஏற்றுக்கொள்கிறாள் சிவகாமி.

இதற்கிடையில் இள‌வரசன் நரசிம்ம பல்லவனும், தளபதி பரஞ்சோதியாரும் மாறுவேடத்தில் வந்து சிவகாமியைக் காப்பாற்ற விழைகின்ற‌னர். எனினும் அவர்களோடு ஊர் திரும்ப மறுத்து, சாளுக்கிய அரசை போரிட்டு வென்று தன்னை மீட்டால்தான் மீண்டும் காஞ்சி திரும்புவேன் என வீர சபதம் செய்கிறாள் சிவகாமி. இதைச் சற்றும் எதிர்பாராத நரசிம்மபல்லவனும் , பரஞ்சோதியும் வருத்தமும் ஏமாற்றமும் சூழ‌ நாடு திரும்புகின்றனர்.

சிவகாமியின் இச்செய்கையினால் இள‌வரசன் நரசிம்மபல்லவனுக்கு சிவகாமியின் மேல் கோபமும், வெறுப்பும் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியில் அவர் தமது தந்தை மன்னர் மகேந்திரபல்லவனின் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டு நாட்டு நலனைக் கருத்தில் கொன்டு பாண்டிய‌ நாட்டு இள‌வரசியை கரம்பிடித்து இரு குழந்தைகளுக்கும் தந்தையாகிறார். மன்னர் மகேந்திரபல்லவனின் மறைவைத்தொடர்ந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும் நரசிம்ம பல்லவன் முழுமூச்சாய் படைதிரட்டி ஏழு வ‌ருடங்கள் கடந்த நிலையில் சாளுக்கிய நாட்டின் தலைநகரான‌ வாதாபியின்(இன்றைய கர்நாடகா) மேல் போர் தொடுத்து சாளுக்கிய அரசை தோற்கடித்து சிவகாமியை மீட்கிறார்.              

சிதைந்த கனவு - ஊர் திரும்பிய சிவகாமி உண்மை நிலையை அறிகிறாள். நரசிம்மனை மணக்கும் தன் ஆசையில் மண்விழுந்ததை உணர்ந்து வருந்தி வாடிப்போகிறாள். தன்னை ம‌றந்து மன்னன் நரசிம்மன் வேறொருத்திக்கு சொந்தமாகிவிட்ட நிலையில் தன் வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் தேடும் முயற்சியில் தன்னையும் தன்னில் குடிகொன்டிருந்த ஒப்பற்ற ஆடல் கலைத் திற‌னையும் முழுமையாய் இறைவனுக்கே அர்ப்பணிக்க முடிவு செய்கிறாள்  சிவகாமி. ஒரு சிற்பியின் மகளான சிவகாமி எனும் கலைப்பொக்கிக்ஷம் எந்த மனிதனுக்கும் சொந்தமாகாமல் தான் கைக்கொன்ட நாட்டியத்திறமையாலும் தன் மன உறுதியாலும் இறை அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டாள் என்பதோடு கதை நிறைவை நாடுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டது மட்டுமே முழுமையான கதை அல்ல, இதில் அட‌ங்காத பல அருமையான‌ கிளைக் கதாபாத்திரங்களும், முடிச்சுகள், திரும்பங்கள் என எண்ணிலடங்கா சுவார‌சியங்களும் இப்புதினம் முழுதும் விரவிக்கிடக்கின்றன, அவற்றை முழுமையாய் உணர இயன்றோர் இப்புதினத்தை நிச்சயம் வாசித்திட வேண்டும்.

அள்ளி அள்ளி உண்ண உண்ணத் தெவிட்டாத தேன‌முதம் போல் இன்னமுதாய் படிக்க படிக்கச் சுவையூட்டுகிறது இப்புதினம். காட்சிகள், கதாமாந்தர்களைப் பற்றிய வர்ணனைகள் யாவும் இக்கதை நம் கண்முன்னேயே நடப்பதைப் போலவே உணரச்செய்கிற‌து. கலை, வீரம், காதல், அன்பு, நகைச்சுவை, ஆன்மீகம்,  நட்பு, மாந்த்ரீகம், விவேகம் என எல்லா எல்லைகளையும் தொட்டு வாசகனின் சிந்தனையோடு பயணிக்கிறது இக்கதை...!

இக்கதையை ஆழ்ந்து வாசிப்போருக்கு நம் புராதனம் குறித்து அள‌ப்பறிய பெருமையோடு சிவகாமியை நினைக்கையில் சோகமும் நெஞ்சில் நிழலாடுவதை தவிர்க்க இயலாது.

காதல் கைகூடினால் அது வாழ்க்கையாகிவிடுகிறது, அதுவே தோல்வியடைந்தால் காவியமாகிவிடுகின்றது, சிவகாமிக்காக இதயம் கனக்க நம் கண்களும் குளமாகிவிடுகின்றன.

பி.கு : இதுவரை தமிழ்ப்பூங்காவில் அழகோவியமாக நடனமிட்டுக்கொன்டிருந்த ஆடலரசி சிவகாமி இன்றுடன் இங்கிருந்து விடைபெறுகிறார்.  :(


Friday, September 6, 2013

மாயமனிதனும் மாபெரும் இலக்கியவாதியும்


ஒருநாள் ஒருபொழுது திடீரென யார் கண்ணுக்கும் புலப்படாமல் , மாயமாய் மறைந்து காற்றாய் உலவும் நிலை நமக்கு நேரிட்டுவிடுகிற‌து, அப்போது மன‌ நிலையும் உடல் நிலையும் எப்படி இருக்கும் ? என்னென்ன காரியங்கள் செய்யத் துடிக்கும் இந்த மனது ?

அன்பான‌வர்களை அவர்கள் அறியாமலேயே பின் தொடர்ந்து வேவு பார்க்கச் செய்யுமா ? வேண்டாதவர்களை அவர்கள் அறியமாட்டார்கள் எனும் தைரியத்தில் துன்பம் இழைத்து பழி வாங்கத் தூண்டுமா ? விளிம்பு நிலை மாந்தர்களுக்கு நன்மைகள் புரிந்து அவர்களை மகிழச் செய்து இரசிக்குமா ? அல்லது இதுதான் சமயமென்று மேலும் அசம்பாவிதங்களை தோற்றுவித்து ஏற்கனவே அரசியல்வாதிகளாலும், அடாவடிப் பேர்வழிகளாலும் நொந்து போன மக்களை மேலும் நோகடித்து பிறர் துன்பத்தில் குளிர் காய விழையுமா?   

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆங்கிலத் திரைப்படம் (Hollow Man )  Kevin Bacon, Elisabeth Shue ஆகியோரின் நாயக நடிப்பில் வெளிவந்த அறிவியல் புனைவிலான திகில் திரைப்படம்.

விஞ்ஞானி செப‌ஸ்டியன் கேய்ன் (Kevin Bacon ) உயிரினங்களை உருவம் களைந்து மாயமாய் மறையச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். மிருகங்களைக் கொன்டு அவர் செய்த பரிசோதனை முழு வெற்றியைத் தருகிறது. தமது ஆய்வில் மிருகங்களை மறைத்து மீளவும் மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றியடைந்த களிப்பில், அடுத்த‌க் கட்டமாக மனிதரை மாயமாய் மறைவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் தமது விஞ்ஞானிகள் குழுவினரின் உதவியோடு தம்மையே பரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்கிறார். அவர் உடலில் அவர் கண்டுபிடித்த ஆய்வு மருந்து செலுத்தப்படுகிற‌து. கடுமையான வலியையும் வேதனையையும் அடைந்து, தமது உடலின் தோல், நரம்புகள், சதை  இறுதியில் எலும்புக்கூடு என ஒன்றன் பின் ஒன்றாய் உடல் முழுமையாய் மறைந்து மாய மனிதனாக ஆகிவிடுகிறார் . அதன் பின்னரே திரைக்கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது, உடல் மறைந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பானது அவர் மறையத்தான் உதவியதே தவிர, மிருகத்தின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக அதன் உடலை மீண்டும் உருப்பெற செய்ததைப்போல அவரை மீட்டுத்தர உதவவில்லை, தோல்வியில் கையைப்பிசைகிற‌து விஞ்ஞானிகள் கூட்டம்.

தனது உடலை இழந்து மாயமனிதனாக மாறிய நிலை ஆரம்பத்தில் மகிழ்ச்சியளித்தாலும், ஒரு கட்டத்தில் அது விஞ்ஞானி செபஸ்டியனுக்கு சலிப்பையும், வெறுப்பையும் தருகிறது. வெறுப்பு குரோதமாக வடிவெடுக்க‌ தனது உருவம் திரும்ப மீளாது எனும் முடிவுக்கு வந்து அதீத கோபம் கொள்கிறார். விளைவு, தனது மன விகாரங்களுக்கு உயிரூட்ட ஆரம்பிக்கிறார். பல வில்லங்கங்களை புரிகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் உலகிற்குத் தெரியாமல் தனது தோல்வியுற்ற கண்டுபிடிப்பை மறைக்கவும், தன்னை தற்காத்துக்கொள்ளவும் ஒரு பயங்கர முடிவை எடுக்கிறார் . அதன் தொடர்பில் தனது விஞ்ஞானக் குழுவினரையே ஒவ்வொருவராக கொடூரமாகப் பலிகொள்கிறார். இறுதியில் கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கொப்ப  தமது விஞ்ஞானிகளில்  ஒருவரான‌ கதாநாயகியைக் கொல்ல முயற்சிக்கையில், தனது எண்ணம் ஈடேறாமல் அவர் கையாலேயே கொடூரமாக அழிக்கப்படுகிறார்.

இது தமது உடல் அருவமானதை சாதகமாக்கிக்கொன்டு தீமைகள் புரிந்த ஒரு மனிதனின் கதை.

வாழும் காலத்திலேயே ஒரு மனிதனுக்கு மறைந்து உறையும் நிலை  நேர்கையில்,  அவன் வாழ்க்கை, அவனை பிண்ணிப் பிணைந்திருக்கும் அவனது உற‌வுகள், பகைகள் ஆகியவற்றை அவன் கைக்கொள்ளும் விதம், உண்டு, உறங்கி உயிர் வாழும் சராசரி மானுடப் பிற‌வியாக இன்றி, சமூகத்தின் பால் அக்கரை கொன்ட ஒரு  சீர்திருத்தவாதிக்கு இந்நிலை வாய்த்தால் அவனுடைய செயல்பாடுகள் ? இக்கேள்விகளுக்கு பதிலாக அமைகிறது மேற்குறிப்பிட்ட கதைக்கு நேர்மாறாக அமைந்த ஒரு மாயமனிதனின் புதினம். 

கதைச்சுருக்கம் - அநியாயத்தைக் கண்டால் பொங்கியெழுந்து நீதிக்குப் போராடும் நடுத்தர வர்க்கத்து நாயகன்(மெய்யப்பன்). மணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான அவர் அவ்வூரின் பெரிய மனிதர் போர்வையில் ஒளிந்து கொன்டு பலவித அநியாயங்களை நிகழ்த்தும்  பணம், பதவி, அந்தஸ்து படைத்த வில்லனின் (கேசவராயன் ) சூழ்ச்சியால் கொலையாளியாக சித்தரிக்கப்பட்டு சிறை செல்கிறார், சந்தர்ப்பமும், சாட்சிகளும் அவருக்கு எதிராக பிண்ணப்பட, சதி வலையில் சிக்கிக்கொன்ட அவர் செய்யாத குற்றத்திற்காக ஆறாண்டுகள் சிறைவாசம் அநுபவித்து விட்டு வீடு திரும்புகிறார்.

மனவி மக்களைக் காண பேராவலுடன் வீடு திரும்பும் அவரை அவர் மனைவி ஊராரின் பழிச்சொல்லுக்குப் பயந்து வீட்டிலேயே ஒதுக்கியும் ஒளித்தும் வைத்து வேதனைப்படுத்துகிறார். மனமுடைந்த நாயகன் வீட்டை விட்டு வெளியேறி தமது ஆப்த நண்பனின் உதவியோடு வடதேசம் நோக்கிப்புற‌ப்படுகிறார், இடையில் நண்பரிடமிருந்து பிரிந்து வட நாட்டில் வேலை தேடிக்கொன்டு அங்கேயே வாழ்ந்தும் வருகிறார், வீட்டைப் புறக்கணித்து பிரிந்தாலும் மனைவி மக்களுக்கென தமது ஊதியத்தின் ஒரு பகுதியை அனுப்பி வைக்கிறார்.

அச்சமயத்தில் விஞ்ஞானத்திலும், மெய்ஞ்ஞானத்திலும் உயர் அறிவு பெற்ற ஞானி (மெய்கண்டார்)  நட்பு அவருக்கு வாய்க்கிறது. அவருடன் நெருங்கிப் பழகும் நாயகன் அவர் உருவங்களை மறைய வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்து பிரமிக்கிறார், ஞானியிடம் தன்னை சோதனையில் ஆட்படுத்திக்கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் . ஆரம்பத்தில்  தயங்கினாலும் பின்னர் நாயகனை தனது ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்கிறார் ஞானி.

அவர் முயற்சி வெற்றியடைந்து நாயகன் உருவம் மறைந்து மாய மனிதனாகி விடுகிறார். அருவமாகிப்போன அவர் தன் ஊர் நோக்கி விரைகிறார். அங்கே மாய வடிவில் தன் குடும்பத்தினரிடையே உலவுகிறார், பொதுவில் நடைபெறும் சில தீமைகளை தடுத்து வெற்றி கொள்கிறார், தமது நண்பர்களின் வாழ்வுக்கு உதவுகிறார்.த‌ன்னை வஞ்சித்த வில்லனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவெடுக்கிறார், அப்போது அவரை மாய வடிவெடுக்க உதவிய ஞானியார் வழியாக அவ்வில்லனின் பிண்ணனியை அறிந்து தனது  பலிவாங்கும் முயற்சியில் தயங்குகிறார்,

இறுதியில் முடிவு என்ன‌ ? நாயகனின் உருவம் மீண்டதா ? அவர் நினைத்தபடி அவர் குடும்பத்தில் அன்பும் நலமும் சூழ்ந்ததா ? தம்மை வஞ்சித்த வில்லனை அவர் நினைத்தபடி பழிவாங்கினாரா ? என்பதையெல்லாம் நான் சொல்ல மாட்டேன், வாய்ப்புக் கிடைத்தால் டாக்டர்.மு.வ. அவர்களின் "மண்குடிசை" நாவலைப் படித்து முடிவைத் அறிந்து கொள்ளுங்கள்.   

அன்றும் இன்றும்  தமிழ் இலக்கிய நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் மு.வ அவர்களின் கைவண்னத்தில் மலர்ந்த நாவல் இது. மறைந்து பல்லாண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் இலக்கியவாதிகளின் எழுத்திலும் பேச்சிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் டாக்டர் மு.வ என்றால் அது மிகையல்ல‌.


   
நிறைய தனிமனித‌/சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கிறது இந்நாவல்.இந்நாவலில் மூன்று தம்பதியரின் குடும்ப வாழ்வு வாசகர்களுக்கு படிப்பிணையாக சொல்லப்பட்டுள்ளது, அதில் கதாநாயகன் மெய்யப்பன் ஊருக்குப் பயந்து அவரை புறக்கணிக்கும் மனைவி ரேவதி (பிணைப்பிழந்த இல்லற‌ வாழ்வு), மெய்யப்பனின் நண்பன் பாண்டியன், ஆடம்பரத்துக்காக‌ அவரைப் பிரிந்து வாழும் அவர் மனைவி அஞ்சலி (பிரிவில் ஊசலாடும் மண‌வாழ்வு ) இவை இரண்டும் கடந்த மேன்மையான இல்லற வாழ்க்கை நடத்தும் குமரவேலு, அவர் அன்பு மனைவி மங்கை நல்லாள் (என்ன ஒரு அழகான பெயர் !, பேராசிரியர் மு.வ அவர்களின் அபிமானிகள் பலர் தங்கள் வீட்டு மழலைகளுக்கும் மு.வ வின் கதாபாத்திரங்களின் அற்புதமான தமிழ்ப் பெயர்களை வைத்திருந்தனர் என்பதை அறிந்ததுண்டு, இப்பெயரை காணும்போது அது ஏனென்று புரிகிறது, பெயரிலேயே பெண்மையின் மேன்மை அனைத்தும் சொல்கிற‌து இந்த இனிய பெயர்  ! ).   

இந்நாவல் குடும்ப வாழ்வியலில் அன்பின் அவசியம், கணவன் மனைவி மற்றும் குழந்தைகளிடையே மலரவேண்டிய பிணைப்பின் முக்கியத்துவம், நட்பின் மேன்மை, நல்ல நண்பர்களின் உறுதுணை வாழ்வில் ஏற்படுத்தும் நன்மைகள் எத்துணை மகத்தானது என்பதையும் உண‌ர்த்துகிற‌து.

கண்கவரும் புள்ளிகோலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாங்குற‌ அமைந்த புள்ளிகளைப்போல் கதைக்கு உயிரோட்டமாய் பல தத்துவங்கள் நாவல் முழுதும் ஆங்காங்கே அழகாய் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. படிப்போருக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் நாவல் இது.