.

.
.

Wednesday, July 29, 2009

தமிழ்ப்பூங்காவில் ஒரு விருது விழா


சுமார் 10 மணி இரவு இருக்கும், கடமை முடிந்து, கண் அயரும் நேரம், "ஜெய் ஜக்கம்மா!" என கணிணீயிலிருந்து ஒரு அசீரரி, என்னவோ ஏதோவென்று நாமும் கண்ணைக்கசக்கிக் கொன்டு கனினியைநோக்க, அங்கே! "எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்...."

இப்படி ஒரு அன்பு எச்சரிக்கை நம்ம குறை‌ ஒன்றும் இல்லாத, "குறை ஒன்றும் இல்லை" பதிவரிடமிருந்து! ஆத்தா கோபத்துக்கு ஆளாக முடியுமா? இரவாவது! தூக்கமாவது! பின்னங்கால் பிடரியில் பட எடுத்த ஓட்டம், குறை ஒன்றும் இல்லை பதிவில் நாம் அடுத்த நிமிடம்!

பார்த்தால் நண்பர் "குறை ஒன்றும் இல்லை" அவர்கள் அழகான ஒரு விருது அது நட்பைப் போற்றும் விருது என்பது அதன் தனிச்சிறப்பு, தூக்கிக் கையில் கொடுத்து நமை வாழ்த்த! அந்த "நொடி" உண்மையிலேயே மிகவும் உன்ன‌தமான வாழ்க்கை "வானவெடி" போங்கள்!



சந்தோசம், சிரிப்பு, உற்சாகம், ஆன‌ந்தக் கண்ணீர் என நவரசமாய் பொங்கிய பல உணர்ச்சிகளையும் பயங்கரமாய் கட்டுப் படுத்திக்கொன்டு, நண்பரின் விருதுக்கு ஒரு நன்றி பின்னூட்டம் நயமாக வைத்துவிட்டு, அவர் கொடுத்த விருதோடு, அக்கரை எனும் பொன்னாடை, நட்பு எனும் பணமுடிப்பு ஆகிய‌வற்றையும் பெற்றுக்கொன்டு தமிழ்ப்பூங்காவிற்கு ஓடி வந்து சேர்ந்தேன்.

நேற்று இரவு நான் தூங்கியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா! அது தான் கிடையாது! சுத்தமாக ஒரு பொட்டு தூக்கமில்லை, "இதற்குமுன் விருது வாங்கிய அனுபவமே கிடையாதே அதனால்தான்" என நினைக்கிறீர்கள் அல்லவா, உண்மையாயிருந்தாலும் அது தவறு!



நிஜத்தில் என்னவென்றால் அடுத்தபடியாக நாமும் நமது நண்பர்களாக நாம் நினைப்பவர்களுக்கு, நம்மை நண்பராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இதைக் கொடுத்து, அவரும் நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து இதை ஏற்றுக்கொன்டு, நம்மையும், நமது நட்பையும் கெளரவிக்க வேண்டுமே எனும் நினைப்பு!



மனம் கூட்டிக்கழித்து கணக்குப் போட்டதில் பல தேர்வுகளிலிருந்து சில முடிவுகள்! இவை அத்தனையும் சுய நினைவோடு, யாவ‌ரிடமும் கையூட்டு வாங்கிக்கொன்டு தேர்வுக்குழுவினரால்(அடியேன் மட்டுமே) பலவித குவிசுகள், சூடான கேள்விபதில்கள், குரோஸ் வேர்டு பரிட்சைகள், ஓட்டப்பந்தயங்கள் என திறமைக்கு ச‌வாலான ப‌ரீட்சைகள் அனைத்தும் வைக்கப்பட்டு அதில் வெற்றிகரமாக ஜெயித்த வெற்றியாளர்கள் இவர்கள் என்பதையும் தெரிவித்துக்கொன்டு, இன்றைய நமது பாராட்டு விழா மேடைக்கு செல்வோம் வாருங்கள்!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மாலை மயங்கும் நேரம், இனிக்கும் இரவு தொடங்கும் நேரம், தமிழ்ப்பூங்கா, வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, நட்பைப்போற்றும் தலைவரின் தளபதிப்படப்பாடலான "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே... பாடல் சீடி தேயும்வரை திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டுக்கொன்டிருக்கிறது....


பாராட்டு மேடையிலே தமிழ் கூறு நல்லுல‌கின் ஒட்டு மொத்த பிரபல்யங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர்! அவர்களுக்கு நடுவே நிகழ்ச்சியைத் தலைமை தாங்க நமது சிறப்பு விருந்தினர் திருவாள்ர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள் (ந‌ல்லவேளை, நைசா பாராட்டியாச்சு!இல்லேன்னா ஜக்கம்மாகிட்டே சொல்லிப்புடுவார் மனுக்ஷன்!)


மேலும் பூங்கா முழுக்க அழகழகாய் பல பதிவுலக தோழிகளும் "ஹேன்சம்", "மாச்சோ"வுமாக பல பதிவுலக காளையரும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொன்டிருக்கின்றனர்!

இந்த நிகழ்ச்சிக்காகவே வீட்டில் அழுது அடம்பிடித்து புது கோட்டு சூட்டெல்லாம் வாங்கிப் போட்டுக்கொன்டு கிளாமரான அவைத்தலைவராக வரவேற்புறை நிகழ்த்தத்துவங்கிய ந‌ம் திரு.தமிழ்வானன் அவர்கள் மைக்கைப் பிடித்து பேசுகிறார்... பேசுகிறார்... பேசிக்கொன்டேயிருக்கிறார்... அதற்குமேலும் பொறுக்க முடியாமல் பதிவர்கள் நால்வர் மேடைக்கு ஓடிப்போய் அவரை குண்டுக்கட்டாக கீழே தூக்கிவர, மைக்கை தரமாட்டேன் என அவர் அடம் பிடிக்க தமிழ்ப்பூங்காவே சில நேரம் ஆடிபோய்விட்டது போங்கள்!

அடுத்ததாக சிறப்புரையாற்ற ,நல்லவர் இதயத்தில் இருந்து வந்திருந்த திருவாளர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள், எழுந்தார், மைக்கை கையிலெடுத்தார், அவர் உதிர்க்கப்போகும் உரைக்காக கூட்டம் மொத்தமும் கூர்மையாய் காதுகளைத் தீட்டிக் கொன்டு காத்திருக்க மனுக்ஷன் ஒரே வரி, அதிலும் மூன்றே சொற்கள் "குறை ஒன்றும் இல்லை" என சொல்லிவிட்டு வாத்தியார் எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் கூட்டத்தை நோக்கி கையை அசைத்து விடை பெற்றுக்கொன்டார்! கூட்டம் "ஙே" என்று சிறிது நேரம் விழித்து விட்டு அவ்ளோதான் உரை போலும் என முடிவுக்கு வந்து பலமாக கையை தட்டுகிறது...தட்டுகிறது...தட்டிக்கொன்டேயிருக்கிறது..., அதில் எங்கே திரும்பிவந்து பேச ஆரம்பித்துவிடப்போகிறாரோ எனும் பயமும் சற்று ஒளிந்திருந்ததை காண முடிந்தது! :)))

சரி அடுத்ததாக நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி! அழகான வெண்புறா நம்ம தோழி சுபாதான், நேர்த்தியாக சேலையில் விருதுகளை, தங்க வேட்டை ரம்யாவைவிட விலை அதிகமான நகை(புன்னகை தானுங்கோ) அணிந்து எல்லோரையும் கவர்ந்தபடி மேடையில் விருதுகளை தங்கத்தட்டில் வைத்துத் தர,

அதிகம் பேச மாட்டேன் என உத்தரவாதம்(கையெழுத்துப்பிரதியாக) வாங்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் திரு.தமிழ்வானன் அவர்கள் மேடையேறி மைக்கைப்பிடித்துக்கொன்டு நாம் எழுதிகொடுத்தபடி விருது பெற்ற பதிவர்களை மேடைக்கு அழைக்க, பிண்ணனியில் அவ்ர்களின் பதிவுகள், அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாய் வெண் திரையில் பிரதிபலிக்க‌...


இதோ எனக்கு நண்பர்களாக வாய்த்து என்னையும் நட்பையும் பெருமைபடுத்திய எனது நண்பர்கள் ...

* உரிமைக்குப் போராடும் நல்ல நண்பர் ஓலைச்சுவடி ‍சதீசு குமார் அவர்கள்

* பதிவுலகப்புயல் நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள்

* நல்லவர் இதயத்திலிருந்து நண்பர் "குறை ஒன்றும் இல்லை" அவர்கள்

* இலக்கிய நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்ணா அவர்கள்

* என்‍ உலகத்திலிருந்து அன்பு தோழி சுபா அவர்கள்

* பின்னூட்டப்புயல் நம்ம தல தமிழ்வானன் அவர்கள்

* பிறமொழிப் பதிவராயிருந்தும் தமிழ்ப்பூங்கா வாசகரான "ரஞ்சீதா'ஸ் கார்னர்" " ரஞ்சீதா அவர்கள்

* விவேகமான எழுத்தாளர் விவேகம் வாசுதேவன் லட்சுமணன் அவர்கள்

‍‍* நேசமான கவிதைகளால் நெஞ்சை நனைத்துச் சென்ற தோழி ஈரமான நினைவுகள் புனிதா! (விரைவில் திரும்பி விடுவார் எனும் நம்பிக்கையோடு)

***
* இந்தப் பத்தாவது விருதைப் பெறும் நண்பர் நான் மட்டுமே அறிந்தவர்! அவருக்கு என்னை தெரியாது என்றே நினைக்கிறேன், அவரை யாரென்று கூறும் முன் ஒரு பிளாஸ்பேக்...

சில காலங்களுக்கு முன்னாள், நமது மதிப்பிற்குரிய அய்யா திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்களின் அஞ்சல் ஒன்று அதிலே ஒரு பதிவு முகவரி அதற்கு முன் தமிழ்ப்பதிவுகளுடன் பரிட்சயமாகும் பாக்கியம் அமையவில்லை!அதை தட்டிப்பார்த்தால் கண்முன்னே அருமையான அந்தப் தமிழ்ப் பதிவு கண்சிமிட்டி வரவேற்கிற‌து! கருத்துக்களஞ்சியமாய் அற்புதமான பதிவுகள்!
அந்த வரலாற்றுப்பூர்வமான, விஞ்ஞானப்பூர்வமான, பூகோளப்பூர்வமான (அடக்கடவுளே!) நிகழ்ச்சிக்குப்பின் தொடங்கியது நமது தமிழ்ப்பதிவுலகுக்கு கக்ஷ்ட‌காலம் :( (பின்னே நாமலும் பதிவராயிட்டம்ல!)

திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷணர் அய்யா அவர்களின் விள‌க்க உரை‌கள், பதில்கள் ஆகியவற்றிலிருந்து பாடம் படித்துக்கொன்டு தொடங்கியது நமது பதிவுலக வாழ்வு!


அந்த அற்புதனமான பதிவர் வேறு யாருமில்லை நம‌து

* மாடப்புறா குமரன் மாரிமுத்து! அவர்கள்தான், நன்றி நண்பரே!

மேற்குறிப்பிட்ட நண்பர்களோடு நேரில் நட்பு பாராட்டிய அனுபவம் இல்லையெனினும் அவர்களின்

பதிவுகளின் வழி! பின்னூட்டங்களின் வழி அவர்களை நல்ல நண்பர்களாக அடையாளம் காண முடிகின்றது! மேலும் நாம் ஒரு "சைக்கிக்" சக்தி படைத்த டெலிபத்தி, எலிபத்தி போன்ற பல்வேறு மனதை ஊடுரும் மகா சக்திபடைத்த விக்ஷேச நபர் என்பது ஒரு கூடுதலான தகவல்(அதெல்லாம் சுத்தப் பொய்! நம்பாதீங்க, எத்தனை தூரமானாலும் உண்மை நட்பை உள்ளத்தால் உணர முடியுங்கிறது தானுங்க உண்மை!)

உண்மையில் சொல்லப்போனால் எல்லோருமே நண்பர்கள்தான், தமிழ்ப்பூங்காவின் ஓரத்திலே எனது வலைப்பட்டியல் வரிசையிலே நான் அமர்த்தியிருக்கும் அத்தனை பேரும் அடியேனின் நண்பர்களே! அவர்களில் சிலர் உயர்ந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்! தமிழக நல்ல நண்பர்களின் ந‌ட்பு தற்பொழுது வாய்த்ததில் நிரம்ப மகிழ்ச்சி! கூடிய விரைவில் அவ‌ர்களையும் தமிழ்ப்பூங்காவின் வலைப்பட்டியலில் அமரவைக்க வேலைகள் நடந்துகொன்டிருக்கின்றன! இப்போதைக்கு நான் அறிந்தவர்களையே வரிசைப்படுத்தியிருக்கிறேன்! தமிழ்ப் பதிவுலகக் கடலில் அறிய வேண்டியவர் அனேகம் பேர் இன்னும் உள்ளனர்!

சரி நண்பர்களே, இந்த பாராட்டு விழா இனிதே நடைபெற வருகை எனும் நன்கொடை கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும், தலைமை தாங்கிய திருவாளர். "குறை ஒன்றும் இல்லை" அவர்களுக்கும் (அவர் அடியேனுக்கு விருது அளித்திருக்காவிட்டால் இந்த கும்மியே கிடையாது) ! நன்றி! நன்றி!

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நமது நட்பெனும் பொன்முடிப்பும், அக்கரையெனும் பொன்னாடையும், கூடவே அவர்கள் பதிவில் இட்டுக்கொள்ள அழகான விருதுப்பட்டையும் வழங்கிச் சிற‌ப்பிக்கப்படுகின்றது! இவர்களுக்கான சலுகைகள் பின்வருமாறு :

இவர்கள் பதிவு வெறும் வெள்ளைப்பக்கமாக ஒன்றுமே எழுதாது இருந்தாலும் நாம் அவர்களின் அந்தப் பதிவை ஆஹா ஓஹோ வெனப் புகழ்வோம்.


அடிக்கடி அவர்களின் பக்கங்களுக்கு விஜயமளித்து ஹீட்ஸ் கணக்கை ஏற்றுவோம்.


மற்றும் அடிக்கடி அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களை எக்கச்சக்கமாக வழங்கி மகிழ்விப்போம்.

விருது பெற்ற நண்பர்களே, மகிழ்ச்சிதானே!


சரி மீண்டும் அடுத்து ஒரு நிகழ்வில் சந்திப்போம், வணக்கம்.

நல்லது விருது பெற்ற நண்பர்களே, மேற்காணும் இந்த விருதை உங்கள் வ‌லைப்பதிவின் ஓர‌த்தில் அழகாக ஒட்டிவிடுங்கள், பின்னர் நீங்களும் உங்கள் நண்பர்களாக 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் இந்த விருதை வழங்கி அவர்களை மகிழ்வித்து தாங்களும் மகிழுங்கள்! நட்புக்குக் கைகொடுங்கள் நண்பர்களே!


பி.கு : விருது பெற்ற நண்பர்களுக்கும் ஏனைய எல்லோருக்கும், மறந்திராதீங்கப்பா , கம்பெனிக்கு உங்கள் அன்பும் ஆதரவும் இன்றுபோல் என்றும் தொடரட்டும்! ‌

Tuesday, July 28, 2009

இப்படியுமா ‌பரவும் எயிட்ஸ் நோய்?



அன்பர்களே(நட்பெனும் கடல் மூழ்கி நான் கண்டெடுத்த நல் முத்துக்கள்)! நண்பர்களே ( நான் அறியாத, தெரியாத, பார்க்காத, பழகாத நபர்கள் ஆயினும் எனை மதித்து இங்கே எட்டிப்பார்த்திருக்கும் நல்ல உள்ளங்கள்)

இந்தப் பொன்னான மாலைப் பொழுதினிலே, கடலலையெனத் திரண்டிருக்கும் வாசகப் பெருமக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் ( இதெல்லாம் ரொம்பவே ஓவர்! உடனடியா விக்ஷயத்திற்கு வரலைன்னா இப்போதே வெளிநடப்புச் செய்துவிடுவோம்னு ஏகப்பட்ட குரல்கள்!) சரி சரி நேரடியாக விக்ஷயத்திற்கு வந்து விடுகிறேன்!
இதற்கு முன் அடியேன் எழுதிவந்த பேய்க்கதையைப் படித்து பயத்தால் நடுந‌டுங்கி வீட்டை விட்டு வெளியே போகவும் பலர் பயப்படுவதாக தகவல் வந்து குவிந்த வண்ணம் உள்ளது! ஆகையால் எங்கே நாமெழுதும் இந்தப் பேய்க்கதையால் பலபேர் பயத்தில் வேலைக்கே போகாமல் இருந்து அதனால் நாட்டின் பொருளாதரத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாதே எனும் நல்லெண்ணத்தில் தற்காலிகமாக கதை நிறுத்தப்பட்டு, ( அடக்கடவுளே இது அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு எல்லாத்தையும் தாண்டிய பிரபஞ்சப் புளுகா இருக்குதேடா சாமி!)

கதைகளை ஓய்வான மேலும் பல சமயங்களில் பரிமாறிக்கொள்வோம், அதையும் தாண்டிய ஒரு முக்கியமான செய்தியை இப்பொழுது கவனிக்கலாம் வாருங்கள் :‍

எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயின் விபரீதம் உலகறிந்த விக்ஷயம்! தவறான ஆண் பெண் உறவு, போதை ஊசிகளின் பறிமாற்றம்,புண்கள். காயங்கள் வழி எயிட்ஸ் கிருமியால் மாசடைந்த இரத்தத்தின் சேர்க்கையும் எயிட்ஸ் பரவ வழி வகுக்கிறது யாவரும் அறிந்த ஒரு செய்தியே ஆனால் நாம் நினைத்தும் பாராத மேலும் பல விதங்களில் எயிட்ஸ் நோயால் மாசடைந்த இரத்த சேர்க்கை நிகழ்வது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பெரும்பாலான ஜனரஞ்சகமான வீதியோரங்களில் பல ஆங்காடிக்கடைகளில் பலதரப்பட்ட உண்வு வகைகளை விற்பனை செய்வதை நாம் அனைவரும் அறிவோம். வெயில் சுட்டெரிக்கும் வேளைகளில் நாவரண்டு போகும். அப்பொழுது அழகழகாய் கண்ணாடிப்பெட்டிகளில் ஐஸ்கட்டிகளின் கூட்டங்களுக்கு மத்தியில் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித்துண்டுகள், குமுட்டிபழத்துண்டங்கள், மேலும் பலவகைப் பழங்கள் நம்மை கண்சிமிட்டி அழைத்து வாங்கி உண்ணத்தூண்டுவது போல் இருக்கும்! நாமும் ( முழுப்பழங்களை வாங்கி, சுத்தப்படுத்தி, பதப்படுத்தி உண்பதைவிட, இம்மாதிரி எல்லாமே த‌யாராய் அமைந்திருப்பது தானே நமக்கும் அதிகம் பிடிக்கும்! வேலை மிச்சம், நேரம் மிச்சம்! இப்படி பல வியாக்கியானம் வேறு!)
பல‌ சமயங்களில் எதையும் யோசிக்காது பண‌ம் கொடுத்து இது போல் பதப்படுத்தப்பட்ட பழ வகைகளை வாங்கி உண்கிறோம் அல்லவா! அது மிகவும் தவறு என்பது இந்தச் செய்தியைப்படிக்கும்ப்போது நமக்குப்புரிகிறது.
அந்த‌ச் சிறுவனுக்கு சுமார் 10 வயதிருக்கும், அவன் ஒரு வீதியோர அங்காடியில் வெட்டி விற்கப்பட்ட அன்னாசிப்பழத்துண்டங்களை வாங்கி உண்டிருக்கிறான், அதன் பின்னர் சில‌காலங்களில் அவனுக்கு சுக‌வீனம் ஏற்படத்துவங்கி சுமார் 15 நாட்கள் கழிந்த நிலையில் அவன் முழுமையான சுகாதாரப்பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட போது அவனுக்கு எயிட்ஸ் நோய் கண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! அதிர்ச்சியில் உறைந்த அவன் குடும்பம் மொத்தமும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள யாருக்குமே அந்த நோய் பீடிக்கப்படவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவனின் நோய் எப்படித்துவங்கியது எனும் ஆராய்ச்சித்தொடரில் நோயில் விழ சில காலங்களுக்கு முன் அவன் அன்னாசிப்பழத் துண்டங்கள் வாங்கி உண்டானே அந்தப்பழக்கடை அங்காடியும் பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட போது, அந்த பழக்கடை வியாபாரிக்கு கையில் வெடிப்புக்களுடன் கூடிய சிறு சிறு இரத்தப்புண்கள் அடையாளம் காண்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்படுத்திப் பரிசோதிததில் அவர் பல காலமாக எயிட்ஸ் நோயின் ஆளுமையில் சிக்கிச் சீரழிந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! பாவம் அந்தச் சிறுவன் இந்த அங்காடிக்கடை வியாபாரியினால் அவனுக்கும் இந்த நோய் பரவி இன்று அவனும் ஒரு எயிட்ஸ் நோயாளியாக மாறி வாழ்நாட்களை எண்ணிக்கொன்டிருக்கிறான்.
நண்பர்களே பார்த்தீர்களா! விதியின் வடிவம் யார் கண்ணுக்கும் புரிவதில்லை , உண்மைதான் ஆனால் சிறிது எச்சரிக்கையாக இருப்பதன் வழி இது போன்ற பல அசம்பாவிதங்களை நிச்சயம் தவிர்க்கலாம் அல்லவா!
எனவே தயவு செய்து வீதிகளில் வெட்டி விற்கப்படும் இதுபோன்ற பழத்துண்டங்கள் மட்டுமல்ல, வெறும் கைகளோடு படைக்கப்படும் எல்லா வகை உண்வுகளையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள், நெகிழியிலான கயுறைகள் அணிந்து உண‌வுகளைப் பறிமாறும் கடைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். நமது பாதுகாப்பும், நமது ஆரோக்கியமும், நமது கைவசவமே!
சரி, நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்!

Thursday, July 23, 2009

"டெரரான நண்பருக்கு டெரிபளான ஒரு செய்தி..."


ஆஹா விக்கினேசுவுக்கும் சிவனேசுவுக்கும் சண்டை மாட்டிக்கிச்சி போலிருக்கே என ஆர்வாமாய் கச்சான், சுவைபானம் எல்லாத்தோடும் வந்து முதல் வரிசையில் ஆர்வமாய் அமர்ந்து கதைகேட்கும், ஸாரி, படிக்கும் அன்பர்களே, நண்பர்களே நீங்க‌ள் நினைப்ப‌துபோல் நிச்சய‌மாக‌ இது சன்டைமேடை அல்ல! அல்ல‌! அல்ல‌, அதோடு ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர் விக்கியோடு எந்த‌ ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வும் கிடையாது! நாங்க‌ள் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ளாக்கும்!

பின்னே ஏன் இந்த‌ சூடான‌ த‌லைப்பு? நீங்க‌ள் கேட்பீர்க‌ள் என்ப‌து புரிகிற‌து அதெல்லாம் உங்களை இங்கே இழுத்துவர செய்யப்பட்ட மறைமுக சதியேயன்றி வேறொன்றுமில்லை!

சரி நாம் விசயத்திற்கு வருவோம், நேற்று என்ன நடந்தது தெரியுமா?
மாலை மணி சுமார் 7.00 இருக்கும், ப‌டார், படீர், டபார், டுபீர் வேறொன்றுமில்லை, நேற்றைய பதிவை டைப் செய்து கொன்டிருக்கிறேன்.

கனினியில் ஒரு புதிய பதிவு ஓடிவந்து உட்காருகிறது, என்னவென்று பார்த்தால், நம்ம வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள் தமது பதிவில் " நானும் டெரர் தான்... ஜீப்புல ஏறிக்கிறேன்... பார்த்துக்கோங்க" என ஒரே சத்தம், ஆஹா நேற்றுவரை ந‌ல்லாத்தானே இருந்தார் மனுக்ஷன் புதுசாக்கூட "மம்மி(அம்மா அப்படின்னு தப்பா நினைக்கக்கூடாது, இது பிரமீடு வாழ் மம்மி) பற்றியெல்லாம் புதுப் புது தகவல்லாம் சொன்னாரே, அவருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று ஓட்டமாய் ஓடி அவர் பதிவைப் பார்த்தால், வாயெல்லாம் பல்லாக, முகமெல்லாம் மலர்ந்து தனக்குக் கிடைத்த "சுவாரஸ்ய பதிவுக்கான விருதை" கையில் பிடித்துக்கொன்டு மகிழ்ச்சியில் மிதந்து கொன்டிருந்தார்
அவருடைய பின்னூட்ட பதிவு மேடையில் ஒரே கூட்டம் வாழ்த்துச் சொல்லிக்கொன்டும், உற்சாகப்படுத்திப் பாராட்டிக்கொன்டும், ஒரே ஆரவாரம் போங்க!
நமது நண்பர் "சுவாரஸ்ய‌ பதிவு விருது" பெற்றிருக்கிறார், நம்ம பங்குக்கு ஏதாவது செய்யனுமே எனத்தோன்ற நாமும் பின்னூட்ட மேடைக்கு ஓடிச்சென்று (அவரைப் பாராட்டி ஒரு வாழ்த்துப்பா பாடலாம் என நினைத்தேன் ஆனால் பாருங்கள்! ஒரே கருத்து வரட்சி(புரட்சி இல்லேங்க!) ஐடியா வரவில்லை என்பதைத்தான் அழகுத்தமிழில் அப்படிச் சொன்னேனுங்க! சரி நம்மால் முடிந்தது என சூப்பராக "சூப்பரப்பு" என ஒரு மிக மிக நீளமான பின்னூட்டம் வைத்து விட்டு கூடவே அவர் விரும்பி கனவு கண்டபடியே "டெரர்" ஆகிவிட்டமைக்கு மனங்கனிந்த நல் வாழ்த்துக்களையும் அள்ளி அவர் கைகளில் திணித்துவிட்டு தமிழ்ப்பூங்காவிற்கு ஓடி வந்து சேர்ந்தேன்.

பிறகு யோசித்துப் பார்க்கையில் இன்றைக்கு நாமும் ஒரு பதிவிட‌வேண்டுமே? எதைப்பற்றி எழுதுவது? சரி இந்தப் பதிவை நண்பர் விக்கினேசு அவர்களுக்கு வாழ்த்துக்கூறும் ஒரு பதிவாக அமைத்துவிடுவோம் எனத் தோன்றவே, அப்படியே இந்தப் பதிவு நண்பருக்கான வாழ்த்துப் பதிவாக வடிவம் பெற்றுவிட்டது எனத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதான் இந்தப் பதிவிற்கான கதைச்சுருக்கம். (என்னது கதைச்சுருக்கமா? அதற்கே இவ்வளவு பெரிய வள வளா பதிவா?)

ந‌ண்பர் விக்கினேசு அவ்ர்களைப்பற்றி ஒரு சில..., அடியேன் இந்த பதிவின் ஆரம்ப காலத்தில் பதிவிடத்துவங்கியபோது("ம்க்கும், இப்போ மட்டுமென்ன பல வருச‌மா ஆச்சு?, சில மாதந்தானே ஆகியிருக்கு!" என முகவாயை சிலர் தோள்பட்டையில் இடித்துக்கொள்வது தெரிகிறது!) நண்பர் விக்கினேசு பதிவு நுணுக்கங்கள் பலவற்றை பந்தா ஏதுமின்றி நம்மோடு பகிர்ந்துகொன்ட நல்ல மனம் படைத்த பாரி வள்ளல்! இன்னும் கடையேழு வள்ளல்கள் பெயரையும் சொல்லி அவரை வாழ்த்தலாம்தான் ஆனால் பதிவு நீளமாயிடும் பரவாயில்லையா? எனவே மிகப்பெரிய அர்த்தம் கொன்ட ஒரு சின்ன குறள்(என் குரல் சகிக்காது அதுவல்ல), இது திருக்குறள் "தினைத்துனை நன்றி செயினும் பனைத்துனையாக் கொள்வர் பயன் தெரிவார்" நன்றி நண்பரே!

இந்த நல்ல நண்பரிடம் மற்றொரு வழக்கம், யாராயிருந்தாலும் அவர் பதிவுக்கு பின்னூட்டமிட்டால், கண்டிப்பாக அவர்களை மதித்து பதில் பின்னூட்டம் இடுவார். சில சமயங்களில் விவாதம், ஜோக்குகள் எல்லாம் இவர் பதிவுப் பின்னூட்டங்களில் இடம் பெறுவதால் அதுவும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே அமைந்திருக்கும். நாம் பல பதிவுகளைப் படிக்கிறோம், சிரமமெடுத்து நாம் படிக்கவும், தெரிந்து கொள்ளவும் தங்கள் பொழுதுகளை செலவிட்டு பல செய்திகளை சேகரித்து, முறையான எழுத்து வடிவமிட்டு நமக்காக படைக்கிறார்கள் என்பதால் கண்டிப்பாக, இதோ நானும் வந்தேன் இந்தப் பதிவைப் படித்தேன் என பதிவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் ஒரு பின்னூட்டமிடும் வாசிப்பாளார் உண்மையிலேயே மிகப்பெரிய உற்சாக சக்தியை அவர்களுக்கு வழங்குவதை உணர முடிகிறது. அப்படி வழங்கப்பட்ட பின்னூட்டத்திற்கு பதில் பின்னூட்டம் இடும் பதிவாள நண்பர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே ஆவர் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். அதற்கும் உங்களுக்கு ஒரு ச‌பாக்ஷ் நண்பரே!

இப்படியாக நண்பர் விக்கினேசு பற்றி பதிவுலக வாயிலாக நானறிந்த சில விடயங்கள் மூலம் அவருக்கு நல்வாழ்த்துக்கள் கூறிக்கொன்டு, அவர் மேலும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு, மனைவி மக்கள், பிள்ளை குட்டி, பேரன் பேத்தியெனப் பல்கிப்பெருகி மகிழ்ந்து வாழ மவுண்ட் ரோடு முனீஸ்வரனை வேண்டிக்கொன்டு, வலைப்பதிவுலகில் அவர் தல சிறந்து விளங்கி மேலும் சிற‌ந்த படைப்புகள் பல தந்து, "சுவாரஸ்ய பதிவு விருது" போலவே பட்டாம் பூச்சி விருது, தட்டாம் பூச்சி விருது என மேலும் பல விருதுகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனக் கேட்டுக்கொன்டு
மீசிக் ஆரம்பம்.....

"சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு........!!!!!!!!!! என்ற தலைவர் பாடலை விக்கினேசுவுக்கு வாழ்த்துப்பாடலாக சமர்ப்பித்து விடைபெறுவோம்!

பி.கு :
வலைப்பதிவு பெருமககளுக்கு : விக்கினேசு மேலும் சிலருக்கு இந்த விருதை வழங்கவேண்டும், அவர் இப்பொழுது வழங்கவில்லை, தீபாவளிக்கோ, பொங்களுக்கோ வழங்கப்போகிறார் போலிருக்கிறது!, (வழங்கித்தான் ஆவார், பின்னே அதை வைத்து வீடா கட்டப் போறார்?), எனவே ஒரு குடும்பமாகிவிட்ட வலைப்பதிவுலக அன்பர்களே, கூடிய விரைவில் சிறந்த படைப்பைத்தரும் உங்களுக்கும் அவர் கையால் விருது கிடைக்கும்(அதற்கும் பதிவு போடுவோம்ல!), அதற்கான அட்வான்ஸ் வாழ்த்துகளோடு. மீண்டும் சந்திப்போம்.


விக்கிக்கு மட்டும் : (அப்புறம் போஸ்! நீங்க சொன்ன மாதிரியே பதிவை நெருப்பா போட்டுட்டோம்ல!, பேசியபடி அமெளண்ட்ட செட்டல் பன்னிறுங்க சரியா? அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன்....)

Wednesday, July 22, 2009

மகாலெட்சுமியும் பாக்தாத் திருடனும்


வணக்கம் அன்பர்களே, நண்பர்களே மீண்டும் ஒரு அதி பயங்கரமான பதிவில் நாம் இணைந்திருக்கிறோம் என்பதை முன்கூட்டியே அறிவித்துக்கொள்கிறோம்! இன்றைய நமது பதிவு, பல ஆக்க்ஷன் காட்சிகள் நிறைந்த, மயிர் கூச்செரியும் பல திகிலூட்டும் டுவிஸ்டுகளோடு (அதாங்க எதிர்பாரா திருப்பங்கள்!) நிறைந்த மர்மக் கதை என்பதால் வாசகப் பெருமக்கள் மிகவும் கவனத்தோடு இந்தப் பதிவைக் கையாளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

மிக‌வும் க‌வ‌ன‌மும், எச்சரிக்கையும் தேவை‌ப்ப‌டும் ப‌திவு என்ப‌தால், வானொலியில் "குச்சி குச்சி ராக்கம்மா' பாட்டு கேட்ட‌ வ‌ண்ண‌மோ, தொலை‌க்காட்சியில் "டோரா கார்ட்டூனை இடையிடையே திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணமோ, சூடான தேநீரை உரிஞ்சிய‌ வண்ணமோ, ஏன் ஆபத்து அவசரத்துக்கு எழுந்து ஓடாமலும் இந்தப் பதிவை படித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், எச்சரிக்கையை மீறி கவனமாகப் படிக்கவில்லை என்பது தெரிய வந்தால் , மீண்டும் இதே மாதிரி ஒரு பதிவு இடப்படும் அபாயம் உள்ளதால், நண்பர்கள் அந்தக் கொடுமைக்கு மீண்டும் ஆளாகாமல் கவனமாகத் தப்பித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!!! ச‌ரிங்க‌ நாம‌ ப‌திவுக்குள் செல்வோமா?

அதற்கும் முன்பதாக இதுவரை தமது பரபரப்பான பின்னூட்டங்களால் தமிழ்ப்பூங்காவை அதிரவைத்த நம்ம தல( கொஞ்சம் பழைய பதிவர்களை இப்படித்தான் சார், போஸ், தல என நல்ல வார்த்தைகளால் ஐஸ் வைக்க வேண்டும், இல்லாட்டி அவங்க பின்னூட்டங்களாலே நம்மை தாளித்து விடுவார்கள், யப்பா!!!) , நல்லவர்! வல்லவர்! சிந்தனைச் சிற்பி! சயனைடு குப்பி! தலைவர் தமிழ்வாணன்! அவர்கள் கோட்டும் சூட்டுமாக இங்கே வந்து அமர்ந்த்திருக்கிறார்,
இவரின் அருமை பெருமைகளை எவ்வளவு வேணுமானாலும் சொல்லலாம், பிரபல பதிவர்களெல்லாம் தமிழ்ப்பூங்காவை எட்டிப் பார்த்துவிட்டு, "தமிழ்ப் பணி" என்ற பெயரில் "தமிழ்க் கொலை" நடக்கிறதே என‌ நொந்தபடியே புறப்பட்டு விடும் வேளையில் இவர் மட்டும், பின்னூட்டம் இட்டு இந்த மொக்கைப் பதிவருக்கெல்லாம் இவ்வளவு மதிப்புத் தராங்களேன்னு ஆனந்தக் கண்ணீர் விட வைத்தவர்! அவருக்கு ஒரு ச‌லாம் வரிசை வைத்துவிட்டு பதிவுக்குள் நுழையலாம் வாருங்கள்(எப்படி தல, நீங்க காசு குடுத்து எழுதிக் கொடுத்த மாதிரியே ஆஹா ஓஹோ என உங்கள் புகழப் பரப்பியாச்சு! மகிழ்ச்சிதானே?)

மகாலெட்சுமி, ஆம் அவரேதான், அவருடைய படம் இங்கே இடப்பட்டிருப்பதால் இது ஏதோ பக்திப் பரவசமூட்டும் தெய்வப்பதிவு என்றெல்லாம் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்! நமது கதையில் தேவி மகாலெட்சுமியும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவதாலேயே மரியாதை நிமித்தம் அவர் உருவம் இங்கே பதிவிடப்படுகிறது!

இன்றைய இந்தக் கதை ஒரு சில வருடங்களுக்கு முன்பதாக நடந்த கதை என்பதால் கொசுவத்திச் சுருள் உத்தியை(என்னது தெரியாதா? அதாங்க சினிமாவில கடந்த காலத்தைக் காட்ட கருப்பு வெள்ளை அல்லது சிவப்பு பச்சை என பளீச் வர்ணங்கள் இரண்டு கொசுவத்திச் சுருள் போல சுழல் வதைக் காட்டுவார்களே, அதேதான்!)

புதிய கம்பம் எனும் பெயரில் ஒரு பழைய கம்பம், துருப்பிடித்த தகர வீடுகள், பொதுவாகவே அக்கா, அண்ணன், மாமா, அத்தை என அனைவரையும் உறவுகளாய் மதித்து வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்விடங்கள். அதிலே ஒரு சிலர் கொஞ்சம் பசையுள்ளவர்கள், அழகழ‌காய் சில வீடுகளைக் கட்டிக் கொண்டு வெளியே வீட்டுக்கு ஒரு கோயில் எனக்கட்டிக்கொன்டு வாழ்பவர்கள்.

இன்றைய நமது கதாநாயகியும் அந்த வகையைச் சேர்ந்தவரே!
அவருக்கு சுமார் 60 வயதிருக்கும், ஆனால் பார்வைக்கு 40 வயது போலவே தம்மைக் காட்டிக் கொள்வார், மாநிறம், களையான தோற்றம், அவரது அலங்காரம் எல்லாம் "வியட்நாம் வீடு" படத்தில் வரும் பத்மினியம்மா போலிருக்கும், வகிடு, முன்நரை எல்லாம்!. ஆனால் அவரோ பார்ப்பதற்கு வடிவுக்கரசி அம்மையும் ( ந‌ல்லவராக கற்பனை செய்து கொள்ளவும் ) காந்திமதி அம்மையும் சேர்ந்து செய்த கலவை போலவேயிருப்பார்! முகத்தில் இரு முன்பற்கள் வேறு சிறிது நீண்டிருக்கும், ஆனால் அவ்வளவாகத் தெரியாது!

இவர் அலங்காரங்கள் என்று வரும்பொழுது 20 சென் சைசில் தங்கத்தோடுகள் அணிந்து கனம் தாங்காமல் சரியும் அவற்றை இழுத்து நிறுத்தும் இரு தங்க மாட்டல்களும் அணிந்திருப்பார், மூக்கு மடலை விட பெரியதாக சிவப்பு வெள்ளை மூக்குத்தி, கழுத்தில் தாலிச் சரடு, பருப்புச்சங்கிலி, வெந்தயச்சங்கிலி , மோப்பு வைத்தச் சங்கிலி, வைக்காதச் சங்கிலி என பிரியத்துக்கு வாரிக்கொட்டியிருப்பார்! கைவளைகள் கண்ணாடியில் பளபளக்கும் கூடவே, அதில் தங்க வளைகளும் கண்சிமிட்டும்! இது போதாது என்று காலில் சரக்கொலுசு (நடக்கும் போது கலீர் கலீரென சிலிர்ப்பூட்டுமே அதேதான்!), வெள்ளி மெட்டிகள் என அவர் நடமாடும் நகைக்கடையாக உலாவருவார் பாருங்கள்! அம்மன் வீதி வலம் வருவது போலிருக்கும்!
ஆனாலும் அவர் ரொம்ப நல்ல மனுக்ஷி, பந்தா துளியும் அற்றவர், ஏ புள்ளே! என எல்லோரையும் வாஞ்சையோடு அழைத்துப் பிரியமாகப் பேசும் நல்லவர்!

அவர் கணவர் அந்த காலத்தில் எஸ்.வி.ரங்காராவ் என ஒரு பெரிய நடிகர் இருந்தாரே அச்சு அசல் அவரேதான்!, இவர்கள் குடும்பம் அந்த இடத்தில் ஒரு தலைக்கட்டு குடும்பம், தெய்வம், பூஜை புனஸ்காரங்கள் என்றால் முதல் வரிசை இவர்களுக்குத்தான்!

அந்த அம்மணியை என் அம்மா பெரியம்மா என அழைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார், பெரியம்மா வீடு நாங்கள் வாழ்ந்த வீட்டுக்கு வளைவுச் சந்திலே அமைந்திருந்தது! எங்கள் வீட்டை அடுத்து சீனரின் கடை வரிசைகள், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவர் எனது வீட்டைத்தாண்டி கடைக்கோ அல்லது வேறு எங்காவதோ செல்வார் என்பதால், தூரத்தில் அவர் கொலுசுச் சத்தம் கேட்டவுடன் ஓடி வந்து வாசிலில் நின்று அவரைப் பார்த்துக்கொன்டிருப்பேன், அவர்மீதும் அவர் அலங்காரங்கள் மீதும் அத்தனை ஈர்ப்பு, அவர் மங்களகரமாக குங்குமத் திலகமிட்டு முகத்தில் அழகாய் மஞ்சள் தீட்டியிருப்பார் பாருங்கள்! இப்போதுள்ள பெண் பிள்ளைங்களும் இருக்காங்களே, நதாக்ஷா('nathasha), பெர் & லவ்லி('fair & 'lovely) என வகை வகையான களிம்புகளை வாரிப் பூசிக்கொன்டு! அப்புறம் முகம் கருத்து விட்டதே, பணத்தையும் தொலைத்துவிட்டு அழகு போய்விட்டதே என்று புலம்புவது! மஞ்சளை உபயோகியுங்கள் பிள்ளைகளே, முகம் முழுமதியென தகதகக்கும் என்று சொன்னால் கேட்டால் தானே!

அந்த வாழ்விடம் மிகவும் நெருக்கமானதாகவும் அன்டை அயலார் அருகாமையோடும் மிகவும் பாதுகாப்பானதாகவே அமைந்திருந்தது, அந்த குறிப்பிட்ட நாள்வரை....

அன்று, ஒரு வார நாள், எல்லோரும் வேலைக்கு புறப்பட்டுவிட, கம்பம் காலியாகக் காட்சியளிக்கிறது, காலை சுமார் 10 மணியளவில் பெரியம்மாவின் கணவர் வெளி வராந்தாவில் உலாத்திக்கொன்டிருந்தவர் மெதுவாக தமது வீட்டின் முன் வந்து நின்ற அந்த மோட்டார் வண்டியை கவனிக்கிறார், அதிலிருந்த நபர், ஒரு 24, 25 வயது மதிக்கத்தக்க ஆடவர், சிரித்தபடியே இறங்குகிறார், அம்மா இல்லையா எனக் கேட்கிறார், அந்த ஆளை அவர் அதற்குமுன் கண்டதேயில்லை, உடனே அந்த ஆளே முந்திக்கொன்டு "என்னப்பா என்னைத் தெரியலையா, சிங்கப்பூரில் வேலை செய்கிறாரே, உங்கள் மகன் மூர்த்தி, அவர் கூட்டாளி, போன வருடம் திருவிழாவுக்கெல்லாம் வந்தேனே என்று கூற, சிங்கையில் பணிபுரியும் தனது மகன் உண்மையிலேயே சென்ற திருவிழாவுக்கு நண்பர்களை அழைத்து வந்தது ஞாபகம் வந்தது, ஓ அப்படியா என்றார், அதற்குள் பெரியம்மாவும் வெளியே வர, அம்மா என ஓடிசென்று அவர் காலில் விழுந்து வணங்கினான் அந்த ஆசாமி! அப்படியே "மகாலெட்சுமி மாதிரியே இருக்கிங்கம்மா என்று கலங்கிய கண்ணை துடைத்த வண்ணம் புகழ்ந்தான் அந்த ஆசாமி, யாரோ ஒருவன் என்றாலும் தன்னை "மகாலெட்சுமி மாதிரி என்று கூறிவிட்டானெ என பொங்கிப் பூரித்துப் போய்விட்டார் நம்ம பெரியம்மா!( மீனு தூண்டில்ல மாட்டிக்கிச்சு டோய்!)

அம்மா எனக்கு யாருமே இல்லை, ஜோகூரிலிருந்து இஸ்டப்பட்டு ஒரு பெண்ண கூட்டி வந்துட்டேன், இதோ பக்கத்து தாமனில தான் வீடு, இப்போ அவளுக்கும் எனக்கும் (சிறிது அருகாமையிலிருந்த ஒரு இடத்தின் கோயிலைக் குறிப்பிட்டு அர்ச்சனைக்கல்யானம் நடக்குது, தாலியை ஆசிர்வதிக்க கட்டாயம் மூன்று சும‌ங்களிகள் வேண்டுமாம், ஒருவர் கூட கிடைக்கவில்லை, ஒருவராவது வேண்டும் என்கிறார்கள், நீங்கள் தான் தெய்வம் போல் காட்சியளிக்கிறீர்கள், வந்து உதவி செய்யுங்கள் எனக் கல்லும் கரையும்படி கண்ணீரோடு கெஞ்ச, பெரியம்மாவின் கண்வரும், பக்கத்தில் தானே போய்ட்டு வா ,என பாய் பாய் எல்லாம் காட்டி அவனோடு மோட்டாரில் ஏற்றி அனுப்பினார்!(புகழ்ச்சி செய்யும் சூழ்ச்சியைப் பார்த்தீர்களா?). மோட்டார் நம்ம "மகாலெட்சுமி" பெரியம்மாவைச் சுமந்து கொன்டு விரைந்தது.

அடுத்து என்ன நடந்திருக்கும்? உங்களுக்குத் தெரியாது, நானே சொல்லி விடுகிறேன், குறுக்குப்பாதை என ஒரு ஆள் நடமாட்டம் குறைவான ஒரு செம்பனைக் காட்டுப் பகுதிக்கு அவரை கடத்திச் சென்று, கத்திமுனையில் அவர் நகைகள் அத்தனையும் உருவிக்கொன்டு அவரை திரு திருவென முழிக்கவிட்டு மோட்டாரில் தப்பிப் பறந்தான் அந்தத் "பக்காத்திருடன்". பிரமை பிடித்து பேசவும் வழுவிழந்து தலையில் கை வைத்தபடி ஒரு சாலை ஓரத்தில் சரிந்து அமர்ந்தார் நம்ம பெரியம்மா!, அவ்வப்போது க‌டந்து செல்லும் ஓரிரு வாகனங்களையும் நிறுத்தும் தைரியம் அவருக்கு வரவில்லை, அழுதவாரே அமர்ந்திருந்த அவரை அவ்வழியே கடந்த மோட்டாரோட்டி ஒருவர் கவனித்து, எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறாரே என நெருங்கிப் பார்க்க அது அவரது "தாய்" !

அதன் பின்னர் அவரை அழைத்து வந்தனர். இவ்வளவும் நடந்த பின்னர், அந்தத் திருடன் மிரட்டும்போது ஏன் உதவி கோரி சத்தமிடவில்லை என எல்லோரும் கேட்க அவர் சொன்னார் "கத்தலாம்னுதான் நினைச்சேன், ஆனா அவன் என்னைய பார்த்து மகாலெட்சுமி மாதிரியே இருக்கேன்னு சொல்லிட்டான் அதான்" என்றாரே பார்க்கலாம்!

Saturday, July 18, 2009

வெண்சுருட்டு வேந்தர்கள்


அன்பர்களே! நண்பர்களே! இன்று நம்மோடு இணந்திருக்கும் மதிப்புமிகு, அய்யா திரு.முத்துக்கிருக்ஷ்ணர் அவர்களுக்கு வணக்கமும், வரவேற்பும் கூறிக் கொன்டு நமது பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்.



வெண்சுருட்டு, (சுலபமாக "சிகரெட்" என்று அழைப்போமே அவரேதான்), இவர் உலகெங்கினும் மிக மிகப் பிரபலமானவர். இவருக்கு சுருட்டு, பீடி என அண்ணன் தம்பிகளும் உண்டு, இருந்தாலும் இவரை வெல்ல யாராலுமே முடியாது, பதின்மர், பருவ வயதினர், இளைஞர், நடுத்தர வயதினர், வயோதிகர் என பல பிரிவிலும் வயதிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு! இவருக்கு ஏழை, பணக்காரர், ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது! சம நோக்குச் சிந்தனையாளர் ,பணமிருப்பவரெல்லாம் புகைக்கலாம், ஆனால் அவர்கள் பின்விளவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்காத தைரியசாலியாக இருக்க வேண்டும்(இது மிக மிக முக்கியமான அடிப்படைத் தகுதி)!

பாருங்கள் எப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த பொது நோக்குவாதி. இவரு ரொம்ப ரொம்ப நல்லவருங்க, ஆனா பாருங்க, சில சமூக சீர்த்திருத்தவாதிகளும், மக்கள் பொது நல விரும்பிகளூம் (கடவுளைக்கூட குறை சொல்லும் இந்த உலகம்) பல நன்மைகள்(????) புரியும் இவரை வெறுக்கிறார்கள். என்னன்னு சொல்ல ?, இவர் மனித குல மேம்பாட்டிற்காக ஆற்றிவரும் அரும் பெரும் நன்மைகளை பட்டியலிட்டு, அவருக்கு நன்றி கூறுவதோடு, அவரை தங்களது ஆறாம் விரலாக்கிக்கொன்ட நண்பர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம், புகைப்பதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள், சமுதாயத்திற்கு, சுற்றுச்சூழலுக்கு, வருங்கால சந்ததிக்கு என பல் முனைகளிலிருந்தும் விளையும் நன்மைகளையும், சிறப்புக்களையும் எடுத்துக்கூறுவதே இந்தப் பதிவின் தலையாய நோக்கமாகும்.

நாங்கலெல்லாம் புகைப்பது தவறு என தலையிலடித்துக் கொன்டிருக்கிறோம், வெண்சுருட்டுக்கு ஆதரவுப் பிரச்சாரமா? என வெகுண்டெலும் சமூக ஆர்வலர்களே, அமைதி காக்க! இவ்வளவு துணிச்சலாக இந்தப் பதிவை வெளியிட்ட என்னைத் திட்ட பதிவின் இறுதியில் தக்க ஏற்பாடுகளை செய்திருக்கின்றேன், (பின்னூட்டங்கள் வழி போரிடும் வசதி உங்களுக்காக காத்திருக்கிறது கவலை வேண்டாம்!)

புகைக்கும் நண்பர்களே, இதுவரையில் புகைப்பது தவறு, ஆபத்து, அடாத செயல், தீமை எனும் எதிர்மறை கருத்துக்களைக் கேட்டுக் கேட்டு மிகவும் சோர்ந்து போயிருப்பீர்கள், உங்கள் மனச்சோர்வை போக்கி, புகைப்பது மிக மிகச் சரியான செயல் என்பதை நிரூபித்து! உங்களுக்கு வக்காளத்து வாங்கித்தரவே இந்தப் பதிவு

மேலும் உங்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் இந்தப் பதிவில் ஓரிடத்திலும் "புகைக்காதீர்கள்" "வேண்டாம் புகைக்கும் பழக்கம்" "புகைப்பது தீமை" போன்ற எதிர்மறைக் கருத்துக்கள் அறவே இடம் பெறாமல் மிக மிக எச்சரிக்கையோடு, "புகைப்பது நல்லசெயல்" "இப்படியே தொடர்ந்து புகைப்பிடியுங்கள்" "உடல் நலன், பொது நலன் கவலையெல்லாம் வேண்டாம் தொடர்ந்து புகையுங்கள்" என்பன போன்ற அதரவுப் பிரச்சாரங்களை முன்வைத்து இந்தப்பதிவு இடப்படுகிறது, மகிழச்சிதானே?

நீங்கள் சிறு வயதில் உங்களூக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டிய தந்தை அல்ல‌து உறவினர்களினை முன்மாதிரியாகக் கொன்டு புகைப்பதில் இற்ங்கியவரா? சற்று வளர்ந்த பின்னர் நீங்களும் அந்த நல்லப் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும் எனும் பரந்த நோக்கில் கடைக்கு அனுப்பி வெண்சுருட்டு வாங்கிவர அனுப்பப்பட்டவரா?,

பள்ளிப் பருவத்தில் "திருட்டு தம்" என்பார்களே அந்த வம்சாவளியா?

வளர்ந்த பின் காதல் தோல்வி, இன்ன பிற கவலைகள் வழி வந்தவரா?
அல்லது

புகைப்பது "ஸ்டைலு" என அழகாக மேலே தூக்கியெறிந்து வாயால் கவ்வி, எரியும் வெண்சுருட்டை வாய்க்குள் அடக்கி, சட்டைக்காலர் மடிப்பிலிருந்து வாயால் உருவி "பேக்ஷனாக" புகைத்து, ஹாலிவூட் நடிகப் பரம்பரை‌யே பிச்சையெடுக்கும் வண்ணம் பல வீர சாகசங்களைத் த‌ந்த சினிமாவால் விளைந்தவரா? எது எப்படி இருந்தாலும் புகைப்பதன் வழி தங்களின் வாழ் நாட்களைக் குறைத்துக்கொள்ளும் ஒரு அரிய, பெரிய யாராலுமே செய்ய முடியாத ஒரு வீரமான காரியத்தில் துணிந்து இறங்கியிருக்கின்றீர்கள், முதலில் உங்களூக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

இந்தச் சமூக ஆர்வலர்கள் இருக்கின்றார்களே, அவர்களூக்கு வேறு வேலையே இல்ல போங்கள், எப்போது பார்த்தாலும் புகைப்பது தீமை, தவறு என்று சொல்லிக்கிட்டு, மேலும் புகைப்பவர்களை பயமுறுத்தும் வண்ணம் புகைப்பதால் ஏற்படும் நோய்கள், அதன் தீவிர பாதிப்புக்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், புள்ளிவிவரங்கள், புகைப்பிடித்தலைத் தடுக்கும் பிரச்சாரங்கள் போன்றவற்றை பெரும் பொருட் செலவுகளில் மேற்கொன்டு வருவது, புகைப்பவர்களையும், அவரைச் சார்ந்திருக்கும் பலரையும் பல தீவிரமான நோய்களிலிருந்து காக்கும் தீய முயற்சியே, அதனால் அவர்களை முற்றாக விலகி இருங்கள்!

ஒருவேளை அந்தப் பிரச்சாரங்கள் வெற்றி பெற்று நீங்கள் திருந்திவிட்டால், உங்கள் ஆயுள் நீண்டு விடுமே?, நோய் நொடி எதுவும் உங்களை அண்டாமல் போய் விடுமே, சுற்றுப்புறச்சூழல் கொஞ்சம் சீர்பட்டு விடுமே?, இதையெல்லாம் நடக்க விடலாமா? கூடவே கூடாது அல்லவா?

எனவே உங்களையே நம்பிக்கிடக்கும் குடும்பத்தின் நலன் மட்டுமே மனதில் கொள்ளாது, பல வெண்சுருட்டுக்கம்பெனிகள், நாட்டுக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணி, உயர்ந்த வரிக்கட்டணம், நோயாளிகளிடமிருந்து பணம் கறப்பதையே தொழிலாகக் கொன்ட மருத்துவமனகள், காப்புறுதி நிறுவனங்கள் என பரந்த(????) நோக்கோடு தொடர்ந்து, நீங்கள் வாழ்விழந்தாலும் அவர்களை வாழவைக்கும் பரந்த நோக்கோடு புகைப்பிடியுங்கள்,

விரைவில், நீங்களும் மருத்துவமனையை நாடலாம் எனும் நம்பிக்கையோடு தொடர்ந்து புகை பிடியுங்கள், முடிந்தால் வீட்டில் எல்லொருடன் இருக்கும் பொழுது, துணைவியார் தாய்மையடைந்திருக்கும் பொழுது, சிறிது வளர்ந்த உங்கள் குழந்தைகள் உங்களை பிரமித்து பார்த்துக் கொன்டிருக்கும் பொழுது, வெண்சுருட்டைப் புகைத்து புகையை பல வளையங்களாக விடுவது, கடல் நாகம் போல புஸ்ஸு புஸ்ஸு என புகையை வெளிவிடுவது போன்ற சாகசங்களை அவர்களுக்கு செய்து காட்டி அவர்களையும் உங்கள் பாதைக்கு அழைத்து வந்து புகைப்பதை குடும்பத்தின் பாரம்பரியமாக்கிவிடுங்கள்,

புகைப்பதால் ஏதேனும் நோய் வந்து விட்டது தெரிந்தால், அதை மிகச் சர்வ சாதாரண‌மாக எடுத்துக்கொள்ளுங்கள், கவலை வந்தால், மேலும் புகைப்பதை அதிக‌ப்படுத்தி நோயை விரிவுபடுத்திக்கொள்ளலாம், பின்னர் "எல்லாம் தலைவிதி" "நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என வேதாந்தம் பேசவும் கண்டிப்பாக தங்களை தயார் படுத்திக் கொள்ளவும்! கூடிய விரைவில் இந்த வசனங்கள் நிச்சயம் எதிர்கால வாழ்வுக்கு தேவைப்படும்!

மேலும், புகைப்பதானால் ஏற்படும் தீமைகளை ஒரு போதும் உணர்ந்து திருந்த நினைத்துவிடாதீர்கள்! அப்படிச் செய்வதால், உங்கள் வாழ்வு ஆரோக்கிய ரீதியிலும், சுகாதார ரீதியிலும் மேம்படும் ஒரு அபாயகரமான விளைவுக்கு இட்டுச்சென்றுவிடும், கவனம்!

முடிந்தால் , புகைப்பதன் தீமைகள், பாதிப்புகள், வரக்கூடிய நோய்கள் போன்றவற்றை அடிக்கடி படித்து அலட்சியமாக சிரித்து வையுங்கள், இது உங்கள் மனதில் புகைப்பதன் தீவிரத்தை மேம்படுத்தும்.

அனேகமாக நோய்க்கு முன், உங்கள் முகம் பொழிவிழக்கலாம், கண்கள் குழி விழலாம், விரல் நகங்கள் மஞ்சள் நிறமாகலாம், உங்கள் வாய் பாசிப்பிடித்த கிணற்றைப்போல அழகான கருமை வண்ணத்திற்கு நிறம் மாறலாம்! தங்களின் அழகான வரிசையான் முத்துப்பற்கள் அருவருப்பான நிறச்சிதைவுக்கு ஆளாகலாம், அருகில் நெருங்கினாலே பல வருடங்கள் சுத்தம் செய்யப்படாத சாக்கடை நாற்றம் உங்களிடமிருந்து புறப்படலாம்! அதையெல்லாம் பெரிது படுத்தாதீர்கள், மன உறுதியோடு, செயல்படுங்கள், ஏனென்றால் அதெல்லாம் வெறும் சின்னச் சின்ன தூசுகள் தான், பின்னாளில் பெரிய பெரிய சீள்வடியும் நாற்றப் புண்கலெல்லாம் உங்களுக்காக வரிசையில் காத்திருக்கிருக்கின்றன‌ என்பதை மனதில் வைத்து மலையே அசந்தாலும், மனம் கலங்காது ,உறுதியாக புகைப்பது ஒன்றையே உங்கள் புனித நோக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்,முடிந்தால் சுகாதாரத்துறை வெளியிடும் அந்த பயங்கரமான் புகைப்பதால் ஏற்பட்ட அட்டகாசமான புன்களாலும், இரத்தப் புற்றுகளாலும் முற்றாக சிதைந்த உருவப் புகைப்படங்களை, வாங்கி அனுதினமும் பார்த்து, நாளை நம் கதியும் இதுதான் என மனதைத் தேற்றி கொள்ளுங்கள்! யார் தடுத்தாலும் கேட்காதீர்கள் (நீங்கல்லாம் சிங்கம்ல!, யார் பேச்சையும் கேட்க மாட்டிங்க) ஆனா பாருங்க இதுவரைக்கும் எந்த சிங்கமும் சிகரெட் பிடிச்சி செத்ததா, வரலாறு, விஞ்ஞானம், பூகோளம் எதுவுமே இல்ல! (அப்படின்னு நான் சொல்ல மாட்டேன், இந்த சமூக ஆர்வலர்கள் சொல்வாங்க, கண்டுக்காதீங்க!)

சரி சரி விட்டால் , புகைப்பதன் அருமை பெருமைகளை விடிய விடியப் பேசலாம், அவ்வளவு அற்புதமான விக்ஷயம் அது, ஆனாலும் பாருங்க, நான் உங்களுக்காக வரிந்து கட்டிக் கொன்டு இப்படி வாதாடியதற்கே எவ்வளவு கண்டனங்களை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை! அதனால் உங்களுக்கு மீண்டும் ஒரு சபாக்ஷ் சொல்லி விடைபெறுகிறேன். கூடிய விரைவில், மதுப்பழக்கம், போதைப்பழக்கம் போன்றவற்றை முற்றிலும் மாறான கண்ணோட்டத்தோடு, அவ்ர்களுக்கு சார்பாக பல பதிவுகள் எழுதுலாம் எனும் எண்ண்த்தோடு விடைபெறுகிறேன், நல்லாருங்கப்பா!

எச்சரிக்கை : நல்ல சமூக ஆர்வலரும், பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரியுமாகிய அண்ணன் திரு.சுப்பாராவ் அவர்கள் http://nvsubbarow.blogspot.com/2009/06/blog-post.html தமது வலைப்பதிவில் புகைப்பதனால் ஏற்படும் தீமைகளைப்பற்றி அக்கு வேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருப்பதால் அதைப் படிப்பவர்கள் புகைப்பதன் தீமையை உணர்ந்து திருந்திவிடும் அபாயம் அதிகமாக இருக்கிறது, எனவே புகைபிடிக்கும் நண்பர்களும் ஏனைய பிற அன்பர்களும் அந்தப் பகுதிக்குச் சென்று அதை படித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், (நல்லதுங்க நான் போயிட்டு வரேன்)

Thursday, July 16, 2009

குடி கெடுக்கும் குடிக்கும் பழக்கம்

(தலைப்பைப் பார்த்து அடடா! இது ஏதோ மதுபானப்பிரச்சாரம் என இங்கிருந்து ஓடிபோக நினைக்கும் வாசகப் பெருமக்களுக்கு, பொறுமை, பொறுமை ஏனிந்த அவசரம்?)

நீங்கள் நினைப்பது தவறு! ஏனென்று கேட்கிறீர்களா, பதிலை இந்த பதிவில் ஒளித்து வைத்திருக்கிறேன் நீங்களே கண்டுபிடியுங்கள்,

சுத்தம் சுகம் தரும், சோம்பலால் நம் நலம் கெடும்!

இதென்ன, ஒன்றாம் வகுப்பு பாடமெல்லாம் இங்கே நடத்திக்கிட்டு?, இது கூடவா எங்களுக்குத் தெரியாது என நீங்கள் பொங்கி எழுவது புரிகிறது, இருந்தாலும் நாம் இன்று பேசப்போகும் விக்ஷயத்திற்கு இதை சொல்லியே ஆகவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறேன் என்பதை அடக்கத்தோடு கூறி ஆரம்பிக்கிறேன்.

குளிர்பானங்கள்! ஆம் டின்களில் அடைக்கப்பட்டு அழகழகாய் லேபில்கள் ஒட்டி பல ஆயிரக்கணக்கான பணத்தை விளம்பரங்களில் விழுங்கி சந்தைப்படுத்தப்படுகிறதே அதே குளிர்பானங்கள்தான் இன்று நமது பதிவின் நாயகமாவது!

இந்த குளிர்பானங்கள் இளையோர் முதல் மூத்தோர் வரை பல்லோராலும் விரும்பி சுவைக்கப்படுவது யாவரும் அறிந்ததே, அதன் விளம்பரங்களும் அத்தனை அருமையாய் அமைந்திருக்கும் பாருங்கள், எப்படி விளக்கிச் சொல்வதென்றே தெரியவில்லை! சில சமயங்களில் திரையிடப்படும் படம் அல்லது நிகழ்வை விட இந்த குளிர்பான விளம்பரங்களே சூப்பர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

உதாரணத்திற்கு சில காலங்களுக்கு முன் திரையிடப்பட்ட‌ ஒரு விளம்பரம்,
அதில், வெயில் மண்டையைப் பிளக்கும், ஒரு வாலிபன் காய்ந்து கருவாடாகி, நொந்து நூலாகி, நாவெல்லாம் வரண்டு பாலைவன அகதி போல பரிதாபாகக் காட்சியளிக்க, அவன் கண்ணில் படும் அந்த குளிர்பான‌ம், அப்படியே அதை லாவகமாகக் கவ்வி வாயில் வைத்து அருந்துவார் பாருங்கள், அந்தக் காட்சியில் ஒட்டுமொத்த சீதோக்ஷ்ணமும் மாறி அங்கே மும்மாரி பொழிந்து, அந்த ஹீரோ அதில் சிலிர்த்து நனைய, அவ்வளவு அழகு போங்கள்! பார்த்தவுடன் நமக்கும் உள்ளமெல்லாம் மழை பொழிய அதை அப்பொழுதே வாங்கி அதேபோல சுவைத்து மகிழும் அடக்கமுடியாத ஆசை எழும், அருந்தும்போது அளவிலா ஆனந்தம் சொல்லி மாளாத சுகம் (சில காலங்களுக்குப்பிற‌கு அது தரப்போகும் உபாதைகளையும்‍, அது ஒரு விளம்பர யுக்தி என்பதையும் மறந்து, இதற்கும் விரைவில் ஒரு பதிவு போடுவோம்ல!)

அதுசரி, அதெப்படி இவ்வளவு விலாவாரியான அனுபவ விஸ்தரிப்புக்கள் எனக் கேட்பவர்களுக்கு, படிக்கும் காலங்களில் கோக்கும் கையுமாக திரிந்த காலம் ஒன்று இருந்தது, முன்னேற்பாடாக புத்தகப்பையிலும் ஒன்று, ஆப‌த்து, அவசரத்திற்கு கைவசம் எப்போதும் இருக்கும், என்பதையெல்லாம் நான் சொல்லவே மாட்டேன்(மீறிக் கேட்டால், அதைப்பற்றியும் ஒரு பதிவு எழுதுவேன் என பயமுறுத்துவேன்!)

இதுபோன்ற காட்சிகளுக்கு மயங்கும் மனிதர்கள் செய்வது என்ன? காசைக் கரியாக்கி, லாவகமாக வாங்கிக் குடித்து அதே லாவகத்தோடு பல பின்விளைவுகளையும் வாங்கி..என்னத்தே சொல்லி.. ஒரே சோகம் போங்க!

சரி உடல் நலத்துக்கு ஊறு விளைவித்து, பலவித நோய்களுக்கு அஸ்த்திவாரமாக விளங்கும் இந்த இந்த சுவைபான‌ங்களை அருந்துவதற்கு முன்பாக ஒருமுறை கழுவுவது உயிர்காக்கும் விடயமாகப் பேசப்படுகிற‌து இப்போழுது, காரணம்....

மேற்கத்திய நாடு ஒன்றில் ஒரு பெண்மணி, நல்ல வசதி விசைப்படகு ஒன்றில் உல்லாசப்பயணம் மேற்கொள்ள விரும்பினார் தனது பிரயாணத்திற்கு தேவையான சகல வித முன்னேற்பாடுகளோடு ஒரு பெட்டி டின் சுவை பானங்களையும் வாங்கி வைத்துக் கொன்டார், மறுநாள் கொன்டாடப்போகும் உல்லாச பயணத்தை மனதில் அசை போட்டவாறே அன்றைய அவரது இரவு கனவுகளோடு கழிந்தது. ஆனால் மறுநாள் பொழுது ஒரு பயங்கரத்தைச்சுமந்து மலர்ந்திருப்பது யாருக்குமே புலப்படவில்லை.

ப‌ய‌ண‌ம் தொட‌ர்ந்த‌து, விசைப்ப‌ட‌கு காற்றைக்கிழித்து, கடலலைகளைக் பிளந்தவாரே ப‌ய‌ண‌த்தைத் துவ‌ங்கிய‌து. ந‌ண்ப‌ர்க‌ள் கூத்து கும்மாள‌முமாக‌ உல்லாச‌ப்ப‌ய‌ண‌த்தின் உச்ச‌த்தில், உணவுகளும் பானங்களும் உற்சாகத்திற்கு கைகொடுக்க நம்ம கதாநாயகியும் ஒரு டின் சுவை நீரை அருந்தியவாரே அந்த உல்லாச உற்சாகத்தில் மிதந்திருந்தாள், அப்போது யாருமே எதிர்பார வண்ணம்....

அவள் மென்மஞ்சள் மேனி தீயினால் சுட்டதைப்போல் சிவப்பாக நிறம் மாற, முகம் அளவிளாத வேதனையை வெளிக்காட்ட, இரு கைகளாலும் தன் தலையைப் பற்றிய வண்ணம் கீழே சாய, அவள் வாயிலிருந்து மிச்ச பானம் உதிர்ந்து வழிந்தது!, சரிந்து விழுந்த கையிலிருந்து, விடுபட்டுப் புரண்டது அந்த டின் சுவைபானம்!

உற்சாக‌ம் வ‌டிந்து, உல்லாச‌ம் க‌ளைய‌, கூட்ட‌ம் அதிர்ந்து அவ‌ளை அள்ளிக்கொன்டு விரை‌‌ந்தது அருகாமையிலிருந்த மருத்துவமனைக்கு, முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி காரணம் அறியுமுன்னே அந்தப் பெண் மரணத்தின் மடியில் விழுந்தாள்!

உயிரே போச்சு, பிற‌கென்ன‌ பேச்சு, என்கிற‌ வேதா‌ந்தம் எல்லாம் அங்கே செல்லாதல்லவா? எற்கனவே தொடர்ந்திருந்த பரிசோதனைகள் வழி உண்மை கண்டறியப்பட்டது, என்ன காரணம் தெரியுமா?

அந்தப் பெண்மணி அருந்திய அந்த டின் சுவைபானம், எலியின் சிறுநீரால் மாசு பட்டிருக்கிறது, அதை கடைகளில் இருந்து, வாங்கி வந்து, கழுவாமல் வாயில் வைத்துக்குடித்து, மரணமடந்திருக்கிறார் அந்தப் பெண்மணி!, எலியின் எச்சம் மிகவும் ந‌ச்சுத்தன்மை வாய்ந்தது, எலியால் "பிளேக்" எனும் கொடிய நோய் பரவுவதும் அனைவரும் அறிந்த விடயமே.

எப்பொழுதும் "பேக்ஷன்" ஸ்டைலு" என்ற பெயரில் டின் சுவை பானங்களை தண்ணீரில் கழுவாமல் அப்படியே அருந்துவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும், உயிர் எவ்வளவு விலைமதிப்பானது, அதை கேவலம் இதுபோன்ற அல்ப விடயங்களில் பலியிட்டு விடக்கூடாது.

இது போன்ற சோம்பல் குணங்களை முற்றாக ஒழித்து எந்த வித உணவுப்பொருளாயினும் அதை சுத்தப்படுத்தி உட்கொள்ளும் நல்ல பழக்கத்தையே கைக்கொள்தல் சிறப்பு! சிறு குழந்தைகளுக்கும் இது பொன்ற விட‌யங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் அவசியம்.



இதையெல்லாம் நோக்குங்கால் "உணவே மருந்து என்ற நிலைமாறி இன்று உண‌வே விக்ஷமாகிவிட்டதே எனும் வேதனையே நமக்கு மிஞ்சுகிறது

சரி வரட்டுங்களா(இந்த பதிவை வெளியிட்டு குளிர்பானக் கம்பெனிகளின் ஒட்டு மொத்த வயிற்றெரிச்சலையும் வாங்கியாச்சு), கூடிய விரைவில் இதேபோன்று உங்களுக்கு தெரியவே தெரியாத புது புது தகவல்களோடு வருவேன் எனக்கூறி, விடைபெறுகிறேன். நன்றி, நன்றி, நன்றி(இங்கென்ன கட்சிக்கூட்டமா நடக்குது?)

Wednesday, July 15, 2009

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

<
முக்கிய அறிவிப்பு : (இப்பதிவை எக்காரணம் கொன்டும் அலுவலகத்திலோ வேலை நேரத்திலோ படிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம், மீறினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொருப்பேற்காது என்பதையும் முன்கூட்டியே அறிவிக்கிறோம்)


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே,
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..

ஆகா என்ன‌ ஒரு தேமதுர கானம்... சுசிலாம்மா தானே அது?, என்னவொரு இனிமை குழைவு... அப்படியே தேனில் தொட்ட பலாச்சுளையாட்டம் என்னே இனிமை என்னே இனிமை... சரி சரி விக்ஷயத்திற்கு வருவோம்.. இந்தப்பாடலின் உட்கருத்து என்ன? அன்பு என்று சொல்வீர்கள், ஆனால் அதையும் தாண்டிய ஒரு புனிதமான காரணம் உண்டு அது:

தூக்கம்!!!!

உண்மைதான் நல்ல தூக்கம்தான் நல்ல வாழ்வுக்கு அடிப்படை.நம்புகிறீர்கள், இல்லையா ? சரி வாருங்கள் அந்த நல்ல தூக்கத்தை அடைவது எப்படி என்பது விஞ்ஞானப்பூர்வமாக விளக்கப்பட்டிருப்பதைக் காண

வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும், போர்க்களம் மாறலாம், போர்கள்தான் தீருமா? உண்மைதான் சேயாக ஐயிரு திங்கள் சுமந்து ஈன்று புறம் தந்த அன்புத்தாயின் மடி சாய்ந்து வாழ்வு துவங்கி, பின்னர் ஆடி அடங்கி, அங்கமெல்லாம் ஒடுங்கி பூமித்தாயின் மடிசேரும் வரை வாழ்வென்பது ஒரு போர்க்களம்தான்!
இந்த வாழ்க்கை போர்க்களத்தை வாளும் வேலும் கொன்டு வென்று விட முடியாது, அறிவுக்கூர்மையோடு, ஆரோக்கியச் சிறப்பும் வாய்த்தால்தான் இந்த வாழ்க்கைப் போராட்டங்களின் பல்முனைத் தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.
அறிவுக்கூர்மைக்கு பட்டறிவும் படிப்பறிவும் ஆதாரம் என்பதை அனைவரும் அறிவர், ஆனால் ஆரோக்கியச் சிறப்புக்கு?

சுவாசிக்க தூய்மையான காற்று, சுத்தமான நீர்ப்புழக்கம், உடலுக்குத்தேவையான் சத்துக்கள் அனைத்தும் அடங்கிய சமசீர் ஆகாரம் இவற்றோடு அதி முக்கியமாய் ஆரோக்கிய உடலுக்கு தேவை ஓய்வு! ஓய்வின்றி உழைக்கும் போழுது உடலும், மூளையும் எளிதில் உளைச்சலுக்கு உள்ளாகும், கூடவே நாம் கூர்மையாக சிந்திக்கவும் செயல்படவும் இயலாதபடி தடுத்துவிடும். இதனால் செயல் திறன்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. இது மட்டுமன்றி இருதயம், இரத்தக்குழாய்கள், மூச்சு உறுப்புக்கள் அனைத்தும் பாதிப்பை எதிர்கொள்கின்றன.
இத்தகைய பிரச்சனைகளிலிருந்து உடலைத் தற்காக்கும் ஓய்வென்று வரும்பொழுது உறக்கம் மிகச்சிறந்த ஓய்வு நிவாரணியாக‌ விளங்குகிறது,

சரித்திரத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் குறைந்தபட்சம் 9 மணி நேரம் உறங்கியதாகக் அறியவருகிறது, ஆனால் இந்த நவீன யுகத்தில் ச‌ராசரி மனிதன் 7 மணி நேரம் உறங்குவதே அதிசயமாகிக்கொன்டுவருகிறது.

இத்தகைய அருமையான ஓய்வை வாழ்வில் இழப்பவர்கள் எரிச்சல், பொறுமை இன்மை, கோபம், பதட்டம், ஞாபக மறதி கூடவே செயல் திறன் குறைவு போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர்.
ந‌ம்மில் பலர் கும்பகர்ணனுக்கே பாடம் நடத்தக்கூடிய அளவு தூங்குவதில் திறமை? பெற்றிருந்தாலும் வெகு சிலருக்கு தூக்கம் வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது , அதற்கு பெரும்பாலும் கவலை, வயிற்றுக்கோளாறு, நோய், சரியான படுக்கை அமையாமை, புதிய இடம்/சூழ்நிலை, பயம் இவற்றோடு முதுமை போன்றவைகள் காரணிகளாக‌ அமைந்து விடுகின்றன‌.

இத்தகையோரை மனதில் கொன்டு வடிக்கப்பட்ட பதிவே இதுவாகும், சரி இப்போழுது இயல்பாகவும், அமைதியாகவும் நித்திராதேவியை (சத்தியமா தூக்கம்தாங்க!) மடிசாய சில எளிய வழிமுறைகள் :‍




1. நல்ல உடற்பயிற்சி, மாலை வேளைகளில் மெது நடை மேற்கொள்வது சிறப்பு,(உடற்பயிற்சியாளர்கள் இதை "டெல்பி தூக்கம்" என்றழைப்பர்), இதில் நரம்புகள் தளர்ந்து இயல்பான தூக்கத்திற்கு இட்டுச்செல்கிறது.

காற்றோட்டம் நிறைந்த இடங்களில் சுவாசப் பயிற்சி செய்வதும் இயல்பு நிலைத் தூக்கத்திற்கு உதவும்.

2.காப்பி, சாக்லேட், சில மென்மையான பானங்கள்(soft drinks), மூலிகை பானங்கள் போன்றவற்றில் காப்பிப் பொருள்(caffeine) அமைந்துள்ளன, எனவே பகல் வேளைகளில் இவற்றை ஓரங்கட்டுவது இரவுத்தூக்கம் இனிதே தொடர வழி வகுக்கும்.

உடல்வலியைக் குறைக்க உட் கொள்ளும் வலி நிவாரணிகளும் தூக்கத்திற்கு சத்ருவாக மாறிவிடுவதுண்டு.

3.கவலையை மறந்து தூங்க சிலர் தண்ணியடிப்பதுண்டு( பச்சைத்தண்ணி இல்லைங்க, போதைத்தண்ணி பட்டை சாராயம், பீர் பிராந்தியென)அது ஏற்படுத்தும் மயக்க/போதை நிலை தூங்கும் உணர்வை ஏற்படுத்தினாலும்,மது மயக்கம் தணிந்த பின் தெளிவாகத் தூங்க முடியாது. எனவே வேண்டாமே அந்தத் தீயப் பழக்கம்!

4.புகைப்பிடிப்பது, வெண்சுருட்டு, சுருட்டு, பீடி போன்றவற்றின் பயன்பாடுகளும் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு அதிகரிப்பு என அபத்தங்களை ஏற்படுத்தி தூக்கம் கெடுக்கும்வெண்சுருட்டுப் பழ‌க்கத்தைக் கைவிட்டவர்கள் அமைதியாகத் தூங்க முடிவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. எனவே வேண்டாமே இந்த ஆறாவது விரல்!

5. உணவு, ஆம் எளிதில் சீரணமாகக்கூடிய உணவையே இரவில் உட்கொள்ள வேண்டும், ஏழு அல்லது ஏழரைக்குள் உணவுண்டுவிட்டு இரவு 10க்கு படுக்கை சென்றால் தூக்கத்தில் நோ பிரச்சனை!.

6.தூங்கப்போகுமுன் ஒரு கப் சூடான பால் அருந்துங்கள், அதிலுள்ள அமினோ அமிலப் பொருள் சேரோடோனின் மூலம் முளையை அமைதிப் படுத்தி தூக்கத்திற்கு வரவேற்பு தருவதாகத் தகவல்.

7.தூக்க ம‌ருந்துகளுக்கு ஒரு பை பை சொல்லிவிடுங்கள், நாளடைவில் அதன் சக்தி குறைந்து, மாத்திரையை நிறுத்தினாலும் தூக்கம் பெரிதும் பாதிப்புறும். எதற்கு அந்த வம்பு, பேசாமல் உபயோகிக்காமலேயே விட்டு விடலாம்.

8.படுக்கை அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கவேண்டும், அது நல்ல தூக்கத்துக்கு வகை செய்யும்.

9."கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு" என்ற பாடல் வரிகள் படி, தூங்குவதற்கு முன் எல்லாக் கவலைகளையும் மூட்டை கட்டி தூக்கி தூர எறிந்து விடுங்கள்! இனிமையான மெல்லிசை பாடல்களை அசைபோட்டுக்கொன்டு அமைதியாகத் தூங்குங்கள். இவை அத்தனையும் தவிர்த்து, ஒரு சூப்பர் வழி உள்ளது அது என்னவென்று பார்ப்போமா?

உடம்பில் சில இடங்களில் அழுத்தம் கொடுப்பதன் வழி தூக்கத்தை வரவழைப்பது(அக்குபிரக்ஷர்), அதற்குரிய இடங்கள் மனிக்கட்டிலும், முகத்திலும் உள்ளன‌.

முதலாவது : மணிக்கட்டின் உட்புறம் உள்ளது. கட்டை விரலிலிருந்து விலகி உள்ள மறுபுறத்தில் இது இருக்கிறது. இந்த இடத்தில் சில நிமிடங்கள் அழுத்திக் கொடுத்து பிறகு விட்டு விடவும்.

இரண்டாவது : புற‌ங்கையில் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே அமைந்துள்ளது. மற்றொரு கையின் கட்டை விரலால் இந்த இடத்தை அழுத்திப் பிடித்து விட வேண்டும்.

மூன்றாவது : நெற்றிப்பொட்டில் இரு புருவங்களுக்கும் வெளி ஓரங்களில் இருக்கிரது. இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களால் அழுத்திப் பிடித்து விட வேண்டும்.

தூக்கம் வராத நிலையில் படுக்கையில் புரண்டு கொன்டிருக்கையில் இதில் ஏதவதொன்றைத் தேர்ந்தெடுத்துச் சில நிமிடங்கள் தோடர்ந்து அழுத்தம் கொடுங்கள், அப்புறம் பாருங்களேன், தூக்கம் தூக்கமாய் கனவுலகில் சிறகடித்துப் பறப்பீர்கள்!


முன்னறிவிப்பு : ஏற்கனவே அறிவித்தபடி இந்தப் பதிவை யாரும் அலுவலகத்தில்/வேலை நேரத்தில் படிக்க வேண்டாம், எச்சரிக்கையை மீறிப் பதிவை படித்து, படித்து முடிப்பதற்குள் நீங்கள் தூங்கி விழுந்து, மேலாளரிடம் திட்டு வாங்கி இன்ன பிற‌ கக்ஷ்ட‌ நக்ஷ்டங்களுக்கு ஆளானால் கம்பெனி பொருப்பேற்காது என்பதை ஸ்ட்டிரிக்காக தெரிவித்துக்கொள்கிறோம். (உங்களால்தான் வேலை போனது வேறு வேலை தேடித் தரவும்! என வரும் நேரடிச்சந்திப்புகள், மடல்கள், அஞ்சல்கள் எல்லாம் தடைசெய்யப்படுகின்றன என்பதையும் தெரிவிக்கிறோம்)

விதிவிலக்கு : (ஆஹா, ஓஹோ, அபாரம், அற்புதம் எனும் பாராட்டுப் பிண்ணூட்டங்களும், "ஏழு வருக்ஷமா சரியான தூக்கமே இல்ல , உங்க பதிவ படிச்சேன், முடிக்கறதுக்குள்ள தூங்கிட்டேன் " என்பன போன்ற புகழ்ச்சியுரைக‌ளும் எப்பொழுதும் போல வரவேற்கப்படுகின்றன)

பி.கு : மேலும் இதுபோன்ற விஞ்ஞானிகளையே அச்சுறுத்தி வியக்க வைக்கும் விஞ்ஞானப் பதிவுகளோடு விரைவில் உங்களை சந்.தி..க்...(தூங்கிவிட்டேன்)

Tuesday, July 14, 2009

காலாட்டிட்டு தோசை சாப்பிடலாமா?


கண்டிப்பா சாப்பிடக் கூடாதுங்க, ஏன் தெரியுமா? பண்பாடு அல்ல என்று கூறுகிறீர்கள் ஆனால் அது மட்டுமல்ல, பின்னே ? இந்தப் பதிவைக் கொஞ்சம் படிங்க, பிற‌கு புரிஞ்சுக்குவீங்க ஏன் காலாட்டி தோசை சாப்பிடக் கூடாதுன்னு....
கடந்த காலம் கண்முன் விரிகிறது...
பல வித வாழ்க்கைச் சூழல்களில் வாழ்வை அனுபவித்து வாழ்ந்த சிறு பிராயம் அது! இன்றுவரை மறக்கவியலாத, அனுபவித்து மகிழ்ந்த, நெகிழ்ந்த சம்பவங்கள் பல அந்த வாழ்வில், ஹாஸ்யங்களுக்கும் பஞ்சமில்லாத வாழ்வு அது, நவீன வாழ்வில், நான்கு சுவர்களுக்குள் மூழ்கி மறைந்துவிடும் இன்றைய வாழ்வு (பின்)அடைவுநிலை வாழ்வல்ல அது, இயற்கையின் ஒரு பகுதியாக வாழ்ந்து, பறந்து திரிந்த காலம், அது ஒரு வசந்த காலம்!

சரி நம் நம் கதைக்கு வருவோம். என் சிறு வயதில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவம்! என் வாழ்வில் தோசையைக் கண்டாலே துண்டைக் காணோம், துணியை காணோம் என எனை தூர ஓடச்செய்த துயரச் சம்பவம்! தோசை என்றாலே நான் ஏன் இப்படி பயந்து நடுங்குகிறேன் எனும் ரகசியம் புரியாதவர்களுக்கு, நான் கண்ட/அனுபவித்த‌ அந்த பயங்கரக் கதையைச் சொல்கிறேன், நீங்களும் கேளுங்கள்...

சில கால‌ங்களுக்கு முன்பு, ஒரு பட்டணம், அந்தப் பட்டணத்தில், ஒரு ஒதுக்குப்புறமான குடியிருப்பு, அங்கே இயற்கை அழகெல்லாம் எடுத்துச்சொல்லும்படி அவ்வளவு எடுப்பில்லை, அங்கும் இங்குமாய் திட்டுத்திட்டாய் சில குடியிருப்புகள், அதில் தற்காலிகமாக ஒரு வாடகை வீட்டில் எங்கள் குடும்பம், அக்கம் பக்கமெல்லாம் நிறைய குடித்தனங்கள், அதில் ஏழ்மையும் நேசமும் பிண்ணிப் பிணைந்த நம் இனிய தமிழ் மக்கள்!
சம்பவம் நடந்த தினத்தன்று, பக்கத்து வீட்டில் ஒரு துக்க காரியம், ஆம், பக்கத்து வீட்டுத்தாத்தா காலமாகி விட்டிருந்தார், அன்றைக்கு மறுநாள் அவருக்கு திதி, அவர்கள் வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். பக்கத்து வீடான எங்கள் வீட்டில்தான் அவர்களுக்கான சமையல் வேலைகள் மும்முறமாக நடந்து கொன்டிருக்கின்றன..., இயற்கையிலேயெ நன்றாக சமைக்கக்கூடிய என் தாயும் மேலும் சில உள்ளூர் செஃபுகளும் சேர்ந்து அதிரடியாகத் தங்கள் நளபாகத் திறமையை காட்டிக்கொன்டிருந்தனர். ஒரு வயதான அம்மணி தலைமைச் செஃபாக, ஆட்களை விரட்டி வேலை வாங்கிக் கொன்டிருந்தார்.

சமையல் பொருட்களை மேலே கீழேயெல்லாம்கொட்டி சமையலறையை நாறடித்து, ஊர்க்கதைகள் எல்லாம் பேசி ஒரு வழியாக சமையல் வேலைகள் தொடர்ந்து சில மணி நேரங்கள் கழித்து முடிவுக்கு வந்தன, முக்கியமான ஒன்றைத்தவிர, அது இரவு தங்குபவர்களுக்கான காலை உணவு!, அதற்கான ஏற்பாடுகள் துவங்கின‌, ஏற்கனவே ஊறவைத்திருந்த அரிசியை அரைத்து தோசை மாவெல்லாம் ஒரு பெரிய அண்டாவில் கரைத்து, உப்பெல்லாம் சேர்த்து...
கடைசியாக நம் தலைமை செஃபின் திறமைக்கு சவாலாக அமைந்தது ஒரு விக்ஷயம், அதாவது தோசை மாவை புளிக்க வைக்க தயிர், கள், யீஸ், ஈபு(அம்மா இல்லைங்க, உணவுகளை புளிக்க வைக்கப் பயன்படும் ஒரு வித பொருள்) எதுவுமே கிடைக்கவில்லை, மணி வேறு இரவு 10 ஐத் தாண்டிவிட்டது! கடையெல்லாம் மூடியாச்சு, இரவலும் எங்கும் கிடைககவில்லை!

தனது மூளையைக் கசக்கிப் பிழிந்தார் தலைமை செஃப், ஆ! ஒரு வழி கண்டு பிடித்தார், விடு விடென்று ஓடினார் குளியலறைக்கு, அங்கிருந்த அவரது சிக்ஷ்யப்பிள்ளைகள் அவருக்கு ஏதோ அவசரம் என நினைத்துக் கொன்டனர், ஆனால்.......

அவர் தனது கால்களை அலசிக்கொன்டு வெளியே வந்தார், தோளில் போட்டிருந்த வியர்வைத்துடைக்கும் துணியால் கால்களைத் துடைத்தார், பிற‌கு.....

அந்த தோசை மாவு அண்டாவை நெருங்கி, தனது ஒரு காலை(!???)அதனுள் விட்டுத்துளாவத் தொடங்கினார், உவ்வேக்.... (மாவை புளிக்க வைக்கும் குறுக்கு வழியாம், கடவுளே!!!)

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை, என் அம்மாவிற்கு வாந்தி வராத குறை!, அவரும் அவர் தோழிகளும் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொன்டனர். எதுவுமே நடக்காதது போல சில நிமிடங்கள் தன் முட்டிவரை கால் விட்டுத் துளாவி விட்டு, அண்டாவை மூடிவைத்துவிட்டு காலை கழுவிக்கொன்டார் நம்ம தலைமை செஃபு அம்மணி!

மூடி வைத்த அந்த மானங்கெட்ட மாவும் நீர்த்துப்போகாமல் மறுநாள் புளித்து, அதை அடுக்கடுக்காய் தோசைகள் வார்த்து, அதை அனைவரும் ருசித்துச் சாப்பிட்டு, மிகப்பெரிய தமாக்ஷ் போங்க, ஆனால் கால் விட்டு ஆட்டி மாவைப் புளிக்க வைத்த ம்ர்மம் யாருக்குமே தெரியாது, என் அம்மா மற்றும் அவர் தோழிகள் சிலரைத்தவிர்த்து..., தெரிந்தவர்கள் தோசை இருந்த பக்கமே போகவில்லை, அவர்கள் குடும்பத்தினரையும் சேர்த்து...

இப்போது சொல்லுங்கள், இந்தத் தோசையை சாப்பிட அதன் ரகசியம் தெரிந்த யாருக்காவது மனம் வருமா?, ஆனால் இந்த ரகசியம் தெரியாத ஒரு கூட்டம் அதை வெளுத்துத் தள்ளியிருக்கிறதே, பாவம்! என் அம்மா அந்த தோசையை எங்கள் யாரையும் வாயில் வைக்க விடவில்லை. இப்போது நினைத்தாலும் குமட்டிக்கொன்டு வருகிறது..

கடவுளே, அன்றிலிருந்து இன்றுவரை என் தாய் ஒருவரைத்தவிர வேறு யார் வீட்டில்/எந்த புகழ் பெற்ற உண்வகமானாலும் சரி அங்கே தோசை, அதன் தம்பி இட்டிலி என எதையும் தொடமாட்டேன்! அதிகம் வற்புறுத்தினாலும் வயிற்று வலி அல்லது சாப்பிட்டாச்சு என பயங்கரமாய் நடித்து தப்பித்து விடுவேன்....

இப்போது சொல்லுங்கள் காலாட்டி தோசை சாப்பிடலாமா?

பி.கு :
பதிவுலகப் பெருமக்களுக்கு : இந்தச் சம்பவத்தில் வந்த கதாபாத்திரங்கள் யாவரும் உண்மையில் வாழ்ந்த, வாழ்ந்துகொன்டிருக்கின்ற மனிதர்களேயன்றி கற்பனையல்ல!

தமிழ ஆர்வலர்களுக்கு மட்டும் : இந்தப் பதிவு எந்த உள் நோக்கம் வெளி நோக்கம் ஏதும் இன்றி உண்மையையே அடிப்படையாகக் கொண்டு பதிவிடப்படுகிற‌து! தமிழ் உணவுகளை மட்டம் தட்ட கே.எப்.சி, மெக் டோனால்ட், பிஸ்ஸா மற்றும் பல பிரபல உணவுக் கம்பெனிகளிடம் கைகோர்த்து கையூட்டு வாங்கிக்கொன்டு இட்டுக்கட்டி எழுதப்பட்ட பொய்ப்பிரச்சாரம் அல்ல, அல்ல, அல்ல...

எல்லோருக்கும் : மேலும் இதுபோன்ற அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதி பயங்கரமான உண்மைச் சம்பவங்களோடு விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். ‌

Friday, July 10, 2009

மீ(மா)ண்ட சொர்க்கம்















அன்றைய பொழுது, எல்லா நாளையும் போல எழிலாக‌ விடியவில்லை, முதல் நாள் பெய்த மழையில் பூமி நனைந்து, காலைத்தென்றல் ஏகத்துக்கும் குளிரை வாரியிரைத்த வண்ணம் அலைமோதிக் கொன்டிருக்க, கண்காணும் தூரம் வரை கதிரவனைக் காணவில்லை, எங்கே, எந்த மூலையில், எந்த மேகத்தை இழுத்துப்போர்த்திக்கொன்டு தூங்குகிறானோ, என்னவோ! சோப்புப்போட்டு அலம்பியதைப்போல் வானம் சுத்தமாக! ஆங்காங்கே பஞ்சுக்குவியலாய் சிறுமேகங்கள் ...


நம் நாதன் சார், சோம்பல் முறித்து விரைந்தெழுந்தார், தன் காலைக் கடன்கள் முடித்து, பள்ளிக்கூடம் செல்ல தயாரானார், பசியாரையாக சுடச்சுட தோசையும், முதல் நா‌ள் குழம்பும், மனைவி அமிர்தத்தின் கைப்பக்குவத்தை வியந்தவாரே உணவுண்டார், அந்த மகிழ்ச்சியோடு, கூடிய விரைவில் வேலையைத் துறந்து விடவேண்டும், அதன் பின்னர், வாழ்க்கையே சொர்க்கம்தான்..., மனது ஆரவாரமிட்டது.


இருக்காதா பின்னே, நம்ம நாதன் சார் அவரோட இளமைக்காலத்திலேயே ஆசிரியர் பணியைத் துவங்கியவர், பள்ளியும், பள்ளிப்பிள்ளைகளும் அவர் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டிருந்தன, போதாக்குறைக்கு பணி ஓய்வு பெற்ற பின்பும், இன்று வரை தனியார் பள்ளியொன்றின் ஆசிரியர்தான்..., எனவேதான் அவர் மனது ஒரு மாற்றத்தை நாடி ஓய்வு தேடியது...


மழைவிட்டும் தூவானம் விடவில்லை போல, முற்றத்தில் மலர்ந்த ஊசிமல்லிகைகள் பனித்துளியோடு மழைத்துளிகளையும் வடித்துக்கொன்டிருக்க, தனது மோட்டார், யமாஹாவில் கிளம்பினார் நாதன் சார்... அவர் கண்பார்வையிலிருந்து மறையும் வரை காத்திருந்து வழியனுப்பினார் அவர் துணையவியார்.


நாதன் சார் நிதானமாகவே சாலையில் தமது பயணத்தை தொடர்ந்து வர..., அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கார்கள், மோட்டார்கள் என அவரை கடந்து சென்று கொன்டிருந்தன‌, தமது பணியிடத்தை அடைய இன்னும் சிறிது தூரமே, அந்த மேட்டுச்சாலயைத் தாண்டி சிறிது தூர வளைவில் தொடர்ந்தால் அவர் பள்ளியை அடைந்து விடலாம். மேட்டுச்சாலையில் அவர் யமாஹா வழுக்கிக்கொன்டு ஓட, அந்த சாலை வளைவில் லாவகமாய் திருப்பி சாலையைக்கடக்க, பாதி கூட கடக்கவில்லை, பாதையை... டமார்... தனக்குக்கீழே பூமி விலகி, அந்தரத்தில் தூக்கியெறியப்பட்டு மீண்டும் ஒரு ட்மார்...,





கண்கள் இருட்டிக்கொன்டு வர.., மூடிய கண்களில் மின்மினிகள் பறந்தன, லேசாக உணர்வு திரும்பி விழிக்க, தன் உடல் ஒரு காரின் முன்பகுதியை உடைத்துக்கொன்டு உள்ளே இடுப்புவரை, பகீரதப்பிரயத்தனமாய் மேலேழும்பி சுதாரிக்க, உடலெல்லாம் ஒரே இரத்தம், இரத்தம் தந்த பீதியில் கண்கள் மேலும் இருண்டு வர, மெல்ல மெல்ல தன் சுயமிழந்து மயக்கத்தின் மடியில் தலை சாய்கிறார் நாதன் சார்.


அப்புறமென்ன, கூட்டம் கூடி சில நல்ல உல்ளங்கள் அவரை அள்ளிக்கொன்டு அருகாமையிலிருந்த உள்ளூர் மருத்துவமனை சேர்க்க, முதலுதவி சிகிச்சை முடிந்து ஆம்புலன்ஸ் ஏற்றி பெரிய மருத்துவமனைக்கு விரைய, கண்கள் சொருகிய‌ மயக்க விளிம்பில், தன்னைச்சுற்றி ஏதேதோ நடக்க, உண‌ர்ந்தும் உண‌ரமுடியாத, செவிப்புலனும், தொடு புலனும் மற்றுமே சுற்றி ந‌டப்பதை சற்றே உணர்த்த, ஏனைய புலன்கள் தங்கள் இயக்கத்தை விபத்தில் தொலத்திருக்க, இருண்ட சூன்யம் பார்வைக்குள் படர்கிறது, யார்..யாரோ, ஏதேதோ, உயரத்தில் இருண்ட உருவங்கள் சுற்றி நிற்பதாகவும்..மெளனத்தை உடைக்கும் பரிச்சயமான சில குரல்களின் சன்னமான ஓசைகள்.. வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே ஒரு மரண யுத்தம்... தொடர்கிறது அவரது பயணம்.....


விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அவரை மருத்துவமனை வாசலில் கக்கிவிட்டு ஓரத்தில் முடங்கிக்கொன்டது, தற்காலிகமாக, ஏற்கனவே முதலுதவி அளிக்கப்பட்டு விட்டது, அதனால் மருத்துவமனையின் விபத்துகளுக்கான பிரிவின் உள்ளில் ஒரு ஓரமாக தள்ளுவண்டியில் வைக்கப்பட்டு ஒரு ஓரத்தில் விடப்படுகிறார் நாதன் சார், மருத்துவமனை மருந்து வாசனை நாசியைத்துளைத்து வயிற்றை என்னவோ செய்தது, ஆனால் நம் நாதன் சார் அதை உணரும் நிலையில் அப்போது இல்லை, காலம் கடந்து கொன்டிருந்தது, தகவல் கிடைத்து, அமிர்தம் அம்மாளும் கண்ணீரும் கம்பலையுமாக ஓடோடி வந்து தன் கணவரைக்கண்டு கண்ணீர் வடித்துக்கொன்டிருந்தார். மகனுக்கும் மகளுக்கும் தகவல் பறந்ததில் அவர்களும் கலங்கிப்போய் விரைந்திருந்தனர் மருத்துவமனைக்கு....


சில மணித்துளிகள் யுகங்களாய் கழிந்த பின்பு அவரை சுமந்த தள்ளுவண்டி ஆபரேசன் தியேட்டரை நோக்கி செலுத்தப்பட்டது, உள்ளே..
குளிர்ப‌த‌ன‌ அறை போன்று சில்லிட்ட அந்த அறையில் ஒரு சில தாதிகள், இரு வேற்றின மருத்துவர்கள், அதில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த(தமிழரல்ல)மருத்துவர். இவரை பரிசோதித்து ச‌ன்ன‌மாய் த‌ங்க‌ளூக்குள் அவ‌ர்க‌ள் பேசிக்கொள்வ‌து, இன்னும் அனாஸ்தீசியா மருந்து செலுத்தி முழு ம‌ய‌க்க‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டாத‌ ந‌ம் நாத‌ன் சார் காதிலும் விழுகிற‌து லேசாக‌..


இந்திய வம்சாவளி ம‌ருத்துவ‌ர் : ஐயோ இவ‌ர‌து வ‌ல‌து கை ம‌னிக்க‌ட்டுக்கு மேலே மிக‌வும் ப‌ல‌மாக‌ சிதை‌ந்துள்ள‌தே!


மற்றோர் மருத்துவன் : இந்த ________களுக்கு வேற வேலையே இல்லை, எப்பப் பார்த்தாலும் மூக்கு முட்ட குடிப்பது, சாலையில் கண்ணை மூடிக்கொன்டு ஓடுவது, எதிரே வரும் வாகனத்தில் மோதி மத்தவனையும் சாகடிப்பது, பேசாம, இந்த ஆளின் கையை துண்டித்து விடலாம், அப்புறம் எப்படி மோட்டார் விட முடியும் என்றான் அந்தப்பாவி மருத்துவன்!


கடவுளே, நாதன் சாருக்கு உடலோடு உயிரும் சோர்ந்து வழிகிறது ஊமையாக...


அந்த மருத்துவன் பேசியதோடு அதற்கான‌‌ ஏற்பாடுகளுக்கு விரைய


அந்த புனண்ணியவான் இன்னொரு மருத்துவர் : பொறு, பொறு இங்கே பார், நாதன் சாருடைய விவரங்கள் கொன்ட மருத்துவ அட்டையை நோட்டமிட்டவாறே இவர் ஒரு ஆசிரியர்! வலது கை எழுதும் கை அல்லவா!, துண்டிக்க வேண்டாம், எவ்வளவு சிரம‌மானாலும் பரவாயில்லை, இணைக்க முயற்சிப்...
அதன் பிறகு மொத்த‌மாய் மயக்கத்தில் விழுந்த நாதன் சார் காதில் வேறெதுவும் விழவில்லை...


உடல் சுற்றுப்புற கதகதப்பை உணர்கிறது, மெலிதாக கண் திற‌க்க, எதிரே சிரித்த முகத்தோடு வெள்ளை ஆடையில் தேவதை, அந்த தேவதை புன்சிரிப்போடு தன் வலது கையைப்பற்றி நறுக்.. ஆ..அம்மா... நொடியில் நெருப்புப் பிழம்பொன்று சர்வ நாடி நரம்புகளிலும் அனலாக தகித்துக்கொன்டு படர, உடலே வலியில் அதிர்ந்து நடுங்க... அந்த மருந்தின் வீரியம் கண்களுக்குள்ளும் படர்ந்து நெருப்பாய் எரிந்தது, அது உடலில் முறிந்த எழும்புகளும், புண்ணாகிச் சிதைந்த சதைக்கோளங்களையும் அழுகிவிடாது காக்கும் வீறீய மருந்தாம்! அந்த ஊசி போடும் தேவதை அதன் பின்னர் ராட்சசியாக மாறிவிட்டாள் நம் நாதன் சார் கண்ணுக்கு! அடகடவுளே,


மீண்டும் சில நொடி கழிந்து கண் திறந்தார் நாதன் சார். சுற்றிலும் மகிழ்ச்சியில் துளிர்த்த முகங்களோடு உறவுகள், மெல்ல தன் மனைவியை கண்களால் அழைக்க அருகே நெருங்கிய மனைவியின் காதில் சன்னமாய் சொல்கிறார், மனைவிக்கு விள‌ங்கவில்லை.... உங்களுக்கு ஏதாவது விளங்கியதா?


2 மாதம் 3 நாள் 10 மணி 30 நிமிடம் 1 1/2 வினாடிகள் கடந்து.....


அங்கே...


அதோ அந்த மேகவர்ண கஞ்சிலில் கம்பீரமாக அமர்ந்து பள்ளிக்கு சென்று கொன்டிருப்பது யார் என்பது தெரிகின்றதா உங்களுக்கு, அட நம்ம நாதன் சார் தாங்க அது, தனது சொர்க்கம் எது என்பதை தெரிந்து கொன்டு அதை நோக்கி போய்க்கொன்டிருக்கிறார் பாருங்க....

Thursday, July 9, 2009

மீ(மா)ண்ட சொர்க்கம்





அது ஒரு அழகான இயற்ர்கைக்காட்சிகள் நிறைந்த, பசுமை வளம் கொழிக்கும் பட்டணம். நம்மவர்கள் நிறைந்த ஊர் , ஆளுங்கட்சி அரசாங்கத்தின் கனிவான பார்வையினால் எல்லா வசதிகளும் அங்கே பஞ்சமில்லாமல் நிறைந்திருந்தன. நல்ல அழகான கோயில்களும், பழகுவதற்கு இனிமையான மனிதர்களும் நிறைந்த ஊர் அது! குறிப்பாக அந்த ஊரின் சாலைகளைப் பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும் அவ்வளவு வளைவு நெளிவு மிகுந்தவை, மலேசியக் கணக்கெடுப்பின் படி பார்த்தால் கண்டிப்பாக அதிகம் விபத்துக்கள் ஏற்படும் முதல் மூன்று இடங்களுக்குள் அந்த ஊர் இடம் பெற்றுவிடும்! அவ்வளவு பிரசித்தம்!


சரி நமது கதைக்கு வருவோம், அவர் பெயர் நாதன், அவர்தான் இன்றைய நமது கதையின் கதாநாயகன், அசப்பில் நம்ம காதல் மன்னன், கமலஹாசன் இல்லைங்க‌, அவருக்கும் முன்னே ஒருத்தர் இந்த நாள் அஜித்குமார் போல அந்த நாளில் அசத்திக்கொன்டிருந்தாரே, அவர்தாங்க நம்ம ஜெமினி கணேசன், சும்மா சொல்லக்கூடாது கோடு வரைந்தாற்போன்ற அவரது மீசையும், மரத்தைச் சுற்றி சுற்றி கதாநாயகிகளோடு ஓடிப்பிடித்து அவர் பாடிய டூயட்டுக்களும், அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதா என்ன? நம்ம நாதனும் அவர்போலவே இருப்பார், ஆனால் என்ன, அவர் நல்ல‌ சிவந்த நிறம், இவர் கொஞ்சூண்டு கருப்பு! அதனாலென்ன, கருப்பு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது, கவிப்பேரரசு கூட பாடல் புனைந்திருக்கிறாரே, கருப்புத்தான் எனக்குப்பிடிச்ச கலருன்னு! அதனால் கவலையில்லை, நாம் கதையைத் தொடருவோம்!

இவருக்கு வயதென்று பார்த்தால், வருகிற தீபாவளிக்கு மறுநாள் (அவர் பிறந்த நாள்) 60 முடிந்து வெற்றிகரமாக 61 ல் காலெடுத்து வைக்கப்போகிறார், ஆனால் நல்ல மனிதர், ஆரோக்கியமாகவே தன்னை வைத்துக்கொன்டு, வயதைக் கேட்பவர்களிடமெல்லாம் அந்த வயதை பெருமையாய் சொல்லி, "ஆ, நம்பமுடியவில்லையே, நீங்கள் பார்ப்பதற்கு 40 வயது போல இருக்கிறீர்களே" என்று மற்றவர்கள் புகழாரம் சூட்டுவது அவருக்கு ரொம்பவே பிடித்துப்போன விக்ஷயம். அதை தெரிந்து கொன்டு அவரைச்சுற்றி இருப்பவர்கள் அவரைப்புகழ்ந்தே அவர் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள் என்பது வேறு சங்கதி!


தனது அருமை பாரியாள் அமிர்தம், மற்றும் மூத்த பையன் ராஜன், இளைய மகள் ராதாவோடு அவர் நாம் மேற்சொன்ன அந்த அழகான ஊரில் வசித்து வந்தார். தான் வாழும் தாமானில் ஒரு நாட்டாமையைப்போல நிமிர்ந்து அவர் நடந்தால் அக்கம் பக்கமெல்லாம் "அட்டா நம்ம நாதன் சார், பார்க்க எவ்வளவு லட்சண‌ம் என்று ஊரே பேசும், அந்த அளவு அந்த முன்னாள் ஆசிரியர் தன் வசிப்பிடத்தில் பெயர் பெற்று வாழ்ந்து வந்தார்.



வேலை முன்னால் என்று ஆகிவிட்டால், செலவுகள் என்ன இல்லை என்றா ஆகிவிடுகிறது? அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வகையில் அல்லவா உள்ளது!



அவரும் சளைக்காமல் தனது திறமையெல்லாம் திரட்டி வேலை தேடி வெற்றிகரமாக ஒரு தனியார் கல்விக்கூடத்தில் இணைந்து கொன்டார், ஆங்கிலப்பாட போதகராக. நல்ல மொழிவளமும் இயல்பாகவே அதிகம் பேசும் திறமையும் அவருக்கு அந்த வேளையை நிரந்தரமாக்கித் தந்தது, மாணவர்களும் சார் சாரென்று அவரை மொய்த்துக்கொள்வர் கார‌ண‌ம் இவர் முசுடாக‌ இல்லாம‌ல் ந‌ல்ல‌ ந‌கைச்சுவை உண‌ர்வோடு பாட‌ம் க‌ற்பிப்ப‌தோடு ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர் போல‌வும் உற‌வாடி மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல‌ பெய‌ர் ஏற்ப‌டுத்திக்கொன்டார். என்ன‌தான் சிரித்த‌ப‌டியே வ‌ல‌ம் வ‌ந்தாலும் பாட‌ம் ,ப‌டிப்பு, க‌ற்பித்த‌ல் என்று வ‌ந்து விட்டால் ந‌ம் நாத‌ன் சாரை யாருமே வெல்ல‌ முடியாது, அவ்வ‌ள‌வு க‌ன‌க்க‌ச்சித‌மாக‌ பாட‌ங்க‌ளை மாண‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தில் ஆணிய‌டித்தாற் போன்று சொல்லிக்கொடுத்து அவ‌ர்க‌ளை சிற‌ப்பான‌ தேர்ச்சி பெற‌ வ‌ழிவ‌குப்பார், அவ‌ர் கொடுத்த‌ வீட்டுப்பாட‌ங்க‌ளை செய்யாம‌ல் எந்த‌ மாண‌வ‌னும் இருக்க‌ மாட்டான், கார‌ண‌ம் அவ‌ர் அடிப்பார், த‌ண்டிப்பார் என்றெல்லாம் நீங்க‌ள் நினைத்தால் அது மிக‌வும் த‌ப்பு!, அந்த‌ குறிப்பிட்ட‌ பாட‌ம் செய்யாத‌ மாண‌வ‌னை அன்று ம‌திய‌ ஓய்வுக்கு செல்ல‌விடாம‌ல் த‌டுத்து அவ‌னுக்கு அறிவுரை‌ கூற‌த்தொட‌ங்கிவிடுவார் ந‌ம் நாத‌ன் சார். அவ‌னுக்கோ க‌ண்கள் இருண்டு, காதுக‌ள் ப‌ஞ்ச‌டைத்து விடும். அத‌ன் பிற‌கு ம‌ற‌ந்தும் அவ‌ன் த‌ன் பாட‌ங்க‌ளைச் செய்ய‌ ம‌ற‌க்க‌மாட்டான்! இவ‌ர‌து இந்த‌ சைக்கோல‌ஜி மிக‌வும் கைகொடுத்த‌தால், அந்த‌ ப‌ள்ளியின் தலைமை ஆசிரிய‌ருக்கும் அவ‌ரை மிக‌வும் பிடித்துப் போன‌து, ச‌ம்ப‌ள‌த்தையும் உய‌ர்த்தி அவ‌ர் ம‌ன‌தை குளிர‌ வைத்தார்!.



இப்படியாக காலங்கள் இனிமையாக கழிந்துவர, சில வருடங்களில் அவரது மகன் உயர் கல்வியில் நல்ல தேர்ச்சிப்பெற்று தலைநகரில் அமைந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பொறியியலாளர் பணியில் அமர்ந்தார், அவர் அருமை மகள் ராதாவோ கல்லூரிப்படிப்பு முடிந்து தான் மிகவும் நேசித்த தாதிமைத் தொழிலுக்குச் சென்றாள், கூடவே அவள் தன் மனங்கவர்ந்த சிவாவை பெற்றோர் சம்மதத்தோடு மணம் புரிந்து கொன்டாள். பிற‌கென்ன கடைமைகள் முடிந்தன.


நம் நாதன் சார் கூட்டிக்கழித்து கண‌க்குப் போட்டு பார்த்ததில் தனது ஓய்வூதியமே தனக்கும் தனது மனைவிக்குமான வாழ்க்கைத் தேவைக்கு போதுமென முடிவு செய்தார். தன் மனைவியிடம் தான் வேலையை நிரந்தரமாக விட்டு விடப்போவதாக திடீர் அறிவிப்பு செய்தார்.


மனைவி ஒன்றும் சொல்லவில்லை, இவரிடத்தில் வாயைக்கொடுத்து நமக்கு ஆகப்போவதென்ன என்பது போல அமைதியாக இருந்தார், இருந்தாலும் அவர் மனது இரண்டு அமிர்தமாக உருவெடுத்து, "சே பாவம் எவ்வளவு நாள் சிரமப்பட்ட மனுக்ஷன், வீட்டில் ஓய்வெடுத்துப் போகட்டுமே" என்று அனுசரனையாக ஒன்று நினக்க சொல்ல மற்றொரு அமிர்தமோ " அந்த ஓய்வூதியம் மட்டும் எப்படி போதும், செலவுகள் மலிந்த இந்த காலத்தில்" என மிரட்டியது. வாயை மட்டும் திறக்கவேயில்லை அவர்.



நாதன் சார் தன் முடிவைத் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார், அவரை மிகவும் தோழமையோடு நடத்திக்கொன்டிருந்த தலைமை ஆசிரியருக்கு இவர் முடிவு அறவே பிடிக்கவில்லை, தன் பங்குக்கு அறிவுரை கூறினார், எதுவுமே நம் நாதன் சார் காதில் வாங்கிக் கொள்ளவில்லை, இறுதியாக ஆண்டு முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால் இந்த வருடம் முடியும் வரை காத்திருந்து பிறகு நின்று விடும்படி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ள நாதன் சார் அரை மனதோடு சம்மதம் தெரிவித்தார். பின்னர் வழக்கம் போல தனது பள்ளி, பாடங்கள், கற்பித்தல் எனத் தன் கடமையை தொடர்ந்து வந்தார் அவர் வாழ்க்கையையும் கூடவே தான் கொன்டிருந்த நோக்கங்களையும் மாற்றிய அந்த பயங்கரமான நாள்வரை...




Tuesday, July 7, 2009

அஞ்சலி

அதி நவீன இசைக்கருவிகள் முழக்கமிட‌ , ரசிகர்கள் பெருவெள்ளமெனக்கூடி ஆர்ப்பாட்டங்களோடு ஆர்ப்பரிக்கும் சத்தம் விண்ணதிர‌, பிரமாண்ட மேடையிலே பளபளப்பான‌‌‌ ஆடை அலங்காரங்களோடு மின்னலெனத் தோன்றி தன் இனிமையான குரல் வளத்தாலும், நளினமான நடன அசைவுகளாலும் உல‌கையே தன் இசையால் மயக்கியவர் மைக்கேல் ஜாக்சன் என்றால் அது மிகையாகாது.உலகமே அவர் இசைக்கு வசப்பட்டிருந்தது, அவரது இசை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இவர் வாழ்க்கை வரலாற்றை காண்கையில் இவர் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்த பிறந்தவர். உலக ரசிகர்களையே தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் .

1972ல் 'காட் டு தி தேர்', 1979ல் 'ஆப் தி வால்', 1982ல் 'திரில்லர்', 1987ல் 'பேட்', 1991ல் 'டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் 'ஹிஸ்டரி' போன்ற இவரது ஆல்பங்கள் உலகளவில் பேசப்பட்டன‌.

தன் அறிவுக்கூர்மையால் இசைத்துறையில் பல்வேறு பரிணாமங்கள் சுமந்து புகழ்பெற்ற இசை ஆல்பங்களை பல வெளியிட்டு பல விருதுகளையும் வென்றவர் இவர்.

இவரது 75 கோடி ஆல்பங்கள் விற்பனை சாதனை படைக்க ,13 கிராமி விருதுகளோடு , ஈடு இணையற்ற பாப் பாடகரென‌ கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் மைக்கேல் ஜாக்சன்.

எரியும் மெழுகுவர்த்தி தன்னையே அழித்துக்கொன்டு பிறருக்கு வெளிச்சம் தருவதைப்போலவே, இந்த மாபெரும் கலைஞன், தனது படைப்பின் செழுமைக்காக, தனது தோற்றங்களில் மாற்றங்கள் வேண்டி செய்த அறுவைச்சிகிச்சைகள் பின்னாளில் அவரது வாழ்வுக்கே பெருந்தீங்காக முடிந்தது.

இவர் ஒரு விளம்பரப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட தீவிபத்து பல அறுவைச்சிகிச்சைகளாக தொடர்ந்து இறுதியில் இவர் தன் முழு உடலையும் அறுவைச்சிகிச்சையின் மூலம் வெள்ளைத்தோலுக்கு மாற்றிக்கொன்டார் எனும் சர்ச்சைக்கு இட்டுச்சென்றது, இதை ஒப்புக்கொள்ளாத மைக்கேல் ஜாக்சன், ஒருமுறை ஓப்ரா வின்பரி நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே அது தோல்வியாதி என்று கூறினார்.

இல்லற வாழ்வும் மைக்கேல் ஜாக்சனுக்கு இனிமை சேர்க்கவில்லை. இவர் மறைந்த புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் பிரசஸ்லியின் மகள் லீசா மேரி பிரெஸ்லியை 1996ல் மணமுடித்தார். அந்தத்திருமணம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது, அதன் பின்னர் 1999ல் டெபி ரோவ் என்ற பெண்ணை கரம்பிடித்தார். இந்தத் திருமணமும் வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்தது.

எனினும் மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் -2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இக்குழந்தைகளில் முதல் இருவர் இரண்டாவது மனைவி டெபி ரோவ் மூலமாகவும் மூன்றாவது குழந்தை வேறொரு வாடகைத்தாய் மூலமாகவும் பிறந்தனர் (குழந்தைகளின் பிறப்பிலும் மேலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.) திரண்ட மைக்கலின் சொத்துக்களனைத்துக்கும் இவர்களே வாரிசாகின்றனர், தற்சமயம் இவர்களை மைக்கேலின் தாயாரின் ஆதவில் இக்குழந்தைகள் உள்ளனர்.

இவர் தான் ஈட்டிய வருமானத்தில் கனிசமான தொகையை மனித நேயத்தோடு பல அறக்காரியங்களுக்கு செலவிட்டவராவார்.

இவர் வாழ்வில் பேரிடியாக இவருடைய பண்ணை வீட்டில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நீதிமன்ற படியேற்றப்பட்டு, வழக்கு விவகாரங்களுக்காக தனது சொத்துக்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றை இழந்தார். எனினும், கடந்த 2005ம் ஆண்டு அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அன்று மைக்கேல் ஜாக்சனை குற்றவாளியாக்கிய அந்த சிறுவனே (ஈவான் சான்ட்லர்) தற்பொழுது மன‌முவந்து பணத்திற்காக தனது தந்தை ஆடிய நாடகம் அது என உலகிற்கு உண்மையை உண‌ர்த்தியுள்ளான். "கண்கெட்டபின் சூரிய நமஸ்க்காரம்"

பெரும் புகழ், பணம் இவற்றோடு பெரும் சர்ச்சைகளும் பிண்ணிப்பிணைத்துக் கொன்ட இவர் வாழ்வு 2009, ஜூன் 25 அன்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக முடிவுக்கு வந்தது. இவர் வாழ்வை இதற்கும் மேலே ஏற்கனவே ஏகத்துக்கும் பலர் அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டதால் இதுவே போதும்.

அரை நூற்றாண்டோடு தன் வாழ்வை முடித்துக்கொன்ட இந்த தன்னிகரற்ற கலைஞனைப்பற்றி ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும், உலக ஊடகங்கள் மககளை ஒருமித்து இசையால் மகிழச்செய்த அந்த இசை சாகரத்தை கீறிக்கிளரி பல விமர்சனங்களை படைத்தாலும், உலக இசைத்துறை வரலாற்றில்.........

"மைக்கேல் என்றுமே ஒரு மைல்கல்தான்"

" இன்று அடக்கம் காணும் அந்த ஈடினையற்ற மகா கலைஞனுக்கு நாமும் நமது அஞ்சலியை செலுத்துவோம்"




Friday, July 3, 2009

சில நேரங்களில் சில மனிதர்கள்...


ஆதரவற்ற குழந்தைகள், இவ்வுலகில் ஆணும் பெண்ணும் மனமொத்த இல்வாழ்க்கையில் இணைந்து மகிழ்ந்து, மழலைகளை ஈன்றெடுத்து, அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி எனும் தேவைகளை நிறைவேற்றி, கண்ணை இமை காப்பதைப்போல , கண்ணும் கருத்துமாய் தங்களது வாரிசுகளை வளர்த்தெடுக்க வேண்டியது கட்டாயம். அத்தகைய மானிடர் இயற்கைக்கும் தான் கொன்ட மனிதப் பிறவிக்கும் பயன் விளைவித்தவர் ஆகிறார். ஆனால் இயற்கைக்கு மாறாய் எத்தனையோ விடயங்கள் இம்மண்ணில் இடம்பெறுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த நவநாகரீக உலகில் அதரவற்ற குழந்தைகளின் அதிகரிப்பு.

நாகரீகம் எனும் போர்வையில் எல்லை மீறும் சில பெண்கள் திருமணத்திற்கு முன்பே தவறு செய்துவிடுகின்றனர்.ஆணின் தவறு சட்டையில் ஒட்டிய தூசைப்போல், தட்டிவிட்டு நடந்துவிட முடியும், ஆனால், ஒரு பெண் தவறு செய்வதை, இயற்கையும் மன்னிப்பதில்லை! பத்து மாதம் கழித்து குழந்தை என அவள் கைகளில் தந்துவிடுகிறது,(அழிக்கப்படும் குழந்தைகளும் இதில் அடக்கம்) அந்தப் பெண் பொருப்பேற்று வளர்த்தால் அது அவள் குழந்தை, அதையே அவள் வேண்டாம் என்று விலக்கி விட்டால் அது ஆதரவற்ற குழந்தை! இது மட்டுமன்றி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தந்தை அல்லது தாய் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் நிர்க்கதியாக்கப்பட்ட குழந்தைகள்!மற்றும் தாய் தந்தையரை காலனிடம் இழந்து உறவுகளாலும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள், இது போன்ற பல சூழ்நிலைகள் ஆதரவற்ற குழந்தைகளை உருவாக்குகிறது!

இக்குழந்தைகள் பல சமயங்களில் அரசு காப்பகங்கலில் வளர்க்கப்படுகின்றனர், ஆனால் வேளைகளில் இக்குழந்தைகள் தனியார் காப்பகங்களிலும் வளர்க்கப்படுகின்றனர், நான் இங்கே பகிர்ந்து கொள்ளப்போவது ஒரு தனியார் காப்பகத்தைப்பற்றி,
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் என் உறவினர் குடும்பம் அந்தக்காப்பகத்திற்கு என்னை அழைத்துச்சென்றனர்.அன்று அவர்கள் அங்குள்ள குழந்தைகளுக்கு இரவு உணவளிக்க ஏற்பாடாகி இருந்தது. அழகான ஒரு பெரிய கட்டிடம், நடுத்தர வயது படித்த காப்பகத்தலைவர், வெள்ளை புடைவை தேவதைகளாய் செவிலியர்கள், நிறைய குழந்தைகள் என எதிர்பார்த்துச் சென்ற எனக்கு பெருத்த ஏமாற்றம் + ஆச்சர்யம்.

அது ஒரு பழமையான மலிவு வீடு, துருப்பிடித்த வெளிவாசல் கதவு, பழைய வீட்டுத்தளவாடங்கள், என மிக மிக எளிமையாக அந்த வீடு அமைந்திருந்தது, ஒரு வயதான பெண்மணி அங்கே இல்லத்தலைவியாக!, ஒரு நடுத்தர வயது செவிலித்தாய், அழகழகாய் 3வயதிலிரும்து 17 வயது வரை நம் இனக் குழந்தைகள் சுமார் '20 பேர்.

உறவினர்கள் தங்கள் சமைத்து எடுத்து வந்த சைவ அயிட்டங்களை குழந்தைகளை வரிசையிலமர்த்தி பறிமாறினர். வளரும் பிள்ளைகள் அல்லவா! சைவ உணவு செல்லுபடியாகவில்லை, ஒரு சில குழந்தைகளே மறுபடி கேட்டு உண்டனர், ஏனைய பிற குழந்தைகள் விட்டதே போதும் என ஒரு முறை சாப்பாடோடு எழுந்து விட்டனர்.

குழந்தைகளையும். பெரியவர்களையும் காணச்செல்கையில் வெறுங்கையோடு போகக்கூடாது என்பர்! எனவே என்னால் இயன்றவரை சில சிற்றுண்டிகளை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாய் தயாரித்து அவர்களுக்கு
அன்பளிப்பாய் எடுத்துச்சென்றிருந்தேன், அதை உணவு உண்டுமுடித்த பின்னர் அவர்களுக்கு ஒவ்வொன்றாய் வழங்கி அவர்கள் முகங்கள் மலர்வதைக்கண்டு நானும் சந்தோசப்பட்டுக்கொன்டேன்.
விருந்து முடிந்து புறப்படுவதற்கு முன்னால், அந்த இல்லத்தை நடத்தும் பெண்மணியை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொன்டிருந்தேன். அவர் தான் சொந்தமாக அந்த இல்லத்தை நடத்துவதாக குறிப்பிட்டார், மேலும் பல அண்டை அயாலார்கள் தமக்கு சிறந்த ஒத்துழைப்பு நல்குவதாகவும், அதிலும் பல சீன அங்காடி விற்பனையாளர்கள், வியாபாரத்தில் மீந்துவிடும் உணவுகளை குழந்தைகளுக்கு எடுத்து வந்து தருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு எனக்கு மிகவும் மனச்சங்கடம் உண்டானது, என்ன செய்வது, பாவம் குழந்தைகள்! என்ன செய்யலாம்? மனம் ஆழ்ந்து யோசிக்கையில்

அந்த‌ப் பெண்மணி, வெளியிலிருந்து வ‌ரும் நன்கொடைக‌ளை எதிர்பார்ப்ப‌தாக‌வும், ந‌ல்ல‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் வீட்டு விசேச‌ங்க‌ளுக்கு இந்த‌க்குழந்தைக‌ளுக்கு உணவளிப்பதோடு, நல்ல உடை, அவர்கள் பள்ளிச்செலவுக்கான தொகை போன்றவற்றை மனமுவந்து அளித்தல் நலம் எனவும் குறிப்பிட்டார். அவர் தெரிவித்த விடயங்களை உள்வாங்கிக்கொன்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

வீடு திரும்பிய பின்னரும் அக்குழந்தைகளுக்காக மனம் வருந்தியது, ஒரு யோசனை தோன்றவே, என் உற‌வினர் ஒருவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் உத்தியோகம் பார்ப்பது நினைவுக்கு வந்தது!, அவரை தொலைபேசியில் அழைத்து விவரங்களை கூறியவுடன் உதவி புரிய ஒப்புக்கொன்டார்.
அதன் பின்னர், அவர் தலைமையில், அங்கு பணிபுரியும் பல நல் உள்ளங்கள் ஒருங்கினைந்து ஏறக்குறைய 1000 ரிங்கிட் வரை நிதி திரட்டி, அக்குழந்தைகளுக்கு ஒரு பெரிய அசைவ விருந்து அளித்து,அந்த இல்லத்தலைவியிடம் நன்கொடையை ஒப்படைத்தனர். அதன் பின்னர் மாதம் மாதம் ஒரு சிறு தொகையை நன்கொடையாக வசூலித்து அக்குழந்தைகளுக்கு அளிப்பதாய் அனைவரும் ஏகமனதாய் தீர்மானித்துக்கொன்டனர்.
இந்த நல்ல முயற்சி சில காலங்களுக்கு தொடர்ந்தது.

நல்ல காரியங்களுக்கு இடையூறுகள் ஏற்படுவது சகஜமே, ஆனால் இந்த விடயத்தில் இடையூறு அவர்களுக்கு உதவ வேண்டிய நம்மவர்களாலேயே வந்ததுதான் பெரிய வருத்தம்! எல்லாம் நல்ல படியாக நடந்து கொன்டிருக்க, அது பொறுக்காத ஒரு புல்லுருவி, தன் சக பணியாளர்களிடையே ஒரு புரளியைக் கிளப்பி விட அது காட்டுத்தீயாய் பரவத்துவங்கியது!.

விடயம் என்னவென்றால், அதை நடத்தும் பெண்மணி வேற்று மதத்தைச் சார்ந்தவராம், அவர் குழந்தைகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இன்னும் இதுபோன்ற ஏனைய பிர வதந்திகளும் ஒன்று கூடி அந்த நல்ல முயற்சியை தரைமட்டமாக்கியது.

பார்த்தீர்களா, மனிதர்களின் குணத்தை, பாவ‌ப்பட்ட குழந்தைகளுக்கு உதவவேண்டிய கடப்பாடுடைய நாமே இவ்வாறு செய்யலாமா? வீதியீல் திரியாமல் நம் இனக்குழந்தைகளை தன் சொந்த வீட்டில் வைத்து, உணவு, உடை, உறைவிடம், கல்வி இவற்றை அளித்து பராமரிக்கும் அந்தப் பெண்மணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, இப்படித் தூற்றித் தெருவில் வைக்கலாமா?

சனாதன தர்மம் நமது சமய தர்மம் அல்லவா? எம்மதமும் சம்மதம்! என்பதெல்லாம் வெறும் வார்த்தையளவில்தானோ?என் சிற்றறிவுக்கு எட்டிய வரை வேளாங்கண்ணி மாதவுக்கு கோயில், நாகூர் ஆண்டவருக்கு கோயில் என எல்லா மதத்தையும் அனுசரித்து அரவனைக்கும் அன்பு மதம் அல்லவா நம் மதம்! அந்த மதத்தில் வந்த நாம், மதத்தின் பெயரைச்சொல்லி, உதவ வேண்டிய பிஞ்சுகளுக்கு கிடைக்கவிருந்த உதவியை இப்படித்தடுத்து நிறுத்தலாமா?

அதோ, அந்தக் குழந்தைகள் மீண்டும் மீந்துபோன உணவுகளுக்காக காத்திருக்கின்றார்கள்.......

Thursday, July 2, 2009

விவேகானந்தரின் வைர வரிகள் I

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்


எனது துணிவுடைய‌ இளஞர்காள் நீங்கள் அனைவரும், பெருங் காரியங்களைச் செய்ய பிறந்தவர்கள், என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குரைத்தலைக் கண்டு அஞ்சாதீர்கள்!


உம‌து நாடு வீர‌ர்க‌ளை வேண்டி நிந்கின்ற‌து. வீர‌ராகுக‌. ஒரு க‌ற்பாறையைப்போல் உறுதியாக‌ நிற்பீராக‌. மெய் எப்பொழுதும் வெல்கிற‌து.


ந‌ண்ப‌, அழுவ‌தேன்? உம‌க்குள் எல்லாச் ச‌க்தியும் உள்ள‌து. ப‌ல‌வானே உன‌து எல்லாம் வ‌ல்ல‌ இய‌ல்பை வ‌ர‌வ‌ழை. மூவுல‌கமும் உன் கால‌டியில் அம‌ரும். வெல்வ‌து ஆன்மா ஒன்றே. ச‌ட‌மன்று.


ப‌ல‌மே வாழ்வு, ப‌ல‌மின்மையே ம‌ர‌ண‌ம். ப‌ல‌மே இன்ப‌மும் நிலையான‌ அழிவ‌ற்ற‌ வாழ்வுமாம்.


ந‌மது ப‌ல‌மின்மையே ந‌ம்மிட‌ம் பொய்யும், க‌ள‌வும், கொலையும், வேறு ப‌ல‌ பாவ‌ச்செய‌ல்க‌ளும் இருப்ப‌தற்கு காரணமாம்.


நமக்கு வேண்டிய ஒரே பொருள் பலமே. உலகத்தின் நோய்க்கு மருந்தும் பலமே.


எழுந்து நில்லுங்கள். பலமுடையவராகுங்கள், தைரியமாயிருங்கள். வாழ்க்கையை உங்கள் பிரியப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.


எல்லா வில‌ங்குக‌ளிலும், எல்லாத் தேவ‌ தூத‌ர்க‌ளிலும் பார்க்க‌ ம‌னித‌னே உய‌ர்ந்த‌வ‌ன்.


நாம் போதிய‌ நெடுங்கால‌ம் அழுதாயிற்று. இனியும் அழ‌ வேண்டாம். எழுந்து நின்று ஆண்மையுட‌ன் போராடுங்க‌ள்.


நாம் ப‌ல‌ பொருள்க‌ளைப்ப‌ற்றிக் கிளியைப்போல் பேசுகின்றோம். ஆனால் செய‌ல‌ள‌விலில்லை. இத‌ன் கார‌ண‌ம் யாது? உட‌ற்ப‌ல‌வீன‌ம். இவ்வித‌ப் ப‌ல‌ம‌ற்ற‌ மூளையால் ஒன்றையும் செய்ய‌விய‌லாது.


நீதியாயிரு, தைரியமாயிரு, முழுமனதும் ஊன்றியவனாயிரு, பிறலாத ஒழுக்கமுடையவனாயிரு!


அறிவுக்குத் தொந்தரவு கொடாதெ, கோழைகளே பாவம் புரிவர். தைரியசாலிகள், பாவம் புரியார், ஒவ்வொருவரையும் நேசிக்க முயல்க.
வஞ்சனையால் பெரும்பணி எதனையும் ஆற்ற முடியாது அன்பாலும், சத்தியத்தாலும், பெரும் சக்தியாலுமே பெருங்காரியங்கள் நிறைவேறுகின்றன.


ஆ! நீங்கள் உங்களது இயல்பை மட்டும் உணர்வீரேல் நீங்கள் ஆத்மாக்களே, தெய்வங்களே!


நான் மெய்யைப் பின்பற்றி நிற்பவன், மெய் ஒருக்காலும் பொய்யோடு ஒன்று சேராது, சத்தியமே வெல்லும்!


இவ்வுல‌க‌ம் கோழை‌க‌ட்க‌ன்று. ஓட‌ முடியாத‌ வெற்றியையோ, தோல்வியையோ கோராதே!


பழிவாங்குதலைப்பற்றி ஒருக்காலும் நான் யோசிப்பதில்லை, பேசியதுமில்லை. எப்பொழுதும் பலத்தைப்பற்றியே பேசியுள்ளேன்.


எழுந்திருங்கள், உழையுங்கள், இவ்வாழ்வு எத்தனை நாள்? இவ்வுலகில் தோன்றிய நீங்கள் ஏதாகிலும் விட்டுச் செல்லுங்கள். அப்படிச் செய்யாவிடில் மிருகங்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?


கடலைப்பார். அலையைப்பாராதே. எறும்பிற்கும் தேவ தூதனுக்கும், எவ்வித வேற்றுமையையும் பாராதே. ஒவ்வொரு புழுவும் இயேசுவின் சகோதரனாகும்.


சிவ பெருமானுக்குப் பணி செய்ய விரும்புவோன், அப்பெருமானின் மக்கட்குப் பணி செய்ய வேண்டும்!



நம் வாழ்நாட்களில் பெரும் பாகம் துக்கம் நிறைந்ததாகும். என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விடயம். அதைத்தடுக்க எப்படி முயன்றாலும், அது வந்தே தீரும் என்பதையும் நன்கு அறிவோம்.