.

.
.
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

Thursday, August 1, 2013

ஒரு ஜீன்சு உடையும், உடையாத நட்பும்...! - நிறைவு

 பயணம் தொடர்கிறது...

நல்லவேளை அங்கே மலை நெடுக ஓய்வுக்கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே அமர்ந்து சிறிது ஓய்வெடுத்துக்கொன்டு மலையுச்சியை அடைந்தபோது மணி 3ஐ தொட்டிருந்தது, மலையுச்சி பார்க்க ரம்மியமாக இருந்தது, பச்சைக் கம்பளம் விரித்த மேடுகள். அதில் சகஜமாக உலவித்திரியும் வென்மேகச் சாரல்கள், மிகவும் குளிர்ச்சியான சீதோக்ஷ்ணம்,  பனி மூட்டங்கள் உடல் தழுவி உள்ளம் குளிரச்செய்தன. மலையுச்சியிலிருந்து கீழே பார்த்தால் சின்னச்சின்னச் சதுரங்களாய் பட்டண‌ம் கண்ணுக்கு தென்பட்டது. எல்லோரும் அந்த இயற்கை எழிலை அனுபவித்து மகிழ்ந்தனர். மலையேறிய களைப்போடு பசியும் சேர்ந்து கொன்டது...

உணவுண்ண ஆயத்தமானார்கள்,  அவர்கள் அனைவரும் திட்டமிட்டபடி ஆளாளுக்கு உணவு கொன்டு வந்திருந்தனர். குளிர்பாணங்கள், நாசி லெமாக் உணவு, கச்சான், பலகாரங்கள், மிட்டாய்கள் அவற்றோடு ஒரு பெரிய பாத்திரம் நிறைய பொறித்த கோழித்துண்டுகள் ( kfc ) என எக்கச்சக்க உண‌வுகள். பெண்களை "சாப்பாட்டு இராமாயிகள்" என்றால் நமக்கு கோபம் வருகிறது! அனால் அங்கே அந்தக் குட்டிப்பெண்கள் அனைவரும் இணைந்து ஒரு குட்டி உணவகத்தையே உருவாக்கி வைத்திருந்தனர். அவரவர் அவர் எடையில் பாதியளவு பையை சுமந்து வந்ததன் காரணம் அப்போதுதான் விளங்கியது...!     

மிகவும் குளிர்ச்சியான இடம், உணவு வெகுவிரைவில் சில்லிட்டுவிடுமல்லவா ? அதனால் அனைவரும் விரைந்து உண்டனர், அவள் வெண்ணெயும், பழக்கூழும்(jam)  கலந்த ரொட்டித்துண்டுகள் கொன்டுவந்திருந்தாள், ஒரு துண்டை உண்டுவிட்டு பார்த்தால் பாத்திரம் காலி, அதன் பின்னர் அடுத்தவர் உணவை தொடக்கூடாது எனும் அம்மாவின் கட்டளை அங்கே காலி!

ஒரே மகிழ்ச்சியாகவும், ஆரவாரமாகவும் இருந்தது, சற்று நேரம் கழித்து மணியைப் பார்த்தால் 5ஐ தாண்டியிருந்தது! இவளுக்கு பதைபதைக்க ஆரம்பித்தது. அனவரும் கீழிறங்கத் தயாராயினர், உணவுண்டதாலும், ஏற்கனவே மலையேறிய களைப்பாலும் யாரும் திரும்பவும் நடக்கத் தயாராயில்லை!

நல்லவேளை அங்கே பயணம் செய்ய ஜீப் வண்டிகள் வசதியும்  ஏற்படுத்த‌ப்பட்டிருந்தது, சிறு சிறு குழுக்களாக பிரிந்து வண்டிகளில் ஏறி கீழே பிரயாணமானார்கள் அவர்கள். 

மலையடிவாரத்தில் அனைவரும் திரும்பவும் ஒன்றுகூடி விடைபெற்றுப்பிரிந்தனர். அவள் அரக்கப் பரக்க வீட்டையடையும் போது மணி 7. தோழியும் உடன் வந்தாள். அவசரத்தில் உடை மாற்ற‌ வேண்டியதும் மறந்து போயிருந்தது, வீட்டு வாசலை அடைந்ததுதான் தாமதம், உள்ளேயிருந்து ஒரு பெண்புலி உறுமத் தொடங்கிய‌து....!!! 

"அப்படியே உன் கூட்டாளி வீட்டுக்கு போயிடு, வீட்டுக்குள்ளே வந்தே, காலை ஒடச்சிப்புடுவேன், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர்ர"? ஏசிக்கொன்டே எட்டிப்பார்த்தவர், ஜீன்ஸ் சட்டையில் நின்றிருப்பதைப் பார்த்ததும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது

போலானது! "என்ன சட்டை இது "? என்று ஆரவாரம் செய்ய, அதுவரை அவளோடு அமைதியாக‌ நின்றிருந்த அவள் தோழி , பொறுமையிழந்து, "ஆண்ட்டி பஞ்சாபியெல்லாம் போட்டுட்டு மலையேற‌ முடியாதுன்னு நாந்தான் என் சட்டைய கொடுத்தேன்" என்றாள், அவள் அம்மா ஒன்றும்
பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.

பொழுது இருட்டிக்கொன்டு வந்தது, "நீ வீட்டுக்குப் போ நான் பார்த்துக்கொள்கிறேன்" எனக் கூறினாலும் கேளாது, அவள் வீட்டு வாசலில் அவளோடு கொசுக்கடியில் உடன் நின்றாள் தோழி! அது வரிசை வீடு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எட்டிப் பார்த்தனர். வெட்கமும் வேதனையுமாக இருந்தது! இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் தந்தையும் வந்து விடுவார்! அவருக்கு இந்த நிகழ்வு எதுவும் தெரியாது, விடயம் அறிந்தவுடன் அவர் ஊரே பார்க்க இனாமாக ஒரு உருத்திர தாண்டவம் ஆடுவார், அதை நினைக்க இன்னும் பயமாக இருந்தது அவர்களுக்கு!

நல்லவேளை அவள் அம்மாவின் மனம் சற்று இரங்கியது. அதுமட்டுமல்ல அப்பா வந்துவிட்டால் விடயம் அவருக்கு தெரிந்துவிடும் அம்மாவுக்கும் பாட்டு விழும் அல்லவா?  அதனால் வெளியில் வ‌ந்து "போ உள்ளே, இனிமே இந்தமாறி செஞ்சே" அவர் முடிக்கவில்லை, அவள் முடிவெடுத்துவிட்டாள்....! இனி இப்படி செய்து அவமானப்படக்கூடாது என்று! அதுவரை இருளில், கொசுக்கடியில் அவளோடு உடன் நின்ற அவள் தோழி நிம்மதியோடு
விடைபெற்றுச் சென்றாள், தோழியை அனுப்பி வைத்துவிட்டு அவள் வீட்டுக்குள் ஓடி, குளித்துவிட்டு
அவள் அப்பா வருவதற்குள் விரைவாக போர்வையை போர்த்திகொன்டு படுத்துவிட்டாள் , ஆனால் தூக்கம்தான் வரவேயில்லை, நெடு நேரம் வரை. அம்மாவின் புண்ணியத்தால் அந்த சம்பவம் இன்றுவரை அவள் அப்பாவுக்கு தெரியாது...!

இப்படி அம்மாவின் ஆத்திரத்தால் வாசலில் நின்ற அந்த பாவப்பட்ட ஆத்மா யாராயிருக்கக்கூடுமென்பதை வாசிப்பவர்கள் ஓரள‌வு கணித்திருக்கக்கூடும், அந்த சம்பவத்திலும் இன்றுவரை அவள் வாழ்வின் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் அன்றுபோலவே இன்றும் பங்கெடுத்துக்கொள்ளும் அவளின் அந்த  அன்புத்தோழியின் பெயர் கோமளா.

அன்று அவள் கொடுத்த அந்த ஜீன்ஸ் இன்றும் துணிஅடுக்கில் அந்த அநுபவத்தை பறைசாற்றிக்கொன்டு பத்திரமாய் இருக்கின்றது மனஅடுக்கில் பசுமையான அவர்கள் நட்பின் நினைவுகளைப்போல...!

இடைநிலைப்பள்ளிப்பள்ளி வாழ்க்கையில் மற‌க்க முடியாத நிகழ்வு இது, தோழிகள் கோமளம், ஜோஸப்பீன், தமிழ்மலர், நிர்மலா, ஏஞ்சலீனா, மஞ்ஜிட் கவுர், சாண்டி, உமா, க்ஷோபா, மஞ்சுளா, சித்ரா, வாணி, முனியம்மா, சுகுனா (பெயர் விடுபட்ட தோழிகள் மன்னிக்க) எல்லோருக்கும் அன்பும் நல்வாழ்த்துகளும்...!      

 

Wednesday, July 31, 2013

ஒரு ஜீன்சு உடையும் உடையாத நட்பும்...!

சில காலங்களுக்கு முன்...!

கட்டுப்பாடுகள் நிறைந்த கட்டுப்பெட்டி குடும்பம். அந்த வீட்டு பெண்பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் பெற்றோரால் விதிக்கப்பட்டிருந்தன. இருந்தும் அவை யாவும் அந்தப் பெண்பிள்ளைகளின் நன்மைக்கே என்பதை அந்தக் குழந்தைகள் உணர்ந்திருந்ததால் பெரிதாய் ஏதும் பிரச்சனைகள் எழவில்லை அந்த குடும்பத்தில்!

அவள் அந்த வீட்டுப் பெண், அப்போது தான் எஸ்.பி.எம் பரீட்சை முடிந்திருந்தாள். அவளுக்கு ஓர் உயிர்த்தோழி, இருவரும் ஆரம்பப்பள்ளியிலிருந்து உடன் படித்தவர்கள், எல்லா விடயங்களையும் ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்பவ‌ர்கள், இதிலே தோழி ஓரளவு சுத்ந்திரமான குடும்பத்திலிருந்து வந்தவள், அப்பா தமிழ்ப்பள்ளி ஆசிரியர், வீட்டில் கடைக்குட்டி பெண் வேறு, சந்தர்ப்ப‌ம் கிடைக்கும்போதெல்லாம் அரட்டை அடிக்க தோழி அவள் விட்டுக்கு வந்து விடுவாள்.  அவர்களில் ஒருத்திக்கு ஒரு பிரச்சனை என்றால் இன்னொருத்தி அழையாமலே அவளுக்குத் துணையாக‌ அங்கே ஆஜராகிவிடுவாள்...! தீபாவளியென்றால் இவள் அவளுக்கும், அவள் இவளுக்கும் உடை வாங்கி பரிசளித்துக்கொள்வார்கள், இப்படியாக வெள்ளிவிழா கொன்டாடி இன்றும் தொடரும் நட்பு அவர்களுடையது, அவர்கள் வாழ்விலே ஒரு நாள்...

அவர்கள் பள்ளியின் இந்திய மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி அந்த ஊரிலிருக்கும் மலைப்பாங்கான பகுதி ஒன்றிற்கு மலையேறுதல் (hiking) செல்ல முடிவு செய்தனர், பரீட்சை முடிந்தது, இனி இடைநிலைப்பள்ளி வாழ்க்கையும் ஒரு நிறைவை நாடிவிடும், அதைக்கொன்டாட வேண்டுமல்லவா ? ஒருவகையில் இது ஒரு பிரியாவிடை கொன்டாட்டமும் கூட, 10,12 இந்திய மாண‌விகள் ஒன்றுகூடி கலந்து பேசி பிரயாணத்தையும் அவரவர் பொறுப்புகளையும்  திட்டமிட்டனர்.

அவளை உடன் வருமாறு அவள் தோழி வற்புறுத்தினாள், அவள் தாயோ "என்னது மலையேறுவதா ? முடியாது ! " என  மறுத்துவிட்டார், அவளுக்கு கவலையாகத்தான் இருந்தது, ஆனால் என்ன செய்வது ? தான் வர முடியாது என்பதை தோழியிடம் தெரிவித்தாள், தோழி  விடாப்பிடியாக அவள் வந்தே ஆகவேன்டும் என வற்புறுத்தி, அவள் தாயிடம் தானே வந்து பேசி சம்மதம் வாங்குவதாக வாக்களித்து அவள் வீட்டிற்கு வந்தாள், அவளுக்காக அவள் தாயிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி கோரினாள், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமல்லவா ?

இறுதியில் அவள் அம்மா அனுமதி தந்தார் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு... மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிடவேண்டும், வேறு எங்கும் செல்லக்கூடாது, அந்நியர் யாரிடமும் பேசக்கூடாது, அவர்களிருவரின்  உண‌வைத் தவிர அடுத்தவர் உணவை உண்ண‌க்கூடாது, கவுச்சி(மாமிச) உணவை அங்கே சாப்பிடக்கூடாது என பல கட்டுப்பாடுகள், அவள் தாய் அவர்களிடத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்காத ஒரு குறைதான்...!

கொஞ்சூண்டு அழகான தனது மகளுக்காக நிறையவே பாதுகாப்பு வளையங்கள் வரைந்தார் அவள் தாய்...!(எல்லா அன்பான தாய்க்கும் அவர் பெண் பொக்கிக்ஷ‌ம் தானே?) அனுமதி கிடைத்ததே பெரிய விடயம், எனவே எல்லாவற்றிற்கும் இருவரும் தலையாட்டி மகிழ்வோடு சம்மதம் தெரிவித்தனர். "நாளை காலை வருகிறேன், தயாராய் இரு" என அவளிடத்தில் கூறிவிட்டு, பேச்சு வார்த்தை வெற்றிகரமாய் முடிந்த திருப்தியில் வீட்டிற்கு புறப்பட்டாள் தோழி.

இவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை, அதற்குமுன் இப்படி மலையேறும் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததில்லை, மறு நாளை எதிர்பார்த்து மகிழ்வோடு
உற‌ங்கினாள், காலையில் கருக்கலிலேயே எழுந்து கடமைகள் முடித்து, தனக்குப்பிடித்த இள‌ஞ்சிவப்பு சுடிதாரில் தோழிக்காக காத்திருந்தாள்.

தோழியும் வந்தாள், இருவரும் புற‌ப்பட்டனர். புற‌ப்படும் முன் தோழி முதலில் இவளை அவள் வீட்டிற்கு அழைத்துச்சென்றாள், தன்னுடைய கருநீல நிற‌ ஜீன்ஸ் காற்சட்டையும், கத்தரிப்பூ நிறத்தில் மேல்சட்டை ஒன்றையும் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னாள், "அய்யோ வேண்டாம் அம்மாவிற்கு தெரிந்தால், கதை கந்தல்தான்" அவள் தடுத்தாள், தோழியோ "அடக்கடவுளே, பஞ்சாபி சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு மலையேற‌முடியாது, பாதி வழியில் சட்டை கிழிஞ்சி போகும், உன்னைப்பார்த்து எல்லோரும் சிரிப்பார்கள், நீ இப்போ இதை போடு, அப்புறமா வீட்டிற்கு வந்து மாற்றிக்கலாம்!" என்று வற்புறுத்தினாள், "என்னே ஒரு வில்லத்தனம்" மனம் குமைந்துகொன்டே அவள் உடை மாற்றிக்கொண்டாள், இருவரும் புறப்பட்டனர்.

அனைத்து தோழிகளும் மலையடிவாரத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. அதன்படி அனைவரும் வந்து காத்திருந்தனர், அதிசயமாக அவளை ஜீன்ஸ் உடையில் கண்டதும் கண்கள் அகல அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துச் சிரித்தனர், அவளை பகடி செய்து ரசித்தனர். அதில் ஒரு சில தேவதைகள் அவள் கையை பற்றிக்கொன்டு 'இந்த உடுப்பு உனக்கு நல்லாயிருக்கு ' என பாராட்டுப்பத்திரம் வாசித்தனர்.அவளுக்கு மகிழ்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது, சட்டையை இழுத்து விட்டுக்கொன்டாள்.

நடைப்பயணம் தொடங்கியது, மலையேறுதல் ஆனந்தமாய் ஆரம்பமானது, மேலேறும் செங்குத்தான செம்மண் பாதை, அதன் இருமருங்கிலும் மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்தன, கையகல மஞ்சள் நிறப்பூக்கள் வரவேற்றுச் சிரித்தன. கொத்துக் கொத்தாய் சிவப்பு மலர்கள் மரக்கிளைகளில் அங்கும் இங்குமாய் கண்சிமிட்டின, மரத்தண்டுகளில் வெள்ளை நிற வாச‌மிகுந்த பூக்கள் (pokok langsuir ) நிறைந்திருந்தன‌! அபார வாசம் கொன்ட மலர்கள் அவை, மேலும் பல வடிவங்களில், பல நிற‌ங்களில்  இலைகளும், கொடிகளும், மரங்களும், வித்தியாசமான சப்தங்களும், மண்ணின் வாசனை கிள‌ப்பும் ஈரக்காற்றோடு, கோடு கிழித்ததைப்போல் ஒரு சிறு நீர்வீழ்ச்சியுமாய் இயற்கை வெகு எழிலாய் அங்கே நர்த்தன‌மிட்டுக்கொண்டிருந்தது, அவர்களின் பயண‌ம் நல்லபடியாய் தொடர்ந்து கொன்டிருந்தது.

சில மணித்துளிகளும், சில மைல்களும் கடந்த பின்னர் களைப்பு ஏற்பட ஆரம்பித்தது, கால் முட்டிகள் கதகளி ஆடத்துவங்கின, வியர்வை மேனியை நனைக்கத்தொடங்கியது, மூச்சு வாங்கியது....!

தொடரும்...!