.

.
.
Showing posts with label சமூகவியல். Show all posts
Showing posts with label சமூகவியல். Show all posts

Tuesday, December 31, 2013

2014 புத்தாண்டில் பாலாவின் பரதேசியும் எமது மூதாதையர்களும்...!




ந‌ம் நாட்டில் குறிப்பிடத்தக்க‌ அரசியல் அதிர்வுகள் மற்றும் சமூகத்தை திரும்பிப்பார்க்க வைத்த, அரசியல் பேசவைத்த, சிலருக்கு ஏற்றமாகவும், பலருக்கு ஏமாற்றம் நிறைந்த ஆண்டாகவும் மலர்ந்து இன்று விடைபெறும் 2013 க்கு நாமும் இன்று விடை கொடுப்போம்.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும்  அந்த ஆண்டு விடைபெறுவதையொட்டி ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அவ்வாண்டின் சிறந்ததாக அடையாளம் காண‌ப்பட்ட , மக்கள் மனதைக் கவர்ந்த, வசூலை அள்ளிக்குவித்த 10  படங்களை வரிசையிட்டு திரையிடுவது ஆண்டுதோறும் வழக்கமே, இவ்வாண்டும் அவ்விதம் திரையிடப்பட்ட படங்களில் நான்காம் இடத்தை பிடித்து அண்மையில் ஒலியேறியது இயக்குனர் பாலாவின் "பரதேசி" திரைப்படம்.


இயக்குனர் பாலா "நான் கடவுள்" திரைப்படத்துக்காக, 2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றவர்.
இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் மாணவருமாவார். தமிழ் சினிமாவில் இவரது ஆளுமை ஆழமாகவே பதிந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. தான் இயக்கும் கதாபாத்திரங்களின் வழி ரசிகனையும் ஆட்டிப்படைக்கும் சித்துவேலை இவருக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. ஆனால் அது எல்லா சமயங்களிலும் சோக அலைகளிலேயே ரசிகனை மூழ்கடித்துவிடுவது வருத்தமே.

இவர் படங்களின் காட்சிகளைபோல, கதாபாத்திரங்கள் போல பாடல்களும் அருமையாகவே அமைந்திருக்கும், உதாரணத்திற்கு  இசைஞானி இளையராஜாவின் குரலில்/ இசையில் ஒலித்த‌ உயிரைத்தாலாட்டும் "எங்கே செல்லும் இந்த பாதை" எனும் சேது படப் பாடல். என்றும் மனதைவிட்டு அகலாத மிக மிக அருமையான பாடல். எப்பொழுதும் மனதைக் கவர்ந்த பாடல்களில் முதலிடம் வகிக்கும் பாடல் இது...!

சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) ஆக இறுதியாக தற்சமயம் எட்டிப்பார்த்திருப்பது பரதேசி (2012).

சேது படத்தில் முதலில் அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கும் கதாநாயகன் விக்ரம் பின்னர் தலையில் தாக்கப்பட்டு சித்தம் கலங்கி,  கருகி, கரைந்து, மொட்டைத்தலையும் சீரழிந்த தோற்றமுமாக காட்சியளிக்கும் போது நம்மையறியாமலேயே  நம் கண்களில் துளிர்க்கும் கண்ணீர்..!. "ந‌ந்தா" படத்தின் இறுதிக்காட்சியில் தற்போது சிங்கமாய் கர்ஜிக்கும் அன்றைய அமைதி நாயகன் சூர்யா தன்னை புற‌க்கணித்து ஒதுக்கிய தன் தாய்  அவர் கையால் ஊட்டும் விக்ஷம் கலந்த உணவை தெரிந்தே தன் நீலக்கண்கள் விரிய வாங்கி உண்பாரே, அப்போது ஏற்படும் மனவலி..! அது மட்டுமா "நான் கடவுள்" படத்தின் பெயர் திரையிடப்படும் பொழுது காட்டப்படும் காட்சிகளில் ஒரு காட்சி, முடமான ஒரு பிச்சைக்காரப் பெண்மணியை வில்லன் இடுப்பில் எட்டி உதைக்க அவர் சரிந்து விழுவார் பாருங்கள்...!, அந்த கணத்தில் அது சினிமா என்பதையும் மற‌ந்து அந்த வில்லனை எட்டிப்பிடித்து நாலு அறை விட கைகள் பரபரக்கும். தடுக்க முடியவில்லையே எனும் தாக்க‌ம் (இதற்குமேல் இந்தப் படத்தைப் பார்க்க இதயத்தில் வலுவில்லையென‌  எழுந்து ஓடிவந்துவிட்டது கூடுதல் தகவல்..! )


இப்படியான படங்களின் காரணகர்த்தாவான பாலா அண்மையில் தந்த படமே "பரதேசி". இப்படத்தைப்பற்றி நிறைய கூறலாம், ஆனால் அது என்னில் ஏற்படுத்திய வேறு பாதிப்புகளை பதிவு செய்யவே இந்தப் படைப்பு. ஒப்பந்தக்கூலிகளின் அவல வாழ்க்கையையும், அவர்களின் கண்ணீர் காவியங்களையும் பதிவு செய்த இப்படத்தை திரையில் காணும் போது மனக்கண்ணில் தெரிந்தவை யாவும், எமது மூதாதையர், ச்ஞ்சிக்கூலிகளாய் இந்நாட்டிற்கு கொன்டுவரப்பட்ட எமது பாட்டனின் பெற்றோர், அவர்களின் வாரிசுகளாய் இந்நாட்டிற்கு வளமை சேர்க்க இரத்தமும் வியர்வையும் சிந்திய எமது பாட்டன் பாட்டிமார், அவர்களைத்தாண்டி எமது பெற்றோர்களும் ஓரளவிற்கு தோட்ட வாழ்க்கைக்கு தங்கள் பங்கை வித்திட்ட பின்னர் தானே இரப்பர் தோட்டங்களுக்கான வர‌வேற்பு குறைய கைமாறிய தோட்டங்களில் இருந்து மேம்பாட்டாளர்களால் மனிதாபிமானமின்றி வெளியேற்றப்பட்டனர்.அவர்களே மனத்திரையில் முழுமையாய் இடம்பிடித்துக் கொண்டனர்.  

தோட்டங்களை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் அவல வாழ்க்கையை யார் கருத்தில் கொன்டது ? இன்று ஊடகங்களிலும், காட்சிகளிலும் இந்தியரல்லாதோர் பால்மரக்கத்தியைப்பிடித்துக்கொன்டு "போஸ்" கொடுக்கின்றனர், ஏதோ பால்மரத்தையே தாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்பதைப்போல..! நாமும் பார்த்து ரசித்துக்கொன்டுதான் இருக்கிறோம்..! இந்நாட்டின் இரப்பர் சரித்திரத்தின் மூலமும் முடிவும் யாரென்பதை அறிந்து வைத்துக்கொன்டே .. !

அன்று அட்டைக்கு இரத்த தானம் செய்து பல சமயங்களில் பாம்பு, பூரான் மலேரியாக்கொசு என பலவற்றுக்கும் உயிர்த்தியாகம் செய்து மீண்ட இந்த சமுதாயத்தை இன்று மீண்டும் தோட்டப்புரத்திற்கு செல்லலாமே என செல்லமாய் சீண்டும் நமது சமுதாய தலைவர்கள் சொல்வதைக்கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை..! ஒரே தமாக்ஷா இருக்குது போங்க...!

இனிவரும் 2014 எல்லோருக்கும் ஏற்றம் தரும் ஆண்டாய் மலர்ந்திட "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"  

    

Thursday, October 10, 2013

டாக்டர் மு.வ நினைவு நாளும் நமது இளைய தலைமுறையினரும்



தமிழ்கூறு நல்லுலகம் மறக்கவியலா மாபெரும் இலக்கியவாதி, தமிழ்ப்  பேராசிரியர் டாக்டர் திரு.மு.வ. அவர்களின் நினைவு நாள் இன்று (10/10/1974).

கண்ணைவிட்டுப் பிரிந்தாலும் கருத்தை விட்டு அகலாது, மண் விட்டு  மறைந்தாலும் மனதை விட்டு மறையாது இன்றும் தமது படைப்புகளின் வழி தமிழ் வாசகர்களின் இதயங்களில் சிம்மாசன‌ம் இட்டு அமர்ந்திருப்பவர் மு.வ என அன்போடு அழைக்கப்படும் டாக்டர் மு.வரதராசனார்  என்றால் அது மிகையல்ல‌. அவரைப் பற்றி தமிழ் கற்றோர் யாவரும் ஓரளவு அறிந்தே வைத்திருப்பர். இருப்பினும் என்றும் வற்றாத இலக்கியச் செல்வங்களையும், தனிமனித வாழ்வியல் மற்றும் சமூகம் சார்ந்த தத்துவங்களையும், சீர்திருத்தக் கருத்துக்களையும், தமது கதாமாந்தர்களின் வாயிலாக இப்படி நாமும் நல்வாழ்வு வாழவேனும் எனும் வேட்கையை வாசகர்களின் மனதில் ஏற்படுத்தியவருமான டாக்டர்.மு.வ அவர்களையும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் ஓரளவேனும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.

தோற்றம்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியவாதி திரு.மு.வா
ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரிலே திரு.திருமதி முனிசாமி  அம்மாக்கண்ணம்மாளுக்கு 25‍-4-1912 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரின் முதற்பெயர் திருவேங்கிடம் என்பதாகும், எனினும் தாத்தாவின் பெயர் பேரனுக்கு எனும் மரபுவழி "வரதராசன்" எனும் பெயர் இவ‌ருக்கு சூட்டப்பட்டது.

இவர் சிற‌ந்த தோற்ற‌ப் பொலிவும், புன்னகை பூத்த வதனமும், அன்பும், அறிவும் பொழியும் கண்களுமாக விளங்கியவர்.   அது மெய்யென்பது அவரது புகைப்படங்களை காணும் பொழுது புலனாகிற‌து.

இவர் நல்ல மனமும், பண்பட்ட நெஞ்சமும், இழப்புகளை எண்ணி வருந்தாத மனப்போக்கும். நேரத்தை கண்ணெனப் போற்றும் தகைமையும், கடமை உண‌ர்வில் சிறந்தும்  விள‌ங்கியவர்.

கல்வி
இவர் தமது ஆரம்பக்கல்வியை வேலத்திலும், வாலாசாவிலும் முடித்து திருப்பத்தூரில் தமது உயர்கல்வியை கற்றார். தொடர்ந்து முருகய்ய முதலியாரிடம் தமிழ் கற்று தமிழ்ப் புலவர் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றார், அதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு தமிழ்த் தேர்வில் சென்னையிலேயே முதல் நிலை மாணாக்கராக தேறி  ரூ.1000 திருப்பனந்தாள் பரிசை வாகை சூடினார். 1939ல் பி.ஓ.எல் பட்டமும், 1944 இல் எம்.ஓ.எல் பட்டமும் பெற்றார். இறுதியாக 1948 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன் முதலாய் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றார்.

இவர் 1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரியில் இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) எனும் சிற‌ப்புப் பட்டத்தை முதல் முறையாக பெற்ற தமிழறிஞர் எனும் பெருமை கிடைக்கப் பெற்றார்.

இவர் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார்.

தொழில்
1928ல் தாலுகா அலுவலகத்தில் ஒரு எழுத்தராக மு.வ தமது பணியைத் துவங்கினார்.அதன் பின்னர் ஆசிரியப்பணியில் கால் பதித்து நகராட்சி உயர் நிலைபள்ளி ஆசிரியர்(1935), பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் (1939-1944) வரை பணியாற்றினார்.

1945 ஆம் ஆண்டு இவர் தாம் விரிவுரையாளராக பணி புரிந்த பச்சையப்பன் கல்லூரியிலேயே தமிழ்த் துறைத் தலைவராக பதவி வகித்தார்.

தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துணைப்பேராசிரியர்
பதவி(ஓராண்டு) வகித்த பின்னர் (1961‍-1974) வரை மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவராகவும் இறுதியில் 1961-1974 வரை மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் சிற‌ப்பாக பணியாற்றியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை
இவர் தமது மாமா மகள் இராதா அம்மையாரை 1935 ஆம் ஆண்டு திருமண‌ம் புரிந்து கொன்டார். இவ்விணையருக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி என மூன்று செல்வங்கள், அவர்கள் மூவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருவதாகவும் அறியப்படுகிற‌து.


தமிழ்த்தொண்டு
தமிழ் இலக்கிய வானில் என்றும் மங்காத சூரியனாகப் பிரகாசிக்கும் திரு. மு.வ அவர்கள் மிகச்சிற‌ந்த 13 நாவல்கள், சிறுகதைகள், சிந்தனைக்கதைகள், நாடகங்கள், கட்டுரை நூல்கள், இலக்கியப் படைப்புகள், சிறுவர் இலக்கியங்கள், கடித இலக்கியங்கள், பயண இலக்கியங்கள், இலக்கிய வரலாறு, மொழியியல் படைப்புகள், வாழ்க்கை வரலாறுகள், ஆங்கில நூல்கள், சிறுவர் இலக்கண நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு நூல்கள் என எண்ண‌ற்ற எழுத்துப்படிவங்களை பாங்குற வடிவமைத்துப் பாருக்குத் தந்தவர், மக்கள் படித்துப் பயனடையச் செய்தவர்.

தமிழன்றிப் பிற‌மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன,

இவரின் சிற‌ந்த படைப்புகளுள் ஒன்று "அகள் விள‌க்கு" புதினம். இரு நண்பர்களின் வாழ்வை மையமாக வைத்து உருப்பெற்ற காவியம். அவர்களில் ஒருவர் தமது சிற‌ப்புகளை தவறாகக் கையாண்டு இறுதியில் சோகமான முடிவை அடைவதைச் சொல்லும் அற்புத எழுத்தோவியம். இப்படைப்பு ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும், எப்படி வாழக்கூடாது என்பதையும் இரு கதாமாந்தர் வாயிலாக விளக்குகிற‌து. இந்நாவல் இந்திய ஜனாதிபதியின் "சாகித்திய அகாடமி விருது" பெற்றது. மிக மிக அருமையான நெஞ்சைத்தொடும் நாவல். ஆழ்ந்து வாசிப்பவர்களை முடிவில் நிச்சயம் அழவைத்துவிடும் நாவல்.

இவரின் ஏனைய எழுத்துச் சித்திரங்களான "கள்ளோ காவியமோ" (இல்லற வாழ்விற்கு வழிகாட்டியாகத் திகழும் நாவல்), அரசியல் அலைகள், மொழியியற் கட்டுரைகள் ‍ஆகியவை சென்னை அரசாங்கத்தின் பரிசுகளை வென்றுள்ளது.

இவையன்றி இவரின் "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்", "மொழி நூல்", "கள்ளோ, காவியமோ" ?, "விடுதலையா"? "அரசியல் அலைகள்", "ஓவச் செய்தி" ‍ ஆகிய படைப்புகள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்கள் பெற்றவையாகும்.

இவர் கைவண்ணத்தில் 1948 இல் பொதிகைப் பதிப்பகம், கடலூரிலிருந்து திருவள்ளுவர் அல்லது வாழக்கை விளக்கம் என்னும் நூல் வெளியீடு கண்டது இந்நூலுக்கு  தமிழறிஞர் திரு வி.க அவர்கள் தமது முன்னுரையில் " வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக் கொணர்ந்தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சின்றும் அரும்பும் கருத்து சிந்தனைக்குரியது" என சிறப்பித்து கூறியிருக்கிறார்.

1949 இல் சைவசித்தாந்த நூற் பதிப்பகத்தின் வாயிலாக திருக்குறள் தெளிவுரை வெளியிடப்பட்டது. இவரின் படைப்புகளில் மிகவும் பிரபலமானதும், வணிக ரீதிரியில் மிகப்பெரிய வெற்றியையும் ஈட்டியது இவரின் திருக்குறள் தெளிவுரை நூலாகும். பல பதிப்புகள் கண்ட இந்நூலில் தற்சமயம் கைவசம் இருப்பது 110 வது பதிப்பு...!(1991). எளிமையாகவும் தெளிவாகவும் படைக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். பள்ளிச்சிறார்களும்  திருக்குறளை எளிதில் வாசித்து உணர்ந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்டிருப்பது இப்படைப்பின் தனிச் சிறப்பாகும்.

 மறைவு
தமது 62 அகவைக்குள் 85 நூல்கள் இயற்றி தமிழுக்கு சிற‌ந்த தொண்டாற்றிய மு.வ. அவர்கள் தமது 10‍-10-1974 (இன்றோடு இவர் மறைந்து 39 ஆண்டுகள்) நாள‌ன்று  சென்னையில் இறைவனடி எய்தினார். அவர் புவிவிட்டு மறைந்தாலும், புகழுடம்போடு இன்றும் அவர் எழுத்தோவியங்களை வாசித்து பயன் பெறும் வாசக நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை இன்றளவும் இலக்கியவாதிகளால் அவர் விமர்சிக்கப்பட்டு வருவதிலிருந்தே நம்மால் உணர முடிகின்ற‌து. 

மு.வ ‍ - முன்னேற்றப்பாதைக்கு ழிகாட்டி என அவர் படைப்புகளை வாசித்து பயனடைந்தவர்களால் போற்றப்படுபவர். இவரின் ஒருசில படைப்புகளை வாசித்து பயனடைந்ததுண்டு. இப்பதிவின் நோக்கம் தமிழ் இலக்கிய வானில் என்றும் ஒளிவீசும் நிறைமதியான அறிஞர் மு.வ அவர்களை நினைகூர்வதோடு....




இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் நம் பொருளாதார, அரசியல், கல்வி நிலைகள் வருத்தத்திற்குரிய நிலையில் இருப்பது யாவரும் அறிந்ததே. இதன் விளைவாக‌ நமது இளைஞர்கள்  வன்முறைக்கலாச்சாரத்தில் நாட்டம் கொன்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்டு துப்பாக்கிக்குண்டுகளுக்கு நாளும் இரையாகி வருவதும் நாமறிந்த சங்கதிகளே..!

இருப்பினும் புற்றீசல்களாய் புற‌ப்பட்டு, கரையான்களாய் நம்மினத்தை அழிக்கும் இந்த பெரும் பிரச்சனையை களைந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம்..!   நம் இனத்தை , கலாச்சாரத்தை, பண்பாடு, மொழி ஆகியவற்றை நாளை தாங்கப்போகும் நமது தூண்களை காலனுக்கு பலியாக்கிக் கொன்டு வரும் இச்சூழ்நிலைகளைத் தடுக்க  நமது பங்காக நாமும் சில கடமைகளை ஆற்ற வேண்டும். நாம் படித்து, நல்ல தொழில் புரிந்து, நிறைய பண‌ம் ஈட்டி பெரிய வீடு,  கார், கையிலே பணம் என எல்லா வசதிகளோடும் வாழ்ந்து விட்டால் மட்டும் போதாது. இதன்வழி மட்டும் நம் வாழ்க்கை மேம்பட்டதாக, பாதுகாப்பானதாக அமைந்துவிடாது,  நாளை நமது இளைய தலைமுறையினர் கெளரவமாக இந்நாட்டில் வாழ வழி பிற‌ந்தும் விடாது.

இதைக்களைய நாம் செய்யவேண்டிய பல காரியங்களுள் மிகப்பெரிய நற்காரியம் இள‌ம்பிராயத்திலேயே நமது இளைய தலைமுறைகளை நன்னெறிப்படுத்துவதாகும். அதற்கு ஏதுவாக நற்பண்புகளை ஊட்டும், ஒழுக்கத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் மு.வ போன்ற அறிஞர்களின் படைப்புகளில் அவர்களை ஈர்ப்புகொள்ளச் செய்ய வேண்டும், அதற்கு முதலில் அவர்கள் வளமான தமிழை நலமாகக் கற்க‌, தமிழ்ப்பள்ளியில் பயிலவேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும்.  இந்த சமுதாய‌மும் ஒருங்கிணைந்து அதற்காக ஆவன செய்யவேண்டும்.

சீனர்கள் பல வழிகளில் ஏன் தாங்கள் அருந்தும் மதுவின் வழிகூட‌ தங்கள் இனப் பள்ளிகளுக்கு பங்களிப்பு செய்கின்றார்கள், நாம் இன்றைய நமது தலைமுறையை நன்னெறிகள் ஊட்டி நல்வழிப்படுத்த  இதுபோன்ற‌ வழிகளைக் கையாளத் தயங்கக்கூடாது. நமது இளைய சமுதாயத்தை மீட்டெடுப்பது நமது கடமை. தடுக்க மறந்து வாளாவிருந்தால் ஒரு நாள் நமது இளைய தலைமுறையின் வன்முறை நம்மையே பாதிக்கக்கூடும், அல்லது நாளை நமது இள‌வல்களும் வன்முறையாள‌ர்களாக வடிவெடுக்க அது வகை செய்யக்கூடும்.




Friday, August 2, 2013

வேற்றுமொழிப்பள்ளிகளும், இந்தியப் பெற்றோர்களின் மனோநிலையும்...!




அண்மையில் நாட்டில் நடைபெற்ற‌ ஒரு சம்பவம் இந்நாட்டின் ஒட்டுமொத்த இந்தியர்களையும் புண்படுத்தியதோடு ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது. எஸ்கே  ஸ்ரீபிரிஸ்தானா  எனும்  தேசிய மொழிப்பள்ளியில்  இந்திய மற்றும் சீன மாணவர்களை கழிவறை அருகே (உடை மாற்றும் இடமாம்!?) உணவருந்தச் செய்த கொடுமை சம்பந்தப்பட்ட ப‌ள்ளி ஆசிரியர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது! இக்குற்றச்செயலை புரிந்தவர்களுக்கு சரியான தண்டனை கோரி போராட்டத்தில் பொதுமக்கள்! வழக்கம்போல் பேசாமடந்தைகளாய் அரசியல்வாதிகள்!.

 அது ஒரு தேசிய மொழி ஆரம்பப்பள்ளி, அதில் பயிலும் மாணவர்கள் 7 லிருந்து 12 வய‌துக்குட்பட்ட சிறுவர்கள். சொந்தமாக முடிவெடுக்கும் வாய்ப்பற்றவர்கள் சிறுவர்கள், அவர்கள் தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொற்படி நடக்கவேண்டியவர்கள். அவர்களை சரியான முறையில் பெற்றோரும், ஆசிரியர்களும் வழிந‌டத்துவதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல! . நாம் அனைவரும் அடங்கிய இந்த சமுதாயம், நம்மை ஆளும் இந்நாட்டின் அரசாங்கம் ஆகிய அனைவருக்கும் அவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. ஏனெனில் இன்றைய சிறுவர்களே நாளைய இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ண‌யிப்பவர்கள். வருங்காலத்தில் அவர்கள் நல்ல முறையில் முன்னேறி இந்நாட்டை வளமான பாதையில் வழி நடத்தவும் முடியும், குற்றவாளிகளாகவும், வன்முறையாளர்களாகவும் மாறி இதே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லவும் முடியும்...! இந்தச் சிறுவர்களுக்கு தக்க நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். அதற்கு அவர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் முறைப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

இச்சம்பவம் பற்றி யோசிக்கையில் சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வேற்றுமொழிப் பள்ளி ஒன்றில் பயின்ற ஓர் இந்திய மாணவனுக்கு நிகழ்ந்த கொடுமை நினைவுக்கு வந்தது. வெளியில் வராத செய்தி இது.

அது ஒரு இந்தியர்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதி அங்கே பல குடும்பங்களோடு காவேரி அக்காவும் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரின் கணவர் ஒரு ராணுவ அதிகாரி, சரவாக்கில் பணியாற்றிக்கொன்டிருந்தார். வருடத்தில் ஓரிரு முறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள், மூத்தவனுக்கு 8 வயது, இளையவனுக்கு 7 வயது.

காவேரி அக்கா, குள்ளமாக, சற்று தடித்த தோற்றத்துடன் முன்பற்கள் இரண்டும் சற்று தூக்கியவாறு இருப்பார், பழகுவதற்கு இனியவர். அவரின் மூத்த மகன் நல்ல கொழு கொழுவென்று தாட்டிகமாக வீரனைப்போல் இருப்பான், ஆனால் இளையவனோ மிகவும் சிறிய உருவத்துடனும், பரிதாப முகத்துடனும் காட்சியளிப்பான். அவனுக்கு சரியாக பேசக்கூட வராது. திக்கி திக்கித்தான் ஓரிரு வார்த்தைகள் பேசுவான், பயந்த‌ கண்கள், இதழ் ஓரங்களில் எப்போழுதும் எச்சில் வழிந்து கொன்டிருக்கும்.. அந்த இரு குழந்தைகளையும் காவேரி அக்கா அவர் கணவர் விருப்பப்படி சற்று தொலைவிலிருந்த சீனப்பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டிருந்தார். மூத்தவன் அப்போது இரண்டாம் ஆண்டில் பயில, இளையவன் முதலாம் வகுப்பில்.

ஒரு நாள் அப்பள்ளியில் பயிலும் சில துக்ஷ்ட சீன‌மாணவர்கள் மூத்தவனுக்குத் தெரியாமல் அவன் தம்பியை அப்பள்ளியின் ஒதுக்குப்புற‌மான இடத்துக்கு அழைத்துச் சென்று அவனிடமிருந்த பண‌த்தைப் பிடுங்கிக்கொண்டு அவனை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.  மறைவான‌ பகுதியாதலால் அச்சிறுவனின் அவலக்குரல் யாருக்கும் எட்டவில்லை, அவனை சரமாரியாக  தாக்கிய பின் அந்த தீயவர்கள் அந்த அப்பாவி சிறுவனை அருகிலிருந்த பள்ளியின் சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டு விட்டு ஒன்றும் நடவாதது போல் அவரவர் வகுப்புக்கு சென்றுவிட்டனர்.

அந்த கால்வாய் அகலமானது, ஒரு வளர்ந்த மனிதரின் இடுப்பள‌வு ஆழம் கொன்டது, எப்போதும் அதில் கொஞ்சம் கருமையான அழுக்கு நீர் தேங்கி இருக்கும், அந்த கால்வாயில் விழுந்த அந்த சிறுவனின் இடது கை முறிந்து போனது, தலையின் முன்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கால்வாயில் சுருண்டு விழுந்து கிடந்தான் அச்சிறுவன், அவன் நல்ல‌ நேரம், அப்போது அவ்வழியாக அந்த கால்வாயை சுத்தம் செய்ய வந்த அப்பள்ளியின் தோட்டக்காரர் (இந்தியர்) கால்வாயில் அழுதவாறே கிடந்த சிறுவனைக் கண்டு பதறிப்போய், உடனே கால்வாயில் இறங்கி அவனை தூக்கிக்கொன்டு வெளியே வந்தார்.

உடல் முழுக்க காயங்களோடு, முகம் வீங்கி, உதடு கிழிந்து கிடந்த அச்சிறுவனை அழுக்கு, நாற்றம் எதையும் பாராது, நெஞ்சோடு அள்ளி அணைத்துக்கொன்டு தலைமை ஆசிரியர் அறைக்கு கொன்டு சென்றார், அங்கே அப்பள்ளியின் தலைமை ஆசிரியன், அக்குழந்தை உயிரோடு இருப்பதை உறுதி செய்து விட்டு, "இன்னும் கொஞ்ச நேரத்தில் பள்ளி முடிந்துவிடும் பெற்றோர் வந்து கவனித்துக்கொள்வார்கள் எனவே அதுவரை அவனை அவனுடைய வகுப்பறையில் விட்டுவிடு எனப் பணித்திருக்கிறான்..! (ஒரு வேளை தன் சொந்த இனமான சீனக்குழந்தையாயிருந்தால் அவன் அப்படியொரு முடிவை எடுத்திருப்பானா என்பது தெரியவில்லை ! ) தோட்டக்காரர்  திகைத்துப்போனார், மீண்டும் குழந்தையை தூக்கிக்கொன்டு அவனுடைய முதலாம் வகுப்பறையை தேடிக்கொன்டு ஓடினார், அவனின் வகுப்பாசிரியை எலலோருக்கும் மேல்! அவள் அச்சிறுவனின் மேலுள்ள சாக்கடை அழுக்கால் வகுப்பறை நாறிவிடும் எனக்கூறி அவனை பள்ளி விடும்வரை பள்ளி உணவுச்சாலை (காண்டீனில்) விட்டுவிடும்படி கூறியிருக்கிறாள், யாருக்கும் அவனுக்கு உதவவேண்டும் , முதலுதவிச்சிகிச்சை வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை, என்ன காருண்ய மனமோ புரியவில்லை! சே என்றாகிப்போனது தோட்டக்காரருக்கு, இருந்தும் அச்சிறுவனை தூக்கிக்கொன்டு உண‌வுச்சாலைக்கு கொன்டு சென்றார், அங்கிருந்த நாற்காலியில் அமர்த்தி தனது துவாலையால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை துடைத்துவிட்டார். அவன் காயங்களிலிருந்து நிற்காமல் வழிந்து கொன்டிருந்த இரத்தத்தை சுத்தம் செய்தார். பள்ளி விடும் வரை பொறுமையோடு அவன் அருகில் அமர்ந்து அவனை பாதுகாத்தார் அந்த நல்லவர்..!

பள்ளி விட்டதும், அவன் அண்ணன் வெளியில் வந்து தன் சகோதரனின் நிலையைக் கண்டு அதிர்ந்துபோய்  நின்றான். அவர்களை அழைத்துச்செல்ல வந்த காவேரி அக்கா தனது மகனின் நிலையைக் கண்டு பதறிப்போனார். உடனடியாக அவன் வகுப்பாசிரியரை சென்று கண்டார், அவர் படிப்பறிவற்றவர், தமக்குத் தெரிந்த ஓரிரு மலாய் வார்த்தைகளைக்கொன்டு "அப்பா பசாய்"? (என்ன நடந்தது) ? என்று வினவ, கொஞ்சமும் அக்கறையில்லாமல் "தத்தாவ்" (தெரியாது) எனக்கூறி கதையை முடித்துவிட்டாள் அந்த பொறுப்பற்ற வகுப்பாசிரியை...! காவேரி அக்காவுக்கு என்ன நடந்ததென்று புரியவில்லை குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், கீழே விழுந்து விட்டான் எனக்கூறி உடைந்திருந்த மண்டை காயத்திற்கு தையலும், முறிந்த‌ கைக்கு கட்டும் போடப்பட்டு சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டான் அச்சிறுவன். சட்டம் தெரியாத, உலக நிலவரங்கள் புரியாத காவேரி அக்கா அமைதி காத்து விட்டார், அதே இன்று போலிருந்தால், முகநூல், ஊடகங்கள், நாழிதழ்கள், காவல்துறை புகார் என சரியான பதிலடி அந்தப் பள்ளிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் மதியம் வீட்டிற்கு வந்த காவேரி அக்கா நடந்த சம்பவத்தை பற்றி கூறினார், அதை கேட்க மிகவும் வேதனையாக இருந்தது, அதோடு அப்பிரச்சனையை விட்டு விட்டீர்களா அக்கா ? என  பொறுமையிழந்து நான் கேட்க, காவேரி அக்கா , இல்லை உடனே சின்னவனை( தனது இளைய மகனை அவர் அப்படித்தான் செல்லமாக அழைப்பார்) அந்த சீன பள்ளியிலிருந்து நிப்பாட்டி தமிழ்ப்பள்ளியிலே சேர்த்துட்டேன் என்றார், " ஓ அப்ப  ரெண்டு பேரும் இப்ப தமிழ்ப்பள்ளியில படிக்கிறாங்களா அக்கா ?  என ஆர்வத்துடன் கேட்க அவர் கொடுத்தார் பாருங்கள் ஒரு பதில்! என்னை திக்கு முக்காடச் செய்து விட்டது அவர் சிந்தனை !

"இல்லை, இல்லை பெரியவன் அதே சீன ஸ்கூல்லயே தான் படிக்கிறான்...! என்ன இருந்தாலும் சீனப்பள்ளியில் படிச்சா சீனங்களோடு கலந்து சீக்கிரமா முன்னுக்கு வரலாம் இல்லையா ?"
நான் வாயடைத்துப்போனேன், என்னே ஒரு தன்மானம்! சுயகெளரவம்!
வீரம்! விவேகம்! நமக்கு...!!!!
  

             
   
சிவனேசு,
பினாங்கு
 

Friday, July 3, 2009

சில நேரங்களில் சில மனிதர்கள்...


ஆதரவற்ற குழந்தைகள், இவ்வுலகில் ஆணும் பெண்ணும் மனமொத்த இல்வாழ்க்கையில் இணைந்து மகிழ்ந்து, மழலைகளை ஈன்றெடுத்து, அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி எனும் தேவைகளை நிறைவேற்றி, கண்ணை இமை காப்பதைப்போல , கண்ணும் கருத்துமாய் தங்களது வாரிசுகளை வளர்த்தெடுக்க வேண்டியது கட்டாயம். அத்தகைய மானிடர் இயற்கைக்கும் தான் கொன்ட மனிதப் பிறவிக்கும் பயன் விளைவித்தவர் ஆகிறார். ஆனால் இயற்கைக்கு மாறாய் எத்தனையோ விடயங்கள் இம்மண்ணில் இடம்பெறுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த நவநாகரீக உலகில் அதரவற்ற குழந்தைகளின் அதிகரிப்பு.

நாகரீகம் எனும் போர்வையில் எல்லை மீறும் சில பெண்கள் திருமணத்திற்கு முன்பே தவறு செய்துவிடுகின்றனர்.ஆணின் தவறு சட்டையில் ஒட்டிய தூசைப்போல், தட்டிவிட்டு நடந்துவிட முடியும், ஆனால், ஒரு பெண் தவறு செய்வதை, இயற்கையும் மன்னிப்பதில்லை! பத்து மாதம் கழித்து குழந்தை என அவள் கைகளில் தந்துவிடுகிறது,(அழிக்கப்படும் குழந்தைகளும் இதில் அடக்கம்) அந்தப் பெண் பொருப்பேற்று வளர்த்தால் அது அவள் குழந்தை, அதையே அவள் வேண்டாம் என்று விலக்கி விட்டால் அது ஆதரவற்ற குழந்தை! இது மட்டுமன்றி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தந்தை அல்லது தாய் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் நிர்க்கதியாக்கப்பட்ட குழந்தைகள்!மற்றும் தாய் தந்தையரை காலனிடம் இழந்து உறவுகளாலும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள், இது போன்ற பல சூழ்நிலைகள் ஆதரவற்ற குழந்தைகளை உருவாக்குகிறது!

இக்குழந்தைகள் பல சமயங்களில் அரசு காப்பகங்கலில் வளர்க்கப்படுகின்றனர், ஆனால் வேளைகளில் இக்குழந்தைகள் தனியார் காப்பகங்களிலும் வளர்க்கப்படுகின்றனர், நான் இங்கே பகிர்ந்து கொள்ளப்போவது ஒரு தனியார் காப்பகத்தைப்பற்றி,
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் என் உறவினர் குடும்பம் அந்தக்காப்பகத்திற்கு என்னை அழைத்துச்சென்றனர்.அன்று அவர்கள் அங்குள்ள குழந்தைகளுக்கு இரவு உணவளிக்க ஏற்பாடாகி இருந்தது. அழகான ஒரு பெரிய கட்டிடம், நடுத்தர வயது படித்த காப்பகத்தலைவர், வெள்ளை புடைவை தேவதைகளாய் செவிலியர்கள், நிறைய குழந்தைகள் என எதிர்பார்த்துச் சென்ற எனக்கு பெருத்த ஏமாற்றம் + ஆச்சர்யம்.

அது ஒரு பழமையான மலிவு வீடு, துருப்பிடித்த வெளிவாசல் கதவு, பழைய வீட்டுத்தளவாடங்கள், என மிக மிக எளிமையாக அந்த வீடு அமைந்திருந்தது, ஒரு வயதான பெண்மணி அங்கே இல்லத்தலைவியாக!, ஒரு நடுத்தர வயது செவிலித்தாய், அழகழகாய் 3வயதிலிரும்து 17 வயது வரை நம் இனக் குழந்தைகள் சுமார் '20 பேர்.

உறவினர்கள் தங்கள் சமைத்து எடுத்து வந்த சைவ அயிட்டங்களை குழந்தைகளை வரிசையிலமர்த்தி பறிமாறினர். வளரும் பிள்ளைகள் அல்லவா! சைவ உணவு செல்லுபடியாகவில்லை, ஒரு சில குழந்தைகளே மறுபடி கேட்டு உண்டனர், ஏனைய பிற குழந்தைகள் விட்டதே போதும் என ஒரு முறை சாப்பாடோடு எழுந்து விட்டனர்.

குழந்தைகளையும். பெரியவர்களையும் காணச்செல்கையில் வெறுங்கையோடு போகக்கூடாது என்பர்! எனவே என்னால் இயன்றவரை சில சிற்றுண்டிகளை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாய் தயாரித்து அவர்களுக்கு
அன்பளிப்பாய் எடுத்துச்சென்றிருந்தேன், அதை உணவு உண்டுமுடித்த பின்னர் அவர்களுக்கு ஒவ்வொன்றாய் வழங்கி அவர்கள் முகங்கள் மலர்வதைக்கண்டு நானும் சந்தோசப்பட்டுக்கொன்டேன்.
விருந்து முடிந்து புறப்படுவதற்கு முன்னால், அந்த இல்லத்தை நடத்தும் பெண்மணியை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொன்டிருந்தேன். அவர் தான் சொந்தமாக அந்த இல்லத்தை நடத்துவதாக குறிப்பிட்டார், மேலும் பல அண்டை அயாலார்கள் தமக்கு சிறந்த ஒத்துழைப்பு நல்குவதாகவும், அதிலும் பல சீன அங்காடி விற்பனையாளர்கள், வியாபாரத்தில் மீந்துவிடும் உணவுகளை குழந்தைகளுக்கு எடுத்து வந்து தருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு எனக்கு மிகவும் மனச்சங்கடம் உண்டானது, என்ன செய்வது, பாவம் குழந்தைகள்! என்ன செய்யலாம்? மனம் ஆழ்ந்து யோசிக்கையில்

அந்த‌ப் பெண்மணி, வெளியிலிருந்து வ‌ரும் நன்கொடைக‌ளை எதிர்பார்ப்ப‌தாக‌வும், ந‌ல்ல‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் வீட்டு விசேச‌ங்க‌ளுக்கு இந்த‌க்குழந்தைக‌ளுக்கு உணவளிப்பதோடு, நல்ல உடை, அவர்கள் பள்ளிச்செலவுக்கான தொகை போன்றவற்றை மனமுவந்து அளித்தல் நலம் எனவும் குறிப்பிட்டார். அவர் தெரிவித்த விடயங்களை உள்வாங்கிக்கொன்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

வீடு திரும்பிய பின்னரும் அக்குழந்தைகளுக்காக மனம் வருந்தியது, ஒரு யோசனை தோன்றவே, என் உற‌வினர் ஒருவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் உத்தியோகம் பார்ப்பது நினைவுக்கு வந்தது!, அவரை தொலைபேசியில் அழைத்து விவரங்களை கூறியவுடன் உதவி புரிய ஒப்புக்கொன்டார்.
அதன் பின்னர், அவர் தலைமையில், அங்கு பணிபுரியும் பல நல் உள்ளங்கள் ஒருங்கினைந்து ஏறக்குறைய 1000 ரிங்கிட் வரை நிதி திரட்டி, அக்குழந்தைகளுக்கு ஒரு பெரிய அசைவ விருந்து அளித்து,அந்த இல்லத்தலைவியிடம் நன்கொடையை ஒப்படைத்தனர். அதன் பின்னர் மாதம் மாதம் ஒரு சிறு தொகையை நன்கொடையாக வசூலித்து அக்குழந்தைகளுக்கு அளிப்பதாய் அனைவரும் ஏகமனதாய் தீர்மானித்துக்கொன்டனர்.
இந்த நல்ல முயற்சி சில காலங்களுக்கு தொடர்ந்தது.

நல்ல காரியங்களுக்கு இடையூறுகள் ஏற்படுவது சகஜமே, ஆனால் இந்த விடயத்தில் இடையூறு அவர்களுக்கு உதவ வேண்டிய நம்மவர்களாலேயே வந்ததுதான் பெரிய வருத்தம்! எல்லாம் நல்ல படியாக நடந்து கொன்டிருக்க, அது பொறுக்காத ஒரு புல்லுருவி, தன் சக பணியாளர்களிடையே ஒரு புரளியைக் கிளப்பி விட அது காட்டுத்தீயாய் பரவத்துவங்கியது!.

விடயம் என்னவென்றால், அதை நடத்தும் பெண்மணி வேற்று மதத்தைச் சார்ந்தவராம், அவர் குழந்தைகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இன்னும் இதுபோன்ற ஏனைய பிர வதந்திகளும் ஒன்று கூடி அந்த நல்ல முயற்சியை தரைமட்டமாக்கியது.

பார்த்தீர்களா, மனிதர்களின் குணத்தை, பாவ‌ப்பட்ட குழந்தைகளுக்கு உதவவேண்டிய கடப்பாடுடைய நாமே இவ்வாறு செய்யலாமா? வீதியீல் திரியாமல் நம் இனக்குழந்தைகளை தன் சொந்த வீட்டில் வைத்து, உணவு, உடை, உறைவிடம், கல்வி இவற்றை அளித்து பராமரிக்கும் அந்தப் பெண்மணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, இப்படித் தூற்றித் தெருவில் வைக்கலாமா?

சனாதன தர்மம் நமது சமய தர்மம் அல்லவா? எம்மதமும் சம்மதம்! என்பதெல்லாம் வெறும் வார்த்தையளவில்தானோ?என் சிற்றறிவுக்கு எட்டிய வரை வேளாங்கண்ணி மாதவுக்கு கோயில், நாகூர் ஆண்டவருக்கு கோயில் என எல்லா மதத்தையும் அனுசரித்து அரவனைக்கும் அன்பு மதம் அல்லவா நம் மதம்! அந்த மதத்தில் வந்த நாம், மதத்தின் பெயரைச்சொல்லி, உதவ வேண்டிய பிஞ்சுகளுக்கு கிடைக்கவிருந்த உதவியை இப்படித்தடுத்து நிறுத்தலாமா?

அதோ, அந்தக் குழந்தைகள் மீண்டும் மீந்துபோன உணவுகளுக்காக காத்திருக்கின்றார்கள்.......

Thursday, July 2, 2009

விவேகானந்தரின் வைர வரிகள் I

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்


எனது துணிவுடைய‌ இளஞர்காள் நீங்கள் அனைவரும், பெருங் காரியங்களைச் செய்ய பிறந்தவர்கள், என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குரைத்தலைக் கண்டு அஞ்சாதீர்கள்!


உம‌து நாடு வீர‌ர்க‌ளை வேண்டி நிந்கின்ற‌து. வீர‌ராகுக‌. ஒரு க‌ற்பாறையைப்போல் உறுதியாக‌ நிற்பீராக‌. மெய் எப்பொழுதும் வெல்கிற‌து.


ந‌ண்ப‌, அழுவ‌தேன்? உம‌க்குள் எல்லாச் ச‌க்தியும் உள்ள‌து. ப‌ல‌வானே உன‌து எல்லாம் வ‌ல்ல‌ இய‌ல்பை வ‌ர‌வ‌ழை. மூவுல‌கமும் உன் கால‌டியில் அம‌ரும். வெல்வ‌து ஆன்மா ஒன்றே. ச‌ட‌மன்று.


ப‌ல‌மே வாழ்வு, ப‌ல‌மின்மையே ம‌ர‌ண‌ம். ப‌ல‌மே இன்ப‌மும் நிலையான‌ அழிவ‌ற்ற‌ வாழ்வுமாம்.


ந‌மது ப‌ல‌மின்மையே ந‌ம்மிட‌ம் பொய்யும், க‌ள‌வும், கொலையும், வேறு ப‌ல‌ பாவ‌ச்செய‌ல்க‌ளும் இருப்ப‌தற்கு காரணமாம்.


நமக்கு வேண்டிய ஒரே பொருள் பலமே. உலகத்தின் நோய்க்கு மருந்தும் பலமே.


எழுந்து நில்லுங்கள். பலமுடையவராகுங்கள், தைரியமாயிருங்கள். வாழ்க்கையை உங்கள் பிரியப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.


எல்லா வில‌ங்குக‌ளிலும், எல்லாத் தேவ‌ தூத‌ர்க‌ளிலும் பார்க்க‌ ம‌னித‌னே உய‌ர்ந்த‌வ‌ன்.


நாம் போதிய‌ நெடுங்கால‌ம் அழுதாயிற்று. இனியும் அழ‌ வேண்டாம். எழுந்து நின்று ஆண்மையுட‌ன் போராடுங்க‌ள்.


நாம் ப‌ல‌ பொருள்க‌ளைப்ப‌ற்றிக் கிளியைப்போல் பேசுகின்றோம். ஆனால் செய‌ல‌ள‌விலில்லை. இத‌ன் கார‌ண‌ம் யாது? உட‌ற்ப‌ல‌வீன‌ம். இவ்வித‌ப் ப‌ல‌ம‌ற்ற‌ மூளையால் ஒன்றையும் செய்ய‌விய‌லாது.


நீதியாயிரு, தைரியமாயிரு, முழுமனதும் ஊன்றியவனாயிரு, பிறலாத ஒழுக்கமுடையவனாயிரு!


அறிவுக்குத் தொந்தரவு கொடாதெ, கோழைகளே பாவம் புரிவர். தைரியசாலிகள், பாவம் புரியார், ஒவ்வொருவரையும் நேசிக்க முயல்க.
வஞ்சனையால் பெரும்பணி எதனையும் ஆற்ற முடியாது அன்பாலும், சத்தியத்தாலும், பெரும் சக்தியாலுமே பெருங்காரியங்கள் நிறைவேறுகின்றன.


ஆ! நீங்கள் உங்களது இயல்பை மட்டும் உணர்வீரேல் நீங்கள் ஆத்மாக்களே, தெய்வங்களே!


நான் மெய்யைப் பின்பற்றி நிற்பவன், மெய் ஒருக்காலும் பொய்யோடு ஒன்று சேராது, சத்தியமே வெல்லும்!


இவ்வுல‌க‌ம் கோழை‌க‌ட்க‌ன்று. ஓட‌ முடியாத‌ வெற்றியையோ, தோல்வியையோ கோராதே!


பழிவாங்குதலைப்பற்றி ஒருக்காலும் நான் யோசிப்பதில்லை, பேசியதுமில்லை. எப்பொழுதும் பலத்தைப்பற்றியே பேசியுள்ளேன்.


எழுந்திருங்கள், உழையுங்கள், இவ்வாழ்வு எத்தனை நாள்? இவ்வுலகில் தோன்றிய நீங்கள் ஏதாகிலும் விட்டுச் செல்லுங்கள். அப்படிச் செய்யாவிடில் மிருகங்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?


கடலைப்பார். அலையைப்பாராதே. எறும்பிற்கும் தேவ தூதனுக்கும், எவ்வித வேற்றுமையையும் பாராதே. ஒவ்வொரு புழுவும் இயேசுவின் சகோதரனாகும்.


சிவ பெருமானுக்குப் பணி செய்ய விரும்புவோன், அப்பெருமானின் மக்கட்குப் பணி செய்ய வேண்டும்!



நம் வாழ்நாட்களில் பெரும் பாகம் துக்கம் நிறைந்ததாகும். என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விடயம். அதைத்தடுக்க எப்படி முயன்றாலும், அது வந்தே தீரும் என்பதையும் நன்கு அறிவோம்.



Wednesday, June 24, 2009

கண்ணதாசன் சிந்தனைகள் III

காற்றுக்கு இலைகள் அசைகின்றன,
மலர்கள் அசைகின்றன, ஆனால்
மலைகள் அசைவதில்லை!
பேசாம‌ல் இருப்ப‌து பெரும் திற‌மை, பேசும் திற‌மையைவிட அது மிக‌ப்பெரிய‌து! நிறை‌ய‌பேசுகிறவன் தன் வார்த்தைக‌ளாலேயே காட்டிக்கொடுக்க‌ப்ப‌டுகிறான். ச‌ள‌ச‌ள‌வென்று பேசுகிற‌வ‌ன், எவ்வ‌ள‌வு பெரிய‌ கெட்டிக்கார‌னாக‌ இருந்தாலும், சொற்பொழிவாள‌னாக‌ இருந்தாலும் த‌ன் ப‌ல‌வீன‌த்தைக்காட்டிக்கொள்கிறான், மெள‌னி முட்டாளாக‌ இருந்தாலும் ப‌ல‌சாலியாக‌க்காண‌ப்ப‌டுகிறான்.
ஒன்றைச்சொல்ல வேண்டும் என்று விரும்பி அதைச்சுருக்கமாக தெளிவுபடுத்துகிறவன் பெரிய மரியாதையைப்பெற்றுவிடுகிறான்.சிறிய விடயத்தைக்கூட‌ வளைத்து வளைத்து பேசுகிறவன் கேலிக்கு ஆளாகிறான். ஞானிகள் சில விடயங்களைக்கூறுகிறார்கள் அவை பொன்மொழிகளாகி விடுகின்றன‌. பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள் அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.
மெள‌னம் ஒரு மகத்தான ஞானம், அது தெய்வீகக்கலை. ஆரவாரங்கள் வெறும் மயக்கங்கள்." இவர் கொஞ்சம் பேச மாட்டாரா" என உலகை ஏங்கவிட வேண்டும், பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க‌ வேண்டும். சலனமற்ற மெளனம் பல அர்த்தங்கள் கொன்டது. பேசாமல் இருப்பவனே பெரிய விடயத்தைச்சொல்பவன், பேசிக்கொன்டிருப்பவன் "ஞானக்கிறுக்கன்"

ஏராளமான‌ வரிகளைக்கொன்ட இலக்கியங்களைவிட ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள் உலகைக் கவர்ந்து விட்டது. காலந்தோறும் துணைக்கு வருகிறது, நிலையான தத்துவதைச்சொல்கிறது.
மனிதர்களை விட பல மிருகங்களுக்கு அதிக வயது, அவற்றைவிட மரங்களுக்கு அதிக வயது, அவற்றைவிட மலைகளுக்கு அதிக வயது, காரணம் அவை பேசாமலும் அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே!

பி.கு : பல நேரங்களில் பேசாமலிருப்பது நன்மை என்றாலும் சில சமயங்களில் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டிய இடத்தில் பேசியே ஆக வேண்டும்.!

Monday, June 22, 2009

இளைய சமுதாய முன்னேற்றத்தில் பெற்றோர்!


இன்றைய இளைய சமுதாயத்தில் மலிந்து வரும் சமூகச்சீர்கேடுகளுக்கு பெற்றோர்களும் பெரும் காரணம்! ஆமாம், தங்கள் பிள்ளைகளின் தவறுகளுக்கு அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் உடந்தையாக இருக்கும் பெற்றோர்களை வேறெப்படி வகைப்படுத்துவது?

த‌ற்கால‌ச்சூழ‌லில் சில‌ர் திருமண‌‌மே வேண்டாம் என்கின்ற‌ன‌ர், சில‌ரோ திருமணம் முடித்தும் தங்கள் சுய வளர்ச்சிக்காக‌ குழந்தை வேண்டாம் எனும் முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்ற‌ன‌ர், ஏனைய‌ பிற‌ர்தான் வாழ்வில் இணைந்து குடும்பத்தை உருவாக்கி குழந்தைகளையும் பெற்றுக்கொள்கின்றனர். பெற்றோர்களாகும் இவர்களுக்கு முதலில் நமது பாராட்டுக்கள்!

எனினும் பத்து மாதம் சுமந்து பாலூட்டி, சீராட்டும் தாயாகட்டும், இரவு பகல் பாராது உழைத்து ஒடாய் தேய்ந்து குடும்பத்தை வழிநடத்தும் தந்தையாகட்டும், குழந்தைக‌ளை வ‌ள‌ர்ப்ப‌தில் முத‌ல் தெய்வ‌ங்க‌ளாகிய இந்த பெற்றோர்க்கு உள்ள‌ ப‌ங்கு அள‌விட‌ற்க‌ரியது. குழந்தைக‌ளை பெற்று, வ‌ள‌ர்த்து, கல்வியைத் தந்துவிடுவதோடு முடிந்து விடுவதில்லை இவர்களின் கடமை. தமது பிள்ளைகளை நாட்டிற்கும் வீட்டிற்கும் ஏற்புடைய‌ ந‌ல்ல‌ மாந்த‌ர்க‌ளாக‌ வ‌டிவ‌மைப்பதும் பெற்றோர்க‌ளாகிய‌ இந்த‌ சிற்பிகளே!

ஏன் இப்போதைய இளையோர்கள் புகை, ம‌து, போதை, தவறான உறவு, கொலை மற்றும் கொள்ளை போன்ற‌ தீய‌ப்ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளுக்கு வெகு விரைவில் அடிமையாகி விடுகின்ற‌ன‌ர்? ஆங்கிலேயன் கற்றுத்தந்த நற்பன்புகளைவிட அவன் விட்டுச்சென்ற "ம‌ஞ்ச‌ள் க‌லாச்சாரம்" ஏன் ந‌ம‌து இளையோரை பேயாய் பிடித்து ஆட்டி வைத்துக்கொன்டிருக்கிற‌து?

இன்றைய‌ இளையோர் ப‌ல‌ர் பிஞ்சிலே ப‌ழுத்து, பழமாகும் முன்பே வெம்பிப்போய்விடுகின்ற‌ன‌ர். பல‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளைப் புரிகின்ற‌ன‌ர், அத‌ற்குப் ப‌ல‌னாய் ப‌ல‌ த‌ண்ட‌னைகளாக சிறை‌வாச‌ம், நோய்க‌ள், ம‌ர‌ண‌ம் போன்ற‌‌வற்றை‌ப்ப‌ரிசாக‌ பெற்றுக்கொள்கின்ற‌ன‌ர்! பெற்ற‌வ‌ர்க‌ளைப்ப‌ரித‌விக்க‌ விட்டு பாதியிலேயே வாழ்வை பாழாக்கிக்கொள்கின்ற‌ன‌ர்!

இதற்கெல்லாம் வழிவகுப்பது கூடா ந‌ட்பு, சினிமா மற்றும் சுற்றுச்சூழல் என காரணம் காட்டி பெற்றோர் தப்பித்துவிட முடியாது! குழந்தைகளை சிறு வயது முதலே சிறப்பான முறையில் வளர்த்தெடுக்க பெற்றோர் அவ‌சியம் பாடுபடவேண்டும்.

தாங்கள் பெற்ற பிள்ளைகளின்பால் அலட்சியத்தையும் அக்கறையின்மையையும் காட்டும் சில பெற்றோர்களின் செயல்பாடுகளை கவனிக்கும் பொழுது, அதைவிட அவர்கள் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது எனத்தோன்றுகிறது, உலகில் 15% தம்பதியர் பிள்ளைகள் இன்றி வாடுகின்றனர், ஆனால் இவர்களோ தமக்குக் கிடைத்த விலையில்லா வைரங்களை வீதிகளில் வீசியெறியும் பாவிகள். அக்கறையில்லாமல் பரிதவிக்கவிடப்படும் பிள்ளைகளில் சிலர் சமூக நல இல்லங்களையும் ஏனைய பிறர் பல சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளையும் நிரப்பிக்கொன்டிருக்கின்றனர். இப்படி குழந்தைகளை உதாசீனப்படுத்தும் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனையை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்!

இவர்கள் இப்படியென்றால் இதற்கு முற்றிலும் மாறானவர்கள் சில பெற்றோர்கள். இவர்கள் "நான் இளமையில் ரொம்ப கக்ஷ்டப்பட்டேன், அதே நிலை என் பிளைகளுக்கு வரக்கூடாது, அவர்களுக்கு வருத்தம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாது" என்பார்கள். அதீத அன்பால் தமது பிளைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவர்கள் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும் இத்தகைய‌ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மையைவிட தீமையையே அதிகம் செய்கின்ற‌‌னர். வருத்தம் தெரியாது வளரும் பிள்ளைகள் வாழ்க்கையை புரிந்துகொள்வது சிரமம். பிற‌ர் வ‌ருத்த‌ங்க‌ளை உண‌ர்வ‌தும் க‌டின‌ம். அதற்காக அவர்களது எல்லா தேவைகளையும் நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. எது அவர்களுக்கு தேவை என்பதை உணர்ந்து நிறைவேற்ற் வேண்டும்

தமது பிள்ளைகளின் நியாமான உணர்வுகளுக்கு பெற்றோர் பூரண மதிப்பளிக்கவேண்டும் அதேவேளை, அவர்கள் பெற்றோரின் அன்புக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் எனும் எண்ணத்தையும் அவர்கள் மனதில் விதைக்க வேண்டும், நல்ல பண்புகள், பழக்க வழக்கங்கள் மற்றும் இறை சிந்தனை எனும் பாதையில் அவர்களை சீராக வழிநடத்த பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளை பெற்றவர்களெல்லாம் சிறந்த பெற்றோர் அகிவிடுவதில்லை, தமது வாரிசை முன்னேற்றப்பாதையில் வழிந‌டத்துவதில் வெற்றிகண்டவரே சிறந்த பெற்றோர்!

வேலை செய்யும் தந்தை அல்லது பெற்றோர் முடிந்தவரை ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் சிறிது நேரத்தை செலவிட பழக வேண்டும், நான் உனக்காகத்தான் உழைக்கிறேன் என்று தியாகி சீனெல்லாம் போட்டு அவர்களிடமிருந்து விலகி நின்றால், தயவு செய்து இப்பொழுதே உங்களுக்கு ஒரு முதியோர் இல்லத்தில் இடம் தேடி வைத்துக்கொள்ளுங்கள்! உங்கள் பணம் ஏற்படுத்தும் பாசப்பிணைப்பை விட உங்கள் அருகாமை பல மடங்கு அன்பை விதைத்து குழந்தைகள் உங்களை உயிராகவும், உயர்வாகவும் மதிப்பிடத்தூண்டும்.

ஒரு கைதேர்ந்த சமையல்காரன் தன் சமையல் ருசிக்க உப்பு, உறைப்பு, புளிப்பு எனும் அனைத்தையும் அளவோடு சேர்த்து பதப்படுத்தும் போதுதான் ஒரு நல்ல பதார்த்தத்தை அவனால் படைக்கமுடிகிறது, அதைப்போல‌வே அன்பு, அக்கறை, கண்டிப்பு என்பனவற்றை அளவோடு கலந்து பக்குவமாக வளர்க்கப்படும் பிள்ளைதான் எதிர்காலத்தில் சிறந்த மனிதனாகத் திகழ்வான்!

குழந்தைகள் கற்றுக்கொடுப்பதைக்காட்டிலும் கற்றுக்கொள்வது அதிகம், அவர்களின் முதல் வழிகாட்டி, வாழும் உதாரணங்கள் அவன் பெற்றோர்களே! பொய் சொல்லாதே எனச்சொல்லிக்கொடுக்கும் பெற்றோர் பொய் சொல்வதும், அவ்ர்கள் முன் புகைப்பிடிப்பதும், சண்டை போடுவதும், தரங்கெட்ட படங்களை அவர்களை வைத்துக்கொண்டு ரசிப்பதும் எந்த வகையில் பிள்ளைகளை மேம்படுத்தும்? ஆகவே நல்ல பிள்ளைகளை உருவாக்க வேண்டிய பெற்றோர் முதலில் தாங்கள் முன்னுதாரணமாக‌ விளங்கவேண்டும்.

அதிகம் செல்லம் கொடுப்பது தவறு, அதைவிட தவறு அதிகம் கெடுபிடி காட்டி அவர்களை நோகச்செய்வது!, சீர்படுத்துகிறேன் பேர்வழி என்று பிள்ளைகளை அடித்து, துன்புறுத்தி படாதபாடு படுத்தினால் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து விலகி வேறு துணை தேடவும் சேராத இடம்சேரவும் வழிவகுத்துவிடும்., பிள்ளைகளுக்கு பெற்றோரே முதல் தேவை எனும்படி நடந்து கொள்ள வேண்டும். தோழர்களாய் அவர்களை வழிநடத்தி தேவைப்படும் பொழுது அன்பையும் கண்டிப்பையும் காட்டி அவர்களை வளர்க்க‌ வேண்டும், கண்காணிக்கப்படுகிறோம் என்பதை உணர்த்தாமலேயே அவர்களை தேவையான காலம் வரை கண்காணிக்க வேண்டும். அவர்கள் தடம் மாறுவதை அறிய நேரிட்டால் முளையிலேயே கிள்ளி விட வேண்டும். பிறகென்ன நீங்கள்தான் உலகிலேயே சிறந்த பெற்றோர் என நான் மட்டுமல்ல உங்கள் பிள்ளைகளே ஒரு நாள் உங்களை பாராட்டுவார்கள்!

Wednesday, June 17, 2009

கைகொடுக்கும் காப்புறுதிகள்


இப்பொழுதெல்லாம் நாம் தினசரி நாழிதழ்கள் வாசிக்கையில் அடிக்கடி நம் கண்களில் படும் செய்தி, "நோயுற்ற இன்னாருக்கு நன்கொடை தேவை" அல்லது "இவருடைய அறுவை சிகிச்சைக்கு உதவி தேவை "என்பதாக இருக்கும், கூடவே, வாட்டத்தோடு காட்சியளிக்கும் ஒரு நபர் அல்லது குடும்பம் அல்லது பார்க்கும்போதெ மனதை வருத்தும் ஒரு நோயுற்ற குழந்தையின் படம் இணைக்கப்பட்டிருக்கும். அவர்கள் பிரச்சனை கைமீறிப்போனதால் பொதுமக்கள் உதவியை எதிர்பார்த்திருப்பார்கள். இதில் தவறேதும் இல்லை.‌ நம் சமுதாயத்திற்கு நாம்தான் உதவ வேண்டும் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால். ஏன் நம்மவர்கள் இன்னும் இப்படி இன்னலிகளிலேயே உழல்கிறார்கள் என யோசித்தோமானால் நாம் உண‌ரக்கூடிய ஒரு செய்தி, "ந‌மது இனத்தின் அலட்சியம்" அல்லது முன்னெச்சரிக்கை இன்மை, ஆபத்துக்காலங்களுக்கு கைகொடுக்கும் முன்னேற்பாடுகளை கைவசம் கொண்டிருக்காத தன்மை எனக்கூறலாம்!
நம்மவர்களில் பெரும்பாலோர் சராசரி நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவர்களாகவே உள்ள‌னர். இவர்கள் தங்களது ஆபத்து அவசர காலங்களுக்கு உதவியாக காப்புறுதிகளை கைவசம் வைத்திருந்தால் அது அவர்கள் வாழ்வுக்கு எவ்வளவோ பாதுகாப்பாய் அமையும் என்று தோன்றுகிறது.
விபத்தும், ஆபத்தும் வாழ்வில் சொல்லிக்கொன்டு வருவதில்லை, "வரும் ஆனா வராது" என்று சினிமாவில் ஒரு தாத்தா நகைச்சுவை செய்வாரே, அதைப்போல "வராது ஆனால் சில சமயங்களில் வந்துவிடும்". வந்துவிட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் முன்னேற்பாடுகள் அவசியம் என்பது.

எனக்குத்தெரிந்த‌ ஒரு சம்பவத்தில் ஒரு பெரியவர் காலில் அடிபட்டு மருத்துவமனை சென்றார், ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்திருந்து, அவர் காலை காப்பாற்ற முடியாது எனக்கூறி காலைத்துண்டித்துவிட மருத்துவர்கள் முயன்றனர், அதில் ஒருவர் தமிழ் பெண் மருத்துவர்!?, படித்தவர்கள் யாரும் பக்கத்தில் இல்லாத சமயத்தில் அவரின் மனைவியை வற்புறுத்தி கையொப்ப வாங்க முயற்சித்தனர், ஆனால் அவர் மனைவி கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்பதால் படித்த தனது பிள்ளைகளை வரவழைத்து அவர் கண‌வரை அங்கிருந்து வெளியேற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவரையும் அவர் காலையும் காப்பாற்றினார், செலவு 20,000 தைத்தாண்டியது. இந்த சம்பவம் வெளிநாட்டில் நடக்கவில்லை, நாம் வாழ்கிறோமே இதே நாட்டில்தான் நடந்தது. அவர் மட்டும் தனக்கென ஒரு காப்புறுதியை தன் கைவசம் வைத்திருந்தால் சிரமமின்றி ஒரு செலவுமின்றி அவர் உடனடியாக‌ தனியார் மருத்துவமனையில் சிறந்த வைத்தியம் பெற்று தேறியிருப்பார் அல்லவா?
இதுபோன்ற ஏகப்பட்ட சம்பவங்கள், ஆப‌த்தில் அவசர சிகிச்சை இன்றி உயிர்போன சம்பவங்கள், அலைகழிக்கப்பட்ட சிகிச்சைகள், அதனால் ஏற்பட்ட இழ‌ப்புகள் என நம்மில் பலருக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன, இலவச மருத்துவம், பிறரிடம் நன்கொடை வாங்கி மருத்துவம் என இல்லாமல் முடிந்தவரை தங்கள் வசதிக்கேற்ப, தம‌க்கும், தம்மைச்சார்ந்தவர்களுக்கும் தகுதியான காப்புறுதிகளை வாங்கி வைத்துக்கொள்வதே அறிவான செயலாகும்.
இறுதியாக‌, காப்புறுதி முக‌வ‌ர்க‌ளுக்கு ஒரு விண்ண‌ப்ப‌ம், நீங்க‌ளும் ச‌முதாய‌த்திற்கு சேவை செய்ப‌வ‌ர்க‌ளே, ஆகையால், ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல், ம‌க்க‌ளுக்கு காப்புறுதி சம்பந்தமான‌‌ விள‌க்க‌ங்க‌ளும், அவர் தகுதிக்கேற்ற காப்புறுதி பரிந்துரைகளையும் நீங்கள் செய்திடல் வேண்டும், உங்கள் வருமானத்திற்காக சாதாரண மக்களை அவர்கள் வசதிக்கு மீறிய காப்புறுதிகளை வாங்கவைத்து பிறகு அவர்களால் அதை கட்டமுடியாமல் திண்டாட செய்துவிடாதீர்கள். நமது முன்னேற்பாடுகள் பல இடர்களில் இருந்து நம்மையும் நாம் நேசிப்பவர்களையும் காக்கட்டும்.

பி.கு : வாய்ப்பும் வசதிகளும் ஓரளவு வாய்க்கப்பெற்றவர்களுக்காகவே இந்த விடயம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்க்கும், பெரிய அளவில் மருத்துவ செலவை எதிர் நோக்கியவர்களுக்கும் இந்த பதிவு அமைக்கப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tuesday, June 16, 2009

கண்ணதாசன் சிந்தனைகள் II



தண்ணீரில்லாமல் போவது நதியின் தவறல்ல‌,
காய்ந்து போவ‌து காடு செய்த‌ பிழைய‌ன்று,
க‌ட‌லில் திமிங்கில‌ங்க‌ள் இருப்ப‌து க‌ட‌லின் பிழைய‌ன்று,
ஒன்றுக்காக‌ ஒன்றை கோபித்துக்கொண்டால்
நிம்ம‌தியை இழ‌ப்ப‌துதான் மிஞ்சும்!


எது ந‌ட‌க்க‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ நீ கோப‌ப்ப‌டுகிறாயோ,
நீ கோப‌ப்ப‌ட்டு நிதான‌மிழ‌ந்த‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌
அது ந‌ட‌ந்தே விடுகிற‌து!

கோப‌ம் முத‌ற்க‌ட்ட‌த்தில் வென்ற‌து போல‌த்தெரிந்தால்
நிர‌ந்த‌ர‌மாகத்தோல்வி அடைய‌ப்போகிற‌து என்று பொருள்!
எதையும் சாதிக்க‌ விரும்புப‌வ‌னுக்கு
நிதான‌ம் தான் சிற‌ந்த‌ ஆயுத‌ம்!



Sunday, June 14, 2009

கல்வியும் கடவுளும்


"இரை தேடு, இறையும் தேடு" என்பது சான்றோர் வாக்கு. அந்த முதல் "இரை"யை கெள‌ர‌வ‌மான‌ முறையில் தேட‌ க‌ல்வி என்ப‌து மிக‌ மிக‌ இன்ற்ய‌மையாத‌தாகிற‌து. ‌ இந்த நவநாகரீக கணிணி யுகத்தில், தொழில் என்றால் உடலுழைப்பை விட‌ அறிவுக்கும், திறமைக்குமே முன்னுரிமை அதிகம் வழங்கப்படுகின்றது. ஒரு மனிதன் நல்வாழ்வு வாழ, அவன் திறமைசாலி என்று ஆதாரத்தோடு நிரூபிக்க அவனுக்கு கல்வியறிவு சான்றிதழ் இன்றியமையாததாகிறது! படிக்காத மேதைகள் சிலர் பூமியில் வெற்றிக்கொடி நாட்டி இருப்பினும், புத்திசாலி எனும் பெருமை படித்தவர்களுக்கு வழங்கப்படுவது யாவ‌ரும் அறிந்ததே.


கல்வியில் சிறந்த சமுதாயம் பொருளாதாரத்திலும் வாழ்கைத்தரத்திலும் சிறப்பான முன்னேற்றத்தையே பதிவு செய்கிற‌‌து. அவ்வகையில் நாம் முன்னேற, நமது சந்ததியினர் எதிர்காலத்தில் மேன்மையான வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொள்ள இன்றைய அடித்தளமாக அமைவது ஆரம்பக்கல்வியே. அப்படியெனில், அதை வழங்கக்கூடிய நமது கல்விக்கூடங்கள் நிச்சயம் தரமானதாகவும், சிறந்த அடிப்படை வசதிகளை கொன்டதாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம் அல்லவா. ஆனால் அன்மையில் நான் கண்ணுற்ற கீழ்க்காணும் படங்களின் ஒப்பீடுகள், மனதை மிகவும் வெதனையடையச்செய்வதாக அமைந்துள்ளது. இதோ அவை உங்கள் பார்வைக்காக, இவை உண்மை இல்லை என்றால் தயவு செய்து மறுப்பு தெரிவியுங்கள்,

உலு செபெத்தாங், தைப்பிங்கில் அமைந்த ஐயனார் ஆலயம்




அதே தைப்பிங் மாவட்ட‌த்தில் அமைந்த வசதி குறைந்த கம்போங் லாமா ஜெபோங் லாமா ஆரம்பத்தமிழ்ப்பள்ளி!




போர்ட் கிளாங்கில் அமைந்த சிறீ பால சுப்ரமணியர் ஆலயம்



அதே கிளாங்கில் அமைந்த தெப்பி சுங்கை ஆரம்பத்தமிழ் பள்ளியின் நிலை




சிரம்பானில் அமைந்துள்ள சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயம்




அதே நெகிரி செம்பிலானில் விளையாட்டு மைதானமோ, சிற்றுண்டிச்சாலையோ, அல்லது நூலகமோ இல்லாது கடை வரிசையில் அமையப்பெற்ற லுக்குட் சுங்கை சாலாக் தோட்ட ஆரம்பத்தமிழ் பள்ளி


எழில் மேவும் மாரான் ம‌ர‌த்தாண்ட‌வ‌ர் ஆல‌ய‌ம்



அதே அளவு முக்கியத்துவம் வழங்கியதாகத்தெரியாத மாரான் மரத்தாண்டவர் ஆரம்பத்தமிழ் பள்ளி

அக வாழ்வுக்கு "இறை" முக்கியம் தான் ஆனால் இன்றைய வாழ்வில் இக வாழ்வுக்கு கல்வியே மிக மிக முக்கியம். எனவே நமது கவனத்தை தயவு செய்து நமது கல்விக்கூடங்கள் பக்கமும் செலுத்துவோம். இன்று நமது சமுதாயத்தில் புறையோடிப்போயிருக்கும் களங்கங்களை வேரோடு களைவதற்கு நமது முயற்சியை முன்வைப்போம், நமது சந்ததி நல்வாழ்வு வாழ வகைசெய்வோம்.







Saturday, June 13, 2009

தமிழினமும் தற்கொலையும்


இந்த நவநாகரீக உலகில் மனிதன் எவ்வளவோ முன்னேறியுள்ளான், அவன் வாழ்வை மேம்படுத்த எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள், ஆனால் அவை அத்தனையும் புற வாழ்வை மேம்படுத்திய அளவு அக வாழ்வை மேம்படுத்தவில்லை என்பதனை அருகி வரும் மனித நேயங்களும் பெருகி வரும் மனித சீரழிவுகளும் உறுதிபடுத்துகின்றன.


தனிமனித சீரழிவு என்று வரும்பொழுது அதில் முக்கிய பங்கு வகிப்பது தற்கொலையே. அன்மைய ஆய்வின்படி 39 மணித்துளிக்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது. மேலும் 10 முதல் 20 மில்லியன் பேர் தற்கொலை முயற்சியிலிருந்து ஆண்டுதோறும் தப்புவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏன் இந்த நிலை? குறிப்பாக நம்மவர்கள் ஏன் இவ்விடயத்தில் முன்னனியில் இருக்கின்றார்கள்? சஞ்சிக்கூலிகளாக அத்துவானக்காடுகளில் அநாதைகளாக அடைக்கப்பட்டு வறுத்தெடுக்கப்பட்ட போதிலும் நம் முன்னோர்கள் சோர்ந்து போய் தற்கொலையை நாடவில்லையே, வாழ்ந்து வழித்தோண்றல்களாக‌ விட்டுச்சென்றுள்ளனரே நம்மை , இப்பொழுது மட்டும் புதிதாக எங்கிருந்து வந்தது இந்த கோழைத்தனம்? வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாது தவறான முடிவை நாடும் அறிவிலித்தனம்.
மறுத்தாலும் மறைக்க முடியாத ஒரு உண்மை, நம்மில் பெரும்பாலோர்க்கு எளிதில் உணர்ச்சிவயப்படும் குணம் அமைந்துள்ளது. பள்ளிப்பரீட்சையில், காதலில், மேலும் வாழ்வில் முக்கியமானதாகக் கருதும் விடயங்களில் ஏற்படும் தோல்வி, எளிதில் ஒருவரை தற்கொலைப்பாதைக்கு இட்டுச்செல்கிறது.
பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களுக்கு பெற்றோர் சிறந்த வழிகாட்டியாகவும், முன்னுதாரணமாகவும் திகழவேண்டும். பிள்ளைகளை ஆடு மாடுகளைப்போல் மிரட்டி வளர்ப்பதும், தன்னிச்சைப்படி அவர்களை ஆட்டிப்படைப்பதும், அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை அவர்கள் பால் செலுத்துவதும், பிள்ளைகளை எளிதில் மனமுடையச்செய்கிறது. அன்பில்லாத பெற்றோர் பிள்ளைகளுக்கு வாய்த்த சாபம், எனவே தோழமையோடு கண்கானித்து வளர்க்கப்படும் பிள்ளைகள் நிச்சயம் இதுபோன்ற முடிவுகளை தேட மாட்டார்கள். சாய்ந்து அழ தோளிருந்தால் மலையே சாய்ந்தாலும் மனித மனம் வீழாது, இதை அனைவரும் உணர வேண்டும்.

அடுத்தது காதல்தோல்வி , இது நமது சமுதாயத்தின் மற்றொரு புண். காதலிப்பவர்கள் தங்களை மட்டுமே கவனத்தில் கொண்டு, தங்களின் இயல்பு வாழ்க்கையை மறக்கின்றனர், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும் எனும் நிலை வரும் பொழுது தற்கொலையை எளிதில் நாடி விடுகின்றனர். உயிரைக்கொடுத்து காதலை வாழவைக்கிறார்களாம்??? காதல் என்ன இவர்கள் குடும்ப சொத்தா வாழவைக்க? எல்லாம் சினிமா படுத்தும் பாடு! காதல் புனிதமானது ஆனால் காதலிப்பவர்கள் எல்லோரும் தேவதைகளல்ல! சராசரி மனிதர்கள், இதை முதலில் இவர்கள் உணர வேண்டும். வாழ்க்கையை வெல்ல வேண்டும் காதல் தோல்வியை வாழ்க்கைத்தோல்வி என நினைத்து தற்கொலையை நாடி வீணடித்துவிடக்கூடாது! அது விவேகமல்ல! பிறந்த மண்ணுக்கும் பெற்ற தாய்க்கும் எந்த நல்லதை செய்யாவிட்டாலும், அந்த தாயை நோகடித்து சாவை நாடி பூமிக்கு பாரமாய் அமைந்து விடக்கூடாது.

இறுதியாக ஏழ்மை, சில காலங்களுக்கு முன், ஒரு அழகிய இளம் தாய் தன் குழந்தைகளோடு இரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொன்டார்.
விசாரித்தால் ஏழ்மையாம்! ஏனிந்த நிலை, நமது சமுதாயம் இவர்களுக்கு அரணாக விளங்கியிருந்தால், ஒரு வேளை அந்தத்தாயும் அவர் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டிருக்கலாம் அல்லவா? நம் நாட்டில் ஒரு முஸ்லீம் நண்பருக்கு பிரச்சனை என்றால் அவர் தொழும் மசூதியில் அவருக்கான உதவியை அவரால் பெற முடியும், ஒரு கிருஸ்த்துவ நண்பருக்கு உதவி தேவை என்றால் அவர் தேவாலயத்தில் நிச்சயம் அவருக்கு உதவி கிடைக்கும், ஆனால் நம் நிலை? நம்மிடம் வசூல் செய்யப்பட்டு இயங்கும் ஆல‌யங்களில் இதுபோன்ற உதவிகள் உள்ளனவா? இருந்தால், தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!

இறுதியாக‌ த‌ற்கொலையை தவறு என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இதோ வாழ்க்கையை வாழ்ந்து முடித்த வாழ்க்கைக்கவிஞர்
கண்ணதாசன் சோகத்தில் என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்,

"ஆண்டவா எனக்கு என்ன துன்பம் வரட்டும், எவ்வள‌வு துயரங்கள் வரட்டும், உனக்காக தாங்கிக்கொள்வேன். இந்த பூமியிலே பிறந்தாகி விட்டது, வாழ்ந்தாக வேண்டும், தற்கொலை செய்துகொள்ள நான் தயாராக இல்லை. மரணம் என்ற ஒன்றை அனுப்பி என்னை நீ எடுத்துக்கொள்கிற வரையில், இங்கு வாழ்வது என்று முடிவு கட்டிவிட்டேன், இந்த வாழ்க்கைச்சாலையில் எது வந்தாலும், எது குறுக்கிட்டாலும் கூட நான் கவலையில்லாமல் உன் சந்நிதியிலேயே நிற்பேன், வாழுவேன், எனக்காக யார் வாழ்கிறார்களோ அவர்களைக்காப்பாற்றுவேன், யாருக்காக நான் வாழ வேண்டுமோ அவர்களுக்காக நான் வாழுவேன்!"

Wednesday, June 10, 2009

கண்ணதாசன் சிந்தனைகள் 1


காலங்களே தருகின்றன, அவையே பறிக்கின்றன, காலங்களே சிரிக்கச் செய்கின்றன, அவையே அழவும் வைக்கின்றன, கால‌ம் பார்த்துக்காரிய‌ம் செய்தால்,பூமியையே விலைக்கு வாங்க‌லாம், கால‌ங்க‌ளிலேயே காரிய‌ங்க‌ளின், வெற்றி தோல்விக‌ள் அட‌ங்கி இருக்கின்ற‌ன‌!



ஆறு என்ற ஒன்று, ஆண்டவனால் படைக்கப்படவில்லை!அது ஆறாக உருக்கொன்டு, இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக்கொன்டது,மனிதருக்கு இல்லாத புத்தி, தண்ணீருக்கு இருக்கிறது!

கோடை வ‌ர‌லாம், வ‌சந்தம் வ‌ர‌லாம், ப‌னிக்கால‌ங்க‌ள் வ‌ர‌லாம் ப‌ருவ‌ங்க‌ள் மாறுமே த‌விர‌, உல‌க‌த்தினுடைய‌ உருவ‌ம் மாறினாலும் கூட‌, உன்னுடைய‌ நிலை மாறாது, ம‌ன‌தை ம‌ட்டும் உன்னால் அட‌க்க‌ முடியுமானால்.

தற்காப்புக்கலையும் தமிழ்ப்பெண்கள் நிலையும்!

இந்த ந‌வீன‌ யுக‌த்தில் ஒரு பெண் அதிலும் தமிழ்ப்பெண் த‌னிமனித வாழ்வில் எதிர்கொள்ளும் பிர‌ச்ச‌னைக‌ளை எழுத்தில் வ‌டித்து முடித்து விட‌ முடியாது, உலகம் முன்னேற்றமடைந்து வருகின்ற போதிலும் வாழ்வில் ந‌ம் பெண்க‌ளுக்கு துன்ப‌ங்க‌ளும், ஆப‌த்துக்க‌ளும் மேலும் மேலும் அதிகரித்த வண்ணமாக‌வே உள்ள‌ன. நாள்தோறும் நாளிதழ்களில் வெளியிடப்படும் செய்திகளில் அவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை, கொள்ளை மற்றும் தாக்குதல்கள் இவற்றை மெய்ப்பிக்கின்றன.

இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பாட்டுக்கும், பரதத்துக்கும் அனுப்புவதற்கு காட்டும் ஆர்வத்தை விட சிறுவ‌ய‌து முத‌லே அவ‌ர்க‌ள் பிள்ளைக‌ள் த‌ற்காப்புக்கலையில் தேர்ச்சி பெற ஆர்வம் காட்டினால் சிறப்பாக இருக்குமே என்று தோன்றுகிறது!

த‌ற்காப்புக்க‌லை த‌ன்ன‌ம்பிக்கையோடு, உட‌ல் வ‌லிமையையும், முன்யோச‌னையையும் அளிக்கிற‌து என்றால் அது மிகையாகாது. தன்னை தற்காத்துக்கொள்ளும் திறமையற்ற பெண்ணுடைய க‌ற்பிற்கும், உயிருக்கும், உட‌மைக‌ளுக்கும் இந்த உலகில் உத்திர‌வாத‌ம் இல்லை! இது ப‌ய‌முறுத்துவ‌த‌ற்காக‌ கூற‌ப்ப‌ட்ட‌து என‌ த‌ய‌வுசெய்து எண்ண‌வேண்டாம்.

இதெல்லாம் உண்மையில்லை, நாங்க‌ள் எங்க‌ள் பெண்பிள்ளைக‌ளை க‌ண்ணின் க‌ரும‌ணிபோல் பாதுகாத்து வ‌ள‌ர்ப்போம், ஆப‌த்து என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை என்று கூறும் பெற்றோர்க‌ளே! த‌ய‌வு செய்து கேளுங்க‌ள்!
எத்த‌னை கால‌ம் நீங்க‌ள் உங்க‌ள் பெண்க‌ளுக்கு பாதுகாப்பாக‌ இருக்க‌ முடியும், அப்ப‌டியே இருந்தாலும், உங்க‌ள் வாழ்க்கை முடிந்த‌பின் அவ‌ள் நிலை? திரும‌ண‌ம் செய்திருந்தாலும் விதிவ‌ச‌த்தால் அவ‌ள் த‌னிமையாக்க‌ப்ப‌ட்டாள் அவ‌ள் நிலை? த‌ய‌வு செய்து யோசியுங்க‌ள் பெற்றோர்க‌ளே!

பள்ளிக்கூடங்களில் த‌ற்பொழுது தற்காப்புக்கலைகள் குறைந்த கட்டணத்தில் கற்றுத்தரப்படுகின்றன. ஆனால் கல்வியமைச்சு புறப்பாடத்திட்டத்தில் இந்த தற்காப்புக்கலையையும் ஒரு பாடமாக்கும் முறையை அறிமுகப்படுத்தினால் அது எல்லா வகையிலும் பயனளிப்பதாய் அமையும்.

உங்க‌ள் குழந்தைக‌ளை த‌ற்காப்புக்க‌லையில் ஈடுப‌டுத்துவ‌த‌ன் மூல‌ம், பெற்றோர்களாகிய‌ நீங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளின் எதிர்கால‌த்திற்கும் மிக‌ப்பெரிய‌ ந‌ன்மையை செய்கிறீர்க‌ள் என்ப‌தை உண‌ருங்க‌ள்!

Saturday, June 6, 2009

குழந்தைச்செல்வம்





செல்வங்களில் சிறந்த செல்வம் குழந்தைச்செல்வம். மணமான தம்பதியரை புலன் விசாரணை செய்யும் சில பெரிசுகள், ஏதாவது புழு பூச்சி உண்டா என வினவுவார்கள், இவர்கள் ஏன் நேரடியாக குழந்தை உண்டா என கேட்காமல் இப்படி சுற்றி வளைக்கிறார்கள் என்றால் அதற்கு வேறு அர்த்தங்கள் உண்டாம்.


அதாவது பூச்சி என்றால் பெண் குழந்தையாம்! கொஞ்ச நாள் பிறந்த வீட்டில் ஆட்டம் போட்டுவிட்டு திருமணமானதும் புகுந்த வீட்டுக்கு பறந்து விடுவாளாம்.


புழு என்றால் ஆண் குழந்தையாம்! க‌டைசிவ‌ரை அப்பா அம்மாவை குடைந்து கொன்டே இருப்பானாம்!

சூரியனை சுட்டுவிட்டார்களாமே?

Friday, June 5, 2009
உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள், ஆனால் எல்லா இடங்களிலும் அவர்கள் வாழ்வதில்லை, அவ்வகையில் இலங்கையில் மூண்ட பெரும் இனக்கலவரங்கள் இலங்கைத்தமிழர்களை வாட்டி வதைத்தன‌, துன்புறுத்தி அழித்த‌ன‌. த‌மிழர்களுக்கு எதிரான சிங்கள வெறியர்களின் அராஜகங்கள், இலங்கைத்தமிழர்களுக்காக‌ போராட ஒரு மாவீரனை உருவாக்கியது, தன் இனங்காக்க, தன் இனப்பெண்களின் கற்பைக்காக்க புயலென எழுந்த சிம்மசொப்பனமே "மாவீரன் பிரபாகரன்".
அவரை பலர் பலவிதமாக விமர்சித்தாலும் மாவீரன் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் போராட்டம் தனிமனித சுயநலத்திற்காகவே, தன் சொந்த குடும்ப நலனுக்காகவோ, முன்னெடுக்கப்பட்டதல்ல! தான் சார்ந்த இனத்தைக்காக்க, தமிழனின் மானங்காக்க! அவ்வகையில் பொது நலனுக்காக தமது வாழ்வையும் குடும்பத்தையும் அர்ப்பணித்த அந்த மாமனிதர் என்றென்றும் நமது வணக்கத்திற்குறியவரே!அண்மை‌யில் இலங்கை‌யில் வெடித்த‌ மாபெரும் உள்நாட்டுப்போரில் அந்த‌ மாவீர‌னை அழித்துவிட்ட‌தாக அந்நிய நாடுகளின் கைகோர்த்து, இந்தியாவும், சீனாவும் உதவிட ப‌ல‌ போர்க்குற்ற‌ங்க‌ளைப்புரிந்த இலங்கை அரசாங்கம் ப‌ல‌ வ‌த‌ந்திக‌ளை உல‌வ‌விட்ட‌து, எனினும் விடுத‌லைப்புலிக‌ளின் இய‌க்க‌மே அவ‌ர் மறைந்து விட்டாரென‌ கீழ்க‌ண்ட‌ அறிக்கையை வெளியிட்டு உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ளை உறைய‌ வைத்துவிட்ட‌து!
தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்

தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.
கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.
அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.
தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.
போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெளியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது.வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.
தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்செல்வராசா பத்மநாதன்அனைத்துலக வெளியுறவுச் செயலகம்தமிழீழ விடுதலைப்புலிகள்.

சிறைவிட்டு வந்தது சிங்கம்


Friday, June 5, 2009
கமுண்டின் தடுப்புக்காவல் மையத்திலிருந்து எவ்வித நிபந்தனைக்களுக்கும் உட்படாமல் உண்மையான சுதந்திரப் பறவையாக வெளிவந்த இண்ட்ராப் தலைவர் உதயகுமார் அவர் எந்த ஊரில் காலடி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டதோ, அந்த ஊருக்கு, சிறம்பானுக்கு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீர வரவேற்பு வழங்க, நேற்றிரவு ராசாவிலுள்ள தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
47 வயதான வழக்குரைஞர் உதயகுமார் நிபந்தனைகளுடனான விடுதலைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார். “எந்தக் குற்றமும் புரியாத நான் ஏன் நிபந்தனைப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்?”, என்ற அவரின் கேள்விக்கு பதில் அளிக்க இயலாத தடுப்புக்காவல் மைய அதிகாரிகள் சனியன் போய்த் தொலைந்தால் போதும் என்ற எண்ணத்தில் அவரை குண்டுக்கட்டாக தூக்கி எறிந்து வெளியேற்றினர்.
உதயகுமாரை யார் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் ஆண்டவனாக இருந்தாலும் கூட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆனால், தன்னைத் தொடர்ந்து குற்றவாளியாக காட்டும், தன்னுடைய உரிமைகளைப் பறிக்கும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்துவிட்ட உதயகுமார் கமுண்டிங் தடுப்புக்காவல் மையத்தின் வரலாற்றில் கையொப்பமிட்டு விடுதலை பெற்ற இதர கைதிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறார். இது உதயகுமாருக்கு அவருடைய தன்மானத்தில், உரிமையில் இருக்கும் திண்மையை காட்டுகிறது.
அவருக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனைகளில் ஒன்று அவர் சிறம்பானில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பதாகும்.கமுண்டிங்கிலிருந்து வருகிற வழியில் பல இடங்களில், அவற்றில் ரவாங், சுங்கை பூலோ மற்றும் லாபு டோல் சாவடியும் அடங்கும், அவருக்காக காத்திருந்த ஆதரவாளர்களைச் சந்தித்து பேசினார்.இரவு மணி 9.15 க்கு அவர் லாபு டோல் சாவடி வந்து சேர்ந்தார். அங்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு நல்கினர்.பின்னர், 18 மாதங்களுக்குப் பிறகு ராசாவில் அவர் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கொண்டார்.

இசாவில் 500 நாட்கள்



“ இசாவின் கீழ் எனது 500 நாட்கள் ”பி. உதயகுமார், ஏப்ரல் 26எனது சுதந்திரத்துக்காக வாடுகிறேன் ஆனால் வருந்தவில்லை
இன்று ஏப்ரல் 26, 2009ஆம் ஆண்டு. இந்த நாள், ஒரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாமல், விசாரணை செய்யப்படாமல், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படாமல் அம்னோவின் தடுப்புக் காவலில் நான் வைக்கப்பட்டு 500 வது நாளை, குறிப்பிடுகிறது. இது, கடந்த 18 ஆண்டுகளாக மனித உரிமைகள் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த, சிறுபான்மை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த “எனக்குக் கிடைத்துள்ள நீதி” என்று நான் கருதுகிறேன்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தொடர்ச்சியான, தன்மூப்பான ஆணையின்படி, ஈராண்டுகளுக்கு நான் சிறைவாசம் புரிந்து, அவரது ஆட்சியின் கீழ், காலவரம்பின்றி சிறையில் இருக்கவேண்டும் போலும். தைப்பிங்கில் உள்ள இந்த கெம்தா கமுந்திங்கில், இசா தண்டனையின் கீழ், எட்டாண்டு காலமாக சிறைவாசம் புரியும் கைதிகளும் உள்ளனர்.
ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனது சிறைவாசத்தின் ஒவ்வொரு நாளும், மலேசியாவில், தேசிய மேம்பாட்டின் நீரோட்டத்திலிருந்து இந்தியர்களை பிரித்து, ஓரங்கட்டி, பாகுபாடு காட்டி, அடக்கி ஒடுக்குவதில் அம்னோ புரிந்த அட்டூழியங்களுக்கும் அநீதிகளுக்கும் எதிராக, ஆயிரக்கணக்கான புதிய இதயங்களை திறக்கும் என்பதை நான் மனப்பூர்வமாக உணருகிறேன்.
இன்று நான், 500 நாட்களை கடந்து வந்துள்ளேன். எனது மதிப்புமிக்க சுதந்திரத்தில் 500 நாட்களை நான் இழந்துள்ளேன். எனது இசா தடுப்புக் காவலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, நான் முகச் சவரம் செய்து அல்லது தலை சீவி 500 நாட்களாகி விட்டன. அதே கருநீல காற்சட்டையும். வெண்ணிற சீருடையும் நான் அணியத் தொடங்கி இன்றுடன் 500 நாட்கள் ஆகியுள்ளன.
எனது இடது கால்2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி, தற்செயலாக, எனது இடது பாத பெருவிரலில் காயமேற்பட்டது. நீண்ட காலமாக நீரிழிவு நோயால் நான் சிரமப்பட்டு வருவதால், அந்த காயம் மேலும் மோசமடைந்தது. காயமுற்ற முதல் நாளிலிருந்தே, கிளனிகல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு பலமுறை நான் கேட்டுக் கொண்டேன்.
அரசுச் சேவை மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதே இதற்குக் காரணம். அரசு மருத்துவர்களின் சுதந்திரம், உள்துறை அமைச்சு மற்றும் போலீஸ் சிறப்புப் புலன்விசாரணை பிரிவுக்கு உட்பட்டுள்ளது என நான் கருதுறேன்.
நான் ஆட்சேபித்தபோதிலும், 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் திகதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு நான் ஒப்புக் கொண்டேன். நான் எதிர்பார்த்ததைப் போன்று, எனது இடது பாதம் வீக்கமுற்று கறுத்து போனாலும், என்னை வார்டில் அனுமதிக்க மறுத்து விட்டார் அங்குள்ள மருத்துவர்.
மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்று கூறிய அந்த பெண் மருத்துவர், எலும்பு மருத்துவ நிபுணரிடம் அல்லது இசா காவலின்போது எனக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு இருதய சிகிச்சை நிபுணரிடம் அனுப்பவும் இல்லை.
எனது பாதத்தில் பிளாஸ்டர் பத்து ஏதும் போடப்படவில்லை. எந்த மருந்துவ ஆலோசனையும் வழங்கப்படவில்லை. எனது கால் தானாகவே மாறிவிடும் என்று அந்த மருத்துவர் என்னிடம் தெரிவித்தார். போலீஸ் கோப்பில் எனது மருத்துவ குறிப்புகளை எழுதி, என்னுடன் வந்த போலீஸ் அதிகாரிகளிடமே அவற்றை அந்த மருத்துவர் கொடுத்தபோது எனது சந்தேகம் ஊர்ஜிதமானது.இரண்டாவது வாரத்துக்குள், எனது கால் மோசமடைந்தது. பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதிலும், அரசு மருத்துவமனைக்குக்கூட கொண்டு செல்வதற்கு (ஆட்சேபத்தின்பேரில் நான் ஒப்புக் கொண்டாலும்) சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்து விட்டனர். நான்கு போலீஸ் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனது போலீஸ் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.நிலைமை மோசமடைந்தால், எனது இடது பாதம் துண்டிக்கப்படலாம் என்ற எண்ணமும் ஓடியது. ஒரு வழக்குரைஞர் என்ற முறையில், என்னையே என்னால் காப்பாற்றமுடியவில்லை என்பதை முதல்முறையாக நான் உணர்ந்தேன். ஒரு கைதியாக இருப்பதால் என்னால் எதையும் செய்யமுடியவில்லை.
அப்படி மோசமாக ஏதும் நிகழ்ந்தாலும்கூட, செயற்கை காலை பொருத்தி, நடக்கலாம் என்றும் நான் நினைத்துக் கொண்டேன். இறுதியாக, மக்கள் சக்தி ஆதரவாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் நடத்திய பிராத்தனைகள்தான் எனது காலைக் காப்பாற்றியது. சிறைச்சாலையில் எனது நலனையும் உறுதி செய்தது.
ரொட்டி, பிஸ்கட்டுகளை சாப்பிட்டு வருகிறேன்2009ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி, எனக்கு பரிமாறப்பட்ட கோழிக் கறியில் மாட்டிறைச்சி துண்டுகள் இருக்கக் கண்டேன். கோழியும் மாட்டிறைச்சியும் ஒரே சட்டியில் சமைக்கப்பட்டு, பிறகு கோழிக் கறி தனியாக எடுக்கப்பட்டு பரிமாறப்பட்டதாக சிறைக்கூட சமையல் அறையில் பணியாற்றிய ஒரு பாகிஸ்தானியரான முகமட், இலங்கை நாட்டவரான அப்துல் சார்ஜோன், சக கைதிகள் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
நான் உடனடியாக போலீஸ் புகார் செய்தேன். ஆனால் வழக்கம்போல் எதுவும் செய்யப்படவில்லை. இது வேறுவிதமாக இருந்திருந்தால் - ஒரு மலாய் முஸ்லீம் பாதிக்கப்பட்டிருந்தால் - வேறு புதிய விதி முறைகளை அம்னோ அமல்செய்திருக்கும்.
ஆனால், அதுதான் பிரதமர் நஜிப்பின் “ஒரே மலேசியா” கொள்கையாகும். ஒரே மலேசியா - இரண்டு முறைகள். கூட்டரசு அரசமைப்பின் 11 விதிக்கு முரணாக, எனது சமய உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சிறைச்சாலை சமையலறையில் சமைக்கப்படும் உணவை உண்பதற்கு நான் மறுத்து விட்டேன். ஓர் இந்து என்ற முறையில், நான் மாட்டிறைச்சி உண்பதில்லை. இப்போது பெரும்பாலும் ரொட்டி, பிஸ்கட்டுகளை உண்டு வருகிறேன்.
500 நாள் முழுவதும், இந்த போராட்டத்தை தொடக்கியதற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை. மலேசியாவில் சிறுபான்மை இந்தியர்களுக்கும் உட்பட நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
இந்த 500 நாட்களில், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கொரு முறை, கைதிகளைச் சந்திப்பதற்கு வரும் போலீஸ் சிறப்பு புலன்விசாரணை அதிகாரிகளைப் பார்த்து, “எனது விடுதலைக்கு மனு செய்வததற்கும்” நான் மறுத்து விட்டேன்.
நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆக, என்னை விடுவிக்கும்படி கெஞ்சுவதற்கு நான் தாயாராக இல்லை.மேலும் இதற்கு முன்னர், இதே காரணத்துக்காக, அம்னோவின் உள்துறை அமைச்சரைச் சந்திப்பதற்கும் நான் மறுத்து விட்டேன். எனது விடுதலை, அவரது கைகளில்தான் உள்ளதென்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.
இண்ட்ராப் மக்கள் சக்தி வாயிலாக மேற்கொள்ளப்படும் உண்மையான, நேர்மையான போராட்டம்தான் எனக்கு மிகப் பெரிய ஆத்ம திருப்தியை தருகிறது. இந்த நினைவில்தான் எனது சிறைவாழ்க்கையும் கழிக்கிறேன்.கலகத் தடுப்புப் போலீஸ்காரர்கள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, குழாய்களைக் கொண்டு நீரை பீய்ச்சி அடித்ததையும் பொருட்படுத்தாமல், இண்ட்ராப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டது கண்டு நான் நெகிழ்ந்து போனேன். அவர்கள் போலீசாரால் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு,
சிறையிலடைக்கப்பட்டு, நீதிமன்றத்துக்க்கு கொண்டு செல்லப்பட்டனர். சாத்திய சிறைத்தண்டனையை எதிர்கொள்வதற்கு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு, வேலைகளை இழந்தபோது, அவர்களது மனைவி, மக்களும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
அம்னோவின் இனவாதத்துக்கும், சமய தீவிரவாதத்துக்கும் மற்றும் தேசிய மேம்பாட்டின் முக்கிய நீரோட்டத்திலிருந்து இந்தியர்கள் நீக்கப்பட்டதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, பொது நோக்கத்துக்காக, புரியப்பட்ட இந்த தியாகங்களுக்காக உங்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். வாழ்க மக்கள் சக்தி.
எனது சுதந்திரத்துக்காக வாடுகிறேன்அன்றாடம் இந்த சிறைவாழ்க்கையில் வாடுகிறேன். எனது சுதந்திரத்துக்காக வாடுகிறேன், குடும்பம், மனைவி மக்களுக்காக வாடுகிறேன்.ஆனால், மேலும் மோசமானதொரு சூழ்நிலையை எதிர்கொள்ளவும் நான் தயார். அது மற்றுமொரு 500 நாளாக அல்லது சிறைவாசமாகவும் இருக்கட்டும். அதை இண்ட்ராப் நோக்கத்துக்காகச் செய்வேன். அம்னோ என்னை சிறையிலடைக்கலாம். ஆனால் இண்டாராப் மக்கள் சக்தியின் வலிமையை அவர்களால் சிறைப்படுத்த முடியாது.
2008ஆம் ஆண்டு மார்ச் 8, பொதுத் தேர்தலில், மக்கள் சக்தி, ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அம்னோ/தேமு , நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் நான்கு மேற்குக் கரை மாநிலங்களில் அரசியல் அதிகாரத்தையும் இழப்பதற்கு அது ஓர் உந்து சக்தியாக இருந்தது.மேலும் புக்கிட் செலம்பாவ் மற்றும் புக்கிட் கந்தாங் இடைத் தேர்தல்களில், மக்கள் சக்தி மீண்டும் தனது வலிமையை புலப்படுத்தியது. மக்கள் சக்தி வலிமை இந்த அளவுக்கு இருக்குமென எனது கனவிலும் நான் எண்ணவில்லை.
நான், மகாத்மா காந்தியோ, நெல்சன் மண்டேலாவோ அல்ல. ஆனால் மக்களின் உண்மையான குறைபாடுகள்தான் - அடக்கிவைக்கப்பட்ட வலி, சித்ரவதை, துயரங்கள் மற்றும் இதய வேதனைகள் - 2007ஆம் ஆண்டு நவம்பர் 25ல், முன்னெப்போதும் இல்லாத அளவில் திரண்ட 100,000 பேர் இண்ட்ராப் பேரணிக்கு வழிகோலியது.
பொறுமை காக்க வேண்டும். அம்னோ மாறாது. ஆனால் 2012/ 2013 ஆண்டு பொதுத் தேர்தலில், அம்னோவை நாங்கள் மாற்றுவோம். அம்னோவின் முரட்டுத்தனமான உத்திகளுக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் ஆட்சிமுறைக்கும் நாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். 52 ஆண்டுகள் நாம் காத்திருந்து விட்டோம்.
பொறுமையுடன் இருங்கள். இன்னும் மூன்று அல்லது நான்காண்டுகளில், ஒரு புதிய தொடக்கம், புதிய அரசியல் முறை, இந்தியர்களுக்கும் உட்பட, சமத்துவமும் சம வாய்ப்புகளையும் கொண்ட ஒரு மலேசியா உருவாகுமென நாம் நம்புகிறோம். தேசிய மேம்பாட்டின் முக்கிய நீரோட்டத்தில் இந்தியர்களும் அங்கம் வகிக்கும் மலேசியா அமையும்.
எனது சிறைவாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், எனது சிந்தனையும், பிரார்த்தனையும் மக்கள் சக்தியுடன்தான். மேலும் போராடுவதற்கு நான் திட்டம் வரைந்துள்ளேன். எனது விடுதலைக்காகவும் அம்னோவின் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து காலப்போக்கில் நீதி தழைத்திடவும் பிரார்த்தியுங்கள்.
இந்த 500 நாள் சிறைவாசத்துடன் அம்னோ என்னை தண்டித்திருக்கலாம், ஆனால் மக்கள் சக்தியாகிய நீங்கள் அம்னோவையும் தேசிய முன்னணியையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் - வாக்குப் பெட்டிகள் வழி.ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பாராகபி. உதயகுமார்பேரா, கமுந்திங் தடுப்புக் காவல் முகாம்