.

.
.
Showing posts with label அமானுக்ஷ்யம். Show all posts
Showing posts with label அமானுக்ஷ்யம். Show all posts

Friday, May 2, 2014

மந்திரத்து மாங்கனி..!






இந்நவீன கணிணி யுகத்தில் பலர் அமானுக்ஷ்யங்களை நம்புவதில்லை, ஆவி, பேய், பிசாசு, பூதம், மந்திரம் மாயம், இறை நம்பிக்கை யாவற்றையும் எள்ளி நகையாடும் காலமும் கூட. உண்மையில் இவ்விடயங்கள் அளவுக்கு மீறி மிகைப்படுத்தப்பட்டு போலி என வகைப்படுத்தப்பட்டுவிட்டது. இவ்வுலகில் நம் ஐம்புலன்களால் தரிசிக்க‌ இய‌லாத மர்மங்களும் உள்ளன‌ என்பதை ஆராய்ந்து பார்த்தால் நம்மால் உணர இயலும். இயற்கையின் ஒருபுறம் அழகும் ஆற்றலும் என்றால் அதன் மறுபுறம் மர்மங்களும் அமானுக்ஷ்யங்களும் என்பது உண்மை. நாம் நம்ப மறுப்பதால் அவை உண்மையல்ல என்றாகிவிடுவதுமில்லை, அப்படியானதொரு சம்பவமே இது.

மோகனும் நளினியும் ஆதர்ச‌ தம்பதிகள். காதலித்து மணம் புரிந்துகொன்டவர்கள். மோகன் மேலதிகாரியாக பணியாற்றிய தொழிற்சாலையில் நளினி அலுவலகப்பிரிவில் அதிகாரியாய் பணியாற்றினாள், மோகனின் வசீகரமான தோற்றமும், தொழில் நேர்த்தியும் நளினியை ஈர்க்க, நளினியின் நளினமும் அடக்கமும் மோகனைக் கவர்ந்தது. நளினி வசதியான குடும்பத்துப் பெண். மோகன் இளம்வயதிலேயே தந்தையை இழந்த நடுத்தர குடும்பத்து வாலிபன், வசதி குறைவு. எனவே நளினியின் குடும்பம் மோகனுக்கு பெண்கொடுக்க மறுக்க, நளினி இரவோடிரவாக வீட்டைவிட்டு வெளியேறி மோகனிடம் தஞ்சமடைந்தாள். இருவீட்டார் மனக்கசப்புடன் நளினி மோகன் திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் அதே தொழிற்சாலையில் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.

அவர்களின் இல்லறஓடம் வாழ்க்கை சமுத்திரத்தில் நிதான‌மாக பயணித்துக்கொன்டிருந்தது. முதல் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பராமரிக்க அவர்களின் இருவீட்டிலிருந்தும் யாரும் முன்வரவில்லை, வெளியாரிடம் பிள்ளையை விடுவது அவர்களின் மனதிற்கு உகந்ததாகப் படாததால் நளினி தன் வேலையை கைவிட்டு முழு நேர இல்லத்தரசியானாள்.
ஒன்றன் பின் ஒன்றாய் நான்கு குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தனர். செலவுகள் அதிகரிக்க‌ வருமான பற்றாக்குறை ஏற்படத்துவங்கியது. நளினிக்கும் மோகனுக்கும் பொருளாதாரக் குறைவால் நிறைய சன்டை சச்சரவுகள் ஏற்படத்துவங்கின.

சில காலங்களில் நளினி சூழ்நிலைக்கேற்ப தனனை தயார்படுத்திக்கொன்டு சிக்கனமாக வாழ்க்கையை செயல்படுத்தத்துவங்கினாள், ஆனால் மோகன் மனதிலோ, வளமாக வாழ வேண்டும், முடிந்தால் ஒரே நாளில் பணக்காரனாகிவிடவேண்டும் எனும் பேராசை உள்ளத்தை அரித்தெடுத்தது..!

எல்லோரும்  நாடும் எளிய வழியாக நான்கு நம்பர் துணையை மோகனும் நாடிட வ‌ருமானத்தில் ஒரு பகுதி நான்கு இலக்க எண் கடைக்காரருக்கு போக ஆரம்பித்தது. அது போதாதென்று எங்கெல்லாம் சாமியாடிகளும், பூசாரிகளும், குறிசொல்பவர்களும் நான்கு இலக்க எண் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டாலும் உடனே அங்கே ஆஜராகி பணத்தை செலவழிக்க ஆரம்பித்து விடுவான் மோகன்.

ஒருநாள் மோகனுடன் பணியாற்றும் ஒருவர், தாம் அறிந்த சாமியார் ஒருவர் வீட்டில் வந்து பூஜை செய்தால் உடனே சகல வறுமைகளும் நீங்கி நம்பர் அடித்து பெரும் பணக்காரர் ஆகிவிடலாம் என ஐடியா வழங்கினார்.

மோகன் உடனே நளினியிடம் கலந்து பேசி அந்த‌ சாமியாரை வரவழைத்து வீட்டில் பூசை போட முடிவு செய்தான். நளினிக்கு இதில் கொஞ்சமும் ஆர்வம் இல்லை. கணவனையும் தடுத்துப்பார்த்தாள். ஆனால் மோகன் காதுகளில் எதுவும் ஏறவில்லை.

மோகன் மிகவும் ஆர்வத்துடன் சாமியாரை சந்தித்தான் . அவர் நடுத்தர வயதினராக தாடி மீசையுடன் காட்சியளித்தார். மோகனின் குறையைக் கேட்டு, கண்கள் மூடி சில நிமிடம் கழித்து மோகன் வீட்டில் தீய சக்தியொன்று  இருப்பதாகவும் அதை விரட்டினால் நில‌மை சரியாகிவிடும் என்றார். பின்னர் அவர் மோகனுடைய‌ வீட்டில் பூசை செய்வதற்கு நாள் குறித்துத்தந்தார். ஒரு நீண்ட பட்டியலைத்தந்து அதிலுள்ள பொருட்களை வாங்கி வைக்கும்படி பணித்தார்.

குறிப்பிட்ட நாளும் வ‌ந்தது. பூசை அன்றிரவு நடந்தது, ஆரம்ப முதலே இதெல்லாம் பிடிக்காத நளினி குழந்தைகளை அழைத்து வைத்துக்கொன்டு ஒரு ஓரமாய் அமர்ந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்தவண்ணமிருந்தாள்.

சாமியார் பூசையை ஆரம்பித்தார், அதற்கு முன் அவர்கள் வீட்டு சாமி மேடையைக் கண்டு அதிலிருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் படத்தை எடுத்துவிடுமாறு மோகனை பணித்தார். தன் பூசை சம்பந்தப்பட்ட எதையும் சாமி மேடையில் வைக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு கட்டளையிட்டார்.

 பூசைக்கு பயன்படுத்தும் சிவப்புத்துணிகளை எட்டாக எடுத்து அதில் உரித்த வாழைப்பழம், அரிசி, இன்னும் சில பொருட்கள் சேர்த்து எட்டு பொட்டலங்கள் செய்து வைத்தார். சந்தண‌ம், மஞ்சள், அரிசி, மிளகு யாவற்றையும் குழம்பாய்க் கரைத்து வீடு முழுதும் தெளித்தார்.

நடுவீட்டில் ஹோமம் வளர்த்து வீட்டிலுள்ள அனைவரையும் வெளியேற்றிவிட்டு, நெருப்பில் ஏதோ ஒன்றைத்தூவ அடர்த்தியான வெண்புகை எதிரே இருப்பவர் முகமும் தெரியா வண்ணம் மறைத்தது. நல்லவேளை அதற்கு முன்பே நளினி வீட்டிற்கு வெளியே குழந்தைகளுடன் வந்து நின்று கொன்டாள். பூசாரி மோகனின் துணையோடு வீட்டின் விள‌க்குகள் அனைத்தையும் அடைத்தார். வீடு இருண்டு புகை மண்டலமாகிப் போனது. எல்லோரையும் வெளியேற்றிவிட்டு பூசாரி மட்டும் ஒரு மண்பானையுடன் வீட்டினுள் சென்றார். சற்று நேரத்தில் வெளியேறியவர், மூடிக்கட்டிய அப்பானையினுள் ஏதோ ஒன்று பிராண்டுவதை அனைவருக்கும் காண்பித்தார் (பானையைத் திறக்காமலேயே) அந்தப் பானையும் மிகவும் பாரமாக இருந்தது.

எல்லாம் முடிந்தது. வீட்டிலிருந்த தீய சக்தியை பானைக்குள் பிடித்து விட்டேன். இனி கட்டி வைத்துள்ள பொட்டலங்களை எட்டுத்திசையிலும் கட்டிவைத்து பூசை செய்தால் எல்லாம் நல்லபடியாகும் எனக்கூறி தட்சிணையைப் பெற்றுக்கொன்டு புறப்பட்டார் சாமியார்.

மோகனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது, சாமியார் கூறியபடியே வீட்டின் எட்டுத்திக்கிலும் ஆணியடித்து சாமியார் தந்த பொட்டலங்களை மாட்டி வைத்து தூப தீபம் காட்டி வழிபடத்துவங்கினான்.      
  
குறிப்பிட்டபடியே சில நாட்களில் மோகனுக்கு நான்கு இலக்க எண்ணில் 5000 வெள்ளிக்கு நம்பர் அடித்தது. மிகவும் அகமகிழ்ந்துபோனான் மோகன். முன்னிலும் தீவிரமாக மாட்டிவைத்த பொட்டலங்களுக்கு வழிபாடு செய்யத்துவங்கினான்.

மோகனின் நாட்கள் மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்த சில நாட்களில் நளினியின் நிலமை மாறத்தொடங்கியது. வீட்டில் யாரோ தன்னைப் பின்தொடர்வது போலவும் தான் கவனிக்கப்படுவது போலவும் உணரத்தொடங்கினாள்.பயமும், பதற்றமும் அவளை ஆட்கொள்ளத் துவங்கியது.

ஒருநாள் மதியம் வீட்டு வேலைகள் முடிந்து நளினி முன்னறையில் குழந்தைகளுடன் ஓய்வாக படுத்திருந்தாள் அவளின் 5 வயது மகன்  அவளுக்கு அருகாமையில்  அமர்ந்து பிஸ்கோத்துகளை உண்டுகொண்டிருந்தான்.

அரைகுறை உறக்கத்தில் இருந்த நளினிக்கு தன் கால்மாட்டில் யாரோ ஒரு பத்து பண்ணிரன்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைப்போல் தோன்றியது. கழுத்து முதல் முழங்கால் வரை  சிவப்பு நிறத்துணியை அவன் அணிந்திருந்தான். லேசான விழிப்பு நிலையில் தன் மகனை நோக்கி  "தம்பி அண்ணனுக்கு கொஞ்சம் பிஸ்கோத்து கொடுப்பா " என்றாள் நளினி. அவள் குரல் கேட்டு அவள் கால‌டியில் பின்புறமாக அமர்ந்திருந்த அந்த உருவம் அப்படியே முகத்தை கழுத்துப்பக்கம் திரும்பி அவளைப் பார்க்க அதிர்ந்துபோனாள் நளினி. மலாய் சிறுவனைப்போல் காட்சியளித்த அந்த உருவத்தின் முகத்தில் கண்கள் இரண்டும் இரு கருந்திராட்சைகள் போன்று முழு கருப்பாக விழிவெண்படலமின்றி காட்சியளித்தது. அந்த உருவம் அவளை நோக்கி விகாரமானதொரு சிரிப்பை சிந்த, பதறியடித்து எழுந்தாள் நளினி. பக்கத்தில் மகன் மட்டும் சாப்பிடுக்கொன்டிருக்க இப்போது அந்த சிறுவனை அங்கே காணவில்லை...!

நளினிக்கு வியர்த்துக்கொட்டியது. ஏதோவொன்று சரியில்லை என ஆரம்பம் முதலே அவள் சங்கடப்பட்டது உண்மைதான் என அவளுக்கு தோன்றியது. அந்த சிறுவனின் ஆடை, வீட்டில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பொட்டலங்களின் துணியைப் போலவே இருந்ததையும் அவள் நினைத்துப்பார்த்தாள். அதன் பின்னர் அவளின் உடல் நிலை மிகவும் மோசமாகிப் போனது, உடல் பலகீனமாகி, இரத்தசோகை பீடித்து, முகமும், நகமும் வெளுத்து, நடக்கவும் இயலாமல் படுத்தபடுக்கையானாள். 

குழந்தைகளும் நோய்வாய்ப்படலாயினர். மருத்துவச்செலவு ஏகத்துக்கும் எகிறிய்து. மருத்துவர்கள் நளினியை பரிசோதித்துவிட்டு அவளுக்கு ஒரு குறையும் இல்லை, ஆனால் இரத்த அளவு மட்டும் வெகுவாகக் குறைந்திருக்கிறது எனத்தெரிவித்தனர். வறுமையும். பிணியும் அக்குடும்பத்தை அளவுக்கு மீறி ஆட்டிவைக்க ஆரம்பித்தது.

நளினியின் பேச்சை அதுவரை கேட்காத மோகனுக்கு இதயம் துனுக்குற ஆரம்பித்தது. அதற்கு முன் இல்லாது இப்போது அவன் கண்களிலும் அவ்வீட்டின் அரவமற்ற பகுதிகளில் நிழலுருவங்கள் தென்பட, அவன் சந்தேகம் அதிகரிக்கத்துவங்கியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பூசைக்கு முன்னர் அப்படி எதுவும் அந்த வீட்டில் அவ்ர்களுக்கு தென்படவில்லை.

நளினி மிகவும் ஆரோக்கியமான பெண்மணி, திடசிந்தை கொன்டவளும் கூட. காய்ச்சல் சளி என்றுகூட நொந்தவள் கிடையாது.  இன்று இப்படியாகிவிட்டாளே என்று வருந்திய மோகன் ஒரு முடிவுக்கு வந்தான்.

குறிப்பிட்ட அந்த நாளன்று வீடு முழுதும் மஞ்சள் நீரைத்தெளித்து வீட்டின் எட்டுத்திசையிலும் கட்டிவைத்த பொட்டலங்களை

 எடுத்து ஒரு பையில் கட்டி தூர வீசினான். தனியாக எடுத்து வைத்திருந்த லக்ஷ்மி ந‌ரசிம்மர் படத்தை பூசையறையில் மீண்டும் எடுத்து வைத்து வழிபட்டான். ஆச்சரியப்படும் விதமாக இரண்டொரு நாளில் நளினி பழையபடி நலமாக நடமாடத் துவங்கினாள். குழந்தைகளும் தேறிட குடும்பம் ஒரு வழியாக சகஜ‌ நிலைக்குத் திரும்பியது...!

அதன் பின்னர் மோகனுக்கோ நளினிக்கோ நிழலுருவங்கள் எதுவும் கண்ணில் தென்படவேயில்லை...!

மே 2016 "மன்னன்" மாத இதழில் வெளிவந்த படைப்பு

Wednesday, April 9, 2014

இருள் சிநேகிதி ‍‍-  நான்காம் பாகம்

 

முன்கதை : ஒரு பணக்கார முரடனுக்கு மனைவியாகி, அவன் சிறை சென்றதும், வேறு நாதியின்றி தன் மாமன் மகன் நாதன் வீட்டில் தஞ்சம் புகுந்தாள் சரசு. இதனால் அவள்  ச‌ந்தேகிக்கப்பட்டு சிறைமீண்ட‌ அவள் கணவனால் வெட்டிக்கொலை செய்யப்படுகிறாள் . இனி...!

ந‌டசத்திரங்களற்ற அடர் கருமை படர்ந்த வானம், ஊரே உற‌க்கத்தின் பிடியில் இரவின் நிசப்தம் மேலும் பயத்தைக்கூட்ட , இருள் மட்டுமே சாட்சியாக‌, ஒரு கோரம் கொடூரமாய் அங்கே அரங்கேறி முடிந்தது.

நாதனை வெட்டிச் சாய்த்துவிட்டு, சரசுவின் தலையைத் துண்டித்து துடிதுடிக்க கொலை செய்த இராஜன், சரசுவின் உடலில் பீறிட்டுப் பெருகிய இரத்த வெள்ளத்தை ஒரு மன நோயாளியின் மன நிலையோடு பார்த்து இரசித்துக் கொன்டு நின்றான், பின்னர் தான் வந்த வேலை முடிந்ததென்று தன் மேல் படிந்த இரத்தக் கறைகளோடும் கையில் வைத்திருந்த பாராங்கத்தியுடனும் அருகாமையிலிருந்த காவல் நிலையத்தில் சரண‌டைந்தான்.

ஏதோ பெரிதாய் சாதித்து விட்டதைப்போல் மிகவும் சாந்தமாய் மன நிறைவோடு காணப்பட்டான் இராஜன். தனக்கு உரிமையானதை அழித்தாவது பிற‌ர் அடையாமல் தடுக்கும் அவன் குணம் ஈடேறியதில் அவனுக்குப் பரம  திருப்தி.

அரைகுறை விழிப்பும் களைப்புமாய் இருந்த காவல்துறை அவனைக் கண்டு அதிர்ந்து விழித்துக் கொன்டது! விடயமறிந்து அவனை சிறையில் தள்ளிவிட்டு அவனிடமிருந்து கற‌ந்த தகவல்களோடு நாதனின் வீட்டிற்கு விரைந்தது.

உறக்கத்தின் பிடியில் மெய்மறந்திருந்த அந்த வசிப்பிடமும், அங்கே நிகழ்ந்து முடிந்த சம்பவம் அறிந்து அவசர அவசரமாய் உற‌க்கம் உதறி நாதனின் வீட்டின் முன் குவியலானது. நடந்த சம்பவம் அறிந்து அனைவர் முகத்திலும் பயமும் அதிர்ச்சியும் பிரசன்னமானது..!

காவல்துறை இரத்த வாடை வீசிய அந்த வீட்டினுள் ஐயத்துடன் அடியெடுத்து வைத்தது. முன்னறையிலேயே அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.  படுக்கை போர்வை யாவும் இரத்தம் தோய்ந்து வழிய, இரத்தவெள்ளத்தில் தன்னிலையிழ‌ந்து கிடந்தான் நாதன், சற்றே தள்ளி அது நாள் வரை அவன் உடலோடு ஒன்றியிருந்து இன்று அந்நியமாகிப்போன  அவன் கரம் துடிப்பையிழந்து சவ‌மாகியிருந்தது.

அவன் சுருண்ட கேசம் நனைந்து, அழகான முகம் வாடி , உடல் முழுதும் இரத்தகளறியால் ஈரமாகி, கண்கள் மூடி, சன்னமாய் இழையோடியது மூச்சு மட்டும்..!, காவல் துறை விரைந்து செயல்பட, அவனை அவசரஊர்தி(ஆம்புலன்சு) அள்ளிக்கொன்டு மருத்துவமனைக்கு விரைந்தது.   

அடுத்து அந்த வீட்டின் பின்னறையில் அறை முழுதும் சிவப்பு சாயத்தை கொட்டிக் கவிழ்த்ததைப்போல் ஒரே இரத்த வெள்ளம், சிவந்த நிற‌மொன்றே அங்கே பிரதானமாய் பிரவகிக்க, சிவப்புச் சமுத்திரம்போல் விளங்கியது அவ்விடம், அதில் சிதைந்த தாமரையாய் புதைந்து கிடந்தாள் சரசு ! இரவின் குளிரோடு அங்கே அலைபாய்ந்த சிறு காற்றும் இரத்த வாடையை அள்ளித் தெளித்துக்கொன்டிருந்தது.


அந்த இரத்தக் குவியலுக்கு நடுவே கைதேர்ந்த சிற்பி வடித்த அழகான சிலையொன்று சிதைந்து சின்னாபின்ன‌மானதைப்போல் அதுவரையில் பேச்சோடு செயலும், உடலும் உயிருமென‌ ந‌டமாடி இன்று பிணமாகிப்போன சரசுவின் உடல் அதுவும் தலைவேறு உடல் வேறாக..!

கண்டோர் கண்கள் கலங்கின, இரத்தவாடை முகத்தில் அறைய குடல் பெயர்ந்து வாய் வழி வந்து விடுவதைப்போல் குமட்டிக்கொன்டு வந்தது அவர்களுக்கு. காண‌முடியாதோர் கைக்குட்டையால் முகம் மூடி வெளியேறினர். கடமை ஆற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளானவர்கள் வேறு வழியின்றி தங்கள் இதயத்தை இரும்பாக்கிக்கொன்டு இரத்தத்தில் ஊறிய அவள் சிரசையும் உடலையும் அங்கிருந்து அப்புற‌ப்படுத்தி மருத்துவமனைக்கு அள்ளிச்சென்றனர்.

அதற்குப் பிற‌கு அந்தக் கொலைக்களம் சாட்சிபீடமாக மாற்றப்பட்டு, கோடுகள் கிழித்து, யாரும் பிரவேசிக்க‌ இயலாமல் தடுப்புகள் சுற்றி, புகைப்படங்கள் எடுத்து. காரியங்கள் முடிந்ததும் அந்த வீடு யாரும் உட்புகாமல் சீல் வைக்கப்பட்டது.

எல்லாம் ஓய்ந்தது. ஆளுக்கொன்றைப் பேசிக்கொன்டு, சூள்கொட்டியவாரே ஊர் களைந்து போனது. விடிய இன்னும் சில பொழுதே எஞ்சியிருக்க, தனித்து விடப்பட்ட அந்த வீட்டின் ஓர் மூலையில் புகையால் செதுக்கிய சிற்பம் போன்று சூனியத்தை வெறித்த பார்வையோடு, ஓர் உருவம் அசைவற்று அமர்ந்திருந்தது. வாழ்க்கையைத் தொலைத்து உடலிலிருந்து உயிரும் தொலைந்து விட்ட அப்பாவி சரசுவின் ஆன்மாதான் அது...!
தொடரும்...            

  

Thursday, March 27, 2014


 இருள் சிநேகிதி ‍ - மூன்றாம் பாகம்


இப்பூவுலகில் நாள்தோறும் பல்லாயிரம் உயிர்கள் பிறக்கின்றன, அதேபோல் இறக்கவும் செய்கின்றன, இருப்பினும் சிலரது பிற‌ப்புகள்  சரித்திரமாவதைப்போல்  சிலரது இறப்புகள் சர்ச்சையாகிவிடுகின்றன‌. பல்வேறு மர்ம முடிச்சுகளைத் தாங்கி முழுமையான, ஆதாரப்பூர்வமான முடிவுகள் ஏதுமின்றி MH370 விமானத்தில்  பயணித்தவர்களின்  வாழ்க்கைப்பயணமும் நடுக்கடலோடு சங்கமமாகிவிட்டது எனும் அனுமானமும் இப்பிரச்சனைக்கான‌ வழியைவிட வலியைத்தான் அதிகரிக்கின்றது.  சலனங்களும், சஞ்சலங்களும், சந்தேகங்களாய் தொடர, நமது பிரார்த்தனைகளும் அந்த விமானத்தில் பயணித்த அனைவருக்காகவும்...! 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முன்கதை : பெற்றோரை இளம் வயதிலேயே பறிகொடுத்து தனது மாமனின் வீட்டில் வேலைக்காரியாய் அடைக்கலம் புகுந்த அழகான அபலைப்பெண் சரசு இராஜன் எனும் பணக்கார சண்டியர் ஒருவனுக்கு மனைவியாகிறாள். விதிவசத்தால் ஒரு கொலைக்குற்றத்தில் சரசுவின் கணவன்  மரணதண்டனைக் கைதியாகி சிறை செல்ல, அவனின் தாயாரால் வீட்டைவிட்டு அடித்து துரத்தப்படுகிறாள் சரசு, இனி....

போக்கிடம் இன்றி புகலிடமும் இன்றி தன் விதியை நொந்தவாரே வீதியில் கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள் சரசு. இராஜன் தாயாரின் இராட்சத‌ குணமறிந்த ஊர்மக்கள் யாரும் சரசுவுக்கு உதவ முன்வரவில்லை.

இந்த செய்தி அதே ஊரில் வாழ்ந்து வந்த நாதனுக்கும் எட்டியது. அவளுக்கு உதவ வேண்டும் எனும் வேட்கையுடன் அவன் அவளைத் தேடி விரைந்தான்.

அசோக‌ வனத்து சீதை போல வாடிய முகமும் வருத்தமளிக்கும் தோற்றத்துடனும் அவளைக் கண்டான். மிகவும் பரிதாபகரமாக காட்சியளித்தாள் சரசு. அவளை தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தான் நாதன். சரசுவின் கணவன் மகா முரடன், ஒரு வாலிபனின் வீட்டில் அவள் தங்கினாள் என்பதை அறிய நேர்ந்தால் தாங்கொனாத வருத்தமும் கோபமும் அவனுக்கு ஏற்படும், அதன் விளைவு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமோ என பயந்து பிடிவாதமாக ம‌றுத்தாள் சரசு. ஆனால் நாதன் அவளை விடுவதாயில்லை, ஆறுதல் வார்த்தைகள் கூறி விரைவில் அவளை அவள் கண‌வனை சந்திக்க அழைத்துச் செல்வதாகவும் அவனிடம் கலந்தாலோசித்து அவளுக்கு நியாயம் கோருவதாகவும் வாக்களித்தான் . அவன் வார்த்தையை நம்பி அவனைப்  பின்தொடர்ந்தாள் சரசு.

நடந்தவற்றை அறிந்த இராஜனின் தாயார், அவளூக்கு இழைத்த கொடுமைகள் போதாதென்று இராஜனின் மனதிலிருந்தே ச‌ர‌சுவை  தூக்கியெறிந்து, அவனுக்குப்பின் அவளுக்கு கிடைக்கப் போகும் சகாயங்களை அறவே கிடைக்க விடாமல் செய்ய கங்கணம் கட்டிக்கொன்டாள்.

தன் திட்டப்படி சரசுவை முந்திக்கொன்டு இராஜனை சிறையில் சந்தித்தாள் வழக்கப்படி தாய்க்கும் மகனுக்குமான சோக உபசார வார்த்தைகளுக்குப்பின் கதறிக் கதறி அழுது சரசுவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக வத்தி வைத்தாள் இராஜனின் தாய். சரசுவிற்கும் நாதனுக்கும் தகாத உறவு உள்ளதென்றும், தட்டிக் கேட்ட தன்னை தாக்கிவிட்டாள் எனவும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாள்.

ஆத்திரக்காரனுக்கு எப்போதுமே புத்தி மட்டுதானே ? இராஜனின் கண்களை கோபம் மறைத்தது. அளவற்ற சினத்துடன் தன் தாயிடம் தன் சொத்துக்கள் அனைத்தும் தன் குடும்பத்தினர்க்கே சேர வேண்டும் என உயில் அமைத்துக் கொடுத்தான், அவன் தாயின் சூழ்ச்சி பலித்து அவள் எண்ணம் ஈடேறியது.

அவளுக்குப்பின் ஏதுமறியாத சரசு நாதனின் துணையுடன் இராஜனைக் கண்டு உண்மை நிலையைத் தெரிவிக்கச் சென்றாள். நாதனுடன் தன்னைப் பார்க்க வந்திருக்கிறாள் சரசு என்பதை அறிந்தவுடன், தன் தாய் சொன்ன யாவையுமே உண்மைதான் என உறுதிபடுத்திக்கொன்டான்  இராஜன். அவளைப் பார்க்க விரும்பவில்லை என திருப்பி அனுப்பிவிட்டான். வருத்தமும் ஏமாற்றமும் சூழ வீடு திரும்பினாள் சரசு.

நாதனிடம், அவன் வீட்டை விட்டு தான் புறபடப் போவதாகக் கூறினாள் சரசு. நாதன் அண்டை ஊர்களில் குடியிருக்கும் தன் சகோதரிகள் யாராவது சரசுவுக்கு அடைக்கலம் தர‌க்கூடும் எனவும், கூடிய விரைவில் அவளை அவர்களிடத்தில் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்து அதுவரை தன் வீட்டிலேயே தங்க வேண்டுமென்று வற்புறுத்தி வெற்றி கண்டான்.

யாருமே எதிர்பாராத ஒன்று வெகுவிரைவில் நடந்தது. சரசுவின் விடயத்தால் அதிகம் கடுப்பான இராஜன் சிறைச்சாலையிலிருந்து  மிகவும் தீவிரமாக முனைந்து தப்பினான். யாருமறியாது தக்க ஏற்பாடுகளை செய்துகொன்டு சரசுவைப் பழிவாங்க‌ அவள் குடியிருக்கும் வீட்டை அடைந்து அவ்வீட்டின் அருகாமையில் இரவை எதிர் நோக்கிப் பதுங்கிக் காத்திருந்தான்.

இரவு வந்தது, ஊர் உறங்கியது, நாதனும் சரசுவும் அவரர் அறையில். நடுநிசி வரை காத்திருந்த இராஜன் வீட்டுற்குள் புகுந்தான். அவன் கையில் பளபளக்கும் நீண்ட பாராங்க‌த்தியொன்று வீற்றிருந்தது.

முதலில் அவன் கண்டது முன்னறையில் உறங்கும் நாதனை. வெறியேறிய சிவந்த கண்களில் தீப்பொறி பறக்க அவனை வெறித்து நோக்கியவாரே அருகில் சென்றான். தன் பலமனைத்தும் ஒன்று திரட்டி பாராங்கத்தியை அவன் கழுத்தைக் குறிவைத்துப் பாய்ச்சினான். மிகச்சரியாக அந்நேரத்தில் விழிப்பு வர எமகிங்கரனைப்போல் தன் முன் நின்ற இராஜனைக்கண்டு திகைத்தான் நாதன், அவன் நோக்கம் அறிந்து சுதாரித்து படுக்கையிலிருந்து அவன் நகர அதேவேளை இராஜனின் கத்தி அவனை பதம் பார்க்க அவன் மேல் பாய‌ கழுத்துக்கு வைத்த குறி தப்பி தோள்பட்டையை தாக்க‌  அடுத்த கணம் அவனின் கை துண்டாகி தனியே வீழ்ந்தது, காப்பாற்றிக்கொள்ளும் வாய்ப்பின்றி அலறிச் சரிந்து இரத்த வெள்ளத்தில் மூர்ச்சையானான் நாதன்.

அடுத்த ப‌லியாக சரசுவைத் தேடினான் இராஜன் அவள் ஒரு அறையில் தரையில் பாயும் தலையணையும் வைத்து படுத்திருந்தாள், தன் வாழ்வில் நிகழ்ந்த அடுக்கடுக்கான சோதனைகளையும் அது தந்த வேதனைகளையும்     
எண்ணி உறக்கமின்றி தவித்துக் கொன்டிருந்தவள் வீட்டில் ஏதோ அமளி கேட்டு எழுவதற்கும் இராஜன் அவளைக் கண்டு பிடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவளின் கண்ணீரை சட்டை செய்யாத இராஜன் க‌த்தியை அவளை நோக்கி வீசினான்.

மிகச்சரியாக அந்தக் கத்தி அவள் கழுத்தைப் பதம் பார்க்க , அந்த அறை முழுதும் இரத்த வெள்ளத்தில் நிரம்பி வழிய....தலை வேறு உடல்வேறாகி தரையில் சரிந்தது சரசுவின் உயிரற்ற உடல்....!

 சரசுவின் பயணம் இனி புதிய பரிமானத்தில்.....



தொடரும்...!.