.

.
.
Showing posts with label டாக்டர்.மு.வ‌. Show all posts
Showing posts with label டாக்டர்.மு.வ‌. Show all posts

Thursday, October 10, 2013

டாக்டர் மு.வ நினைவு நாளும் நமது இளைய தலைமுறையினரும்



தமிழ்கூறு நல்லுலகம் மறக்கவியலா மாபெரும் இலக்கியவாதி, தமிழ்ப்  பேராசிரியர் டாக்டர் திரு.மு.வ. அவர்களின் நினைவு நாள் இன்று (10/10/1974).

கண்ணைவிட்டுப் பிரிந்தாலும் கருத்தை விட்டு அகலாது, மண் விட்டு  மறைந்தாலும் மனதை விட்டு மறையாது இன்றும் தமது படைப்புகளின் வழி தமிழ் வாசகர்களின் இதயங்களில் சிம்மாசன‌ம் இட்டு அமர்ந்திருப்பவர் மு.வ என அன்போடு அழைக்கப்படும் டாக்டர் மு.வரதராசனார்  என்றால் அது மிகையல்ல‌. அவரைப் பற்றி தமிழ் கற்றோர் யாவரும் ஓரளவு அறிந்தே வைத்திருப்பர். இருப்பினும் என்றும் வற்றாத இலக்கியச் செல்வங்களையும், தனிமனித வாழ்வியல் மற்றும் சமூகம் சார்ந்த தத்துவங்களையும், சீர்திருத்தக் கருத்துக்களையும், தமது கதாமாந்தர்களின் வாயிலாக இப்படி நாமும் நல்வாழ்வு வாழவேனும் எனும் வேட்கையை வாசகர்களின் மனதில் ஏற்படுத்தியவருமான டாக்டர்.மு.வ அவர்களையும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் ஓரளவேனும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.

தோற்றம்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியவாதி திரு.மு.வா
ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரிலே திரு.திருமதி முனிசாமி  அம்மாக்கண்ணம்மாளுக்கு 25‍-4-1912 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரின் முதற்பெயர் திருவேங்கிடம் என்பதாகும், எனினும் தாத்தாவின் பெயர் பேரனுக்கு எனும் மரபுவழி "வரதராசன்" எனும் பெயர் இவ‌ருக்கு சூட்டப்பட்டது.

இவர் சிற‌ந்த தோற்ற‌ப் பொலிவும், புன்னகை பூத்த வதனமும், அன்பும், அறிவும் பொழியும் கண்களுமாக விளங்கியவர்.   அது மெய்யென்பது அவரது புகைப்படங்களை காணும் பொழுது புலனாகிற‌து.

இவர் நல்ல மனமும், பண்பட்ட நெஞ்சமும், இழப்புகளை எண்ணி வருந்தாத மனப்போக்கும். நேரத்தை கண்ணெனப் போற்றும் தகைமையும், கடமை உண‌ர்வில் சிறந்தும்  விள‌ங்கியவர்.

கல்வி
இவர் தமது ஆரம்பக்கல்வியை வேலத்திலும், வாலாசாவிலும் முடித்து திருப்பத்தூரில் தமது உயர்கல்வியை கற்றார். தொடர்ந்து முருகய்ய முதலியாரிடம் தமிழ் கற்று தமிழ்ப் புலவர் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றார், அதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு தமிழ்த் தேர்வில் சென்னையிலேயே முதல் நிலை மாணாக்கராக தேறி  ரூ.1000 திருப்பனந்தாள் பரிசை வாகை சூடினார். 1939ல் பி.ஓ.எல் பட்டமும், 1944 இல் எம்.ஓ.எல் பட்டமும் பெற்றார். இறுதியாக 1948 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன் முதலாய் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றார்.

இவர் 1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரியில் இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) எனும் சிற‌ப்புப் பட்டத்தை முதல் முறையாக பெற்ற தமிழறிஞர் எனும் பெருமை கிடைக்கப் பெற்றார்.

இவர் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார்.

தொழில்
1928ல் தாலுகா அலுவலகத்தில் ஒரு எழுத்தராக மு.வ தமது பணியைத் துவங்கினார்.அதன் பின்னர் ஆசிரியப்பணியில் கால் பதித்து நகராட்சி உயர் நிலைபள்ளி ஆசிரியர்(1935), பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் (1939-1944) வரை பணியாற்றினார்.

1945 ஆம் ஆண்டு இவர் தாம் விரிவுரையாளராக பணி புரிந்த பச்சையப்பன் கல்லூரியிலேயே தமிழ்த் துறைத் தலைவராக பதவி வகித்தார்.

தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துணைப்பேராசிரியர்
பதவி(ஓராண்டு) வகித்த பின்னர் (1961‍-1974) வரை மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவராகவும் இறுதியில் 1961-1974 வரை மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் சிற‌ப்பாக பணியாற்றியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை
இவர் தமது மாமா மகள் இராதா அம்மையாரை 1935 ஆம் ஆண்டு திருமண‌ம் புரிந்து கொன்டார். இவ்விணையருக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி என மூன்று செல்வங்கள், அவர்கள் மூவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருவதாகவும் அறியப்படுகிற‌து.


தமிழ்த்தொண்டு
தமிழ் இலக்கிய வானில் என்றும் மங்காத சூரியனாகப் பிரகாசிக்கும் திரு. மு.வ அவர்கள் மிகச்சிற‌ந்த 13 நாவல்கள், சிறுகதைகள், சிந்தனைக்கதைகள், நாடகங்கள், கட்டுரை நூல்கள், இலக்கியப் படைப்புகள், சிறுவர் இலக்கியங்கள், கடித இலக்கியங்கள், பயண இலக்கியங்கள், இலக்கிய வரலாறு, மொழியியல் படைப்புகள், வாழ்க்கை வரலாறுகள், ஆங்கில நூல்கள், சிறுவர் இலக்கண நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு நூல்கள் என எண்ண‌ற்ற எழுத்துப்படிவங்களை பாங்குற வடிவமைத்துப் பாருக்குத் தந்தவர், மக்கள் படித்துப் பயனடையச் செய்தவர்.

தமிழன்றிப் பிற‌மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன,

இவரின் சிற‌ந்த படைப்புகளுள் ஒன்று "அகள் விள‌க்கு" புதினம். இரு நண்பர்களின் வாழ்வை மையமாக வைத்து உருப்பெற்ற காவியம். அவர்களில் ஒருவர் தமது சிற‌ப்புகளை தவறாகக் கையாண்டு இறுதியில் சோகமான முடிவை அடைவதைச் சொல்லும் அற்புத எழுத்தோவியம். இப்படைப்பு ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும், எப்படி வாழக்கூடாது என்பதையும் இரு கதாமாந்தர் வாயிலாக விளக்குகிற‌து. இந்நாவல் இந்திய ஜனாதிபதியின் "சாகித்திய அகாடமி விருது" பெற்றது. மிக மிக அருமையான நெஞ்சைத்தொடும் நாவல். ஆழ்ந்து வாசிப்பவர்களை முடிவில் நிச்சயம் அழவைத்துவிடும் நாவல்.

இவரின் ஏனைய எழுத்துச் சித்திரங்களான "கள்ளோ காவியமோ" (இல்லற வாழ்விற்கு வழிகாட்டியாகத் திகழும் நாவல்), அரசியல் அலைகள், மொழியியற் கட்டுரைகள் ‍ஆகியவை சென்னை அரசாங்கத்தின் பரிசுகளை வென்றுள்ளது.

இவையன்றி இவரின் "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்", "மொழி நூல்", "கள்ளோ, காவியமோ" ?, "விடுதலையா"? "அரசியல் அலைகள்", "ஓவச் செய்தி" ‍ ஆகிய படைப்புகள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்கள் பெற்றவையாகும்.

இவர் கைவண்ணத்தில் 1948 இல் பொதிகைப் பதிப்பகம், கடலூரிலிருந்து திருவள்ளுவர் அல்லது வாழக்கை விளக்கம் என்னும் நூல் வெளியீடு கண்டது இந்நூலுக்கு  தமிழறிஞர் திரு வி.க அவர்கள் தமது முன்னுரையில் " வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக் கொணர்ந்தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சின்றும் அரும்பும் கருத்து சிந்தனைக்குரியது" என சிறப்பித்து கூறியிருக்கிறார்.

1949 இல் சைவசித்தாந்த நூற் பதிப்பகத்தின் வாயிலாக திருக்குறள் தெளிவுரை வெளியிடப்பட்டது. இவரின் படைப்புகளில் மிகவும் பிரபலமானதும், வணிக ரீதிரியில் மிகப்பெரிய வெற்றியையும் ஈட்டியது இவரின் திருக்குறள் தெளிவுரை நூலாகும். பல பதிப்புகள் கண்ட இந்நூலில் தற்சமயம் கைவசம் இருப்பது 110 வது பதிப்பு...!(1991). எளிமையாகவும் தெளிவாகவும் படைக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். பள்ளிச்சிறார்களும்  திருக்குறளை எளிதில் வாசித்து உணர்ந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்டிருப்பது இப்படைப்பின் தனிச் சிறப்பாகும்.

 மறைவு
தமது 62 அகவைக்குள் 85 நூல்கள் இயற்றி தமிழுக்கு சிற‌ந்த தொண்டாற்றிய மு.வ. அவர்கள் தமது 10‍-10-1974 (இன்றோடு இவர் மறைந்து 39 ஆண்டுகள்) நாள‌ன்று  சென்னையில் இறைவனடி எய்தினார். அவர் புவிவிட்டு மறைந்தாலும், புகழுடம்போடு இன்றும் அவர் எழுத்தோவியங்களை வாசித்து பயன் பெறும் வாசக நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை இன்றளவும் இலக்கியவாதிகளால் அவர் விமர்சிக்கப்பட்டு வருவதிலிருந்தே நம்மால் உணர முடிகின்ற‌து. 

மு.வ ‍ - முன்னேற்றப்பாதைக்கு ழிகாட்டி என அவர் படைப்புகளை வாசித்து பயனடைந்தவர்களால் போற்றப்படுபவர். இவரின் ஒருசில படைப்புகளை வாசித்து பயனடைந்ததுண்டு. இப்பதிவின் நோக்கம் தமிழ் இலக்கிய வானில் என்றும் ஒளிவீசும் நிறைமதியான அறிஞர் மு.வ அவர்களை நினைகூர்வதோடு....




இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் நம் பொருளாதார, அரசியல், கல்வி நிலைகள் வருத்தத்திற்குரிய நிலையில் இருப்பது யாவரும் அறிந்ததே. இதன் விளைவாக‌ நமது இளைஞர்கள்  வன்முறைக்கலாச்சாரத்தில் நாட்டம் கொன்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்டு துப்பாக்கிக்குண்டுகளுக்கு நாளும் இரையாகி வருவதும் நாமறிந்த சங்கதிகளே..!

இருப்பினும் புற்றீசல்களாய் புற‌ப்பட்டு, கரையான்களாய் நம்மினத்தை அழிக்கும் இந்த பெரும் பிரச்சனையை களைந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம்..!   நம் இனத்தை , கலாச்சாரத்தை, பண்பாடு, மொழி ஆகியவற்றை நாளை தாங்கப்போகும் நமது தூண்களை காலனுக்கு பலியாக்கிக் கொன்டு வரும் இச்சூழ்நிலைகளைத் தடுக்க  நமது பங்காக நாமும் சில கடமைகளை ஆற்ற வேண்டும். நாம் படித்து, நல்ல தொழில் புரிந்து, நிறைய பண‌ம் ஈட்டி பெரிய வீடு,  கார், கையிலே பணம் என எல்லா வசதிகளோடும் வாழ்ந்து விட்டால் மட்டும் போதாது. இதன்வழி மட்டும் நம் வாழ்க்கை மேம்பட்டதாக, பாதுகாப்பானதாக அமைந்துவிடாது,  நாளை நமது இளைய தலைமுறையினர் கெளரவமாக இந்நாட்டில் வாழ வழி பிற‌ந்தும் விடாது.

இதைக்களைய நாம் செய்யவேண்டிய பல காரியங்களுள் மிகப்பெரிய நற்காரியம் இள‌ம்பிராயத்திலேயே நமது இளைய தலைமுறைகளை நன்னெறிப்படுத்துவதாகும். அதற்கு ஏதுவாக நற்பண்புகளை ஊட்டும், ஒழுக்கத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் மு.வ போன்ற அறிஞர்களின் படைப்புகளில் அவர்களை ஈர்ப்புகொள்ளச் செய்ய வேண்டும், அதற்கு முதலில் அவர்கள் வளமான தமிழை நலமாகக் கற்க‌, தமிழ்ப்பள்ளியில் பயிலவேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும்.  இந்த சமுதாய‌மும் ஒருங்கிணைந்து அதற்காக ஆவன செய்யவேண்டும்.

சீனர்கள் பல வழிகளில் ஏன் தாங்கள் அருந்தும் மதுவின் வழிகூட‌ தங்கள் இனப் பள்ளிகளுக்கு பங்களிப்பு செய்கின்றார்கள், நாம் இன்றைய நமது தலைமுறையை நன்னெறிகள் ஊட்டி நல்வழிப்படுத்த  இதுபோன்ற‌ வழிகளைக் கையாளத் தயங்கக்கூடாது. நமது இளைய சமுதாயத்தை மீட்டெடுப்பது நமது கடமை. தடுக்க மறந்து வாளாவிருந்தால் ஒரு நாள் நமது இளைய தலைமுறையின் வன்முறை நம்மையே பாதிக்கக்கூடும், அல்லது நாளை நமது இள‌வல்களும் வன்முறையாள‌ர்களாக வடிவெடுக்க அது வகை செய்யக்கூடும்.




Friday, September 6, 2013

மாயமனிதனும் மாபெரும் இலக்கியவாதியும்


ஒருநாள் ஒருபொழுது திடீரென யார் கண்ணுக்கும் புலப்படாமல் , மாயமாய் மறைந்து காற்றாய் உலவும் நிலை நமக்கு நேரிட்டுவிடுகிற‌து, அப்போது மன‌ நிலையும் உடல் நிலையும் எப்படி இருக்கும் ? என்னென்ன காரியங்கள் செய்யத் துடிக்கும் இந்த மனது ?

அன்பான‌வர்களை அவர்கள் அறியாமலேயே பின் தொடர்ந்து வேவு பார்க்கச் செய்யுமா ? வேண்டாதவர்களை அவர்கள் அறியமாட்டார்கள் எனும் தைரியத்தில் துன்பம் இழைத்து பழி வாங்கத் தூண்டுமா ? விளிம்பு நிலை மாந்தர்களுக்கு நன்மைகள் புரிந்து அவர்களை மகிழச் செய்து இரசிக்குமா ? அல்லது இதுதான் சமயமென்று மேலும் அசம்பாவிதங்களை தோற்றுவித்து ஏற்கனவே அரசியல்வாதிகளாலும், அடாவடிப் பேர்வழிகளாலும் நொந்து போன மக்களை மேலும் நோகடித்து பிறர் துன்பத்தில் குளிர் காய விழையுமா?   

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆங்கிலத் திரைப்படம் (Hollow Man )  Kevin Bacon, Elisabeth Shue ஆகியோரின் நாயக நடிப்பில் வெளிவந்த அறிவியல் புனைவிலான திகில் திரைப்படம்.

விஞ்ஞானி செப‌ஸ்டியன் கேய்ன் (Kevin Bacon ) உயிரினங்களை உருவம் களைந்து மாயமாய் மறையச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். மிருகங்களைக் கொன்டு அவர் செய்த பரிசோதனை முழு வெற்றியைத் தருகிறது. தமது ஆய்வில் மிருகங்களை மறைத்து மீளவும் மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றியடைந்த களிப்பில், அடுத்த‌க் கட்டமாக மனிதரை மாயமாய் மறைவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் தமது விஞ்ஞானிகள் குழுவினரின் உதவியோடு தம்மையே பரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்கிறார். அவர் உடலில் அவர் கண்டுபிடித்த ஆய்வு மருந்து செலுத்தப்படுகிற‌து. கடுமையான வலியையும் வேதனையையும் அடைந்து, தமது உடலின் தோல், நரம்புகள், சதை  இறுதியில் எலும்புக்கூடு என ஒன்றன் பின் ஒன்றாய் உடல் முழுமையாய் மறைந்து மாய மனிதனாக ஆகிவிடுகிறார் . அதன் பின்னரே திரைக்கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது, உடல் மறைந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பானது அவர் மறையத்தான் உதவியதே தவிர, மிருகத்தின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக அதன் உடலை மீண்டும் உருப்பெற செய்ததைப்போல அவரை மீட்டுத்தர உதவவில்லை, தோல்வியில் கையைப்பிசைகிற‌து விஞ்ஞானிகள் கூட்டம்.

தனது உடலை இழந்து மாயமனிதனாக மாறிய நிலை ஆரம்பத்தில் மகிழ்ச்சியளித்தாலும், ஒரு கட்டத்தில் அது விஞ்ஞானி செபஸ்டியனுக்கு சலிப்பையும், வெறுப்பையும் தருகிறது. வெறுப்பு குரோதமாக வடிவெடுக்க‌ தனது உருவம் திரும்ப மீளாது எனும் முடிவுக்கு வந்து அதீத கோபம் கொள்கிறார். விளைவு, தனது மன விகாரங்களுக்கு உயிரூட்ட ஆரம்பிக்கிறார். பல வில்லங்கங்களை புரிகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் உலகிற்குத் தெரியாமல் தனது தோல்வியுற்ற கண்டுபிடிப்பை மறைக்கவும், தன்னை தற்காத்துக்கொள்ளவும் ஒரு பயங்கர முடிவை எடுக்கிறார் . அதன் தொடர்பில் தனது விஞ்ஞானக் குழுவினரையே ஒவ்வொருவராக கொடூரமாகப் பலிகொள்கிறார். இறுதியில் கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கொப்ப  தமது விஞ்ஞானிகளில்  ஒருவரான‌ கதாநாயகியைக் கொல்ல முயற்சிக்கையில், தனது எண்ணம் ஈடேறாமல் அவர் கையாலேயே கொடூரமாக அழிக்கப்படுகிறார்.

இது தமது உடல் அருவமானதை சாதகமாக்கிக்கொன்டு தீமைகள் புரிந்த ஒரு மனிதனின் கதை.

வாழும் காலத்திலேயே ஒரு மனிதனுக்கு மறைந்து உறையும் நிலை  நேர்கையில்,  அவன் வாழ்க்கை, அவனை பிண்ணிப் பிணைந்திருக்கும் அவனது உற‌வுகள், பகைகள் ஆகியவற்றை அவன் கைக்கொள்ளும் விதம், உண்டு, உறங்கி உயிர் வாழும் சராசரி மானுடப் பிற‌வியாக இன்றி, சமூகத்தின் பால் அக்கரை கொன்ட ஒரு  சீர்திருத்தவாதிக்கு இந்நிலை வாய்த்தால் அவனுடைய செயல்பாடுகள் ? இக்கேள்விகளுக்கு பதிலாக அமைகிறது மேற்குறிப்பிட்ட கதைக்கு நேர்மாறாக அமைந்த ஒரு மாயமனிதனின் புதினம். 

கதைச்சுருக்கம் - அநியாயத்தைக் கண்டால் பொங்கியெழுந்து நீதிக்குப் போராடும் நடுத்தர வர்க்கத்து நாயகன்(மெய்யப்பன்). மணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான அவர் அவ்வூரின் பெரிய மனிதர் போர்வையில் ஒளிந்து கொன்டு பலவித அநியாயங்களை நிகழ்த்தும்  பணம், பதவி, அந்தஸ்து படைத்த வில்லனின் (கேசவராயன் ) சூழ்ச்சியால் கொலையாளியாக சித்தரிக்கப்பட்டு சிறை செல்கிறார், சந்தர்ப்பமும், சாட்சிகளும் அவருக்கு எதிராக பிண்ணப்பட, சதி வலையில் சிக்கிக்கொன்ட அவர் செய்யாத குற்றத்திற்காக ஆறாண்டுகள் சிறைவாசம் அநுபவித்து விட்டு வீடு திரும்புகிறார்.

மனவி மக்களைக் காண பேராவலுடன் வீடு திரும்பும் அவரை அவர் மனைவி ஊராரின் பழிச்சொல்லுக்குப் பயந்து வீட்டிலேயே ஒதுக்கியும் ஒளித்தும் வைத்து வேதனைப்படுத்துகிறார். மனமுடைந்த நாயகன் வீட்டை விட்டு வெளியேறி தமது ஆப்த நண்பனின் உதவியோடு வடதேசம் நோக்கிப்புற‌ப்படுகிறார், இடையில் நண்பரிடமிருந்து பிரிந்து வட நாட்டில் வேலை தேடிக்கொன்டு அங்கேயே வாழ்ந்தும் வருகிறார், வீட்டைப் புறக்கணித்து பிரிந்தாலும் மனைவி மக்களுக்கென தமது ஊதியத்தின் ஒரு பகுதியை அனுப்பி வைக்கிறார்.

அச்சமயத்தில் விஞ்ஞானத்திலும், மெய்ஞ்ஞானத்திலும் உயர் அறிவு பெற்ற ஞானி (மெய்கண்டார்)  நட்பு அவருக்கு வாய்க்கிறது. அவருடன் நெருங்கிப் பழகும் நாயகன் அவர் உருவங்களை மறைய வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்து பிரமிக்கிறார், ஞானியிடம் தன்னை சோதனையில் ஆட்படுத்திக்கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் . ஆரம்பத்தில்  தயங்கினாலும் பின்னர் நாயகனை தனது ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்கிறார் ஞானி.

அவர் முயற்சி வெற்றியடைந்து நாயகன் உருவம் மறைந்து மாய மனிதனாகி விடுகிறார். அருவமாகிப்போன அவர் தன் ஊர் நோக்கி விரைகிறார். அங்கே மாய வடிவில் தன் குடும்பத்தினரிடையே உலவுகிறார், பொதுவில் நடைபெறும் சில தீமைகளை தடுத்து வெற்றி கொள்கிறார், தமது நண்பர்களின் வாழ்வுக்கு உதவுகிறார்.த‌ன்னை வஞ்சித்த வில்லனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவெடுக்கிறார், அப்போது அவரை மாய வடிவெடுக்க உதவிய ஞானியார் வழியாக அவ்வில்லனின் பிண்ணனியை அறிந்து தனது  பலிவாங்கும் முயற்சியில் தயங்குகிறார்,

இறுதியில் முடிவு என்ன‌ ? நாயகனின் உருவம் மீண்டதா ? அவர் நினைத்தபடி அவர் குடும்பத்தில் அன்பும் நலமும் சூழ்ந்ததா ? தம்மை வஞ்சித்த வில்லனை அவர் நினைத்தபடி பழிவாங்கினாரா ? என்பதையெல்லாம் நான் சொல்ல மாட்டேன், வாய்ப்புக் கிடைத்தால் டாக்டர்.மு.வ. அவர்களின் "மண்குடிசை" நாவலைப் படித்து முடிவைத் அறிந்து கொள்ளுங்கள்.   

அன்றும் இன்றும்  தமிழ் இலக்கிய நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் மு.வ அவர்களின் கைவண்னத்தில் மலர்ந்த நாவல் இது. மறைந்து பல்லாண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் இலக்கியவாதிகளின் எழுத்திலும் பேச்சிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் டாக்டர் மு.வ என்றால் அது மிகையல்ல‌.


   
நிறைய தனிமனித‌/சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கிறது இந்நாவல்.இந்நாவலில் மூன்று தம்பதியரின் குடும்ப வாழ்வு வாசகர்களுக்கு படிப்பிணையாக சொல்லப்பட்டுள்ளது, அதில் கதாநாயகன் மெய்யப்பன் ஊருக்குப் பயந்து அவரை புறக்கணிக்கும் மனைவி ரேவதி (பிணைப்பிழந்த இல்லற‌ வாழ்வு), மெய்யப்பனின் நண்பன் பாண்டியன், ஆடம்பரத்துக்காக‌ அவரைப் பிரிந்து வாழும் அவர் மனைவி அஞ்சலி (பிரிவில் ஊசலாடும் மண‌வாழ்வு ) இவை இரண்டும் கடந்த மேன்மையான இல்லற வாழ்க்கை நடத்தும் குமரவேலு, அவர் அன்பு மனைவி மங்கை நல்லாள் (என்ன ஒரு அழகான பெயர் !, பேராசிரியர் மு.வ அவர்களின் அபிமானிகள் பலர் தங்கள் வீட்டு மழலைகளுக்கும் மு.வ வின் கதாபாத்திரங்களின் அற்புதமான தமிழ்ப் பெயர்களை வைத்திருந்தனர் என்பதை அறிந்ததுண்டு, இப்பெயரை காணும்போது அது ஏனென்று புரிகிறது, பெயரிலேயே பெண்மையின் மேன்மை அனைத்தும் சொல்கிற‌து இந்த இனிய பெயர்  ! ).   

இந்நாவல் குடும்ப வாழ்வியலில் அன்பின் அவசியம், கணவன் மனைவி மற்றும் குழந்தைகளிடையே மலரவேண்டிய பிணைப்பின் முக்கியத்துவம், நட்பின் மேன்மை, நல்ல நண்பர்களின் உறுதுணை வாழ்வில் ஏற்படுத்தும் நன்மைகள் எத்துணை மகத்தானது என்பதையும் உண‌ர்த்துகிற‌து.

கண்கவரும் புள்ளிகோலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாங்குற‌ அமைந்த புள்ளிகளைப்போல் கதைக்கு உயிரோட்டமாய் பல தத்துவங்கள் நாவல் முழுதும் ஆங்காங்கே அழகாய் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. படிப்போருக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் நாவல் இது.