.

.
.

Thursday, December 24, 2020

ஜனரஞ்சக மணம் வீசும் "நாகம்மாளின் மனக்குறிப்புகள்" ~ நூல் விமர்சனம்

பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தையே புத்தகம் என்று நாம் அழைக்கின்றோம் ~ போவீ

இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாசகன் மனதை பதப்படுத்த தமது பண்பட்ட அனுபவங்களையும் கற்பனைகளையும் அழகிய சிறு சிறு கதைகளாய் தொடுத்து மலேசிய மண்ணின் மணம் வீசும் புத்தகம்  ஒன்றை வெளியிட்டுள்ள சகோதரர் மனோகரன் கிருக்ஷ்ண‌ன் @ மனோவியம் மனோ அவர்களுக்கு முதலில் ஒரு பூங்கொத்து பார்சல்...!!

                       

தமது மனோவியம் வலைப்பதிவில் எழுதத் துவங்கிய காலத்தில் நமக்கு அறிமுகமான சகோதரர் மனோ முக நூலிலும் நல்ல நண்பர் என்பதைத் தாண்டி சகோதரர் என மதிக்கும் வண்ணம் கண்ணியமாய் நடந்துகொள்ளும் பண்பாளர், சிறந்த மொழிப்பற்றாளர் மற்றும் மனித நேயமிக்கவர். ஊக்கமூட்டுவதிலும், மனம் நிறைந்து பாராட்டுவதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை. சிறந்த விமர்சகராகவே அறிந்திருந்த இவரை இன்று படைப்பாளியாக காண்பது மிகுந்த  மகிழ்ச்சியளிக்கிறது.

இவர் சிந்தையில் மலர்ந்து இன்று நம் கைகளில் தவழும் நாகம்மாளின் மனக்குறிப்புக்களை படித்தேன், ரசித்தேன், இவரின் சமூக சிந்தனைகளை எண்ணி வியந்தேன். அபாரமான வர்ணனைத் திறன் மிளிரும் படைப்புகளை தந்து வாசகனையும் தம் படைப்புடன் பயணிக்கச்செய்யும் ஆற்றலை இவர் கைவரப்பெற்றிருப்பதை உணர்ந்தேன். சில காலம் திரும்பிப் பார்க்காமலிருந்த வலைப்பக்கம் விரைந்தேன், நான் வாசித்த இந்நூல் குறித்த என் கருத்துக்களை பகிர்ந்தேன். 

இனி நாம் நாகம்மாளின் மனக்குறிப்புகளை அறிந்துகொள்ள விரைவோம்...

கண்ணை உறுத்தாத செழும் மஞ்சள் நிற அட்டை கொண்ட புத்தகம், அதன் முகப்பு அட்டையில் கம்பீரமான ஆணும் களையான பெண்ணுமாய் இருவர், ஆயிரமாயிரம் அற்புதக் கதைகளை அன்புடன்  சொல்லும் தீவிரம் அப்பெண்ணின் அழகிய கண்களில்...



புத்தகத்தைத் திறந்தால் சகோதரி மங்களகெளரியின் முன்னுரை கடந்து ஆரம்பிக்கின்றன‌‌ 160 பக்கங்களில் 15 சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் நமக்கென ஒரு கருத்தையோ, உணர்வையோ பகிர்கிறது. ஒவ்வொரு வாழ்வும் ஒரு கதையே, அதை கற்பனையும், வர்ணனையும், நிஜமும், சொல்லாட்சியுமென பல்வேறு வண்ணக்கலவைகள் அணிசெய்யும் அழகழகான ஓவியங்களாய் சிறுகதைகள். எளிய‌ தமிழில் தெளிவான நடையில், பிறமொழிக் கலவையின்றி சிறப்பான நூலாய் வெளியீடு கண்டிருக்கின்றது "நாகம்மாளின் மனக்குறிப்புகள்

சில படைப்புகள் தனக்கென எழுதப்படுபவை, தன் மனவோட்டங்கள், உணர்வுகளை மட்டுமே முன்னிறுத்துபவை சில படைப்புகளோ பிறர் வாசிக்க, யோசிக்கவென சிரமம் எடுத்துப் படைக்கப்படுபவை, இச்சிறுகதைத் தொகுப்பு இரண்டாம் வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு கதையும் நம் மனதில் அசைபோட்டு தெளிவுற சில விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு கதையும் விரிவான விமர்சனத்திற்கு ஏற்றதே எனினும் தற்சமயம் ஓரிரு கதைகளைப் பற்றி இங்கே விவரிப்போம்...

நாகம்மாளின் மனக்குறிப்புக்கள் ~ நூலின் தலைப்பைச் சுமந்த கதை. கதைசொல்லி தன் அம்மாவையும் அவர்தம் மனக்குறிப்புகளாய் பதித்து வாழும் நினைவுகளையும், அதே நிலையில் கடந்த கால நினைவுகள் சுமந்த தோட்டப்புறத்தையும் நினைவில் இருத்தி கடந்த காலத்தை மீட்டுரு செய்யும் படைப்பு. அம்மாவின் தற்போதைய தளர்ந்த, ஆரோக்கியம் குறைந்த நிலை அதைப்போலவே செழிப்பாய், கலகலப்பாய் இருந்த தோட்டப்புறம் சோபையிழந்து வெறுமை சூழ்ந்த நிலை, இருப்பினும் அம்மாவின் நினைவில் நிற்கும் கடந்த கால நினைவுகள் போலவே, முதிர்ந்த தாயாய் நினைவுகளை மீட்டெடுக்கச்செய்யும் தோட்டப்புறச் சூழல். அம்மாவின் நினைவில் மலரும் குல தெய்வ வழிபாட்டையும் அதன் பூர்வீகத்தையும் அறிகையில் மலரும் முன்பே கருகவைத்து தெய்வமாக்கப்பட்ட பெண்ணுக்கென நம் மனமும் கனத்துப்போகிறது.

"தமிழர்கள் காலாகாலத்தில் கருத்தோடு எதையும் செய்வதில்லை, காலம் கடந்தபின் வருந்தி என்ன பயன் ? உலகை ஆளும் திறன்கொண்டவர்கள் இன்று அடிமை வாழ்வை ஏற்பது எதனால்? உணர்ச்சிகளால் உந்தப்படுவதனால் அறிவின் திறன் மங்கிவிடுகிறது உங்களுக்கு" ~ கடுங்கோன்மேயன்

ஆன்மாக்களின் தரிசனமும் கடவுளின் வார்த்தைகளும் சிறுகதையில் காணும் நிதர்சன வரிகள் இவை. தீர்க்கதரிசியான கடுங்கோன்மேயர், பெயரால் மட்டுமன்றி தமது கருத்துக்களாலும் நமது சிந்தையைக் கவர்ந்துவிடுகிறார், எனினும் தமது இனம் தொலைத்த புராதானத்தை மீட்டெடுக்கப் பாடுபடும் அந்தக் கடற்கோன் நமது மனதில் நிலைத்துவிடுகிறார். தத்துவார்த்தமான வார்த்தைகளில் இன்றைய வாழ்வியலை வகைப்படுத்தும் வல்லமை, சிறப்பு    

சில நண்பர்களின் பதிவுகளில் வாசித்ததுண்டு, மலேசிய இலக்கியம் தோட்டப்புற வாழ்வை மட்டுமே பேசும் போரடிக்கும் படைப்புகள் என்று ஆனால் அவை நம் முன்னோர்களின் இரத்தத்தாலும் சதையாலும் உயிரைக்கொடுத்து படைக்கப்பட்ட சோக சாசனங்கள் என்பதை நாம் மறக்கவியலாது. நமது முன்னோர் எப்படி எப்படியெல்லாம் வதைபட்டனர், இயற்கையின் கடுமைகள், கங்காணிகளின் கொடுமைகள், வெள்ளைக்கார துரைகளின் சர்வாதிகார ஆட்சி, ஜப்பானியர்களின் சித்திரவதைகள் என பல்வேறு துயரங்களையும், சித்திரவதைகளையும் எத்தனையெத்தனை வேதனையுடன் எதிர்கொண்டிருப்பார்கள் ? வேர்களான அவர்களின் வரலாற்றை விழுதுகளான நாம் புறக்கணிப்பது முறையாகுமா?  இத்தகைய சிந்தனைகளை நம் மனதில் ஏற்படுத்தும் வண்ணம் வடிக்கப்பட்டிருக்கிறது "நிழல் மரக்கோடுகள்" சிறுகதை.

"எந்த மனைவியும் ஏழை புருக்ஷனையும் தாங்கிக் கொள்வாள். ஆனால், தான் சொன்னதைச் செய்து முடிக்கத் தெரியாதவனை ஓர் ஈயாகவோ எறும்பாகக் கூட மதிப்பதில்லையே" ~ மனைவி காத்திருக்கிறாள். 

விடுமுறைக்காக‌ தாய்வீடு சென்றுவிட்ட மனைவியை அழைத்து வர பொதுப் போக்குவரத்தை நாடும் கணவன், அவர் நோக்கத்தை நிறைவேற விடாது தடுக்கும் இயற்கையின் மழைச்சீற்றம், அதனால் ஏற்படும் தாமதம், முதன் முறையாய் பல வருடங்களுக்குப் பிறகு பொதுப்போக்குவரத்தை நாடிச்செல்வதால் ஏற்படும் தடுமாற்றம் என அந்தக் கண‌வரின் கண்ணோட்டத்தில் மலரும் கதை. அவர் தமது முயற்சியில் வெற்றியடைந்தாரா ? தமது மனைவியின் பாராட்டை பெற்றாரா என்பதுதான் கதையின் உச்சம்.

இக்கதையில் கரிசணம் நிறைந்த அந்தக் கணவர் தமது மனைவியின் ஆசிரியப் பணியின் தற்போதைய பணிச்சுமை சூழ்நிலையை வெளிப்படுத்தும் விதம் நன்று. ஆரம்ப காலங்களில் அரசியலிலும் பொதுப்பணிகளிலும் அதிகம் பங்கெடுத்தவர்கள் ஆசிரியர்கள் என்பது வரலாறு நமக்கு கூறும் உண்மை. அப்படி ஏதும் இப்போது நடந்துவிடக்கூடாது என திட்டமிட்டே ஆசிரியர்கள் மீது பணிச்சுமை திணிக்கப்படுகிறதோ என யோசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது தற்போதைய ஆசிரியர்களின் பணிச்சுமை நிலமை.  

வெளியே ஒரு வானம் ~ இச்சிறுகதை பள்ளி மாணவன் ஒருவனின் உடல் நலனையும் மன நலனையும் முன்னிறுத்திப்பேசுவதோடு, அந்த மாணவனின் பெற்றோர்களின் அனுகுமுறையையும் அலசி ஆராய்கிறது, அம்மாண‌வனின் கணிவான ஆசிரியயையின் கண்ணோட்டத்தில் மலர்ந்து மனம் வீசுகிறது இச்சிறுகதை. கனிவும், கண்டிப்பும் ஒருசேர வாய்த்த இதுபோன்ற ஆசிரியர்களே நமது சமுதாயத்தின் தற்போதைய ‌அவசியத் தேவை.

ஜாதகம் பார்த்து மணமுடிப்பவர்கள் பலரில், பெரும்பான்மையினர் மருத்துவ பரிசோதனை செய்து, ஆரோக்கியப் பொருத்தம் பார்த்து மணமுடிப்பதில்லை. நெருங்கிய உறவில் திருமணம் செய்பவர்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியச் சிக்கல்கள் ஏற்படும் என்பது நாமறிந்த உண்மை, ஆனால் இக்கதையில் முற்றிலும் மாறான ஒரு விடயத்தை முன்வைக்கிறார் கதைசொல்லி. கொஞ்சம் வியப்பாகவும் நிறைய அதிர்ச்சியாகவும் இருக்கிறது இந்தத் தகவல்.

இவை தவிர்த்து இன்னும் பல தத்துவங்களும், வாழ்வியலும் பேசும் படைப்புகள்....

வட்டி முதலைகளின் லீலைகள் பேசும் "வட்டிப்பணம்", 

அரசியல் அவலங்களைச் சித்தரிக்கும் "ஒற்றைச் செருப்பாய்", 

இன்றைய இளையோரின் மெத்தனம் பேசும் "அற்றைக்கூலி", 

ச‌கோதரியின் மரணமும் அதனால் மனங்கலங்கி அவர் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள பயணப்படும் சகோதரனின் மனப்பதிவாய் "கலைந்து செல்லும் மேகங்கள்" 

பிறரின் நம்பிக்கையை துக்ஷ்பிரயோகம் செய்வோர் மலிந்த சூழலில் எச்சரிக்கை உணர்வை வலியுறுத்தும் "நெருப்புப் பிண்டங்கள்".

மழையும் அது மீட்டெடுக்கும் நினைவுகளுமான "மனக்கதவுகள் நனைகின்றன" சிறுகதை. அதில் மழைக்கால ஆற்று வெள்ளம் பலியெடுத்த த‌ன் நண்பன் காட்டு முனியாண்டி குறித்த‌ கதைசொல்லியின் நினைவுகள். 

அரசாங்க அனுகூலங்களைப் பெற இயலாமல் லஞ்சம் கொடுத்து வாடும் ஒரு பள்ளி வாகனமோட்டியின் சிரமங்களைச் சொல்லும் "பள்ளி வண்டி", 

அர்ப்பணிப்பு குணம் நிறைந்த ஆசிரியை ஒருவர் பெற்றோர்களிடம் படும் பாட்டை விவரிக்கும் "தாயுமானவள்", 

வட்டியில் கிடைக்கும் கமிக்ஷனை எதிர்பார்த்து வட்டி முதலைகளிடம் சிக்கிக் கொள்ளும் சின்னச்சாமியின் கதையான "மானுடம் கடந்த மனிதர்கள்".   

இறுதியாக "சுடுகாட்டுக் காளி" ~ நாலு நம்பர் தேடி ஒடும் மனிதனின் திகிலூட்டும் அனுபவம். வித்தியாசமான முடிவைக் கொண்ட அமானுக்ஷ்ய கதை.    

இப்படியாக "நாகம்மாளின் மனக்குறிப்புகள்" வாசிப்போருக்கு மிகச்சிறந்த பொழுது போக்காகவும், சிந்திக்க விழைபவர்களுக்கு பலவித தகவல்களை உள்ளடக்கிய கருவூலமாகவும் நிச்சயம் திகழ்கிறது. நல்ல ஜனரஞ்சகமான சிறுகதைத் தொகுப்பைத் தந்த கதைசொல்லிக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள். இவர் மேலும் பல நூல்களைப் படைத்து புகழ்பெற வேண்டும் ~ வாழ்க, வெல்க‌




Friday, January 3, 2020

அந்த அமாவாசை இரவில் - இறுதிப்பாகம்

வேலு நடந்து சென்றுகொண்டிருந்த அந்த ஒற்றையடிப் பாதையில் அவனறியாமல் இரு உருவங்கள் அவனை கண்கானித்துக்கொண்டிருந்தன. வெளி சாலை விட்டு வெகு தூரம் உள்ளே சென்றுவிட்ட அவனை பின் தொடர்ந்து வந்த அந்த இரு உருவங்களும், திடீரென அவன் மேல் பாய்ந்து ஒரு பெரிய சாக்கு மூட்டையில் அவனைப் புகுத்தி  இறுக்கிக் கட்டி  அவன் தலையில் ஓங்கித் தாக்கி அவனை எங்கோ இழுத்துச் சென்றன. விழுந்த அடியில் பொறி கலங்கிப்போனான் வேலு. விழிப்பிற்கும் மயக்கத்திற்கும் இடைப்பட்ட அந்த நொடியில் தான்  பேராபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அவன் மனம் நடுங்கிக் கலங்கியது.

அவனை இழுத்துச் சென்றவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவனைக்கொண்டு வந்து சாக்கு மூட்டையிலிருந்து கீழே போட்டனர். தரையில் மயங்கிச் சரிந்தான் வேலு. அவன் மயக்கத்தில் பாதிதான் உண்மை என்பதை அந்தப் பாதகர்கள் அறிந்திருக்கவில்லை.  சீனமொழியில் சிலர் பேசுவது சன்னமாய் அவன் காதில் விழுந்தது. அவர்கள் பேச்சிலிருந்து அன்று அந்தப் பூசையில் அவனைப் பலி கொடுத்து நாலு நம்பர் கேட்கப் போகின்றனர் என்பதை அறிந்து திகைத்தான். பயமும் துயரமும் மனதைக்  கவ்வ ஐந்தடக்கிக் கொண்டு முழுமையாய் மயக்கம் வந்ததைப்போல் நடித்துக்கொண்டு எதிர்ப்பைக் காட்டாமல் சன்னமாய் மூச்சுவிட்டுக்கொண்டு கிடந்தான்.

அவன் உயிரோடிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திகொண்ட அவர்கள் மொத்தம் மூவர். மூவருமே வெளியூர் என்பதை அறிமுகமற்ற அவர்களின் அந்நியமான தோற்றம் காட்டிக்கொடுத்தது.

அங்கே ஒரு பூசைக்கான ஏற்பாடுகள் தயாராய் இருந்தன. அவற்றில் நடுநாயகமாய் நன்கு சானை பிடிக்கப்பட்டிருந்த பெரிய கத்தி வீற்றிருக்க ஓரடி உயரத்தில் மூன்று சிவப்பு மெழுகுவர்த்திகள் சன்னமான ஒளியைச் சிதறிக்கொண்டிருந்தன. அங்கிருந்து கொஞ்சம் தள்ளி சிறிய கூண்டில் ஒரு சேவல் அடைக்கப்பட்டிருந்தது.

 அடப்பாவிகளா !! சேவலை பலிகொடுத்து நாலு நம்பர் கேட்க வந்தவன்களிடம் வலிய வந்து தலைகொடுத்து நாம் பலியாகப் போகிறோமே என ஆதங்கப்பட்டது வேலுவின் மனது. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என அரைக்கண்களாலேயே அனைத்தையும் கவனித்துக்கொண்டு ஒன்றும் முடியாதது போல் கீழே கிடந்தான் வேலு.

அவன் கைகால்கள் கட்டப்பட்டிருக்கவில்லை ஆனால் மூவரில் ஒருவன் கையில் கட்டையுடன் அவன் அருகிலேயே நின்றிருந்தான். தப்பிக்க முயற்சித்து எழுந்தால் மண்டையில்  ஒரே போடு போடுவதாய் ஏற்பாடு.

வேலு ஆவலுடன் பங்கெடுக்க விரும்பிய அந்த பூசை அவனையே பலிகொள்ளும் ஏற்பாட்டுடன் ஆரம்பித்தது. கருமை நிற ஆடை அணிந்திருந்த சீனன் ஒருவன் மருள் வந்து ஆட ஆரம்பிக்க மேலும் இருவரின் கவனமும் அவன்மேல் பதிய...

இதுதானடா சரியான சந்தர்ப்பம் என யாருமறியா வண்ணம் கை நிறைய மண்ணை அள்ளி மிகச்சரியாய் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்திகளின் மேல் வீசினான் வேலு. அங்கிருந்த கொஞ்சம் வெளிச்சமும் அணைந்து கும்மிருட்டு கவ்வியது. அந்தச் சீனன்கள் சுதாரிப்பதற்குள் அங்கிருந்து எழுந்து புயல் வேகத்தில் ஓட ஆரம்பித்தான் வேலு. பூசை தடைபட்ட வெறியில் சீனன்கள் குய்யோ முய்யோவென கருவிக்கொண்டு அவனை விரட்ட ஆரம்பிக்க...

எங்கே போகவேண்டும், எப்படிப் போகவேண்டும் எனும் இலக்கின்றி, எங்காவது போவோம், தப்பித்தால் போதுமெனும் வேட்கையுடன் எதிரே குறுக்கிட்ட செடிகொடிகளையும் மரங்களையும் முட்டி மோதி ஆயாசத்துடன் ஓடினான் வேலு.

அப்போதுதான் அவனை நாம் கண்டோம். அவன் வரலாற்றையும் தெரிந்துகொண்டோம். இனி மேலும் என்ன நடந்தது என்பதும் தெரிய வேண்டுமல்லவா ? வாருங்கள் தொடர்வோம்...

ஓடிவந்த வேலுவை நோக்கி வெளிச்சம் வந்ததே. அது வேலுவின் நண்பன் வாசு!! வேலுவை நள்ளிரவில் நடுக்காட்டில் விட்டுச் சென்ற வாசு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடப்போகிறது எனும் பயத்தில் நண்பர்கள் சிலரை திரட்டிக்கொண்டு அவனை தேடி காட்டிற்குள் வந்தான். மிகச்சரியாய் அந்நேரத்தில் வேலு அவர்கள் முன்னே மூர்ச்சையடைய, அவர்கள் அவனைக் காப்பாற்றி மூர்ச்சை தெளிவித்தனர்.

காவல்துறையினர் செய்தியறிந்து அவ்விடம் விரைய, அந்தச் சீனன்கள் மூவரும் போட்டது போட்டபடி அவ்விடம் விட்டு தப்பிவிட்டிருந்தனர்.

இப்பொழுது வேலு செம்பனைத் தோட்ட வேலையை விட்டு விட்டு அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்கிறார். முக்கியமாய் அமாவாசை அன்று மட்டும் பொழுதிலேயே வீடு திரும்பிவிடும் வேலு இருட்டினதுக்கப்புறம் பூட்டின வீட்டைவிட்டு வெளியவே வர்ரதில்லங்க. மிக முக்கியமாய் நாலு நம்பர் பக்கமே தலைவச்சும் படுக்கிறதில்லை. கையில் மிச்சப்படும் பணத்தை முறையாய் செலவு செய்து அதில் மிச்சம் பிடித்து சேமிக்கவும் கற்றுக்கொண்டார்.

மரண பயத்தை பார்த்தவன் மனைவியையும் மாமியாரையும் பார்த்தா பயப்படுவான்? சாராயம் கேட்டு அலும்புபண்ணே கழுத்தைத் திருகி காட்டிலே போட்டிருவேன் என மிரட்டியதில் மாமியார்க்காரி துண்டைக் காணோம் துணியைக்  காணோம் என மகன் வீட்டுக்கு மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஓடிப்போனாள், அதன் பின் அவன் மனைவி பல்லைப் பிடுங்கின பாம்பைப்போல் தத்தளிக்க, சிற்சில சமயங்களில் அவள் சீறல்களையும் ஒரு நாள் ஓங்கிக்கொடுத்த ஓர் அறையில் முடிவுக்கு கொண்டு வர, அவள் அவனுடைய மனங்கோணாத மனைவியாய் மாறிப்போனாள்.

அம்புட்டுதாங்க!! இப்போ வேலு சம்சாரத்தோடும் புள்ள குட்டிங்களோடும் சந்தோக்ஷமா இருக்காருங்க. கதை முடிஞ்சி போச்சி.
















Tuesday, December 31, 2019

அந்த அமாவாசை இரவில்... ( பாகம் 3)



குறிப்பிட்ட அமாவாசை தினமும் வந்தது. நன்கு இருட்டிய பின் யாருக்கும் தெரியாமல் வேலு தனது பழைய ஜாக்குவார் சைக்கிளை ஒட்டிக்கொண்டு வாசுவைப் பார்க்கச் சென்றான். தாங்கள் சந்திப்பதாய் குறிப்பிட்ட இடத்தில் வாசு அவனுக்கு முன்பே வந்து காத்திருந்தான். பயத்தில் அவன் முகம் வெளிரியிருந்தது. வேலுவின் கையை அழுந்தப் பற்றிய வாசுவின் கை பயத்தில்  வியர்த்துப் பிசுபிசுத்தது.

"டேய் வேணாம்டா வேலு !! நாம அங்கப் போக வேணாம், நம்மளயெல்லாம் அந்தப் பூசையிலே சேர்க்க மாட்டாங்களாண்டா !! அந்தச் சீனப் பயலுக பொல்லாதவனுங்களாம் ஏமாந்தா ஆளையே வெட்டிப் பலி கொடுக்கிற ரகமாம், நாம ஏடாகூடமாய் போய் மாட்டிக்கிட்டா வெட்டிப் பொலி போட்ருவானுங்கடா, வாணாம்டா வம்பு, குறுக்கே விழுந்து தடுத்தான் வாசு.

வாசுவின் எச்சரிக்கைகள் எதுவும் வேலுவின் காதில் ஏறவில்லை, என்ன செய்வது ? விதி வலியதல்லவா ? அறிவுரை கேட்டுத் திருந்தாதவர்களை அடித்துத் திருத்தத்தான் அனுபவம் எனும் மிகப்பெரிய ஆசான் கையில் ரோத்தானுடன் காத்துக்கொண்டிருக்கின்றானே ! அடிபட்டுத்தான் திருந்தவேண்டும் என வேலுவிற்கு விதித்திருந்ததால் வேலு வாசுவின் புலம்பலை கண்டுகொள்ளவேயில்லை.

கடைசி நேரத்தில் காலை வாரிவிட்ட வாசுவின் மேல் செம்ம கடுப்பாகிப்போனான் வேலு. அவன் கண்கள் சிவக்க மீசை துடித்தது, அந்தியில் போட்டிருந்த சாராயமும் தன் பங்கு வீராவேசத்தைக்காட்ட  நாலு கெட்ட வார்த்தைகளால் வாசுவை நாறடித்துவிட்டு தனியே அந்தக் காட்டை நோக்கி புயலாய் புறப்பட்டு இருளில் மறைந்தான்.

அவன் போன திசையை வேதனையுடன் ஏறிட்ட வாசு அருகாமையிலிருந்த தன் வீட்டை நோக்கி கால்களை எட்டிப்போட்டு நடக்க ஆரம்பித்தான்.

உலகைப் போர்த்திய காரிருள், முகத்தில் அறையும் குளிர்காற்று, இரவுப்பிராணிகளின் ஓசைகள்  என எதையும் பொருட்படுத்தாத வேலு சன்னமான தன் சைக்கிள் விளக்கொளியின் துணையுடன்  பயணித்துக்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கிருந்த மனோநிலையில் பணம் மட்டுமே வாழ்வின் பிரதானமாய்பட்டது. பணமில்லாதவன் பிணமாகவல்லவா இவ்வுலகம் பார்க்கிறது. பயம், வலி, சோகம் என இருக்கும் எல்லா துயரங்களையும் விட ஏழ்மை நிலை எவ்வளவு கொடியது என்பதை அனுபவித்த மனம் மட்டுமே அறியும்.

மெளனம் மனிதனை ஆட்கொள்ளும் தருணம் அவன் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கிறது. எப்படியாவது அந்தப் பூசையை எட்டிப்பார்த்து நாலு நம்பர் தேறிட்டா, நாளை நாமும் கோடிஸ்வரன், நினைக்கவே வேலுவிற்கு இனித்தது. பூசையை நடத்துபவர்கள் சீனர்கள் என்றாலும் மொழி அவனுக்கு ஒரு தடையல்ல. அவன் அறிந்திருந்த சீன மொழி அவனுக்கு கைகொடுக்கும். அவர்களுக்கு தட்சிணையாய்க் கொடுக்க கடன் வாங்கிவந்த பணம் சில நூறுகள் அவன் காற்சட்டையில் அடங்கியிருந்தன.

சடுதியில் வேலு காட்டை அடைந்தான். சாலை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு செம்பனைக் காட்டுக்கு உள்ளே செல்லும் ஒற்றையடிப் பாதையில் மெல்ல நடக்க ஆரம்பித்தான்.

அந்தக் காட்டுப் பாதையின் இருமருங்கிலும் இராட்சதர்களைப் போல் அகன்று உயர்ந்த செம்பனை மரங்கள். தலைவிரித்தாடும் பேய் கைகளை ஆட்டி அழைப்பதைப்போல் காற்றில் அலைபாய்ந்துகொண்டிருக்க அவற்றில் சிவந்த கண்கள் அவனை எரிப்பதைப்போல் முறைப்பதாய்த் தோன்றியது. பயம் உயிரைப்பிடுங்கியது. இருந்தாலும் பணத்தாசை வென்றது. தனக்குத் தானே தைரிய மூட்டிக்கொண்டு காட்டிற்குள் நடந்தான் வேலு.

மனதிற்குள் தன் குலதெய்வத்தை வேண்டிக்கொன்டு நடந்தவனை இரு உருவங்கள் வெகு அருகாமையில் கண்காணித்துக்கொண்டிருந்தன. வெளி சாலை விட்டு வெகு தூரம் காட்டிற்குள் சென்றுவிட்டவனை பின்தொடர்ந்து வந்த அந்த இரு உருவங்களில் திடீரென அவன் பின்னால் பாய்ந்து ஒரு பெரிய சாக்கு மூட்டையை அவன் தலை வழி புகுத்தி அவனை கட்டி இழுத்துச்செல்ல ஆரம்பித்தனர். பயத்தில் சர்வ நாடியும் ஒடுங்கிப்போன வேலு என்ன நடக்கிறது என்று அவதானிப்பதற்குள் சாக்கு மூட்டைக்குள் அவனுக்கு மூச்சுத்திணற ஆரம்பித்தது....

தொடரும்....


நன்றி

Friday, November 2, 2018

பாரம்பரிய பலகாரங்களுடன் இனிக்கும் தீபாவளி

தீபாவளி வாசல் வரை வந்துவிட்டது, எங்கெங்கு காணினும் மகிழ்ச்சியும், உற்சாகமும் பிரவகிக்க புத்தாடைகள், அணிகலன்கள் தொடங்கி வீட்டு அலங்காரம் என களைகட்டும் காட்சிகள் முக்கியமாய் பலகாரங்கள் !! அறுசுவை ஆகாரங்களுடன் அருமையான பலகாரங்களுடன் நமது இல்லங்களில் தொடங்கிவிட்டதே !! உன்னைக் கண்டு நானாட, அதைக் கண்டு நீ ஓட என இனிக்கும் இந்த தீபாவளிக்கு இணைய நண்பர்களுக்கெனவே பிரத்தியேக மாய் ஓர் இனிய பதிவு , தீபாவளிக்கு செய்யப்படும் பாரம்பரிய பலகாரங்கள் குறித்து. 



சிறு பிராயத்தில் வீட்டில் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகையின் நினைவுகளின் தொகுப்பு இந்த பதிவு, வாசிக்கும் நண்பர்களின் இளம் பிராயத்து தீபாவளி (முக்கியமாய் பலகாரங்கள் திருடி பூசை வாங்கியது போன்ற விலைமதிப்பற்ற சம்பவங்களை மீட்டிப் பார்க்கும் ஓர் அரிய பதிவைத்தான் இப்பொழுது நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள் என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பதிவை வாசிக்கும் நண்பர்கள் தீபாவளி வாழ்த்துச் சொல்லவும் , பதிவை ஆகா ஓகோவென புகழவும் நிச்சயம் வாய்ப்பளிக்கப்படும் , அய்யே என்னாம்மா இது மொக்க பதிவு என வரும் கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்படும் எனதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டு பதிவைத் தொடர்வோம் வாருங்கள் :)) 

தீபாவளி வந்துவிட்டால் போதும்,  நம்ம வீட்டில் அம்மா பலகாரம் செய்ய    ஆயத்தமாகிவிடுவார். முருக்கு, அச்சு முறுக்கு என ஆரம்பித்து கல் உருண்டை, நெய் உருண்டை, லட்டு, அதிரசம் என பாரம்பரிய பலகாரங்கள் அம்மாவின் கைவண்ணத்தில் வீட்டில் அணிவகுக்க ஆரம்பிக்கும்.

கடையில் விற்கும் உடனடி ( ரெடிமேட்) பலகார மாவுகளை வீட்டில் உபயோகிப்பதில்லை. அரிசி, பச்சைப்பயிறு, கடலை ஆகியவற்றை வாங்கி பதப்படுத்தியே பலகாரம் செய்வார்.

முதல் வேலையாக அந்த தானியங்களை சுத்தம் செய்து அரைப்பதற்கு ஏற்பாடு செய்வார்.
அம்மா கொடுத்தனுப்பும் தானியங்களை அப்பா பதுவிசாக மில்லில் அரைத்துக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.

அப்புறமென்ன ? வீட்டில்  பலகார யுத்தம் ஆரம்பமாகிவிடும்.

முறுக்கு, அச்சு முருக்கு,  கல் உருண்டை ( பொரி விளங்காய் உருண்டையின் செல்லப் பெயர் ;) நெய்யுருண்டை, சிட்டுருண்டை ( முந்திரிக் கொத்து), லட்டு, அதிரசம் என பாரம்பரிய பலகாரங்களை சுவைபட தயாரிப்பதில் அம்மா கைதேர்ந்த நிபுணர்.கால ஓட்டத்தில் நாகரிக சமையல்களான அனிச்சல் ( கேக்) , பிஸ்கட் வகைகளும் கற்றுக்கொண்டு அதையும் எங்களுக்கு செய்து தருவார் இருப்பினும் பாரம்பரிய பலகாரங்களுக்கே வீட்டில் என்றும் முன்னுரிமை.



அவர் சமையலில் சுவை, மணம் இவற்றோடு பிள்ளைகளுக்கு என பிரத்தியேகமான அவரின் பாசமும் பொங்கிப் பிரவகிக்கும், ஆனால் தீபாவளிக்கு முன் எடுத்துச் சாப்பிட மட்டும் அனுமதி என்ன தகிடுதத்தம் பண்ணாலும் கிடைக்கவே கிடைக்காது. சாமி கண்ணைக்குத்தும், கையைக் கடிக்கும் என பயமுறுத்தல்கள் வேறு !!

தீபாவளிக்கு இரண்டு வாரம் இருக்கையில் வீட்டில் பலகார வேலைகள் ஆரம்பிக்கும். பெரிய வாணலியில் நிறைய எண்ணெய் ஊற்றி, எழுமிச்சை அளவு புளியை அதில் இட்டு ( அப்போத்தான் எண்ணெய் சட்டுனு முடியாதாம் :)). 

முருக்கு , அச்சு முருக்கு சுடும் வேலை ஆரம்பிக்கும்.அடுப்புக்கு பக்கத்தில் நாங்கள் போனாலே துரத்தி அடித்துவிடுவார் அம்மா,  எங்களில் அவராகவே தேர்ந்தெடுக்கும் உதவியாளரை தவிர்த்து வேறு யாருக்கும் அங்கே இடமில்லை. அடுப்பிலிருக்கும் எண்ணெய் சட்டிக்கு பக்கத்தில் யாராவது பேசினால் எண்ணெய் குறைந்து போகுமாம் !!? ( எப்படியிருக்குது கதை ? )



முதலில் சுட்ட பலகாரம் சாமி மேடைக்குச் செல்லும். அப்புறம் தீபாவளி வரும் வரை இருக்கும் இடம் தெரியாமல் ஒளித்து வைக்கப்படும். தீபாவளி அன்றுதான் பலகாரங்களுக்கு  திறப்பு விழா நடைபெறும்.

தீபாவளி பலகாரங்களை எச்சில் படுத்தவே கூடாது என்பது அம்மாவின் கண்டிப்பான கட்டளை, மீறினால், பூசை விழுவது நிச்சயம்.

என்னதான் அம்மா கண்டித்தாலும் அவர் பிள்ளைகள் நாங்கள் என்ன லேசுபட்டவர்களா ? வாய்ப்புக்கிடைத்தால் அவ்ளோதான், அம்மாவின் கட்டளையை காற்றில் பறக்கவிட்டு கிடைத்ததை கபளீகரம் செய்து விடுவதுதான் வாடிக்கை, இதில் வேடிக்கை என்னவென்றால் ரொம்பவும் கண்டிப்பு பேர்வழியான அப்பாவுக்கும் இதில் கூட்டுப் பங்கு உண்டு என்பதுதான். அம்மா எங்கு ஒளித்தாலும் அப்பாவிடம் தப்பாது பலகாரங்கள். சாமி கதை சொல்லி எங்களை மிரட்டும் கதையெல்லாம் அப்பாவிடம் செல்லாது. ஆசாமி நாத்திகவாதி !!

வீட்டில் பெரும்பாலும் பெரிய ரொட்டி டின்களில் 2 டின் முருக்கு, 2 டின் அச்சு முருக்கு தயாரிப்பது வழக்கம்.

பாரம்பரிய பலகாரங்களில் சிகரம் வைத்தாற்போல் அமைவது கல் உருண்டையும் அதிரசமும்தான் !! பலகாரங்களிலேயே இவை மிகவும் சுவையானதும் செய்வதற்கு மிகவும் சிரமமானதுமாகும்.

கல் உருண்டை செய்வது மிகவும் கடினம். புளுங்கல் அரிசியை ஊறவைத்து  நீரை வடிகட்டி , வறுத்து மில்லில் கொடுத்து நைசாக அரைத்துவைத்துக்கொள்வார். பச்சைப் பயிரை வறுத்து பொடித்து வைத்துக்கொள்வார், வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை , வறுத்த பொட்டுக்கடலை, சிறு துண்டுகளாய் நறுக்கி வறுத்த தேங்காய் பத்தைகள் யாவும் சேர்த்து புளுங்கல் அரிசி மாவிலிட்டு, கறுப்புச் சீனி பாகு எடுத்து சுடச் சுட உருண்டை பிடித்து வைப்பார். கொஞ்சம் ஏமார்ந்தால் பாகு கையை கொப்பளிக்க வைத்துவிடும். இப்படி சிரமப்பட்டு அம்மா செய்யும் கல் உருண்டைக்கு சுற்றுப்புறத்தில் நிறைய வரவேற்பு, அம்மாவின் மலாய் சீன தோழிகளுக்கும் பிடிக்கும்.அந்த பொரி விளங்காய் உருண்டை.'குவே பாத்து  மானா ? என கேட்டு வாங்கி  சுவைத்து மகிழ்வார்கள் ஆனால் வீட்டிலோ முதலில் யாரும் தொடவே மாட்டார்கள், முதலில் லட்டு, அதிரசம், நெய்யுருண்டை ஆகியவற்றை காலியாக்கிவிட்டு அப்புறம் முருக்கு, அச்சு முருக்கு, சிற்றுண்டை என கொரித்துவிட்டு கடைசியாக எல்லாப் பலகாரங்களும் தீர்ந்த பின்னர்தான் கல் உருண்டை  பக்கத்தில் கவனம் போகும், அதற்கு ஏறக்குறை தீபாவளி முடிந்து இரண்டு மாதமாகிவிடும் :)


அதிரசமும் அப்படியே, ஏதோ அதிசய சமையல் போல் அத்தனை சிரத்தையுடன் செய்வார்.  ஊறவைத்து அரைத்த மாவில், மிகவும் கவனமாக பக்குவத்துடன் செய்த பாகை இட்டு வைத்தவுடன், அதில் கலந்திருக்கும் ஏலக்காய், சுக்கின் நறுமணம் வீட்டில் வீசும் பாருங்கள், அப்படியே நாவில் எச்சில் ஊறும், உடனடியாக அந்தப் பாகு மாவு காணாமல் போய் ( அந்தப் பாகை அப்படியே அள்ளி சாப்பிடலாம் அம்புட்டு ருசியாய் இருக்கும், எல்லாம் அம்மா கண்ணில் விரலை விட்டு ஆட்டி ஏமாற்றி விட்டுத் திருடித் தின்ற அனுபவந்தேன் !! :))) தீபாவளிக்கு முதல் நாள் வெளியில் வரும், அதை லாவகமாய் சுட்டு சாமி மேடையில் படைத்துவிடுவார். மேலே சாக்லேட் நிற ஏடு போர்த்தி வாயிலிட்டால் உதிர்ந்து கரையும் அந்த அதிரசத்தின் சுவை அப்பப்பா ! அத்தனை அருமை.


நெய்யுருண்டையும் அப்படியே, பச்சைப்பயிரு மாவில் திராட்சை, முந்திரி, சர்க்கரை சேர்த்து QBB நெய்யை கொதிக்க வைத்து ஊற்றி சுடச்சுட உருண்டைப் பிடித்து வைப்பார். நெய்யின் மணம் வீட்டைத் தாண்டி வெளியில் வரை வீசும் :)   வீட்டில் முதலில் முடிந்து போகும் பலகாரம் இது. அப்பாவுக்கு மிகவும் பிடித்தமானது.

இப்படியே எல்லாப் பலகாரங்களுக்கும் வகுப்பெடுக்க ஆசைதான் !! ஆனால் வாசகர்கள் பாவமில்லையா ? எனவே இந்தப் பதிவில் இவை போதும் என பெருந்தன்மையுடன் விட்டுவிட்டு, அனைவருக்கும் அன்பையும், நட்பையும், நல்வாழ்த்துக்களையும் சமர்ப்பித்து, தப்பித்துக்கொள்வோம், ஏதோ நமக்கு கிட்டிய தமிழில் எட்டிய நினைவுகளை இங்கே சமர்ப்பித்தோம். இதை வைத்து நாம் பெரிய சமையல் மேதை எனவெல்லாம் தப்புக்கணக்குப் போடவேண்டாம் என விண்ணப்பித்துக்கொண்டு விடை பெறும் நேரத்திற்கு வந்துவிடுவோம்

இதுபோன்றே பலருக்கும் தீபாவளி சமயத்தில் வீட்டில் அம்மா, பாட்டி என பெரியவர்களால் தயாரிக்கப்படும்  பாரம்பரிய பலகாரம் தொட்ட நினைவுகள் நிறைந்திருக்கக்கூடும். அதை மீட்டிப்பார்க்க இந்தப் படைப்பு ஒரு பாலமாகட்டும். நினைவில் நிறுத்துவதோடு  நாமும் அவற்றை செயலிலும் தொடர்தல்  மேலும்  சிறப்பு.

நமது பாரம்பரிய பலகாரங்கள் மிகுந்த  சுவையும், சத்துக்களும் நிறைந்தவை, ரசாயன நிறங்கள், சுவை கூட்டுப் பொருட்கள் இன்றி தயாரிக்கப்படுபவை. அதன் அருமை பிற இனங்களுக்குத் தெரிந்திருக்கிறது, முறுக்கு, அதிரசம் போன்றவற்றை தயாரித்து சந்தைப்படுத்தவும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் , அதற்கு உரிமம் எடுத்து வைத்துக் கொள்ளவும் அவர்களுக்குத் தெரிகிறது. குறைந்த பட்சம் நாம் நமது பாரம்பரிய பலகாரங்களை செய்து சாப்பிடவும், இளைய தலைமுறைக்கு  அவற்றின் செய்முறைகளையும் பழகி வைத்தலும் மிக்க நலம்.

அனைவருக்கும் மங்களம் பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நமது பாரம்பரிய பலகாரங்களுடன் தீபாவளியை இனிதே கொண்டாடி மகிழ்க _/\_





ஆக்கம்
சிவ.ஈஸ்வரி @ சிவனேஸ் சிவானந்தம்
பினாங்கு.

Thursday, February 22, 2018

அந்த அமாவாசை இரவில்...!! - பாகம் 2



பாவம் வேலு !! புகைப்பழக்கம், மது, மாது, சூதாட்டம் என எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் வாழ்ந்தவன், தன் மனைவியின் கொடுமையாலும் அதற்குக் காரணமான தன் ஏழ்மை நிலையையும் நொந்து தன் புண்பட்ட நெஞ்சை புகையைவிட்டு ஆற்றவும், நொந்துபோன மனதை மதுவை அருந்தி தேற்றவும் பழகிக்கொண்டான், சுசிலா தந்த மனக்காயங்களுக்கு மது அவனுக்கு சிறந்த நிவாரணியானது, மாமியாருக்கு வாங்கிவரும் மதுவை தானும் சுவைக்கக் கற்றுக்கொண்டு, அந்த போதையில் தன்னிலை மறந்து வாழ ஆரம்பித்தான்.

என்னதான் தற்காலிகமாய்  குடி கவலை மறக்கச்செய்வதாய் தோன்றினாலும், குடியில்லாத நிதானப் பொழுதுகளில் அவன் மனக்கவலை பன்மடங்காய் பல்கிப்பெருகி  அவன் மனதை அரித்து வதைசெய்தது. குடியில்லாத வேதனை சுமந்த அவன் தனிமைப்பொழுதுகளில் தன் வாழ்வின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்ன என அவன் அலசி ஆராய்ந்ததில் மனித சாதியின் துயரம் யாவுமே "பணத்தினால்"வந்த நோயடா எனும் அரிய தத்துவத்தைக் கண்டுபிடித்தான். அப்படியென்றால் மேலும் மேலும் பணம் சேர்க்க சுலபமான வழி ஏதும் இருக்கின்றதா என ஆராய ஆரம்பித்ததில் "நாலு நம்பர்" வழி அவன் கண்களுக்கு ஜெகஜ்ஜோதியாய் ஜொலிக்கத் துவங்கியது.

அப்புறமென்ன நம்ம நல்ல புள்ள வேலு "நாலு நம்பர் வேலு"வாய் புதிய பரிமாணம் எடுத்துவிட்டான்.

நம்பர் எடுக்க ஆரம்பித்தவுடன் அதில் அதிகம் பரிச்சயமுள்ள நண்பர்கள் சிலரை உடன் சேர்த்துக்கொண்டான். மனதில் தோன்றும், கண்ணில் படும் எண்களையெல்லாம் நம்பர் சீட்டாய் வாங்கினான். ஏமாற்றமளிக்கும் விதத்தில் பலமுறை அவனுக்கு பெப்பே காட்டிய நம்பர் கடைசியில் அதிசயமாய் ஒருமுறை ஆயிரம் வெள்ளி அடித்து அவனை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.

மனைவிக்கு கை நிறைய பணமும், பிள்ளைகளுக்கு வித விதமான நொறுக்குத் தீனிகளும், மாமியாருக்கு பெரிய சாராயப் புட்டியும் கை மாறியதில் திடீரென அனைவரும் அவனை 100 நாள் வெற்றி படக் கதாநாயகனைப்போல் போற்றிப் புகழ்ந்து கொண்டாட ஆரம்பித்தனர். இது போதாதா நம்ம கதாநாயகனுக்கு ? அதே அனுபவம் நாடி மேலும் மேலும் நம்பர் கடைகளில் காசைக் கரியாக்கினான். பலன் தான் கிட்டவில்லை.

எப்படி நம்பர் அடித்து காசை சம்பாதிப்பது என்று அலைபாய்ந்த அந்த சமயத்தில்தான் ஒருமுறை வேலு தனது நண்பர்கள் சிலருடன் சீனன் கோப்பிக் கடையில் அரட்டையடித்துக்கொண்டிருந்தபோது அவன் ஆப்த நண்பன் வாசு சொன்ன தகவல் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அவர்கள் குடியிருப்புக்கு அப்பால் செம்பனைத் தோட்டத்தையொட்டிய பெரிய காடு ஒன்று இருக்கிறது. மக்கள் நடமாட்டம் அங்கே குறைவு. அங்கே அமாவாசைக் காலங்களில் நடுநிசியில் பலிபூசை நடக்கிறதாம். எங்கோ வெளியூரிலிருந்து சில சீனர்கள் அந்த வேலையைச் செய்கின்றனராம்.

அந்தப் பூசையில் இறந்து போன ஆத்மாவை வரவழைத்து அதற்கு இரத்தப் பலியிட , அந்த ஆத்மா கண்ணெதிரிலேயே பிரசன்னமாகி பூசை செய்யும் பூசாரியின் உடலில் புகுந்து, பூசாரி மூலம் அந்தப் பலியை ஏற்று பலியிடப்பட்ட உயிரினத்தின் இரத்தத்தை உறிஞ்சிவிட்டு, அந்த இரத்தத்தை தோய்த்து தரையில் நாலு நம்பர் எழுதி வைக்குமாம். அந்த நம்பரை எடுத்து வந்து எழுதினால் மறுநாள் கண்டிப்பாய் முதல் இடத்தில் நம்பர் அடித்து எழுதியவர் கோடிஸ்வரராகிவிடலாமாம். நிகழ்ந்ததை நேரில் கண்டதைப்போல் மேசையிலடித்துச் சத்தியம் செய்து சொன்னான் நண்பன், வேலுவும் இன்னும் பிற நண்பர்களும் கதையைக் கேட்டு உள்ளூர ஆடிப்போனாலும் வெளியில் தைரியமாய் காட்டிக்கொண்டனர், மானப் பிரச்சனையல்லவா ?

என்னதான் பயமாய் இருந்தாலும், ஆசை யாரை விட்டது? வேலுவுக்கு இதையும் முயற்சித்துப் பார்க்கலாமோ எனும் நப்பாசையும் பிறந்தது.

எத்தனை நாளைக்குத்தான் செம்பனைத் தோட்டத்தில் வாயில்
நுரை தள்ள குலை வெட்டிச் சாவது? போதாதற்கு பாம்பு, தேள், பூரான், பூச்சிகள், கொசு சித்திரவதைகள் வேறு !

நிறைய பணம் கிடைத்தால் நாமே கூட ஒரு ஏக்கரோ, ரெண்டு ஏக்கரோ செம்பனைத் தோட்டம் வாங்கி ஒரு முதலாளியாய் மாறி நாலுபேருக்கு வேலை தந்து காலாட்டிச் சாப்பிடலாமே ? ஆசை அவனை அலைக்கழித்தது, அங்கலாய்ப்பு அவனை ஆக்ரமித்தது.

இன்னும் நாலே நாளில் அமாவாசை வரப்போகிறது. நண்பர்கள் யாவரும் அந்த செம்பனைக் காட்டுக்கு போய், விவரம் சொன்ன நண்பன் மூலம் அந்தப் பூசையில் கலந்துகொள்வதாய் ஏற்பாடு.

நண்பர்களில் இருவருக்கு அந்தத் திட்டம் அறவே பிடிக்கவில்லை. அவர்கள் அப்பொழுதே அதிலிருந்து விலகிக்கொண்டனர். எஞ்சியவர்கள் மூவர் மட்டும் பூசைக்குப் போவதாய் ஏற்பாடு. அவர்களில் ஒருவன் திருமணமாகாதவன், வீட்டில் விடவில்லை என காரணம் சொல்லி கழன்றுகொண்டான். மிஞ்சியது வேலுவும் அவனுக்கு அந்தக் கதையைச் சொன்ன அவன் ஆப்த நண்பன் வாசுவும்தான். அவன் வேலுவின் பால்ய நண்பன். வேலுவிடம் அவனுக்கு நட்பும் ஒட்டுதலும் அதிகம்.

கதையைச் தெரிந்துகொண்டு வந்து தெரிவித்தாலும் அவனுக்கும் அந்தப் பூசையில் கலந்துகொள்வதில் அவ்வளவாய் விருப்பமில்லை, பயத்தில் அடிவயிறு கலங்கி பாத்ரூம் போகவேண்டும் போல் இருந்தது, ஆனால் வேலுவோ விடாப்பிடியாய் பூசையில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என பிடிவாதம் காட்டினான். அரைகுறை மனதுடன் அவனுடன் வருவதாய் வாக்குக் கொடுத்தான் வாசு.



குறிப்பிட்ட அமாவாசை தினமும் வந்தது.....!!



தொடரும்...

பி.கு : அடுத்த பகுதியில் படைப்பு நிறைவுபெற்றுவிடும் தெய்வங்களே :))







Sunday, January 7, 2018

அந்த அமாவாசை இரவில்...!! (100 கதைகளில் ஒரு கதை :)

சமூகத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் !! _/\_ (அழுத்திச் சொல்வதில் அலாதி ஆனந்தம் , உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் தோரனை :) , இவ்வருடம் 2018, அனைவருக்கும் ஆனந்தம் நிறைந்து சுகமும் செளபாக்கியமும் சித்திக்க வேண்டும்.

புத்தாண்டுக்கு எல்லோருக்கும் ஒரு நற்செய்தி, அதாவது இப்படியே வாரம் ஒரு பதிவெழுதி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திட வேண்டும் என்பதுதான் :(

நல்லது , கீழ்க்கண்ட சிறுகதை நிறைய உண்மையும் கொஞ்சூண்டு கற்பனையும் கொண்ட ஒரு பதிவு, இதற்கு பரிசும் அங்கீகாரமும் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் பல, பதிவுக்குள் செல்வோம்...

அந்த இருள் சூழ்ந்த காட்டில் வியர்க்க விருவிருக்க ஓடிக்கொண்டிருந்தான் வேலு. அவன் அணிந்திருந்த ஜப்பான் சிலிப்பரில் ஒன்று எங்கோ விழுந்து தொலைந்திருக்க, அதைக் கண்டுபிடிக்கும் அவகாசமும் இன்றி சோர்ந்துபோய்விட்ட உடலின் எஞ்சிய பலம் அனைத்தும் திரட்டி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கண்மண் தெரியாமல் அந்தக்காட்டின் நடுவிலிருந்து அதன் விளிம்பு நோக்கி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான். இது அவனுக்கு வாழ்வா சாவா போராட்டம் !! அவன் ஓட்டம் தொடர்கிறது.

ஆங்காங்கே கூரிய கற்களும் முட்களும் அவன் பாதங்களை தைத்து சதைக்குள் புதைந்து வதைப்பதையும் பொருட்படுத்தாமல் அவன் அந்தக் காட்டின் விளிம்பை நாடி ஓடிக்கொண்டேயிருந்தான்.


அதோ எட்டிய தூரத்தில் அவன் கண்களுக்கு மங்கலாய் ஏதோ ஒளிபோல் தெரிகிறதே...!! அந்த ஒளி அவனை நோக்கி வருவதைப்போல் தோன்றுகிறதே, அவனை நெருங்குகிறதே..!! ஐயோ இது அவனை மீட்க வரும் ஒளியா அல்லது செத்துப் பிழைத்தவனை மீண்டும் ஆபத்திலாழ்த்த வரும் ஒளியா ?

கால்கள் தளர்ந்து, உடல் வியர்வையில் நனைந்திருக்க அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க வலுவின்றி தன் சுயம் தொலைத்து பொத்தென்று கீழே வீழ்ந்தான் வேலு !! மங்கிய ஒளியில் இரண்டு ஆடவர்கள் அவனருகில் வந்து சேர்ந்தனர்...

வேலுவுக்கு என்ன நடந்தது ? அப்படித் தலைதெறிக்க ஓட வேண்டிய அவசியமென்ன ? ஏன் ? எதற்கு ? எதனால் ? என்ன நடந்தது ? அறிந்துகொள்ள ஆர்வம் என்னைப்போலவே தங்களுக்கும் பிறக்கிறதல்லவா ? வாருங்கள் கொசுவத்திச் சுருள் உத்தியை உபயோகித்து இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்த அவனுடைய நேற்றைய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்....

வேலுவின் தந்தை கன்னியப்பனுக்கு 13 பிள்ளைகள், 7 பொண்களும் 6 ஆண்களும், அதில் வேலு கடைசிப் பையன். அவன் கட்டையாய் கரிய நிறத்தில், கழுத்தின்றி தலையும் உடலும் ஒட்டிப் பிறந்த பிறவிபோல் பெருத்த உருவத்துடன் கருப்பாய் பயங்கரமாய் வளர்ந்திருந்தான். பெயருக்குக் கொஞ்சம் படிப்பு வாசனையும் அவனுக்கு இருந்தது. கேள்வி ஞானம் அதிகம். சீன நண்பர்கள் வழி ஹொக்கியன் மொழி புரிந்துகொள்ளவும் பேசவும் தெரியும்.

அவனது உடன்பிறப்புகள் யாவரும் திருமணம் முடித்து அக்கம் பக்கத்தில் குடிபெயர்ந்தனர்.

வேலு முதிர்ந்த தாய் தந்தையை தன் குடியிருப்புக்கு அருகாமையிலிருந்த சீனரின் செம்பனைத் தோட்டத்தில் குலை வெட்டும் தொழில் செய்து காப்பாற்றினான். அவனுக்கு கடும் உழைப்பாளி எனும் நல்ல பெயர்.

வேலு ஆளுதான் அம்சமாய் இல்லையே தவிர அவன் மனமும் குணமும் பத்தரை மாற்றுத் தங்கம். இல்லை என்று சொல்லாத ஈகை குணம். யாரேனும் பசியென்று வந்துவிட்டால் தனக்கில்லையென்றாலும் பரவாயில்லை என்று வாரிக் கொடுத்துவிடும் வள்ளல் ரகம்.

குணசாலியான வேலுவுக்கு அண்டை அயலாரில் பலரும் பெண் கொடுக்க முன்வந்தாலும் . அவன் தன் மாமன்மகள் சுசிலாவை மணக்க முடிவு செய்தான். அங்கே ஆரம்பித்தது அவனின் கக்ஷ்டகாலம்....!!


சுசிலா தாமரைப் பூவுக்கு பொட்டு வைத்தாற்போல் பார்க்க கும்மென்று சிவப்பாய் கண்களுக்கு இலட்சணமாய் களையான முகத்தோடு இருந்தாலும் தந்தையில்லாத அந்தப் பெண் சின்ன வயசிலேயே "போலியோ" காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு கால் சூம்பிப்போனவள். காலை தாங்கித் தாங்கித்தான் நடப்பாள். அவளுக்கு வாய் சரியில்லை , சரியான வம்புக்காரி என வேலு  குடும்பம் அவளை பெண்ணெடுக்கத் தயங்கியது. வேலுவோ மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவியென விடாப்பிடியாய் சுசிலாவையே மணந்துகொண்டான். அது அவன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என அவன் நொந்துகொள்ளும் வண்ணம் நடந்துகொண்டாள் சுசிலா. வேலுவை கொஞ்சமும் மரியாதை இன்றி எடுத்தெறிந்து பேசினாள். 

வேலுவின் உறவினர்கள் அவன் வீட்டிற்கு வரவே தயங்கினர். சுசிலா அண்ணன் வீட்டில் அண்ணியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த தன் தாயை அழைத்து வந்து தன்னோடு வைத்துக்கொண்டாள். வேலுவின் பாடு மேலும் திண்டாட்டமாகியது. அத்தைகாரியும் லேசுபட்டவளில்லை !! 

அனுதினமும் அவளுக்கு பட்டைசாராயம் வேண்டும், வேலு வாங்கிவந்து தரவேண்டும். வாங்கிக்கொடுக்காவிட்டால் " கட்டையிலே போக எனத் துவங்கி 
வாய் கூசும் வார்த்தைகளால் அவனை வறுத்தெடுத்தாள். சாபங்களை வஞ்சனையின்றி வாரி இறைத்தாள். பாவம் அஜானுபாகுவான வேலு அமைதியாய் அனைத்தையும் பொறுத்துக்கொண்டான். அவன் சுபாவம் அப்படி ! 



வறுமையும் குடும்பப்பூசல்களும் சூழ்ந்த நிலையிலும் அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.  அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு பணம் பிரதானமாய் அமைந்தது.

வேலு கொண்டுவரும் சொற்ப வருமானம்,வீட்டில் உள்ள அனைவருக்கும் வடித்துக்கொட்ட சுசிலாவுக்குப் போதவில்லை. பணம் பணம் என அவனை பிடுங்கியெடுத்தாள். பகுதி நேர வேலைக்கு விரட்டினாள். அவனிடத்தில் அன்பாய் பேசவோ பழகவோ விருப்பமில்லாதவள் போல் நடந்துகொண்டாள். அழகிய அவள் முகத்தில் நாகத்தின் நாக்கினைப் படைத்துவிட்டான் போலும் பிரம்மன். தினமும் வார்த்தைகளால் அவன் இதயத்தில் நஞ்சைப் பாய்ச்சினாள் அந்த மகராசி.

அந்த சூழலில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது....




தொடரும்...





Wednesday, November 29, 2017

கோழிக்கறியும், கரப்பான் பூச்சி கூட்டும்

ஒரு சுயபுராணப் பதிவு....

பதிவுக்குள் நுழையும் முன், இந்தப் பதிவில் அசைவ உணவு குறித்த சில சொந்த அனுபவங்களும் , கருத்துக்களும் உள்ளன, அசைவ உணவுப்பிரியர்கள் கவனிக்கவும். அப்புறம் தப்பா சொல்லிட்டோம்னு வருத்தப்படுறது, கோபப்படுறது, சைவத்திற்கு மாறுவது போன்ற பெரும் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது என்பதை  முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறோம். நட்பும் நன்றியும் :))

சும்மா சொல்லக்கூடாது !! அன்றும் சரி, இன்றும் சரி நாம் எப்பவுமே சாப்பாட்டு பிரியைதான் !! இது எந்தளவிற்கு நிஜம் என்பது , அம்மாவின் சமையலை சாப்பாட்டுத்தட்டு முழுக்க நிரப்பி வைத்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து "கோபுரங்கள் சாய்வதில்லை " என உடன்பிறப்புகள் அடைமொழி வைத்ததிலிருந்து புலப்படும், அதாவது நாம் ஒரு "சாப்பாட்டு இராமாயி" என்பது :))

அம்மாவின் சமையல் அம்புட்டு ருசி, இத்தனைக்கும் அம்மாவின் சமையலில் அஜினோமோட்டோ, சுவைக்கூட்டு எல்லாம் கிடையாது. கொஞ்சமாய் கருத்து விளங்கும் அந்த இளம் பிராயத்தில் வாழ்ந்தது தோட்டப்புறத்தைத் தொட்ட கம்பம் ஒன்றில், வீட்டிற்கு முன்னால் பெரிய ஆறும் பக்கவாட்டங்களில் அதன் கிளை அருவிகளுமாய் பிரிந்தோடும் நீர்நிலைகள்.   அதற்கு
நடுவே தீபகற்பமாய் ஒரு குட்டி அத்தாப்புக்கூரை வேய்ந்த பலகை வீடு, வீட்டைச் சுற்றிலும் செம்பனை மரக்காடு, நடு நடுவே கொக்கோ பழ மரங்கள், இருள் சூழ்ந்த பிரதேசம்.

அந்த வாழ்க்கையையும் சலிக்காது, சளைக்காது வாழ்ந்தவர் அம்மா, வீட்டிற்கு பக்கத்தில் மரவள்ளித் தோட்டம், குட்டிக் குட்டியாய் கத்தரி இன்னும் அவரால் பராமரிக்க முயன்ற பயிர்கள் அணிவகுத்து பலன் தந்தன.

வீட்டிற்கு முன்னால் தூண்டிலிட்டு மீன்பிடித்து, சொந்தமாய் மசாலை அரைத்து மரவள்ளியும், மாங்காய் பிஞ்சுகளும் சேர்த்து அம்மா  சமைக்கும் மீன்குழம்பு அத்தனை சுவை , மணம். அம்மாவின் ஓரிரண்டு தோழிகளுக்கும் அந்தக் குழம்பில் பங்கு போகும். இப்படியாக அம்மாவின் சுவையான உணவுகளுக்கான காலக்கட்டம் வேற்றூருக்கு வேலை, படிப்பு என புலம் பெயர்ந்ததில் விடைபெற்றுப்போனது.

அதன் பின்னர்தான் வாழ்வில் வந்தது முக்கியக்கட்டம், அம்மாவின் சமையல் இல்லாத வெறுமையோ, அல்லது பிரம்மகுமாரிகள் (ஒரு காலத்தில்) இயக்கத்தின் ஈடுபாடோ ஏதோ ஒன்று மனதை மாற்ற நாம் முழு சைவம் ஆயாச்சு. யார் சொல்லியும் மண்டையில் ஏறவில்லை, கூட்டாளிகள் கூட்டிப்போய் KFC இல் வைத்து கண்முன்னே கோழியைக் கடித்துக் குதறும் போதும் , நமக்குப் பிடித்த சிவப்பு fantaவைக் குடித்துக்கொண்டு சலனப்படாமல் இருக்க முடிந்தது.

எல்லாம் நல்லபடிதான் போய்க்கொண்டிருந்தது, பொறுமைசாலி ஆகிவிட்டதாய் சிலர் சொன்னார்கள் , கோபம் குறைந்து (கொஞ்சம் முன்கோபம் என்பது சொல்லக் கேள்வி !!) , சாந்தசொரூபியாகிவிட்டதாய் சிலர் பாராட்டு மழை பொழிந்து உச்சிக் குளிர வைத்தனர். அதற்கும் வந்தது முடிவு, ரொம்பவும் வேண்டப்பட்ட ஒரு ஜீவனுக்காக எட்டு வருட சைவம் கைவிட்டுப்போனது. கொஞ்சம் வருத்தம்தான், ஆனால் நாம் அன்புக்கு அடிமையல்லவா ( வேறென்ன சொல்ல ? )  ஆச்சு மீன்,  கோழியோடு மீண்டும் துவங்கியது பிடி கடி போராட்டம் :))

 வேற்றூரில் வாழ்ந்த சைவ வாழ்வில் மறக்க முடியாத மனதிலாடும் இரு நிகழ்வுகள்...

 முதலாவது, அது ஓர் பெரிய உணவுப் பேரங்காடி, பல வகை உணவுகள் அணிவகுக்கும் நிறைய அங்காடிகள், கொஞ்சம் பேமசான இடம், உணவு வேளைகளில் அலைபாயும் கூட்டம் , அங்கே நாம் எப்பொழுதுமே சாப்பிடுவது  சைவ உணவுகள் விற்கும் ஒரு சீனப் பெண்மணியின் அங்காடியில், அப்பெண்மணி பார்க்க  நாற்பதுகளின் துவக்கத்தில் நல்ல உயரம், நடுத்தர உடல்வாகு, குழந்தைத்தனமான முகம் எனக் காட்சியளித்தாள். சுவையாய் சமைப்பதில் வல்லவள், மசாலை சேர்த்த நம்மூர் குழம்புகளைப் போலவும் பதார்த்தங்கள் அவள் கடையில் நிறைந்திருக்கும்.

அவள் கடையின் சைவ உணவு பிடித்துப்போக எப்பொழுதும் நாம் அவள் கடைக்குச் செல்வதுதான் வாடிக்கை. அவளின் வாடிக்கையாளரான கொஞ்ச நாளில் நம் உணவுப் பழக்க வழக்கத்தை கண்டு பிடித்துவிட்டாள் அம்மணி, என்னென்ன பிடிக்கும் என்பதைத்  தெரிந்துகொண்டு அவற்றை தட்டில் சற்று அதிகம் பரிமாறி வைப்பாள். உண்டு எழுந்ததும், கொஞ்சம் கோபமும் நிறைய  அக்கரையுமாய், ஏன் இதை மீதம் வைத்தாய், ஏன் சாப்பிட்டு முடிக்கவில்லை என கேள்விக்கனைகள் தொடுப்பாள். ஆரம்பத்தில் கொஞ்சம் விசித்திரமாக இருந்த அவள் போக்கு நாளடைவில் சகஜமாகிப்போனது.

 தம்மைப் பற்றி எதிர்மறையாய் கருத்துக் கூறும் பிறர் மேல் பலருக்கு எழும் கோபம் போல்  அவள் மேல் கோபமோ, வெறுப்போ எழவில்லை, குறை கூறுபவர் யாருமே இல்லையென்றால் நம் சிறு பிழைகளை யார் உணர்த்துவது ? அதுகூட ஒருவகை அக்கரை தானே ? அதை ஏன் சில மழலை மனங்கள் வெறுக்கின்றன ? இதுகூட ஒருவகை வாழ்வின் விசித்திரங்கள் தான் போலும் :))

யாருமற்ற அந்த ஊரில் தாயை ஞாபகப்படுத்தும் அவள் அக்கரை பிடித்துத்தான் இருந்தது. அம்மாகூட தட்டில் ஏன் மீதம் வைத்தாய் எனக் கேட்டதில்லை ( மீதம் வைத்தால்தானே கேட்பதற்கு :0) இனத்தாலும், மதத்தாலும் , மொழியாலும் வேறுபட்ட ஒரு பெண் , வாங்கும் பணத்திற்கு மேல் உபசரிக்கின்றாளே என்ற மரியாதைதான் பிறந்தது.

வருடங்கள் பல கடந்தும் இன்றும் நினைவிலாடுகிறாள் அந்த சீன அண்ணபூரணி :))

இரண்டாவது சம்பவம், ஜோகூரில் புகழ்பெற்ற உணவுக்கடையில், ஒரு வாரக்கடைசி, மதியம், ஒரே பசி , அந்தக் கடையில் நுழைந்து சைவ உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு , கைகழுவி அமர்வதற்குள் மின்னல் வேகத்தில் தலைவாழையிலையில் உணவு பறிமாறப்பட்டுவிட்டது. இருக்கும் பசி அத்தனையும் ஒன்று திரண்டு எட்டிப்பார்க்க ஓடிவந்து இலைக்கு முன் அமர்ந்து உணவைப்பார்த்தால் ......

பால் போன்ற பச்சரிசி சாதத்தில் பொன்னிற சாம்பார் மின்ன அதற்கு மத்தியில் சாம்பாரில் விழுந்து, வெந்து, ஊறிப்போய் , இறந்து கிடந்தது ஒரு பெரிய "கரப்பான் பூச்சி" கொதிக்கும் சாம்பாரில் விழுந்திருக்கும் போல , ரொம்பவே துடிதுடித்து சிறகுகள் பிரிய பருத்து பெருத்துக் குலைந்து கிடந்தது. வந்த பசி அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோக, அழாத குறைதான், கடையில் வேறு நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, மெல்ல எழுந்து போய் தொட்டுக்கூட பார்க்காத அந்த உணவுக்கான கட்டணத்தை அழுதுவிட்டு, ஏன்மா, சாப்பிடலையா ? சாப்பிடலையா? என துரத்திய கடைக்காரரின் குரலை சட்டை செய்யாமல் பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடியதெல்லாம் நினைவோடையில் தெளிவாய் மின்ன. அந்தக் கடைக்கு அத்தோடு ஒரு பெரிய கும்பிடு.

அதுவெல்லாம் பழைய கதை, இப்போ நாமும் நம் அசைவ உணவும் எனும் மகிழ்ச்சியான வாழ்விற்கு வந்திருப்பது பெரிய ஆபத்து. முதலில் ஆடு , அதன் மணம் பிடிப்பதில்லை, சரி ஆடு மாமிசத்திற்கு குட்பை, அப்புறம் கடல் உணவுகள் இதில் இறால், புழு வகையைச் சேர்ந்ததாமே என சிலர் புரளியைக் கிளப்பிவிட, படித்துப்பார்த்தால் அதில் கொஞ்சம் உண்மையிருக்க ஊடான் என்னும் இறாலுக்கும் விடுதலை, அப்புறம் இறால் புழு வகை என்றால் நண்டு பூச்சி வகையில்லையா (இன்னும் ஆராய்ச்சியில்) !!

அப்புறம் மீன்கள் அதற்கு வந்த ஆபத்தும் விநோதமானதே, அதாகப்பட்டது சுனாமி வந்ததல்லவா ? அப்போது மனித சடலங்கள் ஆழிப்பேரலையில் கடலில் சங்கமமாக, அவற்றை உண்டு கொழுத்தனவாம் மீன்கள் , இப்படி ஊடகங்களில் மீன் உணவுக்கு எதிர்ப்பு வெடித்தது. சரி மீன் உணவுக்கும் விடுதலை, மிஞ்சியிருப்பது என்ன ? கோழி மட்டும்தான், அதற்காகத்தான் இந்தப் பதிவே . (மகனும் , தந்தையும் கழுதை மீதேறிய கதை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறது என்பதை அறிய முடிகிறது )

சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும் உணவு கோழி என்பதற்கு அதன் துரித உணவு வணிகத்தில் சக்கைப்போடு போடும் KFC, McDonald போன்ற துரித உணவு அங்காடிகளே தக்க சான்று, அதுமட்டுமா மசாலை மணக்க அம்மா வைக்கும் கோழிக்குழம்பிற்கு எதுவுமே ஈடாகாது அல்லவா ? விடயம் இப்படியிருக்க..

ஏற்கனவே கோழி தலையை உண்ணக்கூடாது, கழுத்து, ரெக்கை , கால்கள் என யாவற்றையும் விடமாக்கி ஊடகங்களில் பரப்பபட்ட விக்ஷமங்களில் என்னங்கடா இது !! இந்த கோழி உணவுக்கு வந்த சோதனை , போற போக்கை பார்த்தால் கோழி எலும்பு மட்டும்தான் உண்ணத் தகுந்தது போலும் என பயந்திருந்த வேளை  அது நடந்தேவிட்டது , எப்படி என்றுதானே கேட்கிறீர்கள், இதோ சொல்கிறேன் விலாவாரியாக ஆனால் முழுதும் படித்துவிட்டு தங்களுக்கும் கோழி உணவு அலர்ஜியாகிப்போனால் கம்பெனி பொறுப்பேற்காது என்பதை மீண்டும் சொல்லிவிடுகிறேன்.

நம் நாட்டில் அனல் பரக்கும் வானொலி அறிவிப்பாளர், அவர் சொல்கிறார் தற்போது சில பல பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு உணவாக ரொட்டித் துகள்கள் உணவளிக்கப்பட்ட போக்ஷாக்கு நிறைந்த "கரப்பான் பூச்சிகள் " உணவாக்கப்பட்டு , கொழுக் மொழுக்கென வளர்ந்த கோழிகளாய் வியாபாரத்திற்கு வருகின்றன என்று, நெருப்பில்லாமல் புகையுமா ? ஆதாரமில்லாமலா அந்த மனுக்ஷன் இப்படி ஒரு தகவலை பொதுவெளியில் வெளியிடுவார் ? அவ்ளோதான் கோழி உணவுக்கும் அடித்துவிட்டார்கள் சாவுமணி !! இனி கோழி உணவைப் பார்த்தாலே
 

பெருத்து, பருத்த கரப்பான் பூச்சிகள் அதற்குள் ஊர்வதாய் உணர்வுகள் சிலிர்க்க ( கரப்பான் பூச்சியையும் சிலர் உணவாக்கிக் கொல்லு(ள்ளு)ம் உலகில் வாழ்ந்தாலும்)  இனிமேல் கோழி உணவுக்கும் குட்பை, போற போக்கப் பார்த்தா திரும்பவும் நம்மள சைவமா மாத்தாம விடமாட்டாய்ங்க போலிருக்கே சாமி :((


பி.கு :

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

மேற்காணும்  குறள் வழி நிறைய அனுபவங்களும் சில ஆராய்ச்சிகளும் கலந்ததே மேற்கூறிய பதிவு :))





























Tuesday, November 21, 2017

நா.பாவின் இலட்சியப் படைப்பு "குறிஞ்சி மலர்" - படித்ததும் பிடித்ததும்

காலம் எனும் நதியில்
கரைந்திடும் பொழுதில்
நினைவிலாடும் சில
தருணங்கள் - வாழ்வு

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என் சகோதரி
ரத்னா எனக்கொரு மேசைக்கணிணியை பரிசளித்தார், ரெம்ப ஸ்ட்ரிக்கான இடை நிலைப்பள்ளி ஆசிரியை அவங்க. ( அது என்ன எப்பப் பார்த்தாலும் பரிசு வாங்கின கதையாவே இருக்கே, இவிங்க யாருக்கும் பரிசு  ஏதும் கொடுக்கவே மாட்டாய்ங்களா என சந்தேகிப்பவர்களுக்கு, நாமளும் சின்னக் கலைவாணர் மாதிரி தானுங்க, கொடுக்குறதுக்கு முன்ன யோசிக்கிறதில்ல, கொடுத்தப்புறம் அதப்பத்தி பேசிக்கிறதில்லே :P

அன்று முதல் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி போல் ஆகிவிட்டது அந்தக் கணிணி, வாய்ப்புக் கிடைக்கும் நேரமெல்லாம் கணிணி முன் அமர்ந்து பதிவுகள் எழுதுவது, கவிதைகள் வரைவது, மடலாடுவது தொடங்கி கணிணி விளையாட்டுக்கள் என வாழ்வின் பெரும் பகுதி கணிணியுடன் கழிந்தது. எழுதுவது நமக்கு மிகவும் பிடிக்கும், ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதரும் தாமறிந்த தொழில் வழி , கலைகளின் வழி தம்மை வெளிப்படுத்துகிறார்கள், அவ்வகையில் நம்மால் எழுத்தின் வழி உலகோடு உறவாட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி, இருந்தாலும் நம் எழுத்துக்கு உதவியாய் இருந்த கணிணிக்கு இப்பொழுது நலமில்லை, பழுதாகிப்போய் கடையில் படுத்துவிட்டது :(( திரும்பி வரும்வரை எழுதுவதில்லை எனும் நமது விரதத்தை தோழி ஸ்டெல்லாவின் விண்ணப்பம் தகர்த்துவிட்டது, எனவே கையகல அலைபேசி ( tab) வழி இப்பதிவு உதயமாகிறது.

 

நா.பா என எழுத்துலகில் அறியப்பட்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற நெடுங்கதை படைப்பாளி நா பார்த்தசாரதி அவர்களின் சிறந்த படைப்புகளில் ஒன்று "குறிஞ்சி மலர்" . ஏறக்குறைய 93 நாவல்களை இவர் படைத்திருக்கிறார். இவ்வளவு அருமையான படைப்பைத் தந்த கதாசிரியரைப் பற்றி மேலும் நாம் அறிந்து கொள்ள அவர் வரலாறு நமக்கு உதவும்.

"குறிஞ்சி மலர்"1960 ஆண்டு வெளியீடு கண்ட படைப்பு , மு.வ அவர்களின் கருத்தாழமிக்க முன்னுரையோடு துவங்கி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்தப் படைப்பு ஏற்கனவே தமிழ் நாட்டின் புகழ் பெற்ற கல்கி இதழில் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடர்கதையாய் வெளிவந்து பின் நாளில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்து அசத்தியதாய் விக்கி வழி அறியமுடிகிறது ( ஆஹா ! இதையும் விட்டு வைக்கலையாப்பா தயாரிப்பாளர்களே ? சீரியல் பார்க்காதது எவ்வளவு பிழை என்பது இப்பொழுதுதான் புரிகிறது :)


இந்நாவலுக்கான தகவல்கள் பல இணையத்தில் விரவிக்கிடப்பதால், இதற்கு மேலும் அறிமுக விழா நடத்தாமல் குறிஞ்சி மலர் எனும் நீண்ட புதினத்தின் கதாமாந்தர்களையும் , கதைச்சுருக்கத்தையும் காண்போம் வாருங்கள்.

இப்படைப்பின் முதன்மைக் கதைமாந்தர்கள் பூரணியும், அரவிந்தனும் ஆவர்.

பூரணி, பூரணத்துவமான பெண்மணி எனும் பொருள்பட இவள் பெயரை படைத்திருக்கிறார் கதாசிரியர், இருள் சூழ்ந்த வெளியில் ஒளியேந்திய மங்கையாய் அறிவொளி மிளிர மிகவும் பண்பார்ந்த தைரியசாலியாய் இப்புதினம் முழுக்க வலம் வருகிறாள் பூரணி.

தமிழ்ப்பேராசிரியர் சிற்றம்பலத்தின் மூத்த பெண், இப்புதினம் ஆரம்பித்த தருணத்தில் அவளுக்கு 15 வயது. கல்லூரி செல்லாமலேயே தந்தையின் ஆதரவுடன் வீட்டிலேயே கல்வி கற்று தேறுகிறாள். கொள்கை பிடிப்பு நிறைந்த இப்பெண் , தன் தந்தையின் புகழுக்கு பங்கம் நேராமல் வறுமையை தாங்கிக் கொண்டு நேர்வழியில் நடக்கிறாள்.  தன் சகோதர சகோதரிகளை அன்புடன் பராமரிக்கின்றாள். பிரசங்கியாய் பணி ஏற்கிறாள். தேர்ந்த பிரசங்கியாய் நாடு முழுக்க புகழ்பெறுகிறாள், வெளி நாடுகளுக்கும் சென்று வருகிறாள். அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துமளவு வல்லமை பெற்ற பெண்ணாய் படைக்கப்பட்டிருக்கிறது பூரணியின் கதாபாத்திரம்.

அரவிந்தன் ஓர் இலட்சியவாதி. ஊருக்கு உதவுபவன், தனக்கு உறவினர் வழி சேர்ந்த பெரும் செல்வத்தையும் பிறருக்கு ஈந்த தயாள குணத்தினன். பிறருக்கு நன்மை செய்யும் குணசாலியான இந்த இளைஞன் தன்னை தற்காத்துக்கொள்ள மறந்து , சூழ்நிலைக்கு பலியாகும் வண்ணம் படைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இவன் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளாமல் தனக்காக காத்திருந்த பெண்ணையும் கரம் பிடிக்க முடியாதவனாகிவிடுகிறான். வெளிப்படையாய்ச் சொல்வதானால் கொஞ்சம் இளிச்சவாய் கதாபத்திரமாகவே காட்சியளிக்கிறான் அரவிந்தன்.

ஒருவேளை பூரணியை மேன்மையாய்க் காட்ட இவன் கதாபாத்திரம் இவ்வாறு பலவீனமாக சித்தரிக்கப்பட்டுள்ளதோ எனத் தோன்றுகிறது.

கதைப்படி பார்த்தால்...

தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் தமிழ்ப் புலமைக்கும், உண்மை, நேர்மைக்கும் பேர் போனவர். மனைவியை இழந்த இவருக்கு நான்கு குழந்தைகள். அவர்களுள் மூத்தவள் பூரணி. தன் பிள்ளைகளுக்கு கல்வியுடன் நற்போதனைகளும், வாய்மையும் போதித்து வளர்க்கிறார். திடீரென ஒரு நாள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கிறார்.

தந்தையை இழ்ந்த மக்கள் ஆதரவற்று நிற்கின்றனர். 15 வயதே நிரம்பிய இளம் பெண்ணான பூரணி தன் பெற்றோர்களின் கடமையை ஏற்றுக்கொள்கிறாள். வறுமையின் பிடியில் சிக்கி அலைபாய்கிறது குடும்பம். இருப்பினும் இலவசங்களை ஏற்க மறுத்து, தனது நகையை விற்று குடும்பத்தை பராமரிக்கிறாள் பூரணி. அவர்கள் குடியிருந்த வசதியான வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். சொத்து எதையும் அவர்கள் தந்தை விட்டுச்செல்லாததால் குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது. மூத்த ஆண் மகன் தவறான வழியில் செல்ல முயன்று மீட்கப்படுகிறான்.

துயரத்தில் அல்லாடும் பூரணி வாடகை வீடு தேடி அலைந்து ஒருவழியாய் தோழியின் துணையுடன், ஒரு சிறிய வாடகை வீட்டை தன் குடும்பத்தினர்க்கு ஏற்பாடு செய்துகொள்கிறாள். அப்பொழுது தன் தோழியின் சங்கிலியை அபகரித்த திருடனை விரட்டிப் பிடித்து அவனைத் தாக்கி சங்கிலியை மீட்கிறாள். அவள் மனதிடத்திற்கும் தைரியத்திற்கும் இந்நிகழ்வு ஓர் உதாரணம்.

அடுத்து வாழ்வைத் தொடர வேலை தேடி அலைகிறாள் பூரணி. பசியுடன் கடும் வெயிலில் வெறும் காலுடன் வேலை தேடி அலையும் பூரணி வீதியில் மயங்கி விழுகிறாள்.

அச்சமயத்தில் அவள் வாழ்வின் முக்கியமான இருவரின் கவனம் அவள் மேல் விழுகிறது, ஒருவர் பூரணியின் மனதைக் கவர்ந்த அரவிந்தன் அவன் தான் பணிபுரியும் அச்சகத்திலிருந்து வீதியில் ஒரு பெண் மயங்கி வீழ்ந்ததைக்கண்ணுற்று வேதனையடைகிறான், அவன் அவளைப் காப்பாற்ற முயற்சிக்கும் முன்னரே அவள் பிறரால் காப்பாற்றப்படுகிறாள், அழகான பூரணியை கவிதையாய் வடித்து மனதுள் மடித்து வைத்துக்கொள்கிறான் அரவிந்தன். பின்னாட்களில் பூரணியின் தந்தை அழகிய சிற்றம்பலத்தின் நூல்களை பதிப்பிக்க அவளை மீண்டும் சந்திக்கும் அரவிந்தன் அவளுடன் நல்ல நட்பை வளர்த்துக்கொள்கிறான். அவள் வாழ்வின் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொள்கிறான். அவளுக்கு மிகப்பெரிய ஆதரவாக நாவல் முழுதும் வலம் வருகிறான். அவள் மேல் ஆசை இருந்தாலும் திருமணம் அவள் பொதுவாழ்வின் வளர்ச்சியைத் தடுக்கும் என எண்ணி அவளை மணமுடிக்கும் நோக்கத்தை இறுதிவரை தவிர்க்கிறான்.

பூரணி மயங்கி வீழ்ந்த அதே சந்தர்ப்பத்தில் அவளை சந்தித்த மற்றொருவர் மங்களேஸ்வரி அம்மாள், பணக்காரப் பெண்மணியான இவர் டாம்பீகம் ஏதுமின்றி நல்ல மனது, ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஆர்வம் கொண்டவராய் திகழ்கிறார்.  இவர் பூரணியைக் காப்பாற்றி அவளுடன் நட்புறவு கொள்கிறார். பூரணியின் குணநலன்களை அறிந்து அவளை இக்கட்டான சூழ் நிலையிலிருந்து மீட்டு அவளுக்கு பிரசங்கியாய் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்.

இப்படியாய் அபலையான பூரணிக்கு ஆதரவு அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாள் மற்றும் தோழி, அண்டை அயலார் வழி அமைந்தாலும் அவள் வாழ்வில் வில்லன்களும் இல்லாமலில்லை, அவள் தந்தையின் படைப்புகளை வெளியிடுவதில் தில்லுமுல்லு செய்த அச்சக நிறுவனர் மற்றும் அவள் அரசியலில் வெற்றிபெறக்கூடாது எனத் தடுக்கும் அரசியல்வாதிகள் என சிலர் இருக்கின்றனர், அவர்கள் பூரணியை அரவிந்தனுடன் இணைத்து அவதூறு பரப்பி, பிறர் பார்வையில் அவள் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். அரவிந்தனை கடத்தி பூரணியை அரசியலில் இருந்து விலகுமாறு வற்புறுத்துகின்றனர்.

வானில் சூழ்ந்த மேகங்கள் மழையாய் கரைவதைப்போல் பூரணியின் வாழ்வில் சூழ்ந்த இடர்களுக்கும் முடிவு ஏற்பட்டு சுபம் என எண்டு கார்டு போடப்படவேண்டிய வேளையில் அவள் மணமுடிக்க நினைத்த அரவிந்தன் இறந்து போகிறான். வேதனை பூரணியை மீண்டும் விழுங்குகிறது. தனக்கென ஒரு பணியைத் தேடிக்கொண்டு அரவிந்தன் நினைவோடு வேறு திருமணம் புரியாமல் வாழ்கிறாள் பூரணி.புராணத்தில் வரும் திலகவதி அம்மையார் - (அப்பர் சுவாமிகளின் தமக்கையார்) போல் தன் வாழ்வை அமைத்துக்கொண்டு தன் உடன்பிறப்புக்களை ஆளாக்கி விடுகிறாள் பூரணி.

 இலட்சியவாதிகளான பூரணி, அரவிந்தன் இருவரின் வாழ்வும் ஒன்றாகவே பயணித்தும் ஒன்றுசேரமுடியா இரயில் தண்டவாளங்களை ஒத்ததாய் அமைந்துவிடுகிறது.  இவ்விருவரின் எண்ணப்போராட்டங்களும், மனப்போராட்டங்களுடன் சுயநலத்தால் பிறர் இவ்விருவரின்  இலட்சியத்தைத் தகர்க்க குறுக்கு வழிகளைக் கையாண்டு, சூழ்ச்சி, வன்முறை கொண்டு தகர்க்க முயல்வது அதிலும் அவர்கள் ஜெயித்து மீள்வது என நீள்கிறது படைப்பு.

இவர்கள் மட்டுமன்றி அரவிந்தனின் தோழன், மங்களேஸ்வரி அம்மாளின் மகள் வசந்தியின் மணவாழ்வு மற்றும் சிலரின் வாழ்வும் நாவலில் பகிரப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வந்த நாவல், நல்ல மொழிவளமும், கற்பனை வளமும் விரவிய புதினம், சமூக சீர்திருத்தம் பேசும், பெண்மையை பெரிதாய் போற்றும் ஒரு படைப்பு. 12 ஆண்டுகளுக்கொரு முறை மலரும் அபூர்வ குறிஞ்சி மலரைப்போல் பெண்களுள் சிறந்த பூரணி எனும் பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம் இது. வாய்ப்புக்கிடைக்கும் நண்பர்கள் வாசிக்கலாம்.









Wednesday, June 21, 2017

பறவைகள் பலவிதம்


அர்ஜுன், நடுத்தர வயது ஆடவன், நல்ல உயரம், வாட்ட சாட்டமான தேகம். சிரித்த முகம். நகைச்சுவை குண‌ம் நிறைந்தவன். ஒரு பட்டதாரிப்பெண்ணை காதலித்து மணந்தவன். அவளை வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக்கொண்டான். அவர்களுக்கு இரண்டு ஆணும் இரண்டு பெண்ணுமாய் நான்கு குழந்தைகள்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொன்டிருந்தது. தொழிற்சாலை மேலாளராய் பணியாற்றும் அர்ஜுனுக்கு இரு உயிர் நண்பர்கள். ஒன்றாய் வேலை பார்ப்பவர்கள், அனைவரும் ஜாலி கைகள். வாரக்கடைசியானால் ஒன்று கூடி ஏதாவதொரு சீனன் "சீ புட்" கடையில் ஒன்றாய் அமர்ந்து மதுவும், உண‌வுகளுமாய் வாரக் கடைசியை கொண்டாடி மகிழ்வார்கள். அவரவர் அறிந்த தகவல்களை பறிமாறிக்கொள்வதிலிருந்து, குடும்ப விடயங்களை பகிர்ந்துகொள்வது, அவசரத்திற்கு ஒருவர் மற்றவரிடமிருந்து ஐம்பதோ, நூறோ கைமாற்றாய் கடன் வாங்குவது என அமைந்திருந்தது அவர்களின் நட்பு.

அர்ஜுனுக்கு தன் நண்பர்கள் என்றால் உயிர். தன் குடும்பத்தைவிட, உடன் பிற‌ந்தவர்களை விட அந்த நண்பர்கள் அவனுக்கு நெருக்கமாய் திகழ்ந்தனர்.

எல்லாம் நல்லபடியே போய்க்கொன்டிருந்தது. ஒரு நாள் முன்னிரவு வேலை விட்டு வீடு திரும்பிய அர்ஜுன் குளித்துவிட்டு அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொன்டிருந்தான்.

ஆஸ்ட்ரோவில் ஒரு நடிகர் தாய்மையைப் போற்றும் பாடலுக்கு அபிநயித்துக்கொன்டிருந்தார். நிகழ்ச்சியில் இலயித்துப்போன அர்ஜுனை உலுக்கினாள் அவன் மனைவி யமுனா.

 என்னங்க! என்ன இது ? பரபரப்புடன் அவள் சுட்டிக்காட்டிய தன் விலாவை நோக்கிய அர்ஜுன் சிவந்த நிறம்கொன்ட தனது உடலில் பருப்பு அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெண்மையாய் நீர்கோர்த்த முத்துக்கள் திட்டுக்கள் இட்டிருப்பதைக் கண்டான்.

உங்களுக்கு பெரியம்மை வந்திருச்சுங்க, பதறினாள் யமுனா.

 அதை அலட்சியப்படுத்திய அர்ஜுன்  அட இவ ஒருத்தி ! எப்பப் பார்த்தாலும் நொய்நொய்ன்னிட்டு ! இது ஏதோ சாதாரண நீர்க்கட்டி தாம் பிள்ள ! இது ஒன்னும் அம்மையில்ல, நீ வீணா உளராத, கடுப்புடன் அவன் எடுத்தெரிந்து பேச, யமுனா மெள்னமாகிவிட்டாள். அர்ஜுனின் உழைப்பை நம்பியே அவர்கள் குடும்ப‌ வாழ்க்கை நகர்ந்தது. அவன் நலமும் ஆரோக்கியமும் அந்தக் குடும்பத்திற்கு மிக முக்கியம். சொல்லமுடியாத பயமும் பதற்றமும் யமுனாவின் மனதில் குடையத் துவங்கியது.

தொடர்ந்த ஓரிரு நாட்களை வழக்கம் போலவே கழித்தான் அர்ஜுன். தன் உடலில் மேலும் அதிகமான நீர்க்கட்டிகளும், லேசான காய்ச்சலுடன் தலைவலி எடுப்பதையும் சட்டை செய்யாமல் நாசி கண்டார் க‌டையில் வாங்கிய பெனடோல் இரண்டை விழுங்கிவிட்டு சாதாரணமாய் இருந்தான்.

அதற்கடுத்த சில நாட்களில் யமுனா பயந்தபடியே அர்ஜுனுக்கு உடல் முழுதும் பெரியம்மை போட்டுவிட்டது.

தனது கம்பெனியின் பேனல் கிளினிக்கிற்கு விரைந்த அர்ஜுனை, தொட்டும் பார்க்காமல் சில வலி நிவாரண மாத்திரைகளை வாரிக்கொடுத்து, இரண்டு வார வேலை விடுப்பு கொடுத்து அனுப்பினார் அங்கிருந்த‌ இந்திய மருத்துவர். அம்மைநோய் பயம் படித்துப் பட்டம் வாங்கிய மருத்துவரைக்கூட விட்டுவைக்கவில்லையே ! தனது அலட்சிய சுபாவத்தின் மீது முதல் முறையாய் கோபம் வந்தது அர்ஜுனுக்கு.

இரண்டு வாரம் விடுப்பு முடிந்தது. அர்ஜுன் உடலிலும் முகத்திலும் தோன்றிய அம்மைப்புண்கள் ஆறின, தீய்ந்த கருந்திட்டுக்களாய் முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே அம்மைத்தழும்புகள் அடையாள‌மிட்டிருந்தன‌. உடல் நலம் தேறிவிட்டது என நினைத்த சமயத்தில் தொடந்தாற்போல் அர்ஜுனின் கைகளும் கால்களும் நிரந்தரமாய் மர‌த்துப்போய்விட்டன. சாதாரணமாய் நமக்கு ஒரு சில நிமிடங்கள் கால்கள் மர‌த்துப் போனாலே அத்தனை சிரமமாய் இருக்கும். அர்ஜுனுக்கோ உடல் முழுதும் மர‌த்துப்போய் மிகவும் அசெளகரியமாக இருந்தது.

மருத்துவர் அது சாதாராண பிரச்சனை எனக் கூறி மேலும் சில நரம்புக்கான சத்து மருந்துக்களும் வேலை விடுப்பு நீட்டிப்பும் கொடுத்து அனுப்பினார்

நோயின் தீவிரத்துடன் அடங்காத பசி உண‌ர்ச்சியும் அர்ஜுனுக்கு ஏற்பட்டது.

எந்நேரமும் பசி பசி என வருந்தினான், மனைவி நிறைய உணவு கொடுத்தும்

பசி அடங்கவில்லை, நாளுக்கு நாள் உடல் மர‌ப்பும், தீராத பசியும், கூடவே சொல்ல முடியாத வேதனை நிறைந்த உடல் நோவும் அர்ஜுனை வாட்டி வருத்தியது.

அர்ஜுனின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி மனநிலை குழம்பியது.  வாய் ஒருபுறம் கோணிக்கொன்டது, வாய் குளர ஆரம்பித்தது. முகம் பொழிவிழந்து வீங்கி, கண்கள் சிவந்து நோயாளியாய் காட்சியளித்தான்.

யாரோ தனக்கு பில்லி சூனியம் வைத்துத்துவிட்டனர் எனப் புலம்ப ஆரம்பித்தான். இரவில் தூக்கம் தொலைத்தான். ஒரு மாதம் கழிந்த பின்னர்  ஓரிரவு நோவின் உச்சக்கட்ட வேதனையில் செய்வதறியாது மனைவி மக்களை காரில் அள்ளிப்போட்டுக் கொன்டு அருகாமையிலிருந்த முனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றான்.

உலகை இருள் சூழ்ந்திருக்க, இரவுப் பறவைகளின் சன்னமான ஒளிகள் அங்குமிங்கும் ஒலித்து மறைய, மணியோ பன்னிரன்டைத் தான்டியிருந்தது, ஆலயம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. காரை ஆலயத்தின் முன்னே நிறுத்தி ஆலயத்தின் வாசலில் பரிதாபமாய் நின்று ஐயாவிடம் தனது வேண்டுதலை கலங்கியபடியே முன்வைத்தான்.


அவன் நிலையைக் கண்டு யமுனாவும் மனம் நொந்து அவன் நலம் வேண்டி ஐயாவிடம் தீவிரமாய் வேண்டிக்கொன்டாள். அவள் மனதின் வேதனை யாவும் கண்ணீராய் பொங்கி வழிந்தது.

பளிச்சிடும் எஃகு கதவுகளுக்குப் பின்னே அஜானுபாகுவான தோற்றத்துடன் சடாமுடி தரித்து, பெரிய கண்களில் கருணை கசிய, முறுக்கிய மீசைக்குள்ளிருந்து மெலிதாய் இதழ் பிரிந்து புன்னகைக்க‌ ஐயா வாசலுக்கு வெளியே நின்று கலங்கும் அர்ஜுனையும் யமுனாவையும் கவனித்துக்கொன்டிருந்தார்.

அந்த இரவு விடியும் வரை உறக்கமின்றி நீண்டது அர்ஜுன் யமுனாவுக்கு.

அர்ஜுன் உற‌வுகள் யாரிடமும் தன் பிரச்சனையைத் தெரிவிக்கக் கூடாது என யமுனாவைத் தடுத்திருந்தான், ஆனால் நிலைமை மிகவும் மோசமாவதை உணர்ந்த யமுனா அதற்குமேல் அமைதி காப்பது சரிவராது என தன் மாமியாரிடத்தில் உதவி கேட்க முடிவு செய்தாள். மறுநாள் விடிந்தும் விடியாமலும் பக்கத்து பட்டிணத்தில் இருக்கும் தனது மாமியாரை தொலைபேசியில் தொடர்புகொன்டு கணவனின் உடல் நிலையைத் தெரிவித்து அழுதாள்.

மாமியார் இளைய மகனை அழைத்துக்கொன்டு விரைந்து வந்தார். நோயில் வாடி வதங்கிப்போன தன் மகனைக் கண்டு கலங்கினார். உடன் வந்த மச்சினன் சுரேஸ் உடனே தனது அண்ணனை அழைத்துச் சென்று ஊரிலேயே பெரிய தனியார் மருத்துவமனையில் முன் பண‌ம் செலுத்தி சேர்ப்பித்தான்.

அர்ஜுனுக்கு "guillen barre syndrome “ எனும் நரம்புச் சிதைவு நோய் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய அந்த நோய் துரதிர்க்ஷ்டவசமாய் அர்ஜுனை பீடித்திருந்தது. அதற்கான மருத்துவம் மலேசிய ரிங்கிட் ஐம்பதாயிரத்தைத் தாண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதைத்தான் ஆரம்ப காலங்களில் நமது முன்னோர், அம்மை கண்ட பின்னர் ஏற்படும் "மறுமுள் பாய்தல்" என்று குறிப்பிட்டார்கள் போலும்.

சிகிச்சைக்குப் பணம் போதவில்லை. என்ன செய்வது, மருத்துவ அட்டை (மெடிக்கல் கார்டு) ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை அவசியம் ? யமுனா குடும்ப நலனை கருத்தில் வைத்து மருத்துவ அட்டை எடுக்கும்படி வலியுறுத்தினாலும் தொடரும் செலவுகளால் அதற்கு அர்ஜுன் முக்கியத்துவம் தரவில்லை. மருத்துவ அட்டை இல்லாத அர்ஜுன் பணத்திற்கு தத்தளித்தான்.

யமுனா உற‌வுகளிடம் கையேந்தினாள். யாரால் 50 ஆயிரம் ரொக்கமாய் தர முடியும்? அவள் வேதனையில் வாடினாள். பத்தாயிரம் வெள்ளிக்குமேல் அவளால் திரட்ட முடியவில்லை, வீட்டை விற்க நினைத்தாள், ஆனால் நேரம் மிகவும் குறைவாய் இருந்ததால் அவள் வழியின்றி வாடினாள்.

தூக்க மருந்து செலுத்தப்பட்டு அர்ஜுன் உறங்கிய பின்னர், மருத்துவமனையின் கண்ணாடிக் கதவுகளூடே இருள் சூழ்ந்த வெளியில் குவிந்திருக்கும் இருளையும், ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் நட்சத்திரங்ககளையும் வெறித்தபடி, கண‌வனையும், குழந்தைகளையும் எண்ணியபடியே எதிர்காலத்தை நினைத்து வாடிக் கலங்கினாள் யமுனா. அவளின் உறக்கத்தை வேதனைகள் விழுங்க, அவளின் பொழுதுகள் பெரும் பாரமாய் கழிந்தன.

தனக்கும் மேலான சக்தியிடம் அவள் தொழுது நின்றாள். ஏதாவது ஓர் அதிசயம் நிகழ கசிந்து கண்ணீர் மல்கினாள். அந்த அபலையின் வேண்டுதல் பிரபஞ்சத்திற்கு கேட்டது போலும்..

யமுனாவின் வேண்டுதல் நிறைவேறியது. அர்ஜுனின் நிலையறிந்து  மருத்துவ செலவுக்கான மொத்த தொகையையும் அவன் வேலைசெய்யும் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்காம் நாள் பணம் செலுத்தப்பட்டது. யமுனாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது. உடனடியாய் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் யமுனா.

“நீங்க மருத்துவ அட்டை வச்சிருந்தா எவ்வளவோ வசதியாயிருந்திருக்குமேங்க” என அர்ஜுனிடம் புலம்ப நினைத்த யமுனா அவனே நொந்துபோயிருக்க‌ தனது வேதனையை தொண்டைக்குழியிலேயே அடக்கிக்கொன்டாள்.

அர்ஜுனுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. கோழி முட்டை வடிவத்திலான கண்ணாடிக்குடுவைகளிலிருந்து ஒரு பாட்டில் 500 வெள்ளி என கணக்கிடப்பட்டு 75 மருந்து பாட்டில்கள் அர்ஜுன் உடலில் செலுத்தப்பட்டன.

மருந்து செலுத்தப்பட்ட ஓரிரு நாட்களில் அர்ஜுனின் உடல்நிலை தேற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தான். யமுனா மகிழ்ச்சியுடன் புன்னகைக்க ஆரம்பித்தாள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணவனின் கைகளைப்பற்றிக்கொண்டு மகிழ்ச்சியாய் பேச ஆரம்பித்தாள். அர்ஜுனும் கொஞ்சம் கொஞ்சமாய் தேறிக்கொன்டு வந்தான். உடலை அசைக்கவே முடியாத நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சகஜ நிலைக்கு உடல் நிலைக்கு திரும்பியது.

மருத்துவமனையில் அர்ஜுன் சேர்க்கப்பட்ட விடயம் அவன் நிறுவன‌த்தில் மிகவும் பரபரப்பான செய்தியாய் பேசப்பட்டது. அர்ஜுனுக்கு அறவே பிடிக்காத அவனது மலாய்க்கார அதிகாரி முதல் ஆளாய் பழங்களும் பிஸ்கெட்டுகளும் வாங்கிக் கொன்டு அவனை மருத்துவமனையில் வந்து கண்டார். உண்மையான கரிசனம் அந்த மனிதனின் பேச்சிலும் செய்கையிலும் கண்ட அர்ஜுன் வேலைக்கு அப்பாற்பட்டு சைனி எனும் தனது அதிகாரி மிகவும் நல்லவர் என்பதை அன்று கண்டு வியந்தான்.

சில மணி நேரம் செலவிட்டு ஆறுதல் கூறியபின் அந்த அதிகாரி புறப்பட்டு சென்றார். நெகிழ்ந்து போனான் அர்ஜுன். மேலும் பலர் அவனை வந்து கண்டனர், நலம் விசாரித்தனர், ஆனால் ஒவ்வொரு வாரக்கடைசியிலும் தன்னுடன் கூடிக் கும்மாளமிட்ட தனது ஜாலி நண்பரில் ஒருவர் கூட எட்டிப்பார்க்காததும் , ந‌லம் விசாரிக்காததும் அவனுக்கு மிகவும் வேதனையளித்தது.

அட அம்மை தீய நோய்தான், ஆனால் நலம் விசாரிப்பதால் கூட ஒட்டிக்கொள்ளுமா என்ன? ஏன் இவர்களுக்கு இந்த பாராமுகம்? நொந்து போனான் அர்ஜுன். தொலைபேசி வழியாகவோ கூட அவர்கள் தொடர்புகொன்டு நலம் விசாரிக்கவில்லை என்பது மிகவும் வேதனையாய் இருந்தது அர்ஜுனுக்கு, எத்தனை முறை மனைவியிடம் பகைத்துக்கொன்டு அவர்களோடு கும்மாளம் போட்டிருப்பான்? எவ்வளவு பணம் அவர்களோடு செலவழித்திருப்பான்? தனது நட்புகளின் செய்கையை யமுனா விமர்சித்தால் என்ன செய்வது, அவமானமாக இருந்த‌து அர்ஜுனுக்கு. நடப்பதை உணர்ந்திருந்தும் யமுனா எதுவும் கேட்கவில்லை.

அடக்கடவுளே, எத்தனை முறை இந்த நண்பர்களுக்காக மனைவியிடம் சண்டையிட்டு பணம் பிடுங்கிக்கொன்டு போய் கொடுத்திருப்பேன். அட வந்து பார்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரே நிறுவனத்தில்தானே வேலை செய்கிறோம், நமக்கு நெருக்கம் என்று நினைத்திராத பலர் வந்து பார்த்துவிட்டுச் சென்ற‌னரே, இவர்களில் ஒருவருக்குக் கூட தன் நலம் விசாரிக்கத் தோணலியே? மனம் குமைந்தது அர்ஜுனுக்கு. நண்ப‌ர்கள் என்றால் மகிழ்ச்சியிலும் துயரத்திலும் உடனிருப்பவர்கள் தானே ?

விரைந்த நாட்களில் படிப்படியாய் உடல்நிலை தேறி நல்லபடி குணமடைந்தான்அர்ஜுன். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வேலைக்கு கிளம்பினான்.

நிறுவன‌த்தில் அனைவரும் அர்ஜுனை மகிழ்வுடன் நலம் விசாரித்தனர். அவனது நெருங்கிய சகாக்கள் இருவரும் எதுவுமே நடவாதது போல் மேலோட்டமாய் நலம் விசாரித்தனர். அர்ஜுன் தனது கடுப்பை அடக்கிக்கொன்டான். சகஜமாய் பட்டும் படாமல் பேசி தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

அந்த வாரக் கடைசி வந்தது. வழக்கம்போல் கூடிக் கும்மாளமிட அவனையும் அழைத்தனர் அவன் நண்பர்கள். அர்ஜுன், இல்லை எனக்கு வேற வேல இருக்கு, வரமுடியாது என மறுத்துவிட்டு, அந்த வார இறுதியை தனது குடும்பத்தினருடன் தனது தாயை சென்று கண்டுவரக் கிளம்பினான். மனைவியும், பிள்ளைகளும் மிகவும் மகிழ்ந்துபோயினர். இனிமேல் எப்போதும் வாரக் கடைசிகள் தனது குடும்பத்தினர்க்கே என மனதில் நினைத்தபடியே, குடும்பத்துடன் தாய் வீடு நோக்கி காரைச் செலுத்திக்கொன்டிருந்தான் அர்ஜுன்.





மலேசிய நண்பன் இதழில் வெளியான படைப்பு

ஆக்கம்


சிவ.ஈஸ்வரி,

பினாங்கு











Thursday, April 27, 2017

பழைய டைரியும் புதுநிலவின் கவிதைகளும்

பள்ளிப்பருவத்தில் புத்தகங்கள் படிப்பது மிக மிக‌ விருப்பமான விடயமாய் அமைந்திருந்தது. ஆரம்பப்பள்ளியில் நூலகத்தில் இருந்த சொற்ப புத்தகங்களை திரும்பத் திரும்பப் படிக்கமுடிந்தது, அங்கே அறிமுகமானதுதான் மு.வ வின் எழுத்தோவியங்கள் மீதான ஈர்ப்பு.

மு.வ‌ க்கான பட முடிவுமு.வ, அன்றும், இன்றும், என்றும் நமக்குப் பிடித்த மிகப்பெரிய எழுத்து ஆசான். அவரை வாத்தியார்தனம் நிறைந்தவர் என்றும் ஒழுக்கவாதி எழுத்தாளர் என்றும் இன்றைய இலக்கியவாதிகள் வர்ணிக்கின்றனர். அது 100 % உண்மையே. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று அவசியம். 

இள‌ம்பருவத்தில் பிள்ளைகளுக்கு வீட்டில் பெற்றோர்களும், பள்ளியில் ஆசான்க‌ளும் ந‌ன்னெறிகளை போதிக்கும் கடப்பாடுகளைக் கொன்டிருந்தாலும், வள‌ர்ந்துவிட்ட மாந்தர்களுக்கும் நற்போதனைகள் அவசியம்தான் என்பதை மறுக்கமுடியாது அல்லவா?  எனவே தனது படைப்புகளின் வழி நற்பண்புகளையும் தனிமனித‌ விழுமியங்களையும் முன்னிறுத்தும் இவர்போன்ற ஒழுக்கவாதி எழுத்தாளர்களும் நமது சமுதாயத்திற்கு அவசியமானவர்களே.  

மு.வ வின் கரித்துண்டு, அகல் விளக்கு, மண் குடிசை இன்னும் பல படைப்புகள் நினைவைவிட்டு நீங்காதவை, ப‌டித்த மு.வ படைப்புகள் குறித்து சில பதிவுகள் எழுதவேண்டும் எனும் ஆசையும் நிறைய உண்டு. பார்க்கலாம்.

நமது பொழுதுபோக்கே வாசிப்பது என்பதினால், கிடைக்கும் எழுத்துக்கள் நிறைந்த எந்தத் தாளையும் விட்டுவைப்பதில்லை. உடனே படித்துக் கிழித்துவிடுவதுதான் வாடிக்கை :))

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வாசிப்புப் பழக்கம் அம்மா வழி வந்த‌து. அம்மா அந்நாளைய இரண்டாம் வகுப்பு. இவரது கல்வி வரலாறு கேட்பவரை பிரமிக்க வைத்துவிடும், இளவயதில் பாட்டி அம்மாவை எழுப்பி பள்ளிக்கு அனுப்ப தயார் பண்ணினால், அம்மா வயிற்று வலி என்று பாத்ரூமுக்குள் ஓடி ஒளிந்துகொள்வாராம். இப்படியே பள்ளிக்கு மட்டம்போடும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியாய் அம்மா மாறிவிட பாட்டி அவரிடம் மாட்டிக்கொன்ட வேதாளமாய் விழி பிதுங்கி அம்மா வழிக்கே வந்து ஒரு கட்டத்தில் அம்மாவை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துவிட்டார். அம்மாவின் பள்ளிப்படிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒருவேளை பள்ளி சென்றிருந்தால் அம்மாவும் ஒரு நல்ல ஆசிரியையாய் விளங்கியிருப்பார் போலும், ஆனாலும் அம்மா அவர் குடும்பத்தில் நிறைய ஆசிரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். 
books க்கான பட முடிவுபள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர, அம்மாவின் வாசிப்ப‌னுபவம் அசாத்தியமானது. தமிழ் மட்டுமே படிக்கத்தெரியுமாதலால் கிடைக்கும் எல்லா தமிழ்ப்புத்தகங்களையும் ஒரு கை பார்த்துவிடுவார். நித்திரைக்கு முன்பதாக  படுத்திருக்கும் பொழுதும், வேலைகள் முடிந்த ஓய்வான தருணங்களிலும் அம்மாவின் அருகாமையில் பிள்ளைகளைவிட புத்தகங்களுக்குத்தான் அனுமதி அதிகம்.

இன்றும் தென்றல், மன்னன், குமுதம், ஆன‌ந்த விகடன் மற்றும் வானம்பாடியும் அம்மாவின் நெருங்கிய நண்பர்கள். நமது வாசிப்பிற்கு ஆசான் அம்மாதான். இன்றும் நமது படைப்புகளின் முதல் விமர்சகர் அம்மாதான்.

அடுத்தததாக எழுத்தின் மீது பிரியம் வரக் காரணமான நம் நாட்டு எழுத்தாளர்கள் வெள்ளைரோஜா (அழகான இவர் பெயரைக் கண்டு இவர் நிச்சயம் ஓர் அழகான பெண் எழுத்தாளர் என்று நானும் தோழிகளும் நெடுங்காலம் நம்பிக்கொன்டிருந்தோம் :) அவர் படைப்புகள் பிடிக்கும், பிறகு ஆர்.வி.ரகு, பி.சுமீதன் ஆகியோரின் படைப்புகளும் அதிகம் கவர்ந்தவை.

இந்தச் சமயத்தில்தான் அந்த மென்மையான சூராவளி எங்களைத் தாக்கியது. புதுநிலவு!! அடடா, எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை, அவர் கவிதைகள் ரொம்ப அதிகமாகவே எங்களைக் கவர்ந்திழுத்தது.. அந்த இள‌ம் வயதில் இதயத்தின் ஆழம் வரை நின்று பாதித்தது. மனுக்ஷன் உணர்வுகளைப் பிழிந்து வார்த்தைகளின் வடிவம் கொடுத்து கவிதையாக்கி நம் கவனத்தை ஈர்க்கும் அழகோ அழகு. பூவுக்குள் புயலைச் சிறைவைத்தாற்போன்ற‌ மென்மையான சொல்லடுக்குகளில் இழையோடும் பிர‌மாண்ட வார்த்தை ஜாலங்கள், இன்றளவும் பிரமிக்கவைக்கும் அவருடைய படைப்புகள்.

அந்தச் சமயத்தில் நயனம் இதழின் நடுப்பக்கத்தில் வழவழப்பான தாளில் அழகிய வண்ண ஓவியங்கள் பிண்ணனியில் மெருகூட்ட புதுநிலவின் கவிதைகள் பூத்து மலர்ந்திருக்கும், ஒருமுறை, இருமுறை, பலமுறை என ஒவ்வொரு முறையும் படிக்கப் படிக்கத் தெவிட்டாது மகிழ்வூட்டும் புதுநிலவின் கவிதைகள். அவர் கவிதைகளின் படைப்பு பார்க்கவும் அழகு, படிக்கவும் அருமை.

இவரின் நிஜப்பெயர் இராஜகுமாரன் என்பதும் இவர் பிண்ணனியும் அப்பொழுது  அறிந்திருக்கவில்லை.

வீட்டில் அப்பா கொஞ்சம் கண்டிப்பு (கொஞ்சமில்லை ரொம்பவே !!) இடை நிலைப்பள்ளியில் பயில்கையில் உடன் பயிலும் தோழிகள் யாவரும் பாப் கட்டிங் சிகையலங்காரங்களுடன், நாகரீக உடையலங்காரங்கள், ஒப்பனைகள் "ஹைஹீல்ஸ்" காலணிகள் என அழகழ‌காய் உடுத்தி பட்டாம்பூச்சிகளாய் பவனி வருகையில், தியேட்டர் சென்று சினிமா பார்க்கையில் நாம் மட்டும் அப்படியெல்லாம் இல்லாமல் நீள‌மாய் முடிவள‌ர்த்து :( இரட்டைச்சடை பிண்ணி, கவுனா, மெக்சியா என அறியக் கடினமான பள்ளிச்சீருடை அணிந்து நடமாடிக்கொன்டிருந்தோம். தோழிகள் வீட்டிற்கெல்லாம் நாமும் செல்லக்கூடாது. அவர்களும் வரக்கூடாது. அத்தனை கண்டிப்பு (உலகத்திலேயே இல்லாத அதிசயமான பெண்ணைப் பெற்றுவிட்டார், ரொம்பத்தான் ஓவர் கண்டிப்பு :P (மைன்ட் வாய்சுன்னு நினைச்சு, சத்தமா பேசிட்டோம் போல :))

இத்தனை கறார் கண்டிப்புக்களுக்கு மத்தியிலும் அப்பாவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் வல்லமை படைத்த தோழி ஒருத்தி எனக்கு வாய்த்திருந்தாள் அவள் பெயர் நிர்மலா, இவள் என் உயிர்த்தோழி கோமளத்தின் உற‌வுக்காரப் பெண், நாங்கள் மூவரும் ஒன்றாய்த்தான்  படித்தோம்.

நிர்மலா ரொம்பவும் சுவாரசியமான கதாபாத்திரம். சீனப்பெண்ணைப்போன்ற தோற்றம், பாப் கட்டிங் தலைமுடி,  தலையில் முன்னால் முடிவெட்டிவிட்டுக்கொன்டு இருப்பாள். அந்தக்கால மலாய் அலிபாபா படத்தில் நாயகன் பி.ரம்லி ஒரு மினி சைக்கிளில் வருவாரே, அதேபோன்று ஒரு நீல நிற மினி சைக்கிள்தான் அவள் வாகனம். வீட்டில் கடைக்குட்டி, அதனால் செல்லம் அதிகம். வசதி படைத்த குடும்பம். ஒழுங்காய் படிக்காவிட்டாலும் கண்டிக்க மாட்டார்கள். 

நிர்மலா மாலை வேளைகளில், கண்ணில் கண்ட ஏதாவது ஒரு புத்தகம், நயனமோ, மன்னனோ, வானம்பாடியோ (வார இதழ்) வாங்கிக்கொள்வாள், வீதி ஓரத்தில் வீற்றிருக்கும் அங்காடிக் கடையில் ஒரு சிறிய பை நிறைய வெறும் ஐஸ்கட்டிகளை வாங்கிக்கொள்வாள் (வெயில் வேளைகளில், ஐஸ் கட்டிகளை வாயில் போட்டு நறநறவென கடித்து மெல்வது அவளுக்கு அலாதி ஆன‌ந்தம். கூடவே புளிப்புமிட்டாய், சாக்லெட்டுக்கள் என தின்பண்டங்கள் வாங்கி சட்டைப்பைகளில் நிரப்பிக்கொள்வாள். தனது சைக்கிளில் ஏறி ஒரு பத்து நிமிடம் அந்த வேகாத வெயிலில் மண்டை காய பயணித்து வீட்டிற்கு வருவாள்.

அவள் வந்ததும், ஒரே அரட்டைதான். திண்பண்டங்களைக் கொரித்துக்கொண்டே வாசிக்க ஆரம்பித்துவிடுவோம், அவள் ரொம்பவும் கற்பனைத்திறன் வாய்த்தவள். அனைத்தையும் அறிந்தவள்போல் பொய்யைக்கூட ஆணித்தரமாய் பேசி நம்பவைத்துவிடுவாள். எங்களைக் கவர்ந்த எழுத்தாளர்களைப்பற்றி நாங்கள் பேசும்போது அவள் என்னென்னமோ கூறுவாள். அந்தப் பொய்களை அப்பொழுது உண்மை என்றே பல காலத்திற்கு நம்பியிருந்தேன் என்றால் பாருங்களேன் அவள் திறமையை !!

சில நேரங்களில் நிர்மலா வீட்டிற்கு வரும்பொழுது அப்பா வீட்டிலிருப்பார். வேறு யாராயிருந்தாலும் அப்பாவின் அருமையான விருந்தோம்பல் குண‌மறிந்து வந்த வழியே ஒரே ஓட்டமாய் திரும்பி ஓடிவிடுவார்கள், ஆனால் இந்த நெஞ்சழுத்தக்காரி இருக்கிறாளே போகவே மாட்டாள். வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அப்பாவைக் கண்டாலும் காணாத‌து போலவே பூனைக்குட்டி மாதிரி வீட்டிற்குள் ஓடி வந்துவிடுவாள், பெரிய சிங்கமான அப்பாவின் கர்ஜனையும் முறைப்பும் அந்தச் சின்னப் பூனைக்குட்டியிடம் செல்லாது :) (பூனையும் சிங்கமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த‌து என்றுதானே விஞ்ஞானமும் சொல்கிறது ? ) 

வீட்டில் அம்மாவுக்கும் எங்களுக்கும் நிர்மலாவின் துணிச்சலைக்கண்டு வியப்பும் சிரிப்பும் ஒருங்கே பொங்கி வழியும். ஒரு முறை அஜானுபாகுவான அப்பா வாசலில் குறுக்கே அமர்ந்திருக்க, அம்மாவைக் காணவந்த ராணிப்பாட்டி திரும்பிப்பார்க்காமல் ஓடிக்கொன்டிருக்க, இந்த நல்லவள் சொகுசாய் தன் துவிச்சக்கர வண்டியிலிருந்து இற‌ங்கி வந்து "அங்கிள் கொஞ்சம் நகர்ந்துகோங்க" என நாசுக்காய் சொல்லி, அப்பாவும் வேறு வழியில்லாமல் நகர்ந்துகொள்ள, கம்பீரமாய் உள்ளே அறைக்குள் அவள் வந்தவுடன் ஏற்பட்ட சிரிப்பு அடங்க வெகு நேரமாகியது.

நல்ல தைரியசாலிதான் !!

உண்மையில் அன்று சிம்மசொப்பனமாய் திகழ்ந்த அப்பாவின் கோபங்க‌ளெல்லாம் இன்று யோசிக்கையில் வேடிக்கையாக இருக்கிறது, ஓர் அடிகூட அடித்ததில்லை, சீ என்றோ ஏய் என்றோ மரியாதைக்குறைவாய் எந்தப் பிள்ளையையும் திட்டியதில்லை, அவரின் சிவந்த பெரிய விழிகளின் கூர்மையான பார்வை ஒன்றே போதும் எங்களை அடக்கிவைக்க.

அதுதான் உண்மையில் நடந்த‌து எனும் நிதர்சமும் இப்பொழுதுதான் புரிகிறது. அவரின் முறைப்பு ஒன்றே மிகப்பெரிய கோபக்காரராய் அவரை நிலை நிறுத்தியிருக்கிற‌து 

அவள் கொன்டுவரும் புத்தகங்களை சேர்த்துவைக்கும் பழக்கமெல்லாம் அவளுக்குக் கிடையாது, வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய்விடுவாள். அதில் புதுநிலவின் கவிதைகளை மட்டும் எடுத்து நான் பத்திரப்படுத்திக்கொள்வேன்.

ஒரு சமயம் என் தந்தை உபயோகிக்காமல் வைத்திருந்த ஒரு பெரிய டைரியை கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டதும் ஒரே மகிழ்ச்சி. முதல் வேளையாய், பள்ளிக்குக் கிடைக்கும் பணத்தில் கத்தரிக்கோல், பசை, வண்ணக் காகித அலங்காரங்கள்(stickers) வாங்கி வைத்துக்கொன்டேன்.

பின்னர் ஆற அமர அமைதியாய் அமர்ந்து நான் சேகரித்து வைத்திருந்த புது நிலவின் கவிதைகள் யாவற்றையும் ஒவ்வொரு பக்கத்திலும் அழகுபடுத்தி ஒட்டி வைக்க ஆரம்பித்தேன்.

old diary க்கான பட முடிவுபுத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களை என்னிடமிருந்த புதுநிலவின் கவிதைகளை ஒட்டி அழகான (scrap book) தயார் செய்துவிட்டேன். அழகிய படங்கள், காகிதப்பூக்கள், தீபாவளி அட்டைப் படங்கள் என என் மனதிற்குத் தோன்றிய வண்ணம் அந்த டைரியை அலங்கரித்து வைத்தேன். எனக்குப் பிடித்த மிகவும் அழகான புதுநிலவின் கவிதைத் தொகுப்பை எனக்கு நானே மிக மிக மெச்சிக்கொன்டேன். நேரம் வாய்க்கும் போதெல்லாம் அவர் கவிதைகளை எடுத்துப்படிப்பேன், மெல்லிய சோகம் இழையோடும் அந்தக் கவிதை வரிகள் வாசிப்பதற்கு மிகவும் அருமையாய் அமைந்திருக்கும்.

அந்த டைரி எனது அந்தரங்க உடமைகளில் முதலிடம் பெற்றது, யாருக்கும் அதைக் கொடுக்கவே மாட்டேன் நான். இப்படியே சில வருடங்கள் அந்தத் தொகுப்பு என்னிடத்தில் இருந்தது. மேற்படிப்பு ஆரம்பித்து, வேலைக்கும் செல்ல ஆரம்பித்தவுடன் அந்தப் பழைய டைரியை புரட்டிப்பார்ப்பது கொஞ்சம் குறைய ஆரம்பித்துவிட்டது.

காலங்கள் மாற காட்சிகளும் மாறுமல்லவா? சிங்கையில் படிப்பையும் தொழிலையும் தொடர புற‌ப்பட்டேன். உடமைகளை எடுத்துவைத்து புற‌ப்படும்போது எனது அந்த டைரியைக் காணவில்லை, எங்கேயோ தவறி வைத்துவிட்டேனோ ?  மனம் மிக வருந்தியது, யாராவது எடுத்துச் சென்று விட்டனரோ? தேடித்தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை, என்ன செய்வது ? வீட்டில் அனைவரிடமும் விசாரித்தால் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் போகிக்கு வீட்டைச் சுத்தப்படுத்துகிறேன் என்று எனது புத்தகத்தையும் பழைய உபயோகிக்காத புத்தகம் என்று எரித்துவிட்டிருந்தனர். எனக்கு அழுகை அழுகையாய் வந்தது, என்ன செய்வது, போனது போனதுதானே L  
           
வருடங்கள் பல கடந்து இன்றும் புதுநிலவின் கவிதை வரிகளில் நினைவில் நிழலாடும் ஒரு வரி "அரசாண்ட அற்புதம் நீ" !!