.

.
.

Thursday, June 11, 2009

ஆறு


சில காலங்களுக்கு முன்பு, வெறிச்சோடிய ஒரு தோட்டம், தோட்டத்துப்பாட்டாளிகள் பலர் அந்த தோட்டத்தை கைவிட்டு வேறிடம் புலம் பெயர்ந்து சென்றுவிட்டனர். கரும்பலகையின் பச்சை நிறம் தாங்கிய கேட்பார் அற்ற லயம் எனப்படும் வரிசை வீடுகள். வில்லேந்திய இராமர் கோவில் ஒன்றும் அரசமரத்து முனியும் அங்கே எஞ்சியுள்ள மககளுக்கு காவலாய்! அந்த தோட்டத்திற்கு அருகாமையில் மிகப்பெரிய ஆறு, நீர்ப்புழக்கத்திற்கும் சரி , மீன் பிடிக்கும் மக்கள் வயிற்றுப்பாட்டுக்கும் சரி என்றுமே அந்த ஆறு ஒரு காமதேனு!

நீண்டு நெளிந்த அந்த ஆற்றின் இருகரைகளிலும் திட்டுத்திட்டாய் பலகை வீடுகள், அதில் இன்னும் அங்கே வாழும் நமது மக்கள்! அது பொன்றதொரு வீட்டில்தான் அவள் குடியிருந்தாள், அவளோடு அவள் தந்தை, தாய், தம்பி, தங்கை என ஐவர் கொன்ட அழகான குடும்பம்.

அமுதா, அதுதான் அவள் பெயர், சிவந்து மெலிந்து உயர்ந்த தேகம், அடர்ந்த கூந்தல் இருவகிடெடுத்து பின்னப்பட்ட சடைகள், பெரிய கண்களோடு சின்னச் சின்ன மூக்கும் வாயும். அவள் அந்த தோட்டத்திற்கு அருகாமையிலிருந்த தமிழ்ப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள்

அவளுக்குப் பிடித்தது இயற்கையும், தமிழ் புத்தகங்களும், அவள் தாயும் தந்தையும் தமிழறிவு பெற்றவர்களாதலால் அவள் வீட்டில் நிறைய தமிழ் புத்தகங்கள். பள்ளி விட்டு வீடு சேர்ந்தபின், விறுவுறுவென்று உணவை முடித்து விட்டு ஏதாவதொரு நாவலை தூக்கிக்கொண்டு வீட்டின் முன்பிருந்த அந்த ஆற்றுப்பாலத்தின் மேல் அமர்ந்து கொள்வாள். தாழ்வான அந்தப்பாலத்தில் கால்கள் தொடும் தூரத்தில் நீரோட்டம், சமயங்களில் தாழ்வாகவும், சில நேரங்களில் பாலத்தை தொடும் அளவிலும் ஓடிக்கொன்டிருக்கும்.

நன்பகல் கடந்த மாலை, இளஞ்சூடோடு கூடிய அந்தி வெயில், மெல்லிய தென்றல், தூரத்திலே வானுயர்ந்த காட்டு மரங்கள்! மிகவும் ரம்யமானதொரு சூழல். லேசான இருள் கவியும் வரை அவள் அந்த இடம் விட்டு நகர மாட்டாள். கால்கள் நீரை அலைந்து கொன்டிருக்க, கண்கள் புத்தகத்தை மேய்ந்து கொன்டிருக்கும்.

அன்றும் அவ்வாறே, அவள் அமர்ந்து படித்துக்கொன்டிருக்கையில், அவளுடைய இளைய சகோதரன் இரண்டு வயதிருக்கும், கொழு கொழுவென எழுமிச்சை நிறத்தில், திராட்சைக்கண்கள் கொன்டவன், மெல்ல தவழ்ந்து வெளியே வந்தான். அவனைக்கண்டவுடன் அவள் ஓடிச்சென்று அவனை தூக்கிக்கொன்டாள், மெல்ல நடந்து வந்து பழைய படி அந்த ஆற்றின் மேல் அமர்ந்து அவனை மடியில் அமர்த்திக்கொன்டாள். அவள் தாய் உள்ளே வேலையாய் இருந்ததனால் இதை அவர் கவனிக்கவில்லை.

நேரம் கடந்து கொன்டிருந்தது, நீரோட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வேகம் கூடிக்கொன்டிருந்தது, அவள் அதைக் உணர‌வில்லை. திடீரென அவள் சகோதரன் திமிரவே அவள் பிடி விலகி, நிதானிப்பதற்குள் நழுவினான் ஆற்றுக்குள், எட்டிப்பாய்ந்து அவனுடைய ஒரு காலை பற்றிக்கொன்டு, மறுகையால் பாலத்தின் பலகை ஒன்றை இறுக்கமாக பிடித்துக்கொன்டாள். ஆற்று வெள்ளத்தின் வேகத்திற்கும், அவள் சகோதரனின் கனத்திற்கும் அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை, மல்லுக்கட்டி பிடித்துக்கொன்டு, அபயக்குரல் எழுப்பினாள், அலறியடித்துக்கொன்டு ஓடி வந்த அவள் தாய் அந்த ஆற்றில் குதித்து அவள் சகோதரனைக் காப்பாற்றினார், அதற்குள் இவளும் தான் ப‌ற்றியிருந்த பலகையைப்பிடித்து மேலேறி விட்டாள்.

அவள் தாயின் கோபம் எல்லை மீறியது, ஆத்திரத்தில் கண்கள் அனலைக்கக்க "தொலைந்தாய் நீ" என்று கத்தியபடி அவளை அடிக்க கை ஓங்கினார், தாயின் அடியிலிருந்து லாவகமாக விலகியவள், விருட்டென்று ஒடி தள்ளி நின்று கொன்டாள், அவள் தாய் அவளை எரிப்பதைப்போல் முறைத்துவிட்டு "வீட்டிற்குள் வராதே என்று திட்டியபடி, அவள் தம்பியைத் தூக்கிக்கொன்டு வீட்டிற்குள் விரைந்தார்.உள்ளே போனவர் சிறிது நேரத்தில் அவர் தாயோடு கூடிக்கொண்டு, ஆற்றில் தம்பி விழுந்ததற்கு பரிகாரம் செய்தார், ஒரு தட்டில் நான்கு நிறத்தில் சோற்று உருண்டைகள் குங்குமம் கலந்த சோற்று உருண்டை , கரி கலந்த சோற்று உருண்டை , மஞ்சள் கலந்த சோற்றுருண்டை , மற்றும் வெறும் சாதம் என நான்கு நிற உருண்டைகளை நான்கு திசைகளிலும் எறிந்தார். அவன் அணிந்திருந்த ஆடையைக்கொன்டுவந்து ஆற்றில் வீசியெறிந்தார். தன் பங்குக்கு ஆற்றுக்கு ஓரமாய் நின்று இந்த கூத்தையெல்லாம் சிரித்தபடி வேடிக்கை பார்த்துக்கொன்டிருந்த அவளை அவர் பாட்டியும் திட்டிவிட்டு தன் மகளோடு வீட்டிற்குள் சென்று விட்டார்!.

அந்தி சாய்ந்தது, வேலைக்குச் சென்ற அவள் தந்தை வீடு திரும்பினார், வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்தில் அவள் வீடே அதிரும்படி அவர் அவளை அழைத்தார், இல்லை இல்லை கர்ஜித்தார், அழுதுகொன்டே தலைகுனிந்து குற்றவாளியாய் தந்தை முன் அவள், மரண தண்டனைக்கைதி கூட அந்த அளவு நொந்திருப்பானா என்று தெரியவில்லை! கண்களில் அருவியென பெருக்கெடுத்தது கண்ணீர். அவள் தந்தை அவளை அடிக்கவில்லை, இனிமேல் அங்கே போவியா? தந்தை முடிக்கவேயில்லை, அவள் முடிவெடுத்து விட்டாள், தனக்குள்ளேயே அந்த ஆற்றுக்கு ஒரு விடைகொடுத்தாள்.

அந்த‌ இர‌வு, மனதில் அந்த நிகழ்வு மறுபடி மறுபடி ஒளிபரப்பாகிக்கொன்டிருந்தது, உற‌க்க‌ம் அறவே வர மறுத்தது, வலுக்கட்டாயமாக க‌ண்க‌ளை மூடினாள், ச‌ல‌சல‌த்து ஓடும் அந்த‌ ஆறு அவ‌ள் க‌ண்முன் ப‌ட‌ர்ந்து விரிந்த‌து, நெடு நேரத்திற்குப் மெல்ல‌ மெல்ல அந்த ஆற்றின் ஓசை அவ‌ளைத்தாலாட்ட‌ க‌ண்க‌ள் க‌ன‌வுல‌க‌த்திற்கு சிற‌கு விரிக்க‌ நித்திரை அவ‌ளை உள்வாங்கிக்கொன்டது

பி.கு : ஏற்கனவே மன்னன் இதழில் எழுதியவை, சில மாற்றங்களோடு!

No comments: